search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Seemai"

    • நெல்லைச்சீமை மட்டுமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களை கொண்டது!
    • ஐந்தில் பாலையுள் அடங்கும் தேரிக்காடு என்று வழங்கப்பெறும் செம்மணல் பரப்பு வேறெங்கும் இல்லாதது!

    தமிழ்நாடு ஐவகை நிலங்களை கொண்ட வளமான மாநிலமாகும். இங்கு மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சியும், காடும் காடு சார்ந்த இடமான முல்லையும், வயலும் வயல் சார்ந்த இடமான மருதமும், கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலும், மணலும் மணல் சார்ந்த இடமான பாலையும் உள்ளன.

    இந்த ஐவகை நிலங்களும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் காணப்படுவதில்லை. ஆனால் ஒருங்கிணைந்த நெல்லைச்சீமைக்கு அந்த சிறப்பு உண்டு.

    கோவையில் குறிஞ்சி உண்டு;

    ஆனால் நெய்தல் அங்கு இல்லை!

    தஞ்சையில் மருதம் உண்டு;

    ஆனால் குறிஞ்சி அங்கு இல்லை!

    சென்னையில் நெய்தல் உண்டு;

    ஆனால் மருதம் கிடையாது!

    மதுரையில் மருதம் உண்டு ;

    நெய்தல் இல்லை!

    இராமநாதபுரத்தில் பாதி பாலைதான்;

    ஆனால் முல்லையோ இல்லையே!

    குமரியில் நானிலமும் உண்டு;

    ஆனால் பாலை இல்லை!

    நெல்லைச்சீமை மட்டுமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களை கொண்டது!

    இந்த ஐந்தில் பாலையுள் அடங்கும் தேரிக்காடு என்று வழங்கப்பெறும் செம்மணல் பரப்பு வேறெங்கும் இல்லாதது!

    திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலுமாக இந்த தேரிக்காடு அமைந்து இருக்கிறது. கடலோரம் ஒட்டிய சாத்தான்குளம், திருச்செந்தூர், திசையன்விளை பகுதியில் தேரிக்காடுகள் உள்ளன.

    உச்சி வெயிலில் கண்கள் கூசும் அளவுக்கு தகதகவென்று செம்பைக் காய்ச்சிப் பரத்தியதுபோல் இருக்கும்.

    சரத்குமார் நடித்த 'ஐயா' படத்திலும் விஷால் நடித்த 'தாமிரபரணி' படத்திலும் இந்த செம்மணல் பரப்பு செம்மையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்!

    -பாரதி முத்துநாயகம்

    ×