search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mylswamy annadurai"

    • பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை.
    • சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்தது.

    கோவை:

    நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14-ம் தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி மாலை 6.04 மணி அளவில் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

    இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியது. நிலவில் 14 நாட்கள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது ரோவர் மற்றும் லேண்டர் கருவிகள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

    14 நாட்கள் நீடிக்கும் நிலவு இரவில், சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கும். இந்த கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே, நிலவில் நேற்று சூரிய உதயம் ஆரம்பித்தபோது லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரக்யானைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் அது பலமுறை சோதனை செய்யப்பட்டு விட்டது. ஆனால் லேண்டரைப் பொறுத்தவரை, நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    லேண்டர் மூலமாக தான் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். எல்லோரையும் போல் நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.

    • நமது தாய் மொழியை மறக்க கூடாது.
    • அந்த தாய் மொழி தான் உயரத்தை தொட உதவி உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழ் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நடந்த விழாவை, விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர், பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி தவமணி, சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் ஆனந்த்குமார் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து தமிழ் புத்தக திருவிழா குறித்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் தனாபிவிருத்தி கடன் கூட்டுறவு வங்கியின் நிறுவனர் சுந்தரவேலு, ஆர்.ஆர்.இன்டஸ்டரீஸ் தலைவர் துரை, தமிழ் புத்தக திருவிழா குழு தலைவர் வணங்காமுடி, கர்நாடக தமிழ்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் 'தினத்தந்தி' உள்பட 25 புத்தக அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராம்பிரசாத் மனோகர் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழ் புத்தக திருவிழாவை தலைமை ஏற்று நடத்த எனக்கு வாய்ப்பு கொடுத்த விழா குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த விழா ஒரு புத்தக திருவிழா மட்டும் இல்லை. நமது உறவுகளை புதுப்பித்து கொள்ளும் விழா.

    கர்நாடகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் நான் தமிழ் பேசுகிறேன் என்று சொல்லி கொள்ளவே தயங்குகின்றனர். இந்த விழாவை தலைமை ஏற்று நடத்த சிலர் தயங்கினர். ஆனால் நான் தலைமை ஏற்கிறேன் என்று கூறினேன். தமிழ் என்பது எனது முகம், தமிழ் என்பது எனது அடையாளம். தமிழ் எனது முகவரி. எனது முகவரியை மறைத்து வாழ வேண்டிய தவறை நான் செய்யவில்லை. நான் தைரியமாக, சந்தோஷமாக, ஆர்வமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.

    சிலர் என்னிடம் தமிழ் மொழியில் படித்து எப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனீர்கள் என்று கேட்டது உண்டு. அவர்களிடம் நான் தமிழ் மொழியில் படித்ததால் தான் நான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனேன் என்று பெருமையுடன் கூறி இருக்கிறேன். தாய் மொழி உணர்வு பூர்வமானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில் கூறியதாவது:-

    புதிய முயற்சியாக, புதிய நம்பிக்கையாக இன்று ஆரம்பித்து உள்ள முதல் தமிழ் புத்தக திருவிழா உண்மையில் நம்பிக்கை தருகிறது. தமிழ் எனது அடையாளம், தமிழ் எனது முகம் என்று ராம்பிரசாத் மனோகர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். எனது முகவரி தமிழகம் என்றாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பெங்களூருவில் தான் உள்ளேன். நான் எழுதிய 7 புத்தகங்களும் பெங்களூருவில் வைத்து தான் எழுதப்பட்டது. நமது தாய் மொழியை மறக்க கூடாது. வேர்களாக இருக்கும் மொழியை மறக்க கூடாது. அந்த மொழி நமது தாய். அந்த தாய் மொழி தான் உயரத்தை தொட உதவி உள்ளது.

    நான் முழுக்க படித்தது எனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் தான். நான் படித்தது தமிழ்வழியில் தான். தமிழில் படித்து விண்வெளி துறையில் சாதித்தீர்களா என்று என்னிடம் நிறைய பேர் கேட்டு உள்ளனர். தமிழில் படித்ததால் தான் நான் சாதித்தேன் என்று கூறினேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவின் முடிவில் கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க செயலாளர் கார்த்தியாயினி நன்றி கூறினார்.

    இந்திய அளவில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். #mylswamyannadurai

    ஈரோடு:

    இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆண்டு தோறும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 150 மாணவ-மாணவிகளுக்கு ‘இன்ஸ்பையர்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் திறன் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமின் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் பேசினார்.

    அடுத்த மாதம் புதுடெல்லியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த, தேர்ந்து எடுக்கப்பட்ட 20 மாணவ-மாணவிகளுடன் மனித வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, பரீட்சார்த்த முறையில் உங்களோடு கலந்துரையாட இருக்கிறேன்.

    தற்போது தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. போர் தொடர்பான அச்சம் இருந்தாலும், போர்கள் நடைபெறாமல் தவிர்க்கும் நிலை உள்ளது. பசி இருந்தாலும் பட்டினியால் மரணம் என்பது இல்லை. எனவே இந்த 3 முக்கிய காரணிகளும் மனித வாழ்நாளை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

    விழாவில் அவரது மனைவி வசந்தி அண்ணாதுரை, சென்னை பேராசிரியர் சுரேஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.அப்துல் நன்றி கூறினார். #mylswamyannadurai

    இஸ்ரோவில் வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் 36 ஆண்டுகள் பணியாற்றியது முழுதிருப்தி அளிக்கிறது என்று ஓய்வுபெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
    பெங்களூரு : 

    பெங்களூரு இஸ்ரோ மைய இயக்குனராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அறிவியல் விஞ்ஞானியான இவர் இஸ்ரோவில் 1982-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 

    அங்கு 36 ஆண்டுகள் காலம் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இறுதியாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனராக கடந்த 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

    அவருடைய தலைமையில் சந்திரயான் விண்கலம் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் மயில்சாமி அண்ணாதுரை விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை படைத்தார். இதனால் இந்திய அளவில் புகழ் பெற்றார். அவருக்கு பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகள் கிடைத்தன.

    சந்திரயான்-2 விண்கலத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அந்த பணி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அவர் இஸ்ரோவில் 50-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தியதில் முக்கிய பங்காற்றி உள்ளார். 

    பணி ஓய்வுபெற்ற மயில்சாமி அண்ணாதுரை ‘தினத்தந்தி’ நிருபருக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இஸ்ரோவில் நான் 36 ஆண்டுகள் பயணித்த பாதையை திரும்பி பார்க்கிறேன். நான் ஆற்றிய பணி எனக்கு முழு திருப்தியை அளிக்கிறது. இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சியில் நான் 50-க்கும் அதிகமான செயற்கைகோள்களை உருவாக்கி வழங்கி இருக்கிறேன். 

    இதில் சந்திரயான்-1, மங்கள்யான், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைகோள்கள், கார்டோ-2 தொடர் செயற்கைகோள்கள் அடங்கும். இதில் 6 மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்களும் இருக்கின்றன.

    2 கிலோ முதல் 10 டன் எடை வரை செயற்கைகோள்களை உருவாக்கினேன். முன்பு ஆண்டுக்கு 2, 3 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன. அந்தவொரு நிலையை மாற்றி ஆண்டுக்கு 10 முதல் 12 செயற்கைகோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தினோம். 

    இது செயற்கைகோள் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். அதில் நான் மிக முக்கிய பங்காற்றினேன்.

    நான் இயக்குனராக பணியில் சேர்ந்தபோது செயற்கைகோள் மையம், பீனியாவில் உள்ள தொழிற்பேட்டையில் அமைந்து இருந்தது. இன்று அந்த மையத்தை மேம்படுத்தி இருக்கிறேன். அதன் உருவத்தை மாற்றி அமைத்து, பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளேன். 

    இன்று அந்த மையத்தில் சர்வதேச தரத்தில் செயற்கைகோள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அங்கு அதிக எண்ணிக்கையில் செயற்கைகோள்கள் வடிவமைக்கப்படுகின்றன.

    இந்த பணிக்கு இடையில் விண்வெளி அறிவியல் குறித்து தமிழில் 3 புத்தகங்களை எழுதினேன். சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவுவதற்கு முன்பு ஓய்வு பெற்றது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. 

    அந்த சந்திரயான்-2 விண்கலத்தை உருவாக்கும் பணியில் நான் முழுமையாக ஈடுபட்டு இருந்தேன். ஓய்வுக்கு பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று இன்னும் நான் முடிவு செய்யவில்லை.

    அடுத்த சில நாட்கள் நான் வீட்டில் தனியாக அமர்ந்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிப்பேன். எனது முழு அனுபவம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பத்தில் எனக்கு இருக்கும் பற்றை பயன்படுத்திக்கொள்ள இந்திய இளைஞர்கள் முன்வர வேண்டும். என்னை பொறுத்தவரையில் எதுவாக இருந்தாலும் நான் திட்டமிட்டு செயல்படுவேன்.

    இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
    ×