search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Sakkarapani"

    • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு இன்றி பணியைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • கார்டுதாரர்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது கூறியதாவது:-

    மத்திய அரசு முன்னுரிமை உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசியை வழங்குகிறது. அந்த அரிசியை பெறும் ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்களை புதுப்பிக்க 'இ.கே.ஒய்.சி.' என்ற இணைய வழியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ரேஷன் கார்டு உள்ள அனைத்து உறுப்பினர்களும் பொது வினியோக திட்ட அங்காடியில் உள்ள கருவி மூலம் கைரேகை பதிவுகள் மூலம் தங்களின் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதுநடைமுறைப்படுத்தப்பட்டு 45 சதவீத ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

    குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு இன்றி இந்த பணியைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ, பொருட்கள் வாங்க கடைகளுக்கு வரும் போதோ கைவிரல் ரேகை பதிவு மூலம் புதுப்பிக்க கூறப்பட்டு இருந்தது.

    சில இடங்களில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வந்தால்தான் பொருட்களை பெற முடியும் என தவறுதலாக தகவல்கள் வந்தன. உடனே அப்படி செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டது. கார்டுதாரர்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ரேஷன் கார்டுகள் இதனால் ரத்து செய்யப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம்.
    • அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டை நோக்கி செல்கிறோம். மக்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க முதலஅமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம். அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    2 வருடங்களில் 16 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. குடும்ப அட்டை தொலைந்து விட்டால், ரூ.45 செலுத்தி அதன் நகலை பெற முடியும். தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

    சிறுதானிய உணவு திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.

    அனைத்து நியாய விலை கடைகளிலும் கியூஆர் கோடு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இனி பொருட்களை கியூ ஆர் கோடு முறையில் வாங்கி கொள்ளலாம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 536 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடத்தில் இருக்கின்றது, அவற்றிக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும்.

    கோதுமையை பொறுத்தவரை 23 ஆயிரம் மெட்ரிக் என்பதை 8 ஆயிரம் டன்னாக மத்திய அரசு குறைத்து விட்டனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி கூடுதல் ஒதுக்கீடு கேட்க இருக்கின்றோம்.

    நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரீசிலனையில் இருக்கிறது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது. மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கின்றது.

    பருப்பு, பாமாயில், சக்கரை போன்றவற்றை எவ்வளவு விலை கொடுத்தும் அரசால் வாங்கி விட முடியும். எதிர்கட்சி என்பதால் மத்திய அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது. கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்து இருக்கின்றது.

    ரேஷன் கடைகளில் இரு விதமான அரிசி விநியோகம் செய்யப்பட்டாலும், மக்கள் எந்த அரிசியை விரும்புகின்றனரோ அதை மட்டுமே கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்.
    • ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர். பகுதியில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் சேகர்பாபு ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதலமைச்சர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். இது மக்களுக்கான பொற்கால ஆட்சியாக திகழ்கிறது. இதனால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

    வேட்பாளரை அறிவித்து தனித்து நிற்க முடியாமல் திணறும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் காலூன்ற முடியாததால் அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கிறது.

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. எத்தனை அண்ணாமலை அ.தி.மு.க.வுடன் கூட்டணியாக வந்தாலும் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும்.
    • பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், "சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும்.

    தற்போது பரிசோதனை முயற்சியாக, நகர்புறத்தில் ஒரு கடையிலும், கிராமப்புறத்தில் ஒரு கடையிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ள நிலையில், விரைவில் டெண்டர் விடப்பட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். அதுவரை பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்."

    இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

    • தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.
    • நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சாணம்பட்டியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் 100 சதவீதம் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது. தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.

    நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவர் அவர் கூறினார்.

    பயோமெட்ரிக் முறையால் ரேசன் கடைகளில் தவறுகள் நடப்பது குறைந்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
    சென்னை:

    உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    பயோமெட்ரிக் முறையால் ரேசன் கடைகளில் தவறுகள் நடப்பது குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அதுகுறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.



    வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளன என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார்.

    கூட்டத்தில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இந்த அரசு பதவியேற்ற உடன் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூ.978 கோடி செலவிலும், தலா ரூ.4 ஆயிரம் ரொக்கத்தையும் கொரோனா பேரிடர் நிவாரணமாக வழங்கியது. வருகின்ற தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு, 21 உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1161 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தி வருகிறது. தரமான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன் மூலம் வழங்கி வருகிறது.

    இந்த எண்ணிக்கை மாவட்டத் தலைநகரங்களிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு தலைமை ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு உதவும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வெளிநோயாளிகளின் நலன் கருதி நடத்தப்படும் உணவகங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் பல்வகை சாதங்கள் (சாம்பார், கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம்) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன. 1-6-2021 முதல் 18-11-2021 வரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த உணவகங்கள் வழியாக பயன்பட்டுள்ளனர். 30,490 கட்டுமானத் தொழிலாளர்கள் (வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் சேர்த்து) இதே காலகட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

    கொரோனா காலத்திலும் இதர பேரிடர் காலங்களிலும் இந்த உணவகங்களில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதேபோன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளன.

    இந்த திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் வரை 2021-22-ம் நிதியாண்டில் 3,227 டன் அரிசியும் 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு உணவகம் நடத்த சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.3.5 லட்சம் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அனைவருக்கும் விரிவுபடுத்திடவும் மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் 100 சதவீதம் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

    21-9-2021 அன்று மத்திய மந்திரியை நேரில் சந்தித்தபோது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்திட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்காக தமிழ்நாடு விவசாயிகளின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் அரைக்கப்படும் பச்சரிசியில் 1 லட்சம் டன்னை அருகில் உள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் ஒப்படைப்பு செய்து அதற்கு ஈடாக 1 லட்சம் டன் புழுங்கல் அரிசியை வழங்கவேண்டும் என்று அன்று நான் விடுத்த மற்றொரு கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    முக ஸ்டாலின்

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி மத்திய அரசுடனும், பிற மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு இந்தியாவை பட்டினி மற்றும் சத்துக்குறைவில்லா நாடாக மாற்ற தமிழ்நாடு துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை கமிஷனர் வி.ராஜாராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



    ×