search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayar River"

    • கனரக வாகனங்கள் மட்டும் தரைப்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தற்போது இந்த பாலமும் சேதமடைந்துள்ளது.
    • கிளன் மார்கன் அணையில் இருந்து நீர் மாயாற்றில் திறந்து விடப்படுவதால் வெள்ளம் காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது. குறிப்பாக கேரள மாநிலத்தை யொட்டிய கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

    இதன் காரணமாக அங்குள்ள புன்னம்புழா, பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    வெள்ளப்பெருக்கால் மாயாற்றின் குறுக்கே கூடலூர்-மசினகுடியை இணைக்கும் தெப்பக்காடு பகுதியில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் கூடலூர்-மசினகுடி இடையே 5 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டிருந்தது.

    தற்போது வெள்ளம் குறைந்துள்ளதால் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. வெளியூர் வாகனங்கள் எதுவும் தொடர்ந்து அந்த பாலத்தின் வழியாக அனுமதிக்கப்படவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    முன்னதாக தெப்பக்காடு பகுதியில் இருந்த பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கி பல மாதங்களை கடந்தும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.

    இதனால் மாயாறு தரைப்பாலம் தான் மசினகுடி-கூடலூர் போக்குவரத்துக்கு ஆதாரம். தற்போது மாயாறு தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கனரக வாகனங்கள் மட்டும் தரைப்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தற்போது இந்த பாலமும் சேதமடைந்துள்ளது.

    இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜூ கூறியதாவது:-

    மாயாறு தரைப்பாலம் வனத்துறைக்கு சொந்தமானது. மழை மற்றும் கனரக வாகன போக்குவரத்தால் பாலம் சேதம் அடைந்துள்ளது. மாயாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததும் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மழை குறைந்த நிலையிலும் கிளன் மார்கன் அணையில் இருந்து நீர் மாயாற்றில் திறந்து விடப்படுவதால் வெள்ளம் காணப்படுகிறது. தெப்பக்காடு பாலத்துக்கான அஸ்திவார பணிகளுக்கு குழி தோண்டும் போது, தண்ணீர் சுரக்கிறது. ஆற்றில் தண்ணீர் குறைந்த பின்னரே கட்டுமான பணிகளை தொடங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 ஊர்களிலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    அரவேணு 

    கோத்தகிரி  வட்டத்திற்கு  உட்பட்ட தெங்குமரஹடா ஊராட்சி நீலகிரி மலை அடிவாரத்தின் அமைந்துள்ளது. இதற்கு மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் சாலை வழியாக சென்று மாயார் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

    இங்கு வாழும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் கோத்தகிரி தாலுகா அலுவலகத்திற்கு தான் வர வேண்டும். கிட்டத்தட்ட தனித்தீவு பகுதியை போல் அமைந்துள்ளது இந்த கிராமம். ஊரின்‌ முழு தோற்றம் கொடநாடு காட்சி முனையில் இருந்து பார்க்கும் பொழுது மிக அருமையாகவும், அழகாகவும் தெரியும். தெங்குமரஹடா அல்லிமாயார் இவ்விரு ஊர்களிலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாய தொழில் மேற்கொண்டு வருகின்றனர்.

    இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சோலூர் மட்டம் அடிவாரத்தில் அமைந்துள்ளது, அடர்ந்த வனப் பகுதி என்பதால் மேட்டுப்பாளையம் சத்தி சாலை வழியாக மாயார் ஆற்றை கடந்து அந்த கிராமமக்கள் செல்ல வேண்டும்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலையான நீலகிரி மாவட்டத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு வாழும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், வேலை மற்றும் மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பவானிசாகர் போன்ற கிராமங்களுக்கு செல்ல தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது.

    பரிசல்களில் ஒரு சில மக்கள் இக்கரையில் இருந்து அக்கரை சென்று அத்தியாவசிய பொருட்களுக்காகவும் தங்கள் வேலைவாய்ப்புக்காகவும் செல்கின்றனர். தெங்குமரஹடா பகுதிக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே செல்லும். தற்போது ஆற்றில் வெள்ளம் அதிகமாக செல்வதால் அந்த பஸ் வந்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தெங்குமரஹடாவில் மாயார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வெறும் கனவாக மட்டுமே சென்றுவிடுமோ என்ற கேள்வி தற்போது அப்பகுதி மக்களிடத்தில் எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×