search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manimuthar dam"

    • அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 122 அடியை எட்டிய நிலையில் இன்று 3/4 அடி உயர்ந்து 122.70 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் அணை நீர்மட்டம் 123 அடியை எட்டிவிடும். 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 134.81 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 135.83 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 910 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை பகுதியில் 31 மில்லிமீட்டரும், பாபநாசம் அணை பகுதியில் 23 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.

    மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. ஊத்து எஸ்டேட் பகுதியில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    காக்காச்சி பகுதியில் 19 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அங்கு தலா 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 5.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதி மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் தொடர்மழையால் அடவி நயினார் அணையை தவிர மற்ற அணைகள் நிரம்பி விட்டன.

    இதனால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு வானம் மேக மூட்டமாக காட்சியளிக்கிறது.

    சிற்றாறு கால்வாய் மூலமாக குற்றாலத்தில் இருந்து வரும் தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களை நிரப்பி வருகிறது.

    பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தில் குற்றாலம் நீர்வரத்து குளங்கள் நிரம்பி விட்ட நிலையில் தற்போது ஆலங்குளம், மாறாந்தை பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    சாத்தான்குளம், கயத்தாறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. குலசேக ரன்பட்டினத்தில் 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
    • கடந்த 31-ந் தேதி மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்துள்ளது. இதனால் கடந்த 31-ந் தேதி மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 5-வது நாளாக  இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தொடர்ந்து 5-வது நாளாக தடை விதித்துள்ளனர். எனினும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.

    வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

    • மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி பகுதியில் நேற்று கனமழை பெய்தது.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    நெல்லை:

    அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் இன்று அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் அருவியை பார்வையிட அனுமதி வழங்கி உள்ளனர்.

    • மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கரையில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் நேற்று வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். அங்கு பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த தகவலை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • தென்காசி மாவட்டத்தில் 2 தினங்களாக மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
    • மக்கள் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர செண்பக பிரியா அறிவித்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இடைவிடாத சாரல் மழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக சில தினங்களாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்ட நிலை காணப்பட்டது. தற்போது இந்த மழையால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    மாஞ்சோலை பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதன் காரணமாக பொதுமக்கள் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் 2 தினங்களாக மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர செண்பக பிரியா அறிவித்துள்ளார்.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக திடீரென பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்பை, ராதாபுரத்தில் தலா 15 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் அணை பகுதியில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாநகர பகுதியில் பெய்த பரவலான மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. பெரும்பாலான சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

    இந்நிலையில் இன்று காலை முதல் வெயில் அடிக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சீரானது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்றும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று மாலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக கொட்ட தொடங்கியது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மெயின் அருவியில் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனா அணை பகுதியில் 20 மில்லிமீட்டரும், ராமநதியில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    • மணிமுத்தாறு அணை மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது.
    • 12-ந்தேதி அணைக்கட்டில் இருந்து 80 அடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    மணிமுத்தாறு அணைக்கட்டு மூலம் நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் நான்கு 1, 2, 3, 4 என 4 ரீச் மூலம் பாசனம் வசதியை வரையறுத்து உள்ளனர். 118 அடி கொள்ளளவு கொண்ட இந்த மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனம், நேரடி பாசனம், தாமிரபரணி பாசனம் என 3 வகையான பாசன விவசாயத்து தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நேரடி பாசனம் மூலமாக நெல்லை மாவட்டத்தில் வைராவிகுளம், ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், பொட்டல் பகுதியில் உள்ள 2,600 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கால்வாயை பொறுத்தவரை வருடத்தில் 9 மாதங்கள் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    80 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டும் நான்கு ரீச்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். ஒரு வருடம் முதல் இரண்டு ரீச்களுக்கும், மறு வருடம் கடைசி இரண்டு ரீச்களுக்கும் தண்ணீர் வழங்கப்படும்.

    கடந்த வருடம் போதிய மழை இல்லாத காரணத்தினால் மணிமுத்தாறு பாசனத்தில் விவசாயப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.

    கடந்த வருடம் இறுதியில் மணிமுத்தாறு அணையில் 3 மற்றும் 4-வது ரீச்சில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ராதாபுரம், திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி மணிமுத்தாறு அணையில் இருந்து 3 வது மற்றும் 4-வது ரீச்சில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து கடந்த 12-ந்தேதி மணிமுத்தாறு அணைக்கட்டில் இருந்து 80 அடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தினமும் 400 கனஅடி நீர் வீதம் தண்ணீர் இந்த கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டது.

    நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த தண்ணீர் கொண்டு பயன்படுத்தப்படும் என பொதுப்பணித்துறையினர் அறிவித்து இருந்தனர்.

    திட்டமிட்டது ஒன்று நடப்பது வேறென்று என்பது போல் தற்போது விவசாயிகள் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. தண்ணீர் திறக்கப்பட்டு 10 தினங்களுக்கு மேல் ஆகியும் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் மணிமுத்தாறு தண்ணீர் வந்து சேரவில்லை. விவசாயிகள் மணிமுத்தாறு தண்ணீரை நம்பி பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தங்கள் கண் முன்னால் காயும் பயிரை காப்பாற்ற வழித்தெரியாமல் கருகிய நெற்பயிரில் கால்நடைகளை விட்டு மேய்த்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்ட இறுதி எல்லையான சிந்தாமணி வரை மணிமுத்தாறு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஆரம்ப எல்லையான மீரான்குளம் குளத்திற்கு வரும் வழியிலேயே தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. இது தூத்துக்குடி மாவட்ட மணிமுத்தாறு பாசன விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மணிமுத்தாறு தண்ணீர் பாயும் பகுதிகளில் தூர்வாரப்பட்டு சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கால்வாய் கரைகள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கடைசி வரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சாத்தான்குளம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்கள் காய்ந்து கிடக்கிறது. மேலும் தாமிரபரணி பாசனத்தில் மருதூர் மேலக்கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் சடையநேரி கால்வாய் மூலம் குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்வதால் அங்கேயும் அரசு சுமார் சுமார் 20 கோடிக்கு மேல் செலவழித்தும் பலனில்லாமல் உள்ளது. தற்போது தாமிரபரணி வெள்ளக்கால்வாய் திட்டமும் எந்தவிதத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கை கொடுகக போகிறது என்பது முழுமையாக தெரியவில்லை.

    இந்த பகுதி விவசாயிகளுக்கு தாமிரபரணி மற்றும் மணிமுத்தாறு பாசனம் என இரண்டு பாசனம் இருந்தும் கூட விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் வளர்த்த பயிர்களை தனது கால்நடைகளை வைத்து விவசாயிகளே தனது கண் முன் அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மணிமுத்தாறு ஆற்றின் 80 அடி கால்வாயை விரிவுபடுத்தி சீரமைக்க வேண்டும். மணிமுத்தாறு தண்ணீரை முறையாக பகிர்மானம் செய்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுககு கொடுக்க ஆவண செய்ய வேண்டும் என இரு மாவட்ட விவசாயிகளும் கோரிககை விடுத்துள்ளனர்.

    • மணிமுத்தாறு நீர் தேக்கத்தில் 3, 4வது ரீச்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
    • பள்ளி கொடிக்கம்பத்தில் மர்ம நபர்கள் சமுதாய கொடியை ஏற்றி உள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பிரதான கால்வாய் 2-வது பிரிவு விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவ லகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    முன்னுரிமை அடிப்படை

    எங்கள் பகுதியில் உள்ள குளங்களில் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு செய்த மழை நீரை கொண்டு விவசாயம் செய்தோம். தற்பொழுது அந்த பயிர்களில் நெற்கதிர்கள் வளர்ந்துள்ளது.

    இந்த ஆண்டு மணிமுத்தாறு நீர் தேக்கத்தில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பெருகி உள்ள காரணத்தினால் மூன்று மற்றும் நான்காவது ரீச்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு உத்தரவுப்படி நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் முறை வைத்து தண்ணீர் பாய்த்து கொண்டிருக்கிறார்கள்.

    கருணை அடிப்படையில் அணையில் இருக்கின்ற தண்ணீரை 100 மில்லியன் கன அடி மட்டும் 2-வது ரீச்சில் எங்கள் பகுதி மடைகளில் திறந்து அருகில் உள்ள பயிர்களை காப்பாற்றிட தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    பொதுமக்கள் மனு

    கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 17-ந் தேதி மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள கொடிக்கம்பத்தில் சமுதாய ரீதியிலான கொடியை ஏற்றி உள்ளனர். இது தொடர்பாக தேசிய கொடி ஏற்றும் கம்பத்தை அவமதித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கருப்பு துணி கட்டி மனு

    தமிழர் உரிமை பாது காப்பு கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் தமிழ்மாறன் தலைமையில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் நுழைவாயில் முன்பு வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், ராம்குமார் சிறை படுகொலை வழக்கை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி ராமராஜ் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    சுற்றுச்சூழல் மற்றும் நதிகள் பாதுகாப்பு சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் அமூஸ் முருகன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலை சுற்றி அமைந் துள்ள வெளி மதில் சுவரை ஒட்டி ஏராளமான தனியார் கடைகள் அமைந்துள்ளது.

    இந்த கடைகளை அப்புறப்படுத்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சுவர் போல மாற்ற வேண்டும். இதன் மூலம் கோவிலின் சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
    • மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து, நாங்குநேரி தொகுதி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் திறந்துவிடுவது தாமதமாகி வருகிறது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

    தற்போது மணிமுத்தாறு அணை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த நல்ல மழையால் நிரம்பி இருக்கிறது. அதனால், பானாங்குளம், மூலக்கரைப்பட்டி, விஜயநாராயணம் உள்ளிட்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாசன பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து, நாங்குநேரி தொகுதி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 89.20 அடியாக இருந்தது. அணைக்கு 884.77 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்றும் ராதாபுரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை மலைப்பகுதி மற்றும் அணைப்பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலத்தில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.

    பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 89.20 அடியாக இருந்தது. அணைக்கு 884.77 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து 1,204.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேப்போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 93.44 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.70 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 81.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 69.75 அடியாகவும், கடனா நதி அணை நீர்மட்டம் 67 அடியாகவும் உள்ளது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் 2,756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ செல்லையா இன்று தண்ணீர் திறந்து விட்டனர். தொடர்ந்து அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதி வரை 141 நாட்கள் இந்த தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் அம்பை வட்டத்தில் 2,756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    அதேபோல் கொடிமுடியாறு நீர்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தினமும் விநாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி வரை 120 நாட்களுக்கு திறக்கப்படும்.

    இதனால் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரமாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது.
    • தூத்துக்குடி மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரமாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது.

    தூத்துக்குடி மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஓட்டப்பிடாரம் பகுதியில் லேசான மழை பெய்தது. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியத்திற்கு பிறகு திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. அங்கு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.கடந்த 2 நாட்களாக கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று விட்டு விட்டு சாரல் பெய்தது. கழுகுமலையில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ராமநதி அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டர் மழை ெபய்தது.

    குண்டாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 2.6 மில்லிமீட்டரும், சங்கரன்கோவிலில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மாலையில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது.

    குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு இதமான காற்றுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறில் 12.8 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட மருதூர் மேலக்கால், கீழக்கால், தெற்கு மற்றும் வடக்கு பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களுக்கு இன்று முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து இன்று முதல் 30 நாட்களுக்கு மொத்தம் 2073.60 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கிளை நதிகளும் வந்து சேர்வதால் ஸ்ரீவைகுண்டம் மற்றும் முக்காணி தடுப்பணையை கடந்து விநாடிக்கு சுமார் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.
    நெல்லை:

    வங்கக்கடலில் தென்பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலை நிற்பதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாநகர பகுதியில் உள்ள டவுனில் மழை காரணமாக ஏராளமான தெருக்களில் வெள்ளம் புகுந்தது. அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    2 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் ஒரளவு வெள்ளம் குறைந்தது.

    இந்தநிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. பாபநாசம் அணைப்பகுதியில் அதிகபட்சமாக 91 மில்லிமீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 84 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மேலும் அம்பை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, பாளை உள்ளிட்ட பல்வேறு நகரப்பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்ததால், காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்கிறது.

    கனமழை காரணமாக பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரத்து 92 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருகிறது. தற்போது பாபநாசம் அணை நீர்மட்டம் 139.05 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 149.18 அடியாக உள்ளது.

    அணையில் இருந்து ஆற்றுக்கு விநாடிக்கு 8,301 கனஅடி திறந்து விடப்படுகிறது. மேலும் தாமிரபரணி பாசன கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை பாதுகாப்பு கருதி இன்று கூடுதல் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது.

    தற்போது தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 12,480 கனஅடி தண்ணீர் பாபநாசம் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்வதால் நெல்லை பகுதியில் சுமார் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் செல்கிறது.

    இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று குறுக்குத்துறை முருகன் கோவில் கீழ்பகுதியை மூழ்கடித்து சென்ற வெள்ளம், இன்றும் தொடர்ந்து செல்கிறது. முருகன் கோவில் கோபுரம் மற்றும் மண்டபத்தின் மேல்பகுதி மட்டுமே தண்ணீருக்கு மேல் தெரிகிறது. மற்ற அனைத்து பகுதிகளும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் உள்பட தாமிரபரணி கரையோரம் உள்ள அனைத்து மண்டபங்களையும் வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது.

    தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கிளை நதிகளும் வந்து சேர்வதால் ஸ்ரீவைகுண்டம் மற்றும் முக்காணி தடுப்பணையை கடந்து விநாடிக்கு சுமார் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.

    இதனால் தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்கக்கூடாது என்றும், ஆற்றங்கரைக்கு பொதுமக்கள் சென்று செல்பி, புகைப்படம் எடுக்கக்கூடாது என்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை விநாடிக்கு 4,393 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நிரம்பாததால் தண்ணீர் எதுவும் நிரம்பப்படவில்லை. நேற்று 103.50 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரேநாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை 107.55 அடியாக உள்ளது.

    வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 37 அடியாக நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று 39 அடியானது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி உள்பட மற்ற அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வண்டலோடை தடுப்பணையும் கடந்த 2 நாட்கள் பெய்த மழையில் நிரம்பி விட்டது. கடந்த 26-ந் தேதி 15 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று முழுகொள்ளளவான 28.70 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    ×