search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "L.Murugan"

    • மத்திய மந்திரி எல்.முருகன் தகவல்
    • மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.38 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை தொடங்கி வைத்தார். மத்திய மந்திரி எல்.முருகன் மீனவ பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 90 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகள், கிசான் அட்டைகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    உலகளவில் மீன் பொருள் ஏற்றுமதியில் 3-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டில் மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.38 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

    மீன்வளத்துறையில் நீல புரட்சி ஏற்படுத்தியுள்ளோம். நடப்பு ஆண்டில் புதுவை மாநிலத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.100 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் பாரம்பரிய படகுகளில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி படகிற்கு மாற வேண்டும். இதற்கு 60 சதவீத மானியத்தை மத்திய அரசு அளிக்கிறது. 30 சதவீதம் வங்கி கடனும் வழங்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள 10 சதவீதம்தான் மீனவர்கள் செலுத்த வேண்டும்.

    இத்திட்டத்தை புதுவை மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடல்பாசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தடை காலத்தில் கடல்பாசி வளர்க்க மீனவ பெண்கள் முன்வர வேண்டும். இதற்கும் மத்திய அரசு உதவ தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,

    எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, கல்யாணசுந்தரம், பாஸ்கர், லட்சுமிகாந்தன், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மீன் வள மற்றும் மீன்வர் நலத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர். துறை செயலர் நெடுஞ்செழியன், வரவேற்றார். இணை இயக்குனர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

    • 7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    போர்ட் பிளேர்:

    அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், போர்ட் பிளேரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1334 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பிரதமரின் விவசாயி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 15,500 பேருக்கு ரூ.6,000 நிதியுதவியும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப் பட்டுள்ளது. கிரேட் நிக்கோபார் பகுதிக்குட்பட்ட கேம்பல்பே-யில் ரூ. 75000 கோடி மதிப்பில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் 4332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்படுகின்றன.
    • 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    மோடி@20 நனவாகும் கனவுகள் என்ற தமிழாக்கப் புத்தகத்தின் வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது. காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளதாவது:

    கடந்த 8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014ல் இருந்து இதுவரை மீன்வளத்துறைக்காக ரூ.32,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்நடைகளுக்கும் அவசர ஊர்திகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது.

    அதன் பயனாக தற்போது நாட்டில் 4,332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 அவரச ஊர்திகள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு உள்ளன. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.

    8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு உள்ளன. ஜன்தன் இயக்கத்தின் மூலம் பெரும்பான்மையாக பெண்கள் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். 2047ஆம் ஆண்டு இந்தியாவை முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தமிழக கலாச்சாரம், பண்பாடு உத்தரப்பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது.
    • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அளித்தார் பிரதமர்.

    வாரணாசி:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் வரவேற்புரை ஆற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளதாவது:

    ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது. தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே கணக்கிட முடியாத பந்தம் உள்ளது.

    பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்ட பின்னர், தமிழகத்திற்கு திரும்பி தென்காசியில் பெரிய சிவாலயத்தை நிறுவினார். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவை காசிக்காண்டம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். 


    பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அளித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காசி தமிழ் சங்கமம் விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் ஜெயின், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 20ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை திரைப்பட விழா நடைபெறுகிறது.
    • 3 இந்திய திரைப்படங்கள் உள்பட 15 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன

    கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கான ஆயத்தப் பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச திரைப்படங்களுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்கும், திரைப்படக் கலையின் சிறப்பை முன்வைக்கும் விதமாக கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவதாக கூறினார்.

    இது வெற்றிகரமாகவும் அமைய இந்த நிகழ்வுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா, இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தரும் பங்கேற்பாளர்கள் மற்றும் திரைக்கலை முக்கியஸ்தர்கள் சிறப்பான வரவேற்பு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் குறைவுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்த திரைப்பட விழா குறித்த இணையப்பக்கம் மற்றும் கைபேசி செயலி ஆகியவற்றை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் தொடர்புடைய அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். இம்மாதம் 20 முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதுக்கான பட்டியலில், குரங்கு பெடல், காஷ்மீர் ஃபைல்ஸ் உள்பட 3 இந்திய திரைப்படங்களும் 12 வெளிநாட்டு திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. 

    • விவசாயிகளை போல மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
    • இறால் ஏற்றுமதியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

    சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள மத்திய மீன்துறை கடல்சார் - பொறியியல் பயிற்சி நிலையத்தை மத்திய மீன் வளத்துணை இணை மந்திரி எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த நிறுவனத்தின் மீன் அளவை ஆராய்ச்சி கப்பலில் சென்று பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    2014 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் முதல் கட்டத்தின்படி பள்ளிகள் மற்றும் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் இரண்டாவது கட்டமாக தூய்மை பாரதம் திட்டம் 2.0 நடைபெற்று வருகிறது. 


    இதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேவையற்ற கோப்புகள் நீக்கப்பட்டு, துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் மீனவள மேம்பாடு இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை காசிமேடு துறைமுகம் உள்பட இந்தியாவில் ஐந்து துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படுகிறது.

    மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு நிதியில் தமிழகத்திற்கு மட்டும் சுமார் 1800 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் சூரை மீன்களுக்கென ஒரு துறைமுகம், செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டம் இடையே ஒரு துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகளை போல மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் 32 சதவீத மீன் ஏற்றுமதி நடந்துள்ளதாக தெரிவித்தார். மீன் ஏற்றுமதியில் 2 வது இடத்திலும், இறால் ஏற்றுமதியில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • காமராஜர் ஆட்சி காலம் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது.
    • பணிபுரியும் இடங்களை பராமரிக்க தூய்மை இந்தியா 2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி பிறந்த தினம் மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    தேசத்தலைவர்களை போற்றும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடி வருகிறோம். சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கி நமது நாடு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது, 100 வது சுதந்திர தினத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

    ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்காக மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். காமராஜர் ஆட்சி காலம் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது. மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் காதி துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும்.

    மகாத்மா காந்தியின் தூய்மையை பேண வேண்டும் என்ற கொள்கையை போற்றும் விதமாக தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக வீடுகள், சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தலை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக நாம் பணிபுரியும் அலுவலகங்களை சுத்தமாகவும் தேவையற்ற பொருட்களை அகற்றி சிறப்பாக பராமரிக்கவும் தூய்மை இந்தியா 2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    நேருவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க நினைத்தார், ஆனால் முடியவில்லை, தனி மனிதர்களால் ஆர்எஸ்எஸ்-ஐ ஒழிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். நேற்று வந்த இயக்கம் அல்ல. பல லட்சம் தொண்டர்கள் தியாகம் செய்து உருவாக்கப்பட்ட இயக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேச முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு இந்தியரும் பாடுபட வேண்டும்.
    • இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும்.

    விடுதலையின் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக நாமக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழகத்தின் அறியப்படாத இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 


    அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தோடு அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்த அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். 2047-இல் நூற்றாண்டு சுதந்திர ஆண்டைக் கொண்டாடும்போது, இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். வரவிருக்கும் 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய ஆண்டுகளாகக் கருதப்படுகிறது.

    தற்சார்பு இந்தியாவிற்காக முதலில் குரல் கொடுத்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சொந்தக் கப்பலை நிறுவியவர் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார். அவரது பாதையைப் பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி தற்சார்பு இந்தியாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் அண்மையில் கப்பற்படை பணியில் சேர்க்கப்பட்டதும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப் பூசிகளும் தற்சார்பு இந்தியா முன் முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும்.
    • முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூரில் இன்று பின்னலாடை துறையினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் இந்தியாவின் முக்கிய ஊர். இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலாளர்கள் நலன்கருதி 80 கோடி மதிப்பில் 100 படுக்கை கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை மே 23-ந்தேதி பணி முடிவடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும். பஞ்சாயத்து தலைவர்கள் தான் அரசின் திட்டங்களை நடைமுறை படுத்துபவர்கள். அவர்களுடன் இன்று சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும். சின்னேரிபாளையம் பஞ்சாயத்து சுகாதாரத்திற்கு சிறந்த விருது பெற்றுள்ளது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்.

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் அனைவருக்கும் சொந்தமானவர். அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். மற்றவர்கள் பண்டிகைக்கு நேரில் சென்று கொண்டாடி வாழ்த்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதததை மக்கள் ஏன் என கேட்கிறார்கள். தேர்தலுக்காக வேல் ஏந்தி வாக்கு சேகரித்தார். ஆனால் தற்போது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்பது ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.சுதந்திர போராட்ட வீரர்களை போற்ற வேண்டும் .எனவே திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை வைத்தால் நன்றாக இருக்கும்.ராகுல் காந்தி நடைப்பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தபோவது இல்லை. கொரோனாவிற்கு பிறகு வளர்ந்த நாடுகள் கூட சிக்கி தவிக்கிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களை சார்ந்தது. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனை தடுக்க திட்டமிடலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது. அதன்படி அவர்கள் பணி செய்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.  

    • கடந்த 8 ஆண்டுகளில் நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
    • பல திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.

    சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 307 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் மரியாதை செய்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பூலித்தேவரை கெளரவிக்கும் விதமாக தபால் தலை வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். 


    முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், 2047- ஆண்டில் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற இலக்கோடு நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றார். அந்த வகையில் தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்த இருப்பதை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளில் நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது, அனைவருக்கும் வீடு திட்டம், குழாய் மூலம் குடிநீர் திட்டம் ஆகிய பல திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    • 200-க்கும் மேற்பட்டோர் சுதந்திர போராட்ட வீரர்கள் அறியப்படாத வீரர்கள் உள்ளனர்.
    • சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் தபால்தலை 20ந் தேதி வெளியிடப்படும்.

    75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு சென்னையில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி முருகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்ததுடன் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அரங்கை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 'இந்தியப் பிரிவினையின் தாக்கம்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியும் மந்திரி முருகன் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.  


    நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் மூவண்ணக்கொடியை ஏற்றி பெருமைபடுத்தி ஆதரவளித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், கொடி காத்தக் குமரன் என எண்ணற்றோர் நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வீடுதோறும் மூவண்ணக் கொடியை ஏற்றி மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

    மேலும் வ உ சி 150வது பிறந்த தினம், பாரதியார் நூற்றாண்டு விழா போன்றவற்றைக் கொண்டாடி வருகின்றோம். தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராளிகள் இருந்தனர். அதில் 200-க்கும் மேற்பட்டோர் அறியப்படாத வீரர்கள் உள்ளனர்.

    அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் தபால்தலை அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மலைக் கிராமங்களில் மக்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
    • அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை.

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை விவேகானந்தா கேந்திரா சார்பில், கோவையில் உள்ள நவ இந்தியா பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கற்ற சுதந்திர ஓட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தொடங்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    இன்று முதல் 15-ந் தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும், இல்லந்தோறும் மூவண்ணக் கொடியேற்ற வேண்டுமென பிரதமர் திரு.நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 


    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் அனைவரும், தத்தமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். மலைக் கிராமங்களில் உள்ள மக்களும், தாமாக முன்வந்து அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

    வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார் போன்ற ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்.

    இவர்கள் தவிர, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நினைவுகூர்ந்து அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தியாகிகளின் வாரிசுகளும் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

    சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் நாடாக உள்ள இந்தியா, நாட்டின் 100-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள 2047-ம் ஆண்டுக்குள், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கனவு கண்டதைப் போன்று வல்லரசு நாடாக மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×