search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kiruthigai"

    • தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
    • தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி ஆனி மாதத்துக்கான கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது.

    தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி அதிகாலை முதலே கேரளா மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகம் பேர் வருகை புரிந்தனர். எனவே கோவில் சார்பில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கூட்டம் காரணமாக தரிசன வழிகள், மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி கோவிலில் நேற்று மாலை விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடைபெற்றது. தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • சிங்கார வேலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிங்கார வேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் சிங்காரவேலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுக கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து விபூதி அலங்காரத்துடன் வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இங்குள்ள சுப்பிரமணியசாமி ஒரு முகம், ஆறு திருக்கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அமைந்துள்ளது.

    இதேபோல், தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் வாய்மேடு பழனி ஆண்டவர் கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முன்னதாக முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், தேன், திருநீறு, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளியங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.

    பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ஆடி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடந்தது.

    தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்தார்.

    பின்னர் 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வழிபட்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் தங்கரத புறப்பாடு நடந்தது.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் பழனிக்கு வருகை தந்தனர். இதனால் அதிகாலையிலேயே அடிவாரம், கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் தரிசன வழிகளில் கூட்டம் அலைமோதியது.

    ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்இழுவை ரெயில் மூலம் செல்ல ரெயில்நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, மலர் காவடி உள்ளிட்ட காவடி எடுத்து பழனி கோவிலுக்கு வந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகையையொட்டி கோவிலில் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    • மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்
    • இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படும்.இந்தாண்டு ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனம் அதிகாலை 5 மணி முதல் தொடங்கியது.

    நண்பகல் 12 மணி வரை, மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

    இன்று இரவு 11 மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமானோர் முருகனை தரிசிக்க வந்திருந்தனர். பால்குடம் நேர்த்திக்கடன் ஊர்வலமும் நடந்தது. இதனால் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குடி நீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டன.

    அலகு குத்தி வரும் பக்தர்கள், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ரூ.50 தரிசன கட்டணத்தில் பக்தர்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட வரிசையில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்றனர். பக்தர்களுக்காக `கார் பார்க்கிங்' வசதி, வள்ளி திருமண மண்டபம் எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    • கடந்த 21-ந் தேதி ஆடி கிருத்திகை விழா தொடங்கியது.
    • பக்தர்கள் வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

    திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை.

    அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆடித் திருவிழா நடத்த அரசு அனுமதித்தது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி ஆடி கிருத்திகை விழா தொடங்கியது.

    ஆடிக் கிருத்திகையான இன்று முருகனை தரிசிக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் வசதிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருத்தணிக்கு வருகை தந்து மலைப்பாதை திருப்படிகள் வழியாக மேலே நடந்து வந்து ஆய்வு செய்தார். பின்னர் முருகனை வழிபட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படிப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர்.
    • பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப் கார் பராமரிப்பு பணிகள் காரணமாக இயக்கப்படாததால் மின் இழுவை ரெயில் மூலம் மூலமே பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதே போல படிப்பாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர். கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, மலர் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாட்டுப்பாடியும், ஆட்டம் போட்டும் உற்சாகத்தோடு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மலைக்கோவில் பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதே போல பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • திருப்புகழ் பாராயணம் செய்வோருக்குத் தீராத துன்பமும் தீரும்.
    • கார்த்திகை நட்சத்திர நாளில் முருகனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.

    அரசியல் ஆதாயம், அரசு உத்தியோகம், ஆன்ம பலம், ஆரோக்கியம் பெருக்கும் ஆடிக்கிருத்திகை.

    ஆடிக் கிருத்திகையான இன்று விரதம் இருந்து ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் ஞானப் பிழம்பான முருகப்பெருமான்.

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் விரத வழிபாடு சர்வரோக நிவாரணி. தன்னை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குபவர்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார்.

    கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது. கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம்.

    சூரியன் கால புருஷ பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து செந்தில் ஆண்டவனை வணங்குவதால் கர்ம வினையால் தடைபடும் புத்திர பிராப்தம், திருமணம், உத்தியோகம், தொழில் அனுகூலம், வீடு, வாகன யோகம், சொத்து பிரச்சினை, உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை, கடன் நிவர்த்தி, அரச பதவி, அரசாங்க உத்தியோகம், அரசியல் ஆதாயம், நோய் நிவாரணம், புத்திக் கூர்மை, ஆன்ம பலம் பெருகுதல் போன்ற எண்ணிலடங்கா சுப பலன்கள் பெருகும்.

    வள்ளல் பெருமானான முருகனை நினைத்து திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றைப் படிப்பது மிகவும் நல்லது. திருப்புகழ் பாராயணம் செய்வோருக்குத் தீராத துன்பமும் தீரும்.

    • சென்னை வானகரத்தில் உள்ளது ஸ்ரீ மச்சக்கார சுவாமி நாத பாலமுருகன் கோவில்.
    • நாளை (சனிக்கிழமை) முருக பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது.

    சென்னை வானகரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மச்சக் கார சுவாமி நாத பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந் தோறும் கிருத்திகை அன்று பரிகாரம் செய்தால் பேச்சு வராத குழந்தைகளுக்கு குருஜியின் திருக்கரத்தால் நாவில் ஓம் என்ற அட்சரம் எழுதினால் சில மாதங்களில் அந்த குழந்தை பேசும் சக்தியை பெறுகிறது.

    இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கிருத்திகை அன்று ஏராளமான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து முருகனின் அருள் பெற்று செல்கிறார்கள்.

    இத்தகைய சிறப்பு மிக்க மச்சக்கார பால முருகன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நாளை சனிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 10.30 மணிக்கு 108 பால்குட விழா நடக்கிறது.

    விழாவில் முருக பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.
    • 23-ந்தேதி முதல் 25ந்தேதி வரை தினமும் மாலையில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று அஸ்வினியுடன் தொடங்கியது. விழா வருகிற 25-ந்தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது.

    ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மற்றும் பிற மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்பக் காவடி, மயில் காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இதனால் திருத்தணி நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது. கோவில் முழுவதும் பக்தர்களாக நிரம்பி இருந்தனர்.

    விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    பக்தர்கள் முருகபெருமானுக்கு தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    குற்றசெயல்களை தடுக்க முக்கிய இடங்களில் குற்றவாளிகளை கண்டறிய அதி நவீன 30 சி.சி.டி.வி கேமராக்கள் உள்பட 127 கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் பொது சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் , 5 அவசரக் கால வாகனங்கள், 108 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    மின்சார வாரியம் மூலம் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி சார்பாக 400-க்கும் மேற்பட்டவர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். தடையில்லா குடிநீர் வழங்க குடிநீர் தொட்டிகளும், 60 தற்காலிக நவீன கழிவறைகளும், எல்.ஈ.டி விளக்குகளும் பொருத்தப்படும். தீயணைப்புதுறை சார்பாக தீயணைப்பு ஊர்த்திகள் மற்றும் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, அரக்கோணத்தில் இருந்தும் திருத்தணிக்கு இன்று முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களுக்கு 3 சிறப்பு ரெயில்களும், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்து திருத்தணிக்கு 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் நாளை முதல் 25-ந் தேதி வரையில் 4 நாட்களிலும் இரவும், பகலும் இயக்கப்பட உள்ளது.

    பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை- திருப்பதி சாலை, அரக்கோணம் - திருத்தணி சாலை, சித்தூர்- திருத்தணி சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    விழாவையொட்டி கோவிலில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் தலைமையில் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

    ஆடிக்கிருத்திகை திருவிழாவின் முக்கிய விழாவாக 23-ந்தேதி முதல் 25ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் தினமும் மாலையில் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் மேற்பார்வையில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா செய்து வருகின்றனர்.

    • ஆடி கிருத்திகையை முன்னிட்டு 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு.
    • தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளம், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:- திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை, தெப்பத்திருவிழா நடைபெறவுள்ள நாட்களில் 24 மணி நேரமும் அறநிலையத்துறை சார்பாக அன்னதானம் வழங்கப்படும். மேலும், பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்படும்.

    அதேபோல் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்ற ராஜ கோபுரத்தை இணைக்கின்ற படிக்கட்டுகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். புதிதாக அமைக்கப்படுகின்ற வெள்ளி தேர் பணிகளையும் தற்போது ஆய்வு செய்துள்ளோம்.

    கோவிலுக்கு மாற்றுப்பாதை வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் உடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கின்றோம். 3 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

    இந்த விழாவின்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பிரகாரத்தை சுற்றிவரும் பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அவசர உதவிக்கான எண் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த கோவிலில் ஆடி கிருத்திகை விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    • பல வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஆடிகிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15 மணிக்கு கணபதி ஹோமமும் நடக்கிறது. பின்னர் 7 மணிக்கு அபிஷேகமும் 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது. அதன்பின்னர் 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாரதனையும் சிறப்பு வழிபாடும் நடக்கிறது. அதன் பிறகு 6.30 மணிக்கு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, சிவந்தி, ரோஸ், மல்லி, பிச்சி, கொழுந்து உள்ளிட்ட பல வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெறுகிறது.

    பின்னர் அலங்கார தீபாராதனையும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ஆடி கிருத்திகை திருவிழா நாளை தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும்.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நாளை (21ந்தேதி) தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடக்கிறது.

    விழா நாளை காலை அஸ்வினியுடன் தொடங்குகிறது. மறுநாள் (22-ந்தேதி) ஆடி பரணி, 23-ந்தேதி ஆடி கிருத்திகை விழா நடக்கிறது. அன்று இரவு முதல்நாள் தெப்ப விழா நடத்தப்படுகிறது. 24-ந்தேதி 2-ம் நாள் தெப்பமும் 25-ந்தேதி 3-ம் நாள் தெப்பமும் நடக்கிறது.

    ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    பக்தர்கள் தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வசதியாக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு நாளை (21-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரை 5 நாட்களுக்கு 3 சிறப்பு ரெயில்களும், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் திருத்தணிக்கு 600 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை-திருப்பதி சாலை, அரக்கோணம்-திருத்தணி சாலை, சித்தூர்-திருத்தணி சாலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் தலைமையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மேற்பார்வையில் திருத்தணி கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் தரிசனத்துக்காக ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும். 24 மணி நேரமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    ×