search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kids Health"

    • சிறு குழந்தை ‘ஜங்க் புட்’ கலாசாரத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.
    • பழமாக சாப்பிடாத குழந்தைகளுக்கு புரூட் சாலட்டாக்கி கொடுங்கள்.

    ''ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, முறையான உணவு பழக்க வழக்கங்கள் அவசியம். ஆனால் அதை பின்பற்ற முடியாமல் பரபரப்பான வாழ்க்கைக்கு ஏற்ப, ஆரோக்கியம் இல்லாத வெற்றுணவுகளை (ஜங்க் புட்) அதிகம் உட்கொள்கிறோம். பெரியவர்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள் கூட, 'ஜங்க் புட்' கலாசாரத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இது, எதிர்கால சந்ததியினரின் உடல் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்'' என்று ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஜனனி சுப்புராஜ்.

    இளம் இயற்கை மருத்துவர், யோகா பயிற்றுனர், கர்ப்ப கால வழிநடத்துனர்... இப்படி பல்வேறு அடையாளங்களை கொண்டிருக்கும் ஜனனி, ஊட்டச்சத்து துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர். பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மீட்டெடுத்தல், சமச்சீர் உணவு குறித்த விழிப்புணர்வுகளை வழங்குதல், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு ஆலோசனை வழங்குதல்... என இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக, 'ஜங்க் புட்' உணவுகளுக்கு எதிரான இவரது விழிப்புணர்வு வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி இருக்கின்றன.

    அவரிடம், ஊட்டச்சத்து உணவுகள் பற்றியும், குழந்தைகளிடம் நிலவும் ஜங்க் புட் கலாசாரத்தை மாற்றுவது குறித்தும் சில கேள்விகளை முன்வைக்க, சூடாகவும், சுவையாகவும் பதிலளித்தார். அவை இதோ....

    * நாம் உண்ணும் உணவும், நடைமுறையில் இருக்கும் உணவு பழக்க வழக்கமும் சரியானதா?

    நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய உணவு பழக்க வழக்கங்கள் சரியானதாகவும், ஆரோக்கிய வாழ்க்கைக்கு சிறப்பானதாகவும் இருந்தது. ஆனால், இப்போது உணவு குறித்த விழிப்புணர்வுகள் அதிகமாக இருந்தாலும், அவை அனைத்தும் குழப்பம் நிறைந்தவையாகவும், தவறான உணவு பழக்கவழக்கத்திற்கு பாதை அமைத்து கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களில், உலா வரும் தகவல்களை காரணம்காட்டி, குறிப்பிட்ட சத்து அடங்கிய உணவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவதும், 'டயட்' என்ற பெயரில், ஒருசில உணவுகளை மட்டுமே உட்கொள்வதும் என தவறான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கிறோம். சிலருக்கு, சாப்பிடுவதுகூட மன அழுத்தமான விஷயமாக மாறியிருக்கிறது. உடல் எடை அதிகரித்துவிடக்கூடாது என்ற கவலையிலேயே பலரும் உணவு உட்கொள்கிறார்கள். இது மன அமைதியை சீர்குலைத்து, ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கிறது.

    * உணவு பழக்க வழக்கங்களில் என்னென்ன தவறுகள் செய்கிறோம்?

    மேற்கத்திய உணவு கலாசாரத்தினால் நம் மண்ணுக்கும், மரபுக்கும் தொடர்பில்லாத உணவு வகைகளையும், பழம் மற்றும் காய்கறி வகைகளையும் உட்கொள்வது, மிகப்பெரிய தவறு. மேலும் நம் முன்னோர்களின் உணவு பழக்கத்தில் இருந்து மாறுபட்டு, விருப்பத்திற்கு ஏற்ப உணவு சமைத்து உண்பதும், தவறான செயல்பாடுகள். உதாரணத்திற்கு, தயிரில் ஊறவைத்த பழைய சோறும், ஆவியில் அவித்து எடுத்த இட்லியும், கூழ் வகைகளும்தான் தமிழ்நாட்டின் பாரம்பரிய 'பிரேக் பாஸ்ட்'. ஆனால் இன்று எண்ணெய்யில் சுட்டு எடுத்த தோசை, பூரி, நூடுல்ஸ் ஏன்...? புரோட்டா, பிரியாணி கூட நவீன கால 'பிரேக் பாஸ்ட்' வகைகளில் இணைந்திருக்கின்றன.

    அதேபோல, நம் முன்னோர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகவே இரவு உணவை உண்டு முடித்துவிடுவார்கள். ஆனால் இன்று, நள்ளிரவு 2 மணிக்கு கூட பிரியாணி உண்ணும் பழக்கம் டீன்-ஏஜ் வயதினருக்கு உண்டு.

    * 'ஜங்க் புட்' உணவு பழக்கம், சிறு குழந்தைகள் வரை வேரூன்றி இருக்கிறதே. அவை எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்?

    வீட்டில் சமைக்கப்படாமல் கடைகளில் வாங்கி சுவைக்கப்படும் பாக்கெட் மற்றும் பாட்டில் உணவு பொருட்களைதான் ஜங்க் புட் என்கிறோம். ஒருசில துரித உணவுகளும், ஜங்க் புட் பட்டியலில் வரும். பெரும்பாலான பாக்கெட் உணவுகளில், கார்போஹைட்ரேட் மற்றும் அளவிற்கு அதிகமான சர்க்கரை நிறைந்திருக்கிறது. இவை இரண்டுமே, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. கண்ணை கவரும் வண்ணங்களில், குழந்தைகளின் ஆசையை தூண்டும்படியாகவே ஜங்க் புட் உணவுகளும் விளம்பரம் செய்யப்படுகின்றன. குழந்தைகளே விரும்பி கேட்டாலும், அதை மெல்ல மெல்ல குறைத்துவிடுங்கள். இல்லையேல், வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிக் சிண்ட்ரம்), அதிக உடல் பருமன் (ஒபிசிட்டி) மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

    * குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான உணவு வழங்குவது எப்படி?

    குழந்தைகளுக்காக இந்த வாரம் என்ன சமைக்க இருக்கிறோம், என்னென்ன காய்கறிகளை பயன்படுத்த இருக்கிறோம்... என்ற திட்டமிடல் இருந்தாலே போதும், ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கிய உணவுகளை சமைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். மேலும் குழந்தைகள், ஒருகுறிப்பிட்ட பழம், காய்கறிகளை உண்ண மறுத்தால், அதை வேறுவிதமாக சமைத்து கொடுங்கள். பழமாக சாப்பிடாத குழந்தைகளுக்கு புரூட் சாலட்டாக்கி கொடுங்கள். காய்கறிகளை கூட்டு, பொரியல் ஆக சமைத்து கொடுக்கலாம். இல்லையேல், ஜூஸ் ஆக மாற்றி பருக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வண்ணமயமான உணவு பிடிக்கும் என்பதால், பலதரப்பட்ட வண்ணங்களில் உணவு படைக்கலாம்.

    * குழந்தைகளிடம் இருக்கும் ஜங்க் புட் உணவு பழக்கத்தை எப்படி மாற்றுவது?

    தடாலடியாக மாற்றிவிட முடியாது என்றாலும், நல்ல பழக்கத்தை கற்றுக்கொடுத்து, ஜங்க் உணவு பழக்கத்தை குறைக்கலாம். குழந்தைகள் விரும்பும் ஜங்க் உணவுகளுக்கு மாற்றான ஆரோக்கிய உணவு எது என்பதையும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு எது என்பதையும் கண்டறிந்து... ஜங்க் உணவுகளுக்கு மாற்றாக, அதை உண்ண கொடுங்கள். முக்கியமாக, காய்கறி, பழம், பயிறு வகைகளை சாப்பிட பழக்கினாலே, ஜங்க் உணவு பழக்கம் குறைந்துவிடும்.

    * ஆரோக்கியமாக வாழ என்னென்ன செய்ய வேண்டும்?

    நேரத்திற்கு உணவு உண்ணுங்கள். மண்ணுக்கும், மரபுக்கும் தொடர்புடைய உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள். அந்தந்த பருவ காலத்தில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும் கட்டாயம் உட்கொள்ளுங்கள். முடிந்தவரை, எல்லாவற்றையும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது பிடிக்காது, அது பிடிக்காது என உணவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்காதீர்கள். பிடிக்காத உணவுகளையும் அளவாக சேர்த்து கொள்ளுங்கள். நிதானமாக உணவு உட்கொள்ளுங்கள்.

    * குழந்தைகளுக்கு, இந்த கோடை காலத்தில் என்னென்ன உணவுகளை தவிர்க்கலாம்? எதை கொடுக்கலாம்?

    இன்ஸ்டென்ட் மிக்ஸ் என்ற பெயரில் வரும் குளிர்பான பொடி, குளுக்கோஸ் என்ற மாயத்தோற்றத்தில் இருக்கும் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே குளிர்பானங்களை தயாரியுங்கள். லெமன் ஜூஸ்ஸில் தொடங்கி, உயர் ரக பழங்கள் வரை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜூஸ் தயாரிக்கலாம். வீட்டில் தயிர் தயாரித்து அதில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக பருக கொடுக்கலாம். இல்லையேல், தயிருடன் உலர் திராட்சை கலந்து கொடுக்கலாம். இஞ்சி, சீரகம், கொத்தமல்லி சேர்த்து மோர் தயாரித்து கொடுக்கலாம். சர்பத், கோல்ட் காபி... என வீட்டிலேயே கோடை உணவுகளை செய்து அசத்தலாம்.

    • எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
    • கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்

    கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே குழந்தைகளை இம்மாதிரியான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். சரி இந்த பதிவில் கோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

    * பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.

    * தினமும் குழந்தையை ஒரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.

    * அதேபோல் குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.

    * குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

    * மேலும் குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், எனவே இதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.

    * குழந்தைக்கு வேர்க்குரு வந்துவிட்டால் உடனே வேர்க்குரு பவுடரை பயன்படுத்துவதற்கு பதில், சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.

    * குழந்தைகளுக்கு வேர்க்குருடன் சிவப்பு தடிப்புகள் ஏற்படும் அதற்கு சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.

    * குழந்தைக்கு வேர்க்குரு குறைய இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்யங்கள், பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள் இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.

    * குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.

    * சாதம் வடித்த கஞ்சி குழந்தையின் வேர்க்குரு பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும். இதனால் வேர்க்குரு விரைவில் சரியாகும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.
    • சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்.

    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன:

    * குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

    * பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

    * நட்பில் உண்டாகும் மனவருத்தம்

    * குடும்பங்கள் பிரிந்து விடுதல்

    * மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

    * பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்

    * அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்

    * குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

    * மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

    * பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

    * பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்

    * உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

    இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

    • அவர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் தன்னம்பிக்கையையும், மன தைரியத்தையும் கொடுங்கள்.
    • தேவைப்பட்டால் மன நல ஆலோசகர், மருத்துவரை அணுகி சுமுக தீர்வு காணுங்கள்.

    இளம் பருவத்தினரில் ஐந்தில் ஒருவர் மன நோய்க்கு ஆளாவதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. வாழ்வியல் முறைதான் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. 10 வயதாகும் சுஜாதா, தந்தையின் பணி நிமித்தம் காரணமாக டவுண் பகுதியிலிருந்து மெட்ரோ நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்தாள். புதிய வீடு மற்றும் பள்ளி சூழலுக்கு தன்னை மாற்றிக்கொள்வதற்கு சுஜாதா ரொம்பவே சிரமப்பட்டாள்.

    முந்தைய பள்ளியில் படித்த நண்பர்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட வகுப்பு தோழர்களுடன் பழக வேண்டியிருந்தது. அது அவளின் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்கு வந்த பிறகும் பள்ளிச் சூழலில் இருந்து மீள முடியாமல் தவித்தாள்.

    மகளின் சுபாவத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கவனித்த தாயார், அதுபற்றி கேட்டபோது ஆரம்பத்தில் முறையாக பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தி கேட்ட பிறகு, சில மாணவர்களின் செயல்பாடுகளால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகுவதை ஒப்புக்கொண்டாள். சுஜாதாவை போன்று இளம் பருவத்தில் மன அழுத்தம், கவலை, மனச்சோர்வுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    10 முதல் 20 சதவீதம் வரையிலான இளம் பருவத்தினர் மன நலம் சார்ந்த பாதிப்புக்கு ஆளாவதை உலக சுகாதார நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது. எனினும் அவர்களுக்கு முறையான மன நல ஆலோசனை வழங்கப்படாத நிலையே நீடிக்கிறது. அறியாமை, சமூக நிலைமை, மன நலம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவை அதற்கு காரணமாக இருக்கலாம். இதன் விளைவாக கவலை, மனச்சோர்வு, தற்கொலை சிந்தனை, பசியின்மை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்றவை தலைதூக்குகின்றன.

    நண்பர்களிடையே நட்பை பேணுவதில் சுமுக நிலை இல்லாமை, படிப்பு விஷயத்தில் பெற்றோரின் எதிர்பார்ப்பு போன்ற விஷயங்களும் பதின்ம வயதினரிடத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன. அவர்களிடத்தில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஆரோக்கியமான வழிமுறைகள்:

    * உங்கள் வீட்டில் உள்ள பதின்ம வயதினரின் நலனில் நீங்கள் அக்கறை கொள்வதை அவர்கள் உணர்ந்து கொள்ளும்படி செயல்படுங்கள். அன்பு, பாசத்தை வெளிப்படுத்துங்கள்.

    * அவர்கள் கூறும் யோசனைகளை காது கொடுத்து கேளுங்கள். நல்ல யோசனைகளாக இருந்தால் மனதார பாராட்டுங்கள். அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுங்கள். அவர்களின் வாழ்க்கை நல்லபடியாக அமைவதற்கு நீங்கள் பக்கபலமாக இருப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

    * அவர்களுடன் குடும்பமாக ஒன்றிணைந்து நேரத்தை செலவிடுங்கள்.

    * அப்போது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுங்கள்.

    * அவர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் தன்னம்பிக்கையையும், மன தைரியத்தையும் கொடுங்கள். நீங்கள் பின் புலத்தில் பக்கபலமாக இருப்பதை உறுதிபடுத்துங்கள். தேவைப்பட்டால் மன நல ஆலோசகர், மருத்துவரை அணுகி சுமுக தீர்வு காணுங்கள்.

    குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை.
    பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதி பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு உடலின் கழிவு நீக்க அமைப்பு மூலம் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இந்த வேதி பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    குழந்தைகளின் உடலை அடையும் வேதிப் பொருட்களின் பாதிப்புகள் உடனடியாக குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டு விடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அவர்களின் வாழ்நாள் நம்மைவிட அதிகம். அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்க குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்தில் இருந்தே தேடவேண்டி உள்ளது.

    குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக் குழு என்ற அமைப்பின் 2005-ம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    நம் வீட்டில் பயன்படுத்தும் நுரை மெத்தை, கணினி, டி.வி. ஆகியவை எளிதில் தீப்பிடிக்காமல் இருக்க தீ தடுப்பான்களான பலபடி புரோமினேற்றம் செய்யப்பட்ட பைபீனைல் ஈதர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவு சங்கிலியில் கலந்து தாயின் உடலை அடைந்து தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் சென்றடைகின்றன. இவை மூளை வளர்ச்சியை பாதிப்பது மட்டுமில்லாமல், தைராய்டு தொடர்பான நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றன.

    வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை. நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாக குழந்தை பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியோ முழு வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக வேதி தாக்குதலின் தீவிரம் குழந்தைகளிடம் அதிகம்.

    குறிப்பாக அவர்களுடைய முதிர்ச்சியடையாத மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியது. குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளேவரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை பாதிப்படைய செய்கின்றன.
    குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். குழந்தையின் நகத்தை வெட்டும் போது கவனிக்க வேண்டியவை.
    குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் பராமரிப்பிலும் தாய்மார்கள் மென்மையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். அந்த விஷயங்களில் உங்களுக்கு உதவும் எளிய டிப்ஸ் இதோ…

    * குழந்தைகள் விளையாடும் வேளைகளில் அதிகமாக நகங்களை பயன்படுத்துவதால் அதில் ஏராளமாக அழுக்கு படியும். இதனால் நோய் தொற்ற வாய்ப்பு உண்டு. எனவே அதிகமாக வளரும் நகங்களை அவ்வப்போது வெட்டிவிடுவது சிறந்தது.

    * குழந்தைகளின் நகங்களை வெட்ட சரியான நேரம் அவர்கள் தூங்கும் வேளைதான். இல்லாவிட்டால் அவர்கள் வளைந்து, நெளிந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். பிறகு அழுகையையும் நிறுத்த முடியாது.

    * குளிப்பாட்டியவுடன் குழந்தைகளின் நகம் மேலும் மென்மையாக மாறிவிடும் என்பதால் அப்போதும் நகங்களை நறுக்கலாம்.

    * குழந்தைகளுக்கு வேகமாக நகம் வளர்ந்து விடும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. மெதுவாகவே வளரும். 2 வாரங்களுக்கு ஒரு முறை நகங்களை வெட்டிவிடலாம்.



    * குழந்தைகளின் கால் நகங்கள், கை நகங்களைவிட மெதுவாகத்தான் வளரும். அதுவும் மிருதுவாகத்தான் இருக்கும். கால்நகங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்பதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டிய அவசியமில்லை. நன்றாக வளர்ந்தபிறகு கத்தரிக்கலாம்.

    * நகங்களை வெட்டுவதற்கு குழந்தைகளுக்கான `நெயில்கட்டர்’ கருவியை பயன்படுத்தலாம். கத்தரிக்கோல் கொண்டு வெட்டுவது, சாணைக்கல்லில் நகங்களை உரசுவது போன்றவை கூடாது.

    * காதுகளை சுத்தம் செய்ய சுத்தமான துணியை லேசாக தண்ணீரில் நனைத்து காதை துடைத்தால் போதும். காதுக்குள் குடைந்து எடுக்க வேண்டாம்.

    * காதுகளில் மயிர்க்கால்கள் வளர்வதை உணர்ந்தால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்க வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.

    * காதுக்குள் சொட்டு மருந்துகள் எதையும் டாக்டர்களின் ஆலோசனையின்றி விடவேண்டாம்.

    * கண்களை சுத்தபடுத்தும்போது சுத்தமான துணியை வெதுவெதுபான நீரில் முக்கி பிழிந்துவிட்டு கண்ணின் சுற்றுபுறத்தை துடைத்தால் போதும். சோப்பு கொண்டு கண்களை கழுவக்கூடாது.

    ×