search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Temple"

    • இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார்.
    • இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், அடுவச்சேரியில் அமைந்திருக்கிறது, வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில். இங்கு அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

    தல வரலாறு

    விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அமைந்தது, பரசுராமர் அவதாரம். பரசுராமர் ஒருமுறை, மகாலட்சுமியைத் தன் கைகளால் தழுவிய நிலையில் இருப்பது போன்ற மகாவிஷ்ணு சிலை ஒன்றை உருவாக்கினார். அதனை ஓரிடத்தில் நிறுவி, ஆலயம் அமைத்தார். பின்னர் அதை வேதியர்களிடம் ஒப்படைத்துச் சென்றார். பரசுராமரிடம் இருந்து அந்தக் கோவிலைப் பெற்றவர்கள், கோவிலுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்து, லட்சுமி தேவியின் அருளைப் பெற்றுச் செல்வ நிலையில் உயர்ந்தனர்.

    பிற்காலத்தில் அவர்களது மரபுவழியில் வந்தவர்கள், கோவில் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கத் தொடங்கினர். அதனால், அவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்காமல் போனது. மேலும் அவர்கள் செல்வத்தை இழந்து, வறுமையில் வாடினர். கோவில் பணிகள் எதையும் செய்யாததாலும், கோவிலுக்கு வந்து வழிபடுபவர்கள் இல்லாமையாலும், அந்த இடம் மனித நடமாட்டமில்லாமல் மாறிப் போனது. ஒரு கட்டத்தில் வழிபாடின்றி கிடந்த ஆலயத்தில் பூஜைகளைச் செய்ய, லட்சுமிதேவியே அங்கு வந்தாள்.

    அங்கிருந்த சாலக்குடி ஆற்றில் நீரெடுத்து, கோவில் பணிகள் அனைத்தையும் செய்து வரத் தொடங்கினாள். அப்படி ஒருநாள் லட்சுமி தேவி நீர் எடுத்து வரும்போது, அவரைப் பார்த்து வில்வமங்கள சுவாமிகள் ஆச்சரியமடைந்தார். அவர், லட்சுமி தேவியிடம் "ஆற்றில் இருந்து நீரெடுத்துச் செல்வது ஏன்?" என்று கேட்டார். லட்சுமி தேவி, அங்கிருக்கும் மகாவிஷ்ணு கோவில் குறித்த செய்தியைத் தெரிவித்து, அங்கு கோவில் பணி செய்து வந்தவர்கள், அதனைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்ட தகவலையும் சொன்னாள்.

    வில்வமங்கள சுவாமிகள், கோவிலைப் புறக்கணித்தவர்கள் திருந்திட, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்கள் மீது கருணைப் பார்வையைச் செலுத்தி, அவர்களை நல்வழிப்படுத்த லட்சுமிதேவியிடம் வேண்டினார். லட்சுமிதேவியும் அவர் வேண்டுகோளை ஏற்று, அட்சய திருதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு, ஆலயத்தில் அஷ்டலட்சுமியாக இருந்து அருள் புரிவதாகவும், அவர்களது வறுமையைப் போக்கி அருளுவதாகவும் கூறினாள். உடனே வில்வமங்கள சுவாமிகள், கோவில் பணிகளைச் செய்து வந்தவர்களை அழைத்து வந்து, அக்கோவிலில் மீண்டும் வழிபாடுகளைச் செய்யும்படி அறிவுறுத்தினார்.

    அவர்களும் சுவாமிகள் சொன்னபடி, கோவில் பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கினர். பின்னர் ஆலயத்தில் அட்சயதிருதியை தொடங்கி எட்டு நாட்களுக்கு லட்சுமி தேவி, அஷ்டலட்சுமியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் அவர்களுக்குக் காட்சிஅளித்தாள். அதனால் கோவில் பணிகள் செய்தவர்களும், கோவிலுக்குச் சென்று வழிபட்டவர்களும் மீண்டும் அனைத்துச் செல்வங்களையும் பெற்று, உயர்ந்த நிலையை அடைந்தனர் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    கேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவருக்குப் பின்புறத்தில் லட்சுமி தேவி சிற்பம் இருக்கிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்களுக்கு மட்டும் மகாவிஷ்ணுவின் இடதுபுறத்தில் லட்சுமிதேவி அமர்ந்த நிலையில் காட்சியளிப்பாள். இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும். மாங்கல்ய பலன், குழந்தைப்பேறு கிடைக்கும். விவசாயம் மற்றும் வணிகம் பெருகும் என்பதுடன் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்பது பொதுவான பலனாக இருக்கிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பட்டுத்துணி, கண்ணாடி ஆகியவற்றை வாங்கிக் கோவில் சன்னிதியில் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். கோவில் அர்ச்சகர்கள், சமர்ப்பிக்கப்படும் பட்டுத்துணி மற்றும் கண்ணாடியை வழிபாட்டிற்குப் பின்பு, மீண்டும் பக்தர்களிடமேத் திருப்பித் தந்துவிடுகின்றனர்.

    இந்தப் பொருட்களை வீட்டின் பூஜையறையில் வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும் எனும் நம்பிக்கை இருக்கிறது. இதே போன்று, சுமங்கலிப் பெண்கள் அரிசி மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். அரிசியை மகாவிஷ்ணுவுக்கும், மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாகச் சொல்லி, அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களைச் சொல்லி வழிபடுகின்றனர்.

    இதன் மூலம், வீட்டிலிருக்கும் அனைவருக்கும் நல்ல உடல் நலமும், பொருள் வளமும் கிடைக்கும் என்கின்றனர். இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதம் அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்கள் லட்சுமிதேவி, அஷ்டலட்சுமியாக அருள்கிறார்.

    அட்சய திருதியை நாள் அன்று வீரலட்சுமி, இரண்டாம் நாளில் கஜலட்சுமி, மூன்றாம் நாளில் சந்தான லட்சுமி, நான்காம் நாளில் விஜயலட்சுமி, ஐந்தாம் நாளில் தான்யலட்சுமி, ஆறாம் நாளில் ஆதிலட்சுமி, ஏழாம் நாளில் தனலட்சுமி, எட்டாம் நாளில் மகாலட்சுமியாக காட்சி தருகிறாள். இந்த எட்டு நாட்களிலும் தாம்பூல சமர்ப்பண வழிபாடு எனும் சிறப்பு வழிபாடு நடத்தப் பெறுகிறது.

    அமைவிடம் :

    எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா செல்லும் பேருந்தில் அத்தாணி என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் அடுவச்சேரியை அடையலாம்.

    • பராசக்தியின் உத்தரவை ஏற்று அந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது.
    • செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு தரிசனம் நடத்தி வருகிறார்கள்.

    கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் பட்டத்தின், மரப்பாலம் முட்டடா சாலையின் மேற்குப்பகுதியில் சக்தி வாய்ந்த ஆதிபராசக்தி கோவிலான பிரசித்தி பெற்ற மாங்குளம் ஸ்ரீ பராசக்தி தேவி கோவில் உள்ளது. அனந்தபுரியின் மூகாம்பிகை என்றழைக்கப்படும் இக்கோவிலில், தினசரி பூஜை நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் திருநடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் பலா, அன்னாசி உள்பட முள்ளுள்ள பழங்களை படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

    இந்த கோவில் உருவான வரலாறு குறித்த விவரம் வருமாறு:-

    ஆதிபராசக்தியின் பக்தரான கோவில் தலைமை பூசாரி, பல ஆண்டுகளுக்கு முன் கொடுங்கல்லூர் கோவில் தரிசனம் முடிந்து திரும்பும் வழியில், முக ஐஸ்வர்யத்துடன் ஒரு மூதாட்டியும், ஒரு இளம்பெண்ணும் பேசிக்கொண்டு இருப்பதை கண்டார். அவர்களை சந்தித்த அவருக்கு பெண்கள் பூஜை ரகசியங்களை சொல்லி கொடுத்தனர். இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் தனி அறையில் அமர்ந்து தமிழில் உருக்கமாக பிரார்த்தனை செய்ய தொடங்கினார்.

    அப்போது தான் குடி இருக்க தனியாக இடம் வேண்டும் என வேண்டினார். அடுத்த நாள் அவர் தந்தையின் கனவில் தோன்றிய தேவி, ஆதிபராசக்தியின் அருள் பக்தரிடம் நிறைந்து உள்ளது எனவும், ஆதலால் பக்தரின் வேண்டுதலை ஏற்று இப்போது வசிக்கும் இடத்திலேயே ஒரு சிறிய கோவில் கட்டி கொடுக்கவும் என்று கூறி கனவில் இருந்து மறைந்தார்.

    பக்தர்கள் வருகை

    பராசக்தியின் உத்தரவை ஏற்று அந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது. அதில் அந்த பக்தர் பூசாரியாக ஆதிபராசக்திக்கு பூஜை வழிபாடுகளை நிறைவேற்றினார். பூஜைகளை முறைப்படி கற்றிராத அந்த பூசாரி நாளடைவில், முற்றும் தெரிந்த பூசாரியை போல் ஆதிபராசக்தியின் அருளால் பூஜை வழிபாடுகளை நிறைவேற்றி வருகிறார். இந்த கோவில்தான் மாங்குளம் ஸ்ரீபராசக்தி தேவி கோவிலாக அறியப்படுகிறது. ஆதி பராசக்தியின் அருட் செயலை கேள்விப்பட்டு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வர தொடங்கினர்.

    குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு தரிசனம் நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து ஆதிபராசக்தியின் பக்தனான தலைமை பூசாரி, பிரச்சினைகளுக்கு பரிகார மார்க்கங்களை சொல்லி கொடுக்க தொடங்கினார். அவர்களின் துன்பங்களுக்கு பூசாரி பல்வேறு பரிகாரங்களை பரிந்துரை செய்து வருகிறார். நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய், நொடிகளில் இருந்து மீண்டு வரவும் இங்கு பரிகாரம் சொல்லி கொடுக்கப்படுவதால் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் தேவியை தரிசிக்க கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஸ்ரீ ஆதிபராசக்தி தேவியையும், ஸ்ரீ பத்ரகாளி தேவியையும், சமமாக வழிபடும் இக்கோவிலில் திருவிழா நாட்களில் நடத்தப்படும் அஷ்டலட்சுமி பூஜை, படைப்பு, பூப்படை ஆகியவை சிறப்பானவையாகும்.

    ஆதிபராசக்தியின் தெய்வீக அருள் குடிகொண்ட இக்கோவிலில் நாளைமறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை 11 நாட்கள் மகாகாலேஸ்வர யாகம் நடக்கிறது.மகாகாலேஸ்வர யாக பூஜைகள் 16-ந் தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    • கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.
    • பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 66 வது திவ்ய தேசம்.

    மூலவர் - நாவாய் முகுந்தன்

    தாயார் - மலர்மங்கை நாச்சியார்

    தீர்த்தம் - கமல தடாகம்

    திருவிழா - வைகுண்ட ஏகாதசி, திருவோணம்

    மாநிலம் - கேரளா

    தல வரலாறு :

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 66 வது திவ்ய தேசம். முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து பெருமாளைப் பூஜித்து வந்தனர். ஒரு நாள் கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் இல்லாமல் போனது.

    எனவே கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையை கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் தேவியை அழைத்து இனிமேல் பூ பறிக்க வேண்டாம் கஜேந்திரனுக்கு விட்டுக் கொடு என்றார். லட்சுமியும் அவ்வாறே செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் ஏராளமான பூக்களைப் பறித்து பெருமாளை தரிசித்து வந்தான்.

    பூஜையின்போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடனே தங்க சிம்மாசனத்தில் அமர செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக வரலாறு கூறுகிறது.

    கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள். ஒருமுறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் நவகிரக ஸ்தலம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் "நாவாய் ஸ்தலம்' ஆனது. இதை தற்போது "திருநாவாய்" என அழைக்கிறார்கள். மிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன.

    திறக்கும் நேரம் - காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7;30மணி வரை

    • மதுரை மீனாட்சி அம்மனே, இங்கு மீன்குளத்தி பகவதியாக வீற்றிருப்பதாக தல வரலாறு சொல்கிறது.
    • கொடிமரத்தைக் கடந்தால், மூலவரான மீன்குளத்தி பகவதி அம்மனை தரிசிக்கலாம்.

    கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பல்லசேனா என்ற ஊர். இங்கு மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மனே, இங்கு மீன்குளத்தி பகவதியாக வீற்றிருப்பதாக தல வரலாறு சொல்கிறது. அதுபற்றி பார்ப்போம்.

    முன்னொரு காலத்தில் கடும் பஞ்சம் காரணமாக சிலர் பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு காணப்பட்ட செழிப்பு காரணமாக, அவர்களின் வணிகமும் செழித்து வளர்ந்தது. அதனால் அவர்கள் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினர். அவர்களில் மதுரை மீனாட்சி அம்மனின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு பெரியவர் குடும்பமும் இருந்தது.

    அவர்கள் அவ்வப்போது மதுரைக்குச் சென்று மீனாட்சியை தரிசனம் செய்து வருவது வழக்கம். ஒரு முறை அவர் தன் குடும்பத்துடன் மீனாட்சியை தரிசித்து விட்டு ஊர் திரும்பினார். மறுநாள் பல்லசேனாவில் உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காகச் சென்றார். குளத்தின் கரையில் குடையை விரித்து, தான் கொண்டு வந்திருந்த பொருட்களை அதன் அடியில் வைத்து விட்டு குளித்தார்.

    கரைக்கு வந்து குடையை எடுக்க முயன்றபோது, அதை அசைக்கக் கூட முடியவில்லை. பொருட்களையும் எடுக்க முடியவில்லை. பலமுறை முயற்சித்தும் பலன் இல்லாததால் பயந்து போன அவர், வீட்டிற்குச் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் நடந்ததைச் சொன்னார். அவர்களும், விஷயத்தைக் கேள்விபட்ட ஊர் மக்கள் பலரும் அங்கு குவிந்தனர். அவர்களாலும் குடையையும், அதன் அடியில் இருந்த பொருட் களையும் அசைக்க முடியவில்லை.

    அப்போது அங்கே ஒரு அசரீரி கேட்டது. "இந்த தள்ளாத வயதில் நீ என்னை தரிசிப்பதற்காக மதுரைக்கு வர வேண்டாம். உனக்காக நானே இங்கு வந்துள்ளேன். எனக்கு இங்கே ஒரு கோவில் கட்டு" என்றது அந்தக் குரல். இதையடுத்து அந்தப் பெரியவரும், குடும்பத்தினரும் இணைந்து அங்கு அம்மனுக்கு ஒரு ஆலயம் எழுப்பினர். குடை மண்ணில் பதிந்து போனதால், இந்த பகுதிக்கு 'குடைமன்னு' என்ற பெயரும் உண்டு.

    இந்த ஆலயத்தின் கொடி மரம் தேக்கு மரத்தால் ஆனது. இதை செப்புத் தகடு கொண்டு வேய்ந்துள்ளனர். கொடிமரத்தைக் கடந்தால், மூலவரான மீன்குளத்தி பகவதி அம்மனை தரிசிக்கலாம். இது தவிர சப்த மாதர்கள், கணபதி, வீரபத்திரர், துர்க்கை, பரமேஸ்வரன், பைரவர், சாஸ்தா ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், மாசி மாதம் நடைபெறும் 8 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

    இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குளத்துப்புழை ஐயப்பன் கோவில் (அ) குளத்துப்புழா ஐயப்பன் கோவில், ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இங்கு ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் பால சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இக்கோயிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவிற்கே உள்ளது. இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது.

    கோவில் அமைப்பு

    குளத்துப்புழா கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். நடுவில் கருவறையும் சுற்றி மரத்தாலான கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம். இங்கு ஐயப்பன் பாலகனாகக் கருவறையுள் காட்சி தருகிறார்.

    பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி உள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறையம்மன், பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    கோவில் தோன்றிய தல புராணம்

    கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும் அவருடைய ஆட்களும் காட்டில் கல்லடையாற்றின் கரையில் ஒருமுறை தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர்.

    உடைக்க நினைத்த கல் உடையாமல் உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவம் என்று தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது என்பது மரபுவழிச் செய்தி.

    சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் வைக்கப்படுகின்றன.

    மச்சக் கன்னி புராணக் கதை

    கோவிலை ஒட்டி கல்லடையாறு ஓடுகிறது. குளத்துப்புழை ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி அவரைத் திருமணம் செய்ய விழைய ஐயப்பன் மறுத்து விட்டார். அதனால் அவள் அவரைப் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் வாழும் வரத்தையாவது தனக்குத் தர வேண்டுமென ஐயப்பனிடம் வேண்ட அவரும் தனது தலத்தில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினாராம்.

    மச்சக் கன்னியும் அவள் தோழியரும் கல்லடையாற்றின் இப்பகுதியில் மீன்களாக வாழ்வதாக ஒரு நம்பிக்கை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுகின்றனர். ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

    சிறப்புகள்

    இக்கோவிலில் ஐயப்பன் பாலகனாக அமைந்துள்ளதால், சிறுவர்களின் கல்விக்கு உகந்த இடமான இங்கு விஜய தசமி மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் இங்கு நடைபெறும் வித்யாரம்பம் சிறப்பானது. ஏப்ரல்/மே மாதத்தில் நடைபெறும் விஷு மகோத்சவம் இங்கு நடைபெறும் முக்கியமான திருவிழா ஆகும்[2]. பரவலாக அறியப்பட்ட ஐயப்பனின் கோவில்களில் குளத்துப்புழா ஐயப்பன் கோவில் ஒன்றாக உள்ளது. ஆரியங்காவு, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள்.

    சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம்.திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள குளத்தூர் ஐயன் கோவில் இந்தக் கோவிலில் இருந்து பிடிமண் மற்றும் நீர் எடுத்துவந்து கட்டப்பட்டது.இன்றைக்கும் இந்தக் கோவில் திருவிழாவின் போது குளத்துபுழா சென்று நீர் எடுத்து திரும்புவது வழக்கம்

    இக்கோவில் அமைந்துள்ள குளத்துப்புழா எனும் சிற்றூர், செங்கோட்டை-திருவனந்தபுரம் சாலையில்[2] செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை - கொல்லம் இருப்புப் பாதை வழியாகவும் இக்கோவிலை அடையலாம். மேலும் இவ்வூர் திருவனந்தபுரத்திலிருந்து 62 கிமீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
    ஆலமரத்தில் மணியைக் கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.
    ஆலமரத்தில் மணியைக் கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.

    தல வரலாறு

    எட்டுக்கெட்டு என்று அழைக்கப்பெற்ற குடும்பத்தின் தலைவர், வயலுக்குத் தேவையான விதை நெல் வாங்குவதற்காகப் படகு ஒன்றில் ஆலப்புழை சென்றார். அங்கே ஒரு சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருப்பதைக் கண்டார். விதை நெல்லை வாங்கிக் கொண்டு உடனே ஊர் திரும்ப வேண்டும் என்பதால், அந்தச் சிறுமியைக் கண்டுகொள்ளாமல் சென்றார்.

    விதை நெல்லை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த போதும், அதே இடத்தில் அந்தச் சிறுமி அழுது கொண்டிருந்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட அவர், சிறுமியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார். அந்தச் சிறுமியைத் தன் வீட்டிலேயேத் தங்க வைத்து வளர்த்துப் பின்னர் திருமணமும் செய்து கொடுத்தார்.

    சில தலைமுறைகளுக்குப் பின்பு, அவரது குடும்பத்தின் மரபுரிமையினருக்குக் கடுமையான நோய் ஒன்று ஏற்பட்டது. அதனால் அவர்கள் துன்பத்தில் தவித்தனர். ‘தங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் இப்படி ஒரு நோய் வருவது ஏன்?’ என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பிய அவர்கள், ஒரு ஜோதிடரை அழைத்துக் காரணம் கேட்டனர். அந்த ஜோதிடர், ‘முந்தையக் காலத்தில் அக்குடும்பத்தின் தலைவர் அழைத்து வந்த சிறுமி, இந்த உலகைக் காக்கும் தேவி’ என்றும், ‘அவளைப் பிற்காலத்தில் வந்தவர்கள் மறந்து போய்விட்டதால், அக்குடும்பத்தினருக்கு நோயும் துன்பமும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது’ என்றும் கூறினார்.

    உடனே அந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்தப் பகுதியில் ஒரு சிறிய கோவிலை உருவாக்கி, அதில் தேவியின் சிலையை நிறுவி வழிபடத் தொடங்கினர். அதன் பிறகு, அந்தக் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு வந்த நோய் நீங்கியதுடன், அவர்கள் வாழ்வில் வளமும் செல்வமும் அதிகரிக்கத் தொடங்கின என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    ஒரு பகுதியில் அரபிக்கடல். மறுபகுதியில் திருவனந்தபுரத்தில் இருந்து சோரனூர் செல்லும் கால்வாய். இவை இரண்டுக்கும் இடையில் ஒரு தீவு போன்று இருக்கும் பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலில் பத்ரகாளி நின்ற நிலையில் காட்சி தருகிறார். மேக்கத்தில் எனப்படும் வனப்பகுதியில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எனவே இத்தல தேவியை ‘காட்டில் மேக்கத்தில் தேவி’ என்றும், ‘காட்டில் மேக்கத்தில் பத்ரகாளி’ என்றும், ‘காட்டில் மேக்கத்தில் அம்மா’ என்றும் அழைக்கின்றனர்.

    கோவில் வளாகத்தில் நாகராஜா, கணபதி, சுடலை மாடன், யோகீஸ்வரர் மற்றும் யட்சி சன்னிதிகளும் உள்ளன. கடற்கரையில் இக்கோவில் அமைந்திருந்தாலும், கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் இரு கிணறுகளில் மிகவும் சுவையான நல்ல தண்ணீர் கிடைக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த நீரைப் புனித நீராகப் பெற்று அருந்திச் செல்கின்றனர்.

    இயற்கை அழகு நிறைந்த பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மணிக்கெட்டு, அருநாழி, புடவை சமர்ப்பித்தல், புஷ்பாஞ்சலி என்பது போன்ற சில சிறப்பு வழிபாடுகளும் நடத்தப் பெறுகின்றன. கார்த்திகை மாதம் ‘12 விளக்கு உற்சவம்’ என்று அழைக்கப்படும் 12 நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்கின்றனர். இவ்விழாக் காலத்தில் கோவிலைச் சுற்றிலும் பக்தர்கள் தங்கிப் பஜனைப் பாடல்களைப் பாடி அம்மனை வழிபடுகின்றனர். இவ்வழிபாட்டிற்காகக் கோவிலுக்கு அருகில் ஆயிரத்துக்கும் அதிகமான கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    மணி கட்டி வழிபடும் ஆலமரம்

    ‘மணிக்கெட்டு’ வழிபாடு

    ஆலய வளாகத்தில் உள்ள ஆலமரத்தில் மணியைக் கட்டி வழிபட்டால், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. இதனை ‘மணிக்கெட்டு’ என்றும், ‘மணிச்சூடல்’ என்றும் அழைக்கின்றனர். இந்த ‘மணிகெட்டு’ வழிபாடு நடைபெறுவதற்கு, இக்கோவிலில் நிகழ்ந்த ஒரு சம்பவமே காரணமாக அமைந்திருக்கிறது.

    ஒரு சமயம், தேவியின் சன்னிதிக்கு எதிரே இருக்கும் கொடிமரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளில் ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அதனைக் கண்டெடுத்த பக்தர் ஒருவர், அதைப் பக்தியுடன் எடுத்து, ஆலய வளாகத்தில் இருந்த ஆலமரக் கிளை ஒன்றில் கட்டித் தொங்க விட்டிருக்கிறார். அப்போது, அவருக்குள் மிகுந்த பக்தியும், இறையுணர்வும் தோன்றி இருக்கிறது. அதற்குப் பின்னர், அவருடைய கோரிக்கைகள் அனைத்தும் தேவியின் அருளால் நிறைவேறி இருக்கின்றன.

    இதற்கிடையே கொடிமரத்தில் இருந்த மணி கீழே விழுந்ததால் அதற்கான பரிகார பூஜை செய்ய தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் தனக்கு மணிகளைக் காணிக்கையாக்கி இந்த ஆலமரத்தில் கட்டினால், தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தேவி தெரிவித்தாள். அதனைத் தொடர்ந்து, கோவிலில் இருக்கும் ஆலமரத்தில் மணிகளைக் கட்டும் வழிபாடு, முதன்மை வழிபாடாகி விட்டது என்கின்றனர்.

    இதற்காக சிவப்பு நிறத்திலான கயிற்றில் கட்டப்பட்ட, 15 முதல் 20 கிராம் எடையுள்ள சிறிய அளவிலான மணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மணிகளை வாங்கி, ஆலமரத்தினை ஏழு முறை வலம் வந்து மரத்தின் விழுது அல்லது கிளையில் அந்த மணியைக் கட்டிவிட்டு, அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், நூறு பக்தர்களாவது மணியைக் கட்டி வழிபடுகிறார்கள். சிறப்பு விழாக்களின்போது இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

    ஒளியாக காட்சி தந்த தேவி

    திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, ஒரநாடு ராஜா என்பவரைச் சந்தித்துவிட்டு, கடல் வழியாகக் கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தார். கப்பலின் மேற்பரப்பில் நின்றிருந்த அவருக்கு, கடற்பரப்பின் மேலே திடீரென்று ஒரு ஒளி தோன்றி, மீண்டும் கடலினுள் சென்று மறைவது தெரிந்தது. தைப்பூச நாளில் தனக்குக் காட்சியளித்த அந்த ஒளி என்னவென்று தெரியாமல், அதை வணங்கியபடி நாடு திரும்பினார்.

    அதன் பிறகு, ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய தேவி, கடலில் ஒளியாகத் தோன்றி மறைந்தது தானே என்றும், அங்கிருக்கும் கோவிலில் தான் பத்ரகாளியாக இருப்பதையும் தெரிவித்தாள். உடனே மன்னர், அந்தக் கோவிலுக்குச் சென்று தேவியை வழிபட்டார். அங்கு தேவியானவள், மன்னனுக்கு சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மும்மூர்த்திகளின் வடிவில் காட்சியளித்தாள்.

    அதன் பின்னர், மன்னன் அந்தக் கோவிலை விரிவுபடுத்திக் கட்டியதுடன், அவ்வப்போது அங்கு வந்து தேவியை வழிபட்டுச் சென்றார். மன்னர் இக் கோவில் வழிபாட்டுக்கு வரும் போது தங்குவதற்காகச் சிறிய அரண்மனை ஒன்றும் கட்டப்பட்டது. அந்த அரண்மனையை அங்குள்ளவர்கள் ‘கொட்டாரக்கடவு’ என்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், காயங்குளம் எனும் ஊரிலிருந்து 26 கிலோ மீட்டர், கருநாகப்பள்ளி எனும் ஊரிலிருந்து 17 கிலோ மீட்டர், சவரா எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஜாநகர் என்னும் இடத்திலிருந்து கோவிலுக்குச் செல்ல இலவசப் படகு வசதியும் செய்யப் பட்டிருக்கிறது.

    தேனி மு.சுப்பிரமணி

    திருமணத் தடைக்கான தோஷங்களை நீக்கி, உடனடியாகத் திருமணத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், கொல்லம் நகரில் அமைந்திருக்கும் உமா மகேசுவர சுவாமி ஆலயம் திகழ்கிறது.
    தல வரலாறு :

    கயிலாயத்தில் இருந்து சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதியில் இருக்கும் அகத்திய மலைக்கு வான்வழியாக வந்து கொண்டிருந்தனர். பூவுலகை ரசித்துக் கொண்டே வந்த இறைவி, வழியில் ஓரிடத்தில் இருந்த இயற்கையின் அழகைக் கண்டு மனம் மயங்கினாள். பார்வதிதேவிக்கு சிறிது நேரமாவது, அங்கு தங்கிச் செல்ல வேண்டுமென்று தோன்றியது. இறைவியின் விருப்பத்தை அறிந்த சிவபெருமான், அவளோடு வானில் இருந்து கீழே இறங்கினார். இருவரும் அங்கிருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் தங்கினர்.

    பிற்காலத்தில் அந்த இடத்தின் அருகே சிற்பி ஒருவர் குடியிருந்தார். அவரது கனவில் தோன்றிய இறைவன், ஆலமரத்தடியில் தானும் இறைவியும் இருப்பதாக தெரிவித்து, அங்கு இருவருக்கும் சிலை அமைத்து கோவில் கட்டி வழிபடும்படி கூறினார்.

    மறுநாள் காலையில் அரண்மனைக்குச் சென்ற சிற்பி, தான் இரவில் கண்ட கனவை அரசரிடம் தெரிவித்தார். கோவில் கட்டுவதற்காக மன்னரின் அனுமதியைப் பெற்று, அவரது கனவில் இறைவன் சொன்ன ஆலமரத்தின் அடியில் ஒரு பீடம் அமைத்து, அதன் மேல் களிமண்ணால் செய்யப்பெற்ற சிவபெருமான் மற்றும் பார்வதிதேவி சிலைகளை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார்.

    காலப்போக்கில் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, கோவிலில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. கருவறையில் இருந்து சிலைகளும் கருங்கல்லால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கோவில் வரலாறு கூறுகிறது.

    கோவில் அமைப்பு :

    ஆலயத்தின் முன்பகுதி தமிழகக் கட்டுமான முறையிலும், கோவிலின் உள்பகுதி அனைத்தும் கேரளக் கட்டுமான முறையிலும் கட்டப்பட்டிருக்கிறது. கோவில் கருவறையில் ஒரே பீடத்தில் இறைவன் சிவபெருமானும், அவருக்கு இடது புறத்தில் இறைவி பார்வதி தேவியும் அமர்ந்த நிலையில் இருக்கின்றனர். இங்கிருக்கும் இறைவி ‘உமா’ என்றும், இறைவன் ‘மகேசுவர சுவாமி’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    ஆலய முகப்புப் பகுதியில் கணபதி, முருகன் மற்றும் நந்திகேசன் ஆகியோருக்கான சன்னிதிகள் உள்ளன. கோவிலுக்குள் நாகர்களுக்கும், காவல் தெய்வமான மாடன் தம்புரானுக்கும் சன்னிதிகள் இருக்கின்றன.

    இங்கு தினசரி வழிபாடாக, கணபதி வேள்வி, உமாமகேசுவர பூஜை, ஐஸ்வர்ய பூஜை நடைபெறுகிறது. அதோடு ஞாயிற்றுக்கிழமை - பாக்யசூக்திர பூஜை, திங்கட்கிழமை சுமங்கலி பூஜை, சுயம்வர பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை, செவ்வாய்க்கிழமை முருகன் மற்றும் மாடன் தம்புரான் ஆகியோருக்குச் சிறப்புப் பூஜை, புதன்கிழமை சரஸ்வதி பூஜை, வியாழக்கிழமை மாங்கல்ய பூஜை, சுயம்வர அர்ச்சனை, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ராகு கால பூஜை, சனிக்கிழமை நீராஞ்சனம் என்று ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று திருவாதிரைத் திருவிழா, மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி, சித்திரை மாதத்தில் வரும் அட்சயதிருதியை போன்றவை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இங்கு ஐயப்பனுக்குரிய மண்டல பூஜை நாட்களிலும், மகரவிளக்கு நாளிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இந்தக் கோவிலில் ஜாதக வழியாக சில தோஷங்களால் தடைபட்டிருக்கும் திருமணத் தடையை நீக்குவதற்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு சிறப்பு வழிபாடு செய்பவர்களுக்கு உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருமண வாய்ப்பு அமையப்பெற்றவர்கள், தங்கள் திருமண அழைப்பிதழை கோவிலில் வைத்திருக்கும் சிறப்பு அறிவிப்புப் பலகையில் பார்வைக்காக வைத்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தை கேரளாவின் திருமணஞ்சேரி என்றும் அழைக்கிறார்கள்.

    கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்கள் சேர்வதற்காக, ‘சம்வத சூக்த மந்திர புஷ்பாஞ்சலி’ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கொல்லம் நகரில் இக்கோவில் அமைந்திருக்கும் பகுதி ‘உமாமகேசுவரம் சந்திப்பு’ என்றே அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காலவ மகரிஷியின் மகளாக இருந்த லீலாவதி, ஒரு சாபத்தின் காரணமாக அசுர குலத்தில் மகிஷியாகப் பிறந்தாள். அவள் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதற்காக வித்தியாசமான வரம் ஒன்றை பிரம்மனிடம் கேட்டுப் பெற்றிருந்தாள். ‘சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் மகனாகப் பிறந்த பன்னிரண்டு வயது பாலகனால் மட்டுமே தன் அழிவு இருக்க வேண்டும்’ என்ற வரம் அது.

    ஒரு முறை மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவின் அழகில் மயங்கிய சிவபெருமான், மோகினியுடன் இணைந்தார். இதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் கழுத்தில் மணி மாலை அணிவித்து காட்டில் விட்டுச் சென்றனர். அங்கு வேட்டையாட வந்த பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரன், அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று ராணியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னான். குழந்தை இல்லாத அவர்களுக்கு அந்தக் குழந்தை ஆறுதலாக இருந்தது. கழுத்தில் மணி மாலை இருந்ததால் குழந்தைக்கு ‘மணிகண்டன்’ என்று பெயரிட்டனர்.

    இந்த நிலையில் ராணிக்கு ஒரு மகன் பிறந்தான். எனவே மணிகண்டன் மீது இருந்த அன்பு, ராணிக்கு குறையத் தொடங்கியது. தனக்கு பிறந்த மகனே அரசாள வேண்டும் என்று நினைத்த ராணி, அதற்கு தடையாக இருக்கும் மணிகண்டனை அழிக்க நினைத்தாள். எனவே தனக்கு தீராத தலைவலி ஏற்பட்டிருப்பதாகவும், அதனை தீர்க்க புலிப்பால் கொண்டு வர வேண்டும் என்றும் அரண்மனை வைத்தியரை வைத்து பொய் கூறினாள்.

    புலியின் பாலைக் கொண்டு வர பலரும் தயங்கிய நிலையில், தாயின் நோய் தீர்க்க தானே செல்வதாக முன் வந்தான் 12 வயதான பாலகன் மணிகண்டன். காட்டில் தன்னை வழி மறித்த மகிஷியையும் வதம் செய்தான். இதனால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். அவர்களே புலிகளாக மாறி, மணிகண்டனுடன் நாடு திரும்பினர். புலிகள் சூழ, ஒரு புலியின் மேல் அமர்ந்து வந்த மணிகண்டனைக் கண்டு ராணி திடுக்கிட்டாள். மணிகண்டனின் தெய்வீக சக்தியை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

    தான் இந்த பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறி விட்டதாகவும், இனி நான் வேறு இருப்பிடம் செல்ல வேண்டும் என்றும் மணிகண்டன் சொன்னார். பின்னர் ஒரு அம்பை எடுத்து எய்து, ‘நான் எய்த அம்பு விழும் இடத்தில் எனக்குக் கோவில் கட்டுங்கள்’ என்று தந்தை ராஜசேகரனிடம் சொன்னார். அதன்படி அமைக்கப்பட்டது தான் சபரிமலை என்று தல வரலாறு சொல்கிறது.

    கோவில் அமைப்பு :

    சபரிமலையில் பதினெட்டுப் படிகளில் மேல் ஏறிச் செல்லும்படி உயரமான இடத்தில், கிழக்கு நோக்கிய நிலையில் ஐயப்பன் சன்னிதி இருக்கிறது. கோவில் கருவறையில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன், அறிவின் உயர்நிலையைக் கைவிரல்களால் காட்டும் அடையாளமான சின் முத்திரையோடு காட்சி தருகிறார். மேலும் ஒரு ஆடையால் முழங்காலைச் சுற்றிக் கொண்டு, குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கோவில் வளாகத்தில், கன்னிமூல கணபதி, நாகராஜா உள்ளிட்டோருக்கும் சன்னிதிகள் உள்ளன. அருகில் மாளிகைப் புறத்து அம்மன் சன்னிதி இருக்கிறது.

    ஆலயம் ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் மட்டுமே வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நாட்களில் அதிகாலை 4 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் நடை திறந்திருக்கும். தவிர கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து தொடர்ச்சியாக 41 நாட்கள் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடத்தப்படும். இந்த நாட்களில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மண்டல பூஜையின் நிறைவு நாளில் தங்கத்தால் ஆன உடை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தை மாதம் மகர விளக்கு பூஜை, சித்திரை விஷு ஆகிய தினங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சபரிமலையில் 56 வகையான வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கோவிலுக்குக் காப்பீடு :

    திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம், சபரிமலை சுவாமி ‎ஐயப்பன் கோவிலைச் சுமார் ரூ.30 கோடி அளவில் காப்பீடு செய்திருக்கிறது. மேலும், இந்த ‎இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு ‎விபத்துகளில் இருந்து இலவசக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் ‎அறிமுகப்படுத்திச் செயல் படுத்தி வருகிறது. நீலக்கல்லில் இருந்து ‎மலையேற்றப் பாதையில், சன்னிதானம் சென்றடையும் வரையிருக்கும் 18 ‎கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில், ‎விபத்துக்குள்ளாகி காயமடைவோர் மற்றும் உயிரிழப்பவர்களுக்குச் சுமார் ‎ஒரு லட்சம் ரூபாய் வரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக ‎வழங்க முடியும்.

    ஐயப்பன் சிலை :

    சபரிமலையில் பரசுராமரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் ஐயப்பன் சிலை, 1950-ம் ஆண்டில் நடைபெற்ற தீ விபத்தில் சேதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து ‘சிலையை யார் செய்ய வேண்டும்?’ என்று தேவப்பிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சன்னிதி முன்பாகச் சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது. அதில், தமிழகத்தை சேர்ந்த இருவரின் பெயர்கள் வந்தன. அவர்கள் இருவரும் அதனை ஏற்று, கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் இருந்த தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியைக் கொண்டு புதிய ஐயப்பன் சிலையை உருவாக்கி, சபரிமலைக்கு வழங்கினர். தற்போது அந்தச் சிலையே வழிபாட்டுக்குரியதாக இருந்து வருகிறது.

    இருமுடி வண்ணங்கள் :

    சபரிமலைக் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள், இருமுடி கட்டி செல்வார்கள். பருத்தித் துணியில் கைகளால் தைக்கப்பட்ட பையினுள், இறைவனுக்குப் படைப்பதற்கான ‎பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் இருக்கும். இந்தப் பையைத் தான் ‘பள்ளிக்கட்டு’ அல்லது ‘இருமுடிகட்டு’ என்று சொல்கின்றனர். இந்த இருமுடியில் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யைக் கொண்டு, சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. சபரிமலைக்கு முதல் முறையாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் ‎குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியையும், மற்றவர்கள் கருப்பு அல்லது நீல ‎வண்ணத்திலான இருமுடிகளைப் பயன்படுத்துகின்றனர்.

    சபரிமலை செல்ல.. :


    தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வதற்குப் பல வழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதி நகரங்களான குமுளி, செங்கோட்டை ஆகிய ஊர்களின் வழி யாகச் சபரிமலைக்குச் செல்கின்றனர். குமுளி வழியில் செல்பவர்கள், அங்கிருந்து வண்டிப்பெரியார், எருமேலி, பிலாப்பள்ளி ஆகிய ஊர்களின் வழியாக சுமார் 176 கிலோமீட்டர் தூரமும், செங்கோட்டை வழியில் செல்பவர்கள் அங்கிருந்து புனலூர், பத்தனம்திட்டா வழியாகச் சுமார் 166 கிலோமீட்டர் பயணித்தும் பம்பையை அடையலாம். பம்பையில் இருந்து நான்கு கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்ல வேண்டும். ஐயப்ப பக்தர்களில் சிலர் எரிமேலி வரை சென்று, அங்கிருந்து மரபுவழியில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் 45 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்கின்றனர்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சபரிமலைக்கு செல்ல, பம்பை என்ற இடம் வரை பஸ் வசதி உள்ளது. பம்பையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்லலாம். சிலர் எரிமேலி வரை சென்று, அங்கிருந்து மரபு வழியில் பயன்படுத்தி வரும் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் நடந்தே சபரிமலைக்குச் செல்கின்றனர். கோட்டயம் நகரிலிருந்து மணிமலை வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில்இருக்கும் பம்பைக்குப் பேருந்து வசதி இருக்கிறது.
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அச்சன் கோவில் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில், அச்சம் நீக்கி அருளும் அரசனாக ஐயப்பன் அருள்பாலித்து வருகிறார்.
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அச்சன் கோவில் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில், அச்சம் நீக்கி அருளும் அரசனாக ஐயப்பன் அருள்பாலித்து வருகிறார்.

    வழி காட்டிய வாள் :

    பரசுராமர் நிறுவியதாகக் கருதப்படும் ஐந்து சாஸ்தா (ஐயப்பன்) கோவில்களில் ஒன்றான அச்சன்கோவில் திருத்தலத்தில் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவிகளுடன் ஐயப்ப அரசர் தோற்றத்தில் அழகாகக் காட்சி தருகிறார். இங்கிருக்கும் ஐயப்ப பக்தர்களின் அனைத்து வகையான அச்சங்களையும் நீக்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அதற்காக, மரபுவழிக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

    முன்பொரு காலத்தில், இக்கோவிலில் இருக்கும் ஐயப்பனை வழிபடுவதற்காக முதியவர் ஒருவர், தனது ஊரிலிருந்து கிளம்பி அடர்ந்த காடுகளின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், பகல் கடந்து இரவு நேரமாகி விட்டது. இரவு வேளையில், அவருக்குப் பாதை சரியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு, ‘வழி தவறி வேறு பாதையில் சென்று, ஏதாவது ஆபத்து வந்து விடுமோ?’ என்கிற அச்சமும் ஏற்பட்டது.

    உடனே அவர், ஐயப்பனை மனதில் நினைத்து, அச்சத்தை நீக்கிச் சரியான பாதையைக் காட்டியருள வேண்டினார். அப்போது, “பக்தனே! உன் முன்பாக தோன்றும் என் வாள், உன்னை என் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும். அச்சன்கோவிலை அடைந்ததும், அந்த வாளை என் சன்னிதியில் சேர்த்துவிடு” என்று ஒரு குரல் அசரீரியாக ஒலித்தது.

    சிறிது நேரத்தில், ஒளி மிகுந்த வாள் ஒன்று அங்கே தோன்றியது. அந்த வாள் முன்னோக்கிச் செல்ல, அதனைப் பின் தொடர்ந்து சென்றார், முதியவர். மறுநாள் அதிகாலையில் கோவிலை அடைந்த முதியவர், கோவில் அர்ச்சகரைச் சந்தித்து, இரவில் காட்டுக்குள் நடந்ததைச் சொல்லி அந்த வாளை அவரிடம் ஒப்படைத்தார்.

    அப்போது கருவறையில் இருந்து, “என் வாளைக் கருவறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். நான் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்” என்று ஒரு குரல் கேட்டது. அங்கிருந்த அனைவரும் அதனைக் கேட்டனர். அன்று முதல் அந்த வாள், அச்சன்கோவில் ஐயப்பனின் கருவறையில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்று அச்சம் நீக்கிய ஐயப்பனின் வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    அச்சன் கோவில் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் கருவறையில், பூர்ணா - புஷ்கலை என்னும் இரண்டு தேவியர்களுடன் அரசரின் தோற்றத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இதனால் இங்கிருக்கும் ஐயப்பனைக் ‘கல்யாண சாஸ்தா’ என்று அழைக்கின்றனர். இங்கிருக்கும் ஐயப்பன் வலது கையில் சந்தனம் மற்றும் புனித நீர் இருக்கிறது. இதனால், ஐயப்பனை ‘பெரும் மருத்துவர்’ (மகாவைத்யா) என்றும் அழைக்கின்றனர்.

    ஆலய வளாகத்தில், சிவன், பார்வதி, கணபதி, சுப்பிரமணியர், நாகராஜா, நாகயட்சி, மாளிகப்புறத்தம்மாள், சப்பானி மாடன், கருப்பசாமி போன்ற தெய்வங்களும் இடம் பெற்றுள்ளனர்.

    வழிபாடும்.. பலன்களும்.. :

    இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மேலும் ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதம் முதல் நாளிலிருந்து பத்து நாட்கள் வரை பெருவிழா (மகோத்ஸவம்) நடைபெறுகிறது.

    இவ்விழா நாட்களில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தங்க ஆபரணங்கள் மற்றும் வாள் போன்றவை புனலூர் கருவூலத்தில் இருந்து எடுத்துச் சென்று அணிவிக்கப்படுகின்றன. இந்த திருவாபரண ஊர்வலம் செல்லும் பாதையானது, கேரளாவிலுள்ள புனலூர், ஆரியங்காவு, தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட நகரங்களின் வழியாக அமைந்திருக்கிறது. விழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடத்தப் பெறுகிறது. மகரம் (தை) மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் பூச்சொறிதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இங்கிருக்கும் ஐயப்ப பக்தர்களின் அனைத்து வகையான அச்சங்களையும் நீக்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. மேலும் இத்தல ஐயப்பனை வழிபடுபவருக்குத் திருமணத்தடை இருப்பின் அவை நீங்கும். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சியுடனான வாழ்க்கை அமையும். பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சி கடித்தவர்களுக்கு இங்கிருக்கும் ஐயப்பன் சிலையிலிருந்து சந்தனம் எடுத்துத் தரப்படுகிறது. சந்தனத்துடன், அர்ச்சகர் தரும் புனித நீரையும் சேர்த்துப் பூசினால் விஷம் உடனடியாக நீங்கிக் குணம் பெறலாம் என்கின்றனர்.

    பூர்ணா- புஷ்கலை சமேத ஐயப்பன்

    ஆலயத்தின் சிறப்புகள் :

    பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட ஐயப்பன் ஆலயங்களில் இருக்கும் ஐயப்பன் சிலைகள், நெருப்பு மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் சேதமடைந்து பின்னர் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அச்சன் கோவிலில் இருக்கும் ஐயப்பன் சிலை மட்டும் பழைய சிலையாக அப்படியே இருக்கிறது.

    இக்கோவிலில் ஐயப்பன் பூர்ணா, புஷ்கலை ஆகிய இரு தேவியர்களுடன் முழுமையான குடும்பத்தினராக இருந்து அரசாட்சி செய்கிறார்.

    ஐயப்பன் கோவில்களில், சபரிமலை ஆலயத்துக்கு அடுத்தபடியாக புகழ் பெற்ற கோவிலாக அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் திகழ்கிறது.

    ஐயப்பன் கோவில்களில் சபரிமலை, அச்சன் கோவில் ஆகிய இடங்களில் மட்டுமே பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படுகிறது. பிற ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் இல்லை.

    அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயத்தில், ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், இங்கிருக்கும் அம்மன் சன்னிதியில் பட்டுத்துணி, வளையல் போன்றவற்றுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மாய, மந்திரச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இக்கோவிலில் நடைபெறும் ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழாவில் கலந்து கொண்டு, கருப்பசாமியை வழிபட்டால், தீய சக்திகள் அனைத்தும் நீங்கி வளம் பெறுவர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், புனலூர் நகரில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் அச்சன்கோவில் இருக்கிறது. இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகளும் உள்ளன.

    திருமணத் தடை இருப்பவர்கள் கேரள மாநிலம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சாஸ்தாவான ஐயப்பனை வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம்.
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி தருகிறார். திருமணத் தடை இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம்.

    தல வரலாறு :

    பரசுராமர் தான் தோற்றுவித்த கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோவில்களையும், மலைப்பகுதிகளில் சாஸ்தா கோவில்களையும் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. பரசுராமர் மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய ஐந்து இடங்களில் சாஸ்தாவிற்கான கோவில்களை நிறுவியிருக்கிறார். அவற்றில் ஆரியங்காவு சாஸ்தா கோவிலும் ஒன்றாக இருக்கிறது என்று தல வரலாறு கூறுகிறது.

    ஐயப்பன் திருமணம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்று, இந்தக் கோவிலில் இருக்கும் ஐயப்பன் பிரம்மச்சாரியாக இல்லாமல், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தவராகக் காட்சி தருகிறார். இங்கிருக்கும் ஐயப்பனுக்குத் திருமணம் நடந்தது பற்றி சுவையான கதை ஒன்று இருக்கிறது.

    மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனைக்குத் தேவையான துணிகளை நெசவு செய்து கொண்டு போய் விற்பனை செய்து வந்தனர். அப்படிச் சென்ற வணிகர்களில் ஒருவர், ஒரு முறை தனது மகள் புஷ்கலையையும் உடன் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சென்றார். அவருக்கு மகள் புஷ்கலையைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்வது மிகவும் கடினாமக இருந்தது.

    அவர்கள் இருவரும் ஆரியங்காவு கணவாய்ப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். புஷ்கலை அதற்குள்ளாகவே மிகவும் களைத்துப் போயிருந்தார். இனி அவளை திருவிதாங்கூருக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று நினைத்த அந்த வணிகர், அங்கிருந்த சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரைச் சந்தித்து, தான் திருவிதாங்கூர் சென்று திரும்பி வரும் வரை, தனது மகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி ஒப்படைத்துச் சென்றார்.

    சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரின் வீட்டில் தங்கிய புஷ்கலை, சாஸ்தா கோவிலுக்குத் தேவையான சில பணிகளைச் செய்து வந்தார். நாளடைவில், அவளது மனத்தில் அந்தக் கோவிலில் இருக்கும் சாஸ்தாவையேத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது.

    இந்நிலையில், புஷ்கலையின் தந்தை திருவிதாங்கூர் சென்று துணிகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் அவரை, மதம் பிடித்த யானை ஒன்று விரட்டத் தொடங்கியது. அதனைக் கண்டு பயந்த அவர் வேகமாக ஓடத் தொடங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன், அந்த மத யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான்.

    தன்னைக் காப்பாற்றிய இளைஞனுக்கு நன்றி தெரிவித்த அவர், அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். அந்த இளைஞன், ‘உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு, வணிகர் ஆரியங்காவு வந்து சேர்ந்தார்.

    ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்ற வணிகருக்கு, கோவில் கருவறையிலிருந்த சாஸ்தாவின் உருவம், காட்டில் மதயானையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய இளைஞரின் உருவமாகத் தெரிந்தது. தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியே சாஸ்தா, காட்டிற்குள் மதம் பிடித்த யானையைக் கொண்டு, நம்மை ஓடச் செய்து, காப்பாற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

    அதன் பிறகு வணிகர், அந்தக் கோவில் அர்ச்சகரிடம் காட்டில் நடந்த கதையைச் சொல்லித் தன் மகள் புஷ்கலையை சாஸ்தாவிற்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னார். அர்ச்சகரும், கோவில் உயர் அதிகாரிகளுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து வரச் செய்தார். வணிகரும், தனது ஊரான மதுரையிலிருந்து தனது உறவினர்களை வரச் செய்தார்.

    அதன் பிறகு, சாஸ்தாவிற்கும் புஷ்கலைக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையை மனைவியாக ஏற்றுத் தன்னுடன் ஆட்கொண்டார் என்று இக்கோவிலில் ஐயப்பன், புஷ்கலை திருமணம் நடந்த கதை மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது.

    புஷ்கலையுடன் ஆரியங்காவு ஐயப்பன்

    கோவில் அமைப்பு :

    கேரளக் கட்டுமான அமைப்புடன் அமைந்த இக்கோவில் கருவறையில், ஐயப்பன் வலது காலைக் கீழே ஊன்றியும், இடது காலைச் சிறிது உயர்த்தியும் வைத்து அமர்ந்த நிலையில் அரசர் தோற்றத்தில் இருக்கிறார். இவருக்கு வலது புறம் சிவபெருமான் லிங்க வடிவிலும், இடதுபுறம் புஷ்கலை நின்ற நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில், நாகராஜர், கணபதி, வலியக்கடுத்தா கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோரும் துணைக் கடவுள்களாக இருக்கின்றனர்.

    வழிபாடுகள் :

    இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில், சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இங்கு ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதத்தில் ஐயப்பன் - புஷ்கலை திருமண விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் பாண்டியன் முடிப்பு எனப்படும் நிச்சயதார்த்த நிகழ்வும், தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வும், சமபந்தி விருந்தும் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.

    திருமணத்தடை இருப்பவர்கள், இங்கிருக்கும் சாஸ்தாவை வழிபட்டு வேண்டினால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    ஆரியங்காவு பெயர்க்காரணம் :

    ‘ஆரியன்’ என்ற சொல்லுக்கு ‘உயர்ந்தவன்’ என்று பொருள். ‘காவு’ என்றால் ‘சோலை’ என்று பொருள். ‘உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை’ என்ற பொருளில், இவ்விடம் ‘ஆரியன் காவு’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆரியங்காவு’ என்று மருவி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவிலும், புனலூர் நகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரியங்காவு உள்ளது. இங்கு செல்ல மேற்கண்ட ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதி இருக்கிறது.

    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் ஐயப்பன் குழந்தைத் தோற்றத்தில் இருக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் ஐயப்பன் குழந்தைத் தோற்றத்தில் இருக்கிறார். இங்கிருக்கும் ஐயப்பனை ‘பால சாஸ்தா’ என்றும், ‘குளத்துப்புழா பாலகன்’ என்றும் போற்றுகின்றனர்.

    தல வரலாறு :

    கொட்டாரக்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியாளர்கள் சிலருடன் ராமேஸ்வரத்திற்குப் புனிதப் பயணம் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். காட்டின் வழியாக வந்து கொண்டிருந்த அவர், வழியில் இருந்த கல்லடையாற்றின் கரையில் தங்கி ஓய்வெடுத்தார். அவருடன் வந்த பணியாளர்கள், அங்கே உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கினர்.

    நிலத்தில் புதைந்திருந்த ஒரு கல்லைப் பார்த்த பணியாளர் ஒருவர், அந்தக் கல்லுடன் மேலும் இரு கற்களை வைத்து, அந்த இடத்தில் அடுப்பு மூட்டுவதென்று முடிவு செய்தார். பின்னர் அவர், அங்கே கிடைத்த இரண்டு கற்களை எடுத்துக் கொண்டு போய் நிலத்தில் புதைந்திருந்த கல்லின் அருகில் வைத்தார். அடுப்புக்காக வைத்திருந்த மூன்று கற்களில், நிலத்தில் புதைந்திருந்த கல் மட்டும் சிறிது உயரமாக இருந்தது.

    உடனே அந்தப் பணியாளர், நிலத்தில் புதைந்திருந்த கல்லை, அதைவிடப் பெரிதான ஒரு கல்லை எடுத்துக் கொண்டு வந்து உடைக்க முயன்றார். அப்போது, நிலத்தில் புதைந்திருந்த கல் உடையாமல், உடைக்கப் பயன்படுத்திய பெரிய கல் எட்டுத் துண்டுகளாக உடைந்து போனது. உடைந்து போன எட்டுத் துண்டுக் கற்களில் இருந்தும் ரத்தம் வழியத் தொடங்கியது.

    அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர், மற்ற பணியாளர்களை அழைத்து உடைந்த கற்களில் இருந்து ரத்தம் வழியும் செய்தியைச் சொன்னார். அவர்களும் அதனைக் கண்டு பயந்தனர். பின்னர் அவர்கள், தங்கள் உரிமையாளரான யாத்ரிகரிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தனர்.

    அவர் உடைந்து கிடக்கும் கற்களிலிருந்து வழியும் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. ராமேஸ்வரத்திலிருந்து தான் கொண்டு வந்திருந்த புனித நீரை உடைந்த கற்களின் மீது தெளித்தார். உடனே கற்களிலிருந்து வழிந்த ரத்தம் நின்று போனது.

    அப்போது யாத்ரிகருக்கு, உடைந்து கிடப்பது சாதாரணமான கல் இல்லை என்பதும், அந்தக் கல் பரசுராமரால் நிறுவப்பட்ட தர்ம சாஸ்தா ஐயப்பன் உருவம் என்பதும் தெரிந்து மறைந்தது. அதனைத் தொடர்ந்து அவர், ஐயப்பனை நினைத்து வணங்கி, தனது பணியாளர்கள் தெரியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டினார். பின்னர் அவர், தனது பணியாளர்கள் செய்த தவறுக்குப் பரிகாரமாக, அந்த இடத்தில் பாலகன் உருவில் ஐயப்பனுக்குச் சிலையமைத்துக் கோவில் கட்ட முடிவு செய்தார்.

    அங்கு நடந்ததைக் கேள்விப்பட்டக் கொட்டாரக்கரை மன்னர் அவ்விடத்திற்கு வந்து, பிராமணரின் கோவில் கட்டுமானப் பணிக்குத் தேவையான நிலத்தை வழங்கிப் பொருளுதவிகளையும் செய்தார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    இக்கோவில் பந்தளம் மன்னரால் கட்டப்பட்டது என்றும், இவ்விடத்தை யாத்ரிகர் கண்டறிந்து சொன்னார் என்றும் மற்றொரு வரலாற்றுத் தகவலும் தெரிவிக்கப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    கேரளக் கட்டுமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலின் கருவறையில் ஐயப்பன் பாலகன் வடிவில் பால சாஸ்தாவாகக் காட்சி தருகிறார். இவரைக் குளத்துப்புழா பாலகன் என்றும் அழைக்கின்றனர். இக்கோவில் கருவறையில், பரசுராமர் நிறுவியதாகக் கருதப்படும் மூல சாஸ்தா சிலையின் உடைந்து போன எட்டு துண்டுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில் கருவறையின் நுழைவு வாசல் சிறுவர்கள் செல்லும் அளவிற்கான உயரத்தில் இருக்கிறது. கோவில் வளாகத்தில், நாகராஜர், யட்சி சன்னிதிகளும், சிவபெருமான், விஷ்ணு, கணபதி, பூதத்தான், மாம்பழத்துறை அம்மன் மற்றும் கருப்பசாமி சிலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.

    இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. வழிபாட்டின் போது, கருவறையில் வைக்கப்பட்டிருக்கும் மூலச் சிலையாகக் கருதப்படும் எட்டு கற்களும் ஒன்று சேர்க்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. பின்னர், அந்த எட்டு கற்களும் வழக்கமான இடத்தில் வைக்கப்பட்டு விடுகின்றன.

    மலையாள நாட்காட்டியின்படி, மேஷம் (சித்திரை) மாதம் வரும் விசுப் பெருவிழா இக்கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

    இக்கோவிலில் விஜயதசமி நாளில் ‘வித்யாரம்பம்’ எனப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில், பள்ளியில் புதிதாகச் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் குழந்தைகளுக்குப் பாலகனான சாஸ்தா நல்ல கல்வியைத் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இங்குள்ள யட்சி அம்மன் சன்னிதி முன்பாகத் தொட்டில் கட்டி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. கோவில் வளாகத்திலுள்ள நாகராஜரை வழிபடுபவர்களுக்கு, நாகதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும் என்கின்றனர். கோவிலுக்கு அருகில் இருக்கும் கல்லடையாற்றில் மீன்களுக்குப் பொரி வாங்கிப் போட்டால், தீராத தோல் நோய்கள் எதுவாக இருப்பினும் நீங்கும் என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது.

    ஐயப்பனின் ஐந்து தோற்றங்கள் :

    மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரையிலான குழந்தைப் பருவம், ‘பால்ய பருவம்’ எனப்படுகிறது. இந்தப் பருவத்தை விளக்கும் தோற்றத்திலான ஐயப்பன் திருத்தலமாகக் குளத்துப்புழா இருக்கிறது. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள இளமைப் பருவம், `யவன பருவம்’ எனப்படுகிறது.

    இந்தப் பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாக ஆரியங்காவு இருக்கிறது. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை குடும்பத்தினருக்கான பருவம் `கிரஹஸ்த பருவம்’ எனப்படுகிறது. இப்பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாக அச்சன்கோவில் அமைந்திருக்கிறது. ஐம்பத்தொன்று முதல் எண்பத்தைந்து வயது வரையிலான துறவு நிலை `வானப்பிரஸ்தம்’ எனப்படுகிறது. இப்பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாகச் சபரிமலை இருக்கிறது. எண்பத்தாறு வயது முதலானது ‘ஏகாந்த நிலை’ எனப்படுகிறது. இதனை விளக்குவதாகக் காந்தமலை இருக்கிறது.

    மீனூட்டு :

    குளத்துப்புழா ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி, அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால், ஐயப்பன் அவரைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். அதனால் அவள், ‘உங்களைப் பார்த்துக் கொண்டே இந்தப் பகுதியில் வாழும் வரத்தையாவது எனக்குத் தர வேண்டும்’ என்று ஐயப்பனிடம் வேண்டினாள். அவரும் தானிருக்கும் இடத்தின் அருகில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினார். அதனைத் தொடர்ந்து, மச்சக்கன்னியும் அவள் தோழிகளும் இக்கோவிலின் அருகே சென்று கொண்டிருக்கும் கல்லடையாற்றில் மீன்களாக வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள மீன்களுக்குப் பொரியை உணவாக வழங்கி வேண்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ‘மீனூட்டு’ என்று பெயர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவிலும், கொல்லம் நகரில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கிறது குளத்துப்புழா. மேற்கண்ட மூன்று ஊர்களில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதி கள் உள்ளது.
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி எனுமிடத்தில் அமைந்திருக்கிறது விசுவநாதர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கின்ற பலன்களில், பாதி பலன்களைக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி எனுமிடத்தில் அமைந்திருக்கும் விசுவநாதரை வணங்கிப் பெறமுடியும் என்பதால் ‘காசியில் பாதி கல்பாத்தி!’ என்று சொல்லப்படுகிறது.

    தல வரலாறு :

    கேரளாவிலுள்ள கொல்லங்கோடு எனும் ஊரில் வசித்த லட்சுமியம்மாள், அங்கு தன்னுடைய முன்னோர்கள் வழிபட்டு வந்த தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலைப் போன்று, ஒரு சிவபெருமான் கோவிலைக் கட்ட வேண்டும் என்று ஆசைகொண்டார்.

    வயதான காலத்தில், அவர் காசி எனப்படும் வாரணாசிக்குச் சென்று திரும்பி வரும் போது, தன் விருப்பப்படி கோவில் கட்டுவதற்காக, அங்கிருந்து ஒரு பாணலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவர் வரும் வழியில் உள்ள நதிக்கரைகளில் தங்கி, அந்தப் பாணலிங்கத்தை வைத்துப் பூஜை செய்து வழிபடுவதும், பின்னர் அதனை எடுத்துக் கொண்டு வருவதுமாக இருந்தார்.

    அவர் பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த நிலா ஆற்றங்கரையில் பாணலிங்கத்தை வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார். பின்னர் வழக்கம் போல், சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து அந்தச் சிவலிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் சிவலிங்கத்தைச் சிறிது கூட நகர்த்த முடியவில்லை.

    தான் கொண்டு வந்த சிவலிங்கம் இருக்க வேண்டிய இடத்தை இறைவனான சிவபெருமானே தேர்வு செய்து விட்டதை உணர்ந்த லட்சுமியம்மாள், அவ்விடத்திலேயேத் தன் விருப்பப்படி கோவிலைக் கட்டுவது என முடிவு செய்தார்.

    பின்னர், அப்பகுதியை ஆட்சி செய்த இட்டி கோம்பி அச்சன் எனும் அரசரைச் சந்தித்து, தான் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, அங்கு கோவில் ஒன்றை கட்டுவிக்க வேண்டுமென்று வேண்டினார். அப்படியே, அக்கோவில் கட்டுமானப் பணிகளுக்காகத் தான் சேர்த்து வைத்திருந்த 1,320 பொற்காசுகளையும் அரசரிடம் வழங்கினார்.

    அரசரும் லட்சுமியம்மாளின் வேண்டுகோளை ஏற்று, அவ்விடத்தில் சிவபெருமான் கோவிலைக் கட்டுவதற்கான நிலங்களைத் தானமாக வழங்கியதுடன், கோவில் மேற்பார்வைப் பணிகளுக்காகச் சோமசுந்தரக் குருக்கள் (இவரைச் சேகர வர்மா என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்) என்பவரையும் நியமித்தார்.

    லட்சுமியம்மாள் காசியிலிருந்து கொண்டு வந்த பாணலிங்கம் என்பதால், இத்தல இறைவனுக்கும் காசி விசுவநாதர் என்றே பெயர் சூட்டப்பட்டது. பின்னர், அங்கு விசாலாட்சி அம்பாள் சிலையும் நிறுவப்பட்டது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.

    கோவில் அமைப்பு :


    தரைமட்டத்திலிருந்து தாழ்வாக இருக்குமிடத்தில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். தெற்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து 18 படிகள் கீழிறங்கிச் செல்லும்படி இருக்கிறது. இக்கோவில் பள்ளத்தில் இருப்பதால், மலையாளத்தில் ‘பள்ளம்’ என்று பொருள் தரும் ‘குண்டு’ எனும் சொல்லைப் பயன்படுத்தி, ‘குண்டுக்குள் கோவில்’ என்றும், ‘குண்டம்பலம்’ என்றும் அழைக்கின்றனர்.



    இறைவன் காசி விசுவநாதர் கிழக்கு நோக்கிய நிலையிலும், அம்பாள் விசாலாட்சி தெற்கு நோக்கிய நிலையிலும் இருக்கின்றனர். கோவில் வளாகத்தில், மகாகணபதி, தட்சிணாமூர்த்தி, கங்காதரன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சூரியனார் சன்னிதிகளும், நவக்கிரகங்கள் மனைவிகளுடன் இருக்கும் சன்னிதி, நாக தேவதைகள் உள்ளிட்ட ராகு-கேது சன்னிதி போன்றவைகளும் இருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு உரியதாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ் ஆகம விதிகளைப் பின்பற்றியே வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கிற பலன்களில் பாதி பலன்கள், கல்பாத்தியில் இருக்கும் விசுவநாதரை வணங்கினாலும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இங்கு வந்து செல்லும் பக்தர்கள், நிலா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஆலயத்தை ‘காசியில் பாதி கல்பாத்தி’ என்று சிறப்பித்துச் சொல்கின்றனர்.

    இக்கோவிலில் இருக்கும் அம்பாள், தெற்கு நோக்கிய நிலையில் இருப்பதால், எமபயம் நீக்கும் அன்னையாக இருக்கிறார். மேலும் திருமணத்தடை நீங்கவும், ஆயுள் அதிகரிக்கவும் அன்னைக்குப் புதிய ஆடை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர்.

    இக்கோவிலில் நாள்தோறும் காலையில் நடைபெறும் ‘மிருத்யுஞ்சய ஹோமத்தில் கலந்து கொண்டு, இறைவனை வணங்கி வழிபடுபவர்களுக்கு, உடல் நலம், ஆயுட்காலம் அதிகரிப்பு, நல்வாழ்வு போன்றவை கிடைக்கும் என்கின்றனர்.

    நாக மற்றும் ராகு-கேது தோஷங்கள் நீங்க, இங்கிருக்கும் ராகு - கேது சன்னிதியில் பால் மற்றும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிலர் கோவில் வளாகத்தில் விற்கப்படும், வெள்ளியிலான சிறிய பாம்பு, வெள்ளியிலான முட்டைகள், புற்று போன்றவைகளை வாங்கி, ராகு- கேது சன்னிதியில் வைத்து வேண்டுவது வழக்கமாக இருக்கிறது.

    ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி துலாம் (ஐப்பசி) மாதம் வரும் கடைசி பத்து நாட்கள் தேர்த்திருவிழா (ரத உற்சவம்) சிறப்பாக நடத்தப்படுகிறது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மகாமக நாளில், தமிழகத்தைப் போன்றே சுவாமி புறப்பாடு, ஊர்வலம், தீர்த்தவாரி என்று மகாமகத் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :


    கேரள மாநிலம், பாலக்காடு நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல்பாத்தி. இங்கு செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
    ×