search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jesus Christ"

    • மனித வாழ்க்கை மிகவும் அபூர்வமானது, அழகானது.
    • இறைவனின் அன்பையும், அருளையும் பெற்று சிறப்பாக வாழத்தகுந்தது.

    "சக மனிதருடைய திறமையை அங்கீகரியுங்கள். அப்போது இறைவன் உங்கள் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து, உங்களையும் அங்கீகரிப்பார்."

    அன்பானவர்களே, மனித வாழ்க்கை மிகவும் அபூர்வமானது, அழகானது. இறைவனின் அன்பையும், அருளையும் பெற்று சிறப்பாக வாழத்தகுந்தது.

    அதனால் தான், "உன்னைப்போல பிறரையும் நேசிக்க வேண்டும்" என்று இறைமகன் கூறியுள்ளார்.

    ஆனால், நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்று சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

    நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை நாம் அங்கீகரிக்கின்றோமா, அல்லது அவர்களை குறைகூறி மட்டம் தட்டுகின்றோமா?. நம்முடன் இருப்பவர்களை நாம் பாசத்துடனும், பரிவுடனும் நடத்துகிறோமோ? நாம் எப்படிப்பட்டவர்கள், நமது நடத்தை எப்படி உள்ளது என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

    நம்மில் அனேகருக்கு, அவர்கள் வசித்து வரும் சொந்த ஊரில் அல்லது அவர்களுடைய வீட்டில் கூட அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. நாம் ஏதாவது ஒரு புதிய கருத்தைக் கூறினாலோ அல்லது படிப்பில், தொழிலில், பணிபுரியும் இடத்தில் திறமையானவர்களாக இருந்தாலும், எந்த அளவுக்கு நம்மை மட்டம் தட்ட முடியுமோ அந்த அளவுக்கு நம்மை உதாசீனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ஆனால், இறைவனின் கருணையால் அதே நபர் ஒரு உச்சத்தைத் தொட்டவுடன், 'இவர் என்னுடைய உறவினர், என் ஊர்க்காரர்' என்று கூறிப் பெருமை கொள்பவர்களும் உள்ளனர்.

    கர்த்தராகிய இயேசு, இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் தம்மிடத்தில் வந்த நோயாளிகளின் அனைத்து வியாதிகளையும் குணப்டுத்தினார். கானா என்ற ஊரிலே திருமண வீட்டில் திராட்சை ரசம் குறைவுபட்ட போது, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். மரித்து நான்கு நாளாகி, அழுகிப்போன லாசருடைய உடலை, உயிர்பெறச் செய்தார்.

    இவ்வாறு ஏராளமான அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்தவராக, எல்லா மனிதர்களிடத்திலும் அன்பு கூர்ந்தவராக, நன்மை செய்கிறவராக கர்த்தர் இருந்தார்.

    அவர் தன்னுடைய சொந்த ஊரான கலிலேயாவுக்கு வந்து, அங்குள்ள ஜெப ஆலயத்தில் மக்களுக்கு ஞானத்துடன் உபதேசம் பண்ணினார்.

    அப்பொழுது அவர்கள் இதுகுறித்து ஆச்சரியப்பட்டனர். "இவனுக்கு இந்த ஞானமும், பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? இவனுடைய சகோதர சகோதரிகள் எல்லாம் நம்மிடத்தில் அல்லவா இருக்கிறார்கள்? இவனுக்கு மட்டும் இந்த ஞானம், வல்லமை எப்படி வந்தது?" என்று சொல்லி அவரைக் குறித்து, ஏளனமாய் பேசினார்கள்.

    இயேசு அவர்களை நோக்கி; "தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்" என்றார்.

    அவர்கள் அவரை நம்பாததால், அவர் அங்கு அனேக அற்புதங்களை, நன்மைகளை செய்யவில்லை.

    அன்பானவர்களே, இன்று இதே நிலை ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீட்டில், ஊரில், உடன் இருப்பவர்களால் ஏற்படுகின்றது. ஆகவே, நாம் பிறருடைய திறமைகளை அங்கீகரிப்போம். அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவோம்.

    அப்போது அவர்களின் திறமை வெளிப்படும். இதன் மூலம் அவரது குடும்பத்திற்கும், அவர் வாழும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் நன்மைகள் கிடைக்கும். இதன்மூலம், இறைவன் நம்முடைய திறமைகளையும் அங்கீகரித்து, நம்மையும் எல்லாவற்றிலும் மேன்மையடையச் செய்வார்.

    அனைவரையும் மதித்துப்போற்றுவோம், நற்சிந்தனைகளால், அன்பான சொற்களால் அனைவரையும் உற்சாகப்படுத்தி நற்செயல்கள் செய்ய தூண்டுவோம்.

    வாருங்கள், அன்பான மனித சமுதாயம் உருவாக நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்.

    நெல்லை மானெக்ஷா.

    • ஆண்டவர் இரக்கமும், அருளும் கொண்டவர்.
    • இயேசு தேடிச் சென்று குணமாக்கியதை குறித்து இங்கே பார்ப்போம்.

    ஆண்டவர் இரக்கமும், அருளும் கொண்டவர். அவர் நோயிலும், தனிமையிலும் தவிப்போருக்கு, ஆறுதலையும் தேறுதலையும் தருகிறவர். 'அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்' என்ற வாக்கை, எசாயா 65-ல் 24-ம் வசனத்தில் தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

    நம்முடைய தேவைகளையோ அல்லது பாரங்களையோ, அவரிடம் நாம் கூற வேண்டும் என்று கூட அவர் எதிர்பார்ப்பதில்லை. நாம் கலங்கி இருக்கும்போது நம்முடைய மனநிலையை அறிந்து செயல்படுபவராய் தேவன் இருக்கிறார். அப்படி தனிமையில் விடப்பட்டு கலங்கி போய் இருந்த ஒரு மனிதரை, இயேசு தேடிச் சென்று குணமாக்கியதை குறித்து இங்கே பார்ப்போம்.

    எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று இருந்தது. அதற்கு எபிரேய மொழியில் 'பெத்சதா' என்று பெயர். அக்குளத்தைச் சுற்றி அமைந்திருந்த ஐந்து மண்டபங்களிலும் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் என பலர் படுத்திருந்தனர். அவர்கள் அனைவரும் அந்த குளத்து நீர் எப்போதும் கலங்கும் என்று காத்திருப்பார்கள். ஏனெனில் ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார் என்பதும், தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார் என்பதும் அவர்கள் நம்பிக்கை.

    அந்த மண்டபத்தில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் இருந்தார். யூதர்களின் திருவிழாவிற்காக எருசலேமுக்கு வந்த இயேசு, பெத்சதா குளத்தின் அருகே சென்றார். அப்போது முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த அந்த நபரைக் கண்டார். அவர் பல வருடங்களாக நோயினால் அவதிப்பட்டவராய் இருப்பதை அறிந்த இயேசு, "நலம்பெற விரும்புகிறீரா?" என்று அவரிடம் கேட்டார்.

    ஆனால் அவரே "ஐயா, தண்ணீர் கலங்கும் போது, என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்று அவர் இயேசுவிடம் கூறினார்.

    உடனே இயேசு அவரிடம் "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.

    இயேசு பெத்சதா குளத்தின் அருகே இருந்த அந்த மனிதரிடம் "நலம் பெற விரும்புகிறீரா?" என்று கேட்டபோதும், அந்த மனிதர் 'ஆம் நான் நலம் பெற வேண்டும்' என்று கூறவில்லை. மாறாக தன்னுடைய இயலாமையை அவர் இயேசுவிடம் கூறுகிறார். தனக்கு யாரும் உதவி செய்ய முன்வருவதில்லை என்பதையும், ஆதரவற்ற நிலையில் தனிமையில் விடப்பட்டுள்ளதையும் அவர் வெளிப்படுத்தினார். ஏனெனில் தன்னிடம் கேள்வி கேட்கும் இயேசுவால் தனக்கு சுகத்தை அளிக்க முடியும் என்பதை அந்த மனிதர் அறிந்திருக்கவில்லை.

    ஆயினும் இயேசு 'எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்' என்று கூறியவுடன் சிறிதும் தயக்கமின்றி அவர் எழுந்து நடந்தார்.

    குணமடைந்த அந்த மனிதர் இயேசுவை பற்றி அறியாத ஒருவராக இருந்தார். அவர் குணமடைந்ததை பற்றி யூதர்கள் அவரிடம் விசாரித்தபோது, அவர்களிடம் 'தன்னை குணப்படுத்தியவர் யார் என்று தெரியாது' என கூறுகிறார். ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பே தனது குடும்பத்தாராலும், உற்றார் உறவினராலும் ஒதுக்கப்பட்டு இந்த குளத்தின் கரைக்கு கொண்டு வரப்பட்டு தனிமையில் விடப்பட்டவர் அந்த மனிதர். பல வருடங்களாக, குளம் கலங்கினாலும் குணம்பெற முடியவில்லையே என்று வேதனை பட்டுக் கொண்டிருந்த அவரைப் பார்த்து, இயேசு மனம் கலங்கினார். அவரது இயலாமையையும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையையும் உணர்ந்த இயேசு, தன்னைப் பற்றி அந்த மனிதர் அறிந்திராத போதும், அவரை நாடிச் சென்று சுகத்தைக் கொடுத்தார்.

    இன்றும் நம்மில் பலர், தன் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, 'எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையே' என்று மனம் கலங்கி போய் இருக்கலாம். ஆனாலும் நம் மீது இரக்கம் காட்ட இயேசு நம்மோடு இருக்கிறார். அவர் என்றும் நம்மை தனிமையில் தவிக்க விடுவதில்லை என்பதை உணர்ந்தவர்களாய், அவரிடம் நாம் அடைக்கலம் புகுவோம். ஏனெனில் அவர் நம்முடைய புலம்பலையும், களிநடனமாக மாற்றி மகிழ்ச்சியில் திளைக்கச் செய்பவராக இருக்கிறார்.

    • சூழ்நிலைக்கேற்றவாறு மனிதர்களின் அன்பு மாறலாம்.
    • ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்போ என்றும் மாறாதது.

    வாக்குவாதங்களும், பிரிவினைகளும் இக்காலத்தில் மனிதர்களிடையே காணப்படுவதற்கு அன்பு தாழ்ச்சியே காரணம். ஒருவருக்கொருவர் பொறுமையாகவும், பிரியமாகவும் இருந்தால் பிரிவினைக்கு இடமில்லை. அன்பு இருக்கும் இடத்தில் பொறாமை, வீண் வார்த்தை, இறுமாப்பு போன்றவை இருக்காது.

    சூழ்நிலைக்கேற்றவாறு மனிதர்களின் அன்பு மாறலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்போ என்றும் மாறாதது. அந்த அன்பினாலேயே மனிதர்களை பாவத்திலிருந்து மீட்கும் பொருட்டு சிலுவையில் ரத்தம் சிந்தினார். அன்பு விசுவாசத்தை தூண்டக்கூடியதாகவும், மனித குலத்தை வழிநடத்தும் விளக்காகவும் இருக்கிறது. 'விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்ற மூன்றிலும் அன்பே பெரியது' என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகிறார் (1 கொரி13:13).

    'நான் உங்களில் அன்பாயிருந்தது போல் நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்' (யோவான் 13:34) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

    ஒட்டுமொத்த மானுட குலத்துக்கும் அன்னையாக தெரசா அம்மையார் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவரது அளவற்ற கருணை, எல்லையில்லா அன்பு, ஆதரவற்றவர்கள் அனைவரையும் நேசித்த மனப்பாங்கு ஆகியவைகளே. ஆண்டவரின் அன்பை ஏழைகளிடமும், தொழுநோயாளிகளிடமும் காட்டி அவர்களுக்கு செய்த சேவையை இன்றும் உலகமே போற்றுகிறது.

    பிறரைப் பற்றி மிகவும் கடுமையான குறைகள் கூறுவதையே வழக்கமாக கொண்டிருக்கும் இந்நாட்களில் அன்பு நம்மிலிருந்து தான் ஆரம்பமாக வேண்டும். ஒரு தகப்பன் தன் மகனிடம் சில துண்டுக் காகிதங்களை கொடுத்து அதிலிருக்கும் படத்தை உருவாக்கக் கூறினார். புத்திசாலியான மகன் சிறிது நேரத்துக்குள்ளாகவே படத்தை சேர்த்து தகப்பனிடம் காண்பித்தான். தகப்பனார் ஆச்சரியப்பட்டு மகனிடம் கேட்க, அவன் ''அப்பா நீங்கள் கொடுத்த படத்துண்டுகள் பின்னால் ஒரு மனிதனின் உருவம் இருந்தது. அதை ஒன்றாக்கி சரி செய்தேன். முன்னாலுள்ள படம் சரியாகிவிட்டது என்றான். ஆம் மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் சேர்ந்து அன்பு காட்டுவதில் சிறந்து விளங்கினால் பிரிவினைகள், கலவரங்கள், கலகங்கள், சண்டைகள், யுத்தங்கள் போன்றவற்றுக்கு இந்த உலகில் இடமே இல்லாமல் போய்விடும்.

    வேதத்தில் தாவீதும், யோனத்தானும் மிகவும் அன்பு கொண்ட நண்பர்களாக இருந்தனர். யோனத்தான் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்து துக்கமடைந்த தாவீது ராஜா அவனது ஊனமுற்ற மகனான மேவிபோசேத்தை நேசித்து தன் குமாரனை போலவே நடத்தினான்.

    ஊனமுற்றோரிடம் நாம் அன்போடு இருக்கிறோமா?அல்லது அவர்களை உதாசீனம் செய்கிறோமா? என்பதை யோசித்துப் பார்ப்போம்.

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்தபோது ஏழைகளிடமும், ஊனமுற்றோரிடமும் மிகுந்த கரிசனை கொண்டவராயிருந்தார். அன்பினால் பார்வையற்றவர்களுக்குக் கண்ணொளி கொடுத்தார். காது கேளாதோர் செவித்திறன் பெற்றனர். நடக்க முடியாதவர்களை நடக்க செய்தார் (மத்:11:5). பசியால் வாடிய மக்களுக்கு உணவளித்தார்.

    தேவன் அன்பாக இருப்பது போல நாமும் சக மனிதர்களிடமும் அன்பாயிருப்போம். கண் முன்னால் இருக்கும் மனிதரை நேசிக்க முடியவில்லை என்றால் நம் கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் எப்படி அன்பு ெசலுத்த முடியும்?

    நாம் எவ்வளவு காணிக்கை கொடுக்கிறோம் அல்லது எவ்வளவு தான தருமம் செய்கிறோம் என்பதை விடவும் மேலானது ஒன்று இருக்கிறது என்றால், மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதே. உலகில் ஆயிரம் மொழிகள் இருந்தாலும் அன்பு மொழியே சிறந்த மொழி. சூரியனின் பார்வையால், உலகம் ஒளி பெறுவது போல, நம் அன்பு பார்வையால் பிறர் உள்ளத்தில் ஒளி வீசட்டுமே.

    "தம்முடைய ஒரே பேரான குமாரனாலே நாம் பிழைக்கும் படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதால் தேவன் நம் மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது" (1 யோவான் 4:9).

    சிலுவையில் தொங்கிய நேரத்திலும் இயேசு கிறிஸ்து தன் பகைவர்களை நேசித்தார். அப்பொழுதும் இயேசு, "பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்றார் (லூக்கா23:34).

    தன் தாயின் மீதிருந்த அன்பால் அவரை தன் சீடனிடன் ஒப்டைத்து தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை செய்தார்.

    சிலுவையில் வெளிப்பட்ட அன்பின் பிரவாகத்தில் நாம் மூழ்கி பிறருக்கு அந்த அன்பின் ஆழத்தை அறியச் செய்வோம். சிலுவை அன்புக்கு சிரம் தாழ்த்துவோம்.

    ஜெபா நியூட்டன், என்.ஜி.ஓ நியூ காலனி, திருநெல்வேலி.

    • கல்வி பயில்வதற்கு ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள்.
    • மற்றவர்களுக்கு உதவி செய்ய மறவாதிருங்கள்.

    அன்பானவர்களே, மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு மனிதர்களும், அன்பு, பாசம், மரியாதை, ஆறுதல் வார்த்தைகள், உதவிகள் போன்ற ஏதோ ஒன்றிற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.

    வேதாகமத்தில் இயேசு சொன்ன வார்த்தைகளை அப்போஸ்தலர் 20:35-ல் பவுலடியார் எழுதுகிறார், "வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்".

    ஆம் பிரியமானவர்களே, பிறரிடம் எதையும் வாங்குவதை விட மற்றவர்களுக்கு கொடுப்பது மனநிறைவையும், உற்சாகத்தையும் தருகிறது. மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கே நமக்கு வசதிகளும், வாய்ப்புகளும் இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து பார்த்தால் உள்ளம் சந்தோசத்தால் நிரம்பும்.

    உயிருக்கு போராடும் ஒரு வருக்கு குருதியை கொடையாக அளித்துப் பாருங்கள், அவரைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் பரவசப்படுவீர்கள். வறுமையில் வாடுவோருக்கு உதவி செய்து பாருங்கள், அவர்களின் வளமான வாழ்க்கைக்கு பின்னால் நீங்கள் இருப்பதை நினைத்துப் பாருங்கள், அதில் நீங்கள் அடையும் திருப்தி அலாதியானது.

    கல்வி பயில்வதற்கு ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள், அவர்கள் கற்று சான்றோனாய் நிற்பதை பார்க்கும் போது நீங்கள் ஆனந்தப்படுவீர்கள். ஆதரவற்று இருப்பவர்களிடம் அன்பாக பேசிப் பாருங்கள், உங்களால் முடிந்த உதவியை செய்து பாருங்கள், நல்ல விஷயங்களுக்காக மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள், தைரியமூட்டும் வார்த்தைகளை கூறுங்கள், பரிசுப்பொருட்கள் கொடுத்து ஊக்குவியுங்கள்.

    உங்களுக்கு இவை சிறு விஷயமாக இருக்கலாம். ஆனால் உங்கள் மூலம் கிடைக்கும் உதவிகள், வழிகாட்டுதல்கள், பாராட்டுகள், வாழ்த்துக்கள், பரிசுப்பொருட்கள், அன்பான, ஆறுதலான வார்த்தைகள் நிச்சயமாக அவர்களை உற்சாகப்படுத்தும். வாழ்க்கையில் மேலும் பல உயரங்களை அவர்கள் எட்டிப்பிடிக்க உந்துகோல்களாக இருக்கும்.

    ஆகவே, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய மறவாதிருங்கள். நீங்கள் உயர்ந்த நிலையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு செய்யத்தக்க நியாயமான உதவிகளை செய்ய மறவாதிருங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவுவது தான் மனித வாழ்வின் அடிப்படை பண்பு என்பதை உணர்வோம்.

    'இயேசுவும் நமக்காக மரித்ததினாலே, நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்' (ரோமர் 5:8).

    'ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனை கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை'. (யோவான் 15:13).

    இதற்கு மேல் கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. நாம் நித்திய ஜீவனை அடைவதற்காக தன் ஜீவனையே கொடுத்தவர் இயேசு. இன்றைக்கு நாமும் அவரிடம் அன்பு கூர்ந்து நம்பிக்கையுடன், நம் தேவைகளை அவரிடத்தில் பிரார்த்தனை மூலம் கேட்டால் நிச்சயம் நிறைவேற்றுவார்.

    அவர் போதனையில் வாழும் நாமும், தேவையுள்ள மனிதர்களுக்காக, அன்பு, பரிவு, தைரியம், ஆறுதலான வார்த்தைகள் போன்றவற்றையும், மனப்பூர்வமான உற்சாகத்துடன் நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்யும் போது நம் உள்ளம் மகிழும். அவர்கள் உள்ளம் குளிரும், இதன்மூலம் மனித வாழ்வின் அர்த்தம் புரியும்.

    இறைக்க இறைக்கத் தான் நீருணியும் ஊறும். நம்மிடம் இருப்பதை மனமுவந்து கொடுப்போம். இறைவன் நமக்கு பல மடங்கு அருளச்செய்வார்.

    நெல்லை மானக்ஷா.

    • மனிதன் மகிழ்ச்சியாய் வாழ பல்வேறு முயற்சிகளைச் செய்கிறான்.
    • ஆண்டவர் இயேசுவின் வேண்டுதலும், எதிர்பார்ப்பும், ஏக்கமுமாய் இருக்கிறது.

    நமது வாழ்வை இனிமையாக்குவதும், அழகாக்குவதும், தொடர்ந்து வாழ்வதற்கான உந்துதலை தருவதும் அவ்வப்போது நம் வாழ்வில் தோன்றி மறைகின்ற மகிழ்ச்சியான அனுபவங்களே.

    ஆனால் வாழ்வில் மகிழ்ச்சிக்கான தேடலும், மகிழ்ச்சிக்கான வெற்றிடமும், எப்போதும் மகிழ்ச்சியாய் வாழவேண்டுமென்ற ஆவலும் நம்மில் இருக்கின்றது. மனிதன் மகிழ்ச்சியாய் வாழ பல்வேறு முயற்சிகளைச் செய்கிறான். எல்லாமே தற்காலிக மகிழ்ச்சியைத் தருகின்றதே தவிர, எதுவும் நிறைவான, நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை.

    தூய பவுலடிகளார் பிலிப்பியா திருமுகத்தில் "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்" (பிலிப்பியா 4:4) என்கிறார்.

    ஆண்டவரோடு இணைந்து வாழும் வாழ்வு

    'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்' எனும்போது இங்கே மகிழ்ச்சி என்பது உவகை, ஆனந்தம், சந்தோஷம் என்ற பொருள்களுடன் உள்ளார்ந்த மகிழ்ச்சியைக் குறிக்கிறது.

    உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 136-வது இடத்திலும், பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்திலும் உள்ளது. 5 முதல் 20 சதவீதம் மக்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 70 சதவீதம் மக்கள் தங்கள் பணி குறித்து வெறுப்புணர்வு உள்ளவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றது.

    ஆண்டவரோடு இணைந்து வாழ்கின்ற நன்னெறியும், நற்பண்புகளும் நிறைந்த நல்வாழ்வே உண்மையான நிறைமகிழ்வைத் தருகிறது என்பதை நன்கு உணர்ந்து, ஆண்டவரோடு இணைந்து ஒருமனத்தவராய் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.

    இதுவே ஆண்டவர் இயேசுவின் வேண்டுதலும், எதிர்பார்ப்பும், ஏக்கமுமாய் இருக்கிறது. "நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றி கனி தர இயலாது''.

    "ஒருவர் என்னுடனும், நான் அவருடனும், இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்" (யோ 15:4,5).

    ஆண்டவரோடு இணைந்துள்ள வாழ்வே நம் மனதையும், உள்ளத்தையும், உடலையும் பாதுகாக்கும்.

    பவுலடிகளார், ரோமப் பேரரசர் நீரோ காலத்தில் சிறைப்பட்டிருந்த நிலையில், ஆன்மிக வாழ்வில் பெருந்துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களிடம் முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார். மகிழ்வுடன் துன்பத்தைத் தாங்கவும், துன்பத்தின் நடுவிலும் சந்தோஷமாக இருக்கவும் விரும்புகிறார்.

    இறையருளைப் பகிர்ந்து வாழும் வாழ்வு

    'நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை' (எபி 13:16).

    கிறிஸ்துவின் வழியாகக் கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்கின்ற ஈகை மிகுந்த நிறைவாழ்வும் நமக்கு உண்மையான மகிழ்வைத் தருகிறது. இறையருள் நிறைந்திருக்கும் மகிழ்ச்சியான மனம் இரக்கத்துடன் செயல்படுகிறது.

    உலகில் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் நைஜீரியாவைச் சேர்ந்த பெமி ஓடெடோலா. அவரிடம் 'உங்களை மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது எது?' என்று கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் இவ்வாறு கூறினார்:

    "நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் நான்கு நிலைகளை கடந்து விட்டேன். இறுதியாகவே, உள்ளார்ந்த மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன்".

    முதலாவது கட்டமாக செல்வங்களைக் குவித்தேன், ஆனால் இதில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கவில்லை. இரண்டாவதாக விலை உயர்ந்த, மதிப்புமிக்க பொருட்களை சேகரித்தேன். ஆனால் இதுவும் தற்காலிகமானது தான். பொருட்கள் மீது கொண்ட ஈர்ப்பு நீண்டகாலம் நீடிக்காது என்பதை உணர்ந்தேன். மூன்றாவதாக பெரிய அளவிலான வர்த்தகம் செய்தேன். நைஜீரியா, ஆப்பிரிக்காவில் 95 சதவீதம் டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்கா, ஆசியாவில் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் அதிலும் நான் எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை.

    இறுதியாக என் நண்பன், 200 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கிக் கொடுக்குமாறு கேட்க, அதைச்செய்தேன். நானும் அவனுடன் சென்று குழந்தைகளிடம் என் கைகளால் அவற்றைக் கொடுத்தேன். அப்போது அந்த பிஞ்சு குழந்தைகளின் முகத்தில் பேரொளியின் பிரகாசத்தைப் பார்த்தேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்து சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர். விவரிக்க இயலாத பேரானந்தம், நான் எதிர்பார்த்ததை விட மேலான மகிழ்ச்சி, என்னுள் நிலவிய அற்புதத்தை உணர்ந்தேன்.

    எல்லாம் முடிந்து நான் புறப்பட்ட போது ஒரு சிறு பெண்குழந்தை செல்லமாக என் கால்களைப் பிடித்தது. நான் குனிந்து அக்குழந்தையிடம் 'உனக்கு வேறு ஏதாவது வேணுமா?' என்று கேட்டதும், 'நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன். உங்களைச் சொர்க்கத்தில் சந்திக்கும்போது, உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்குப் பிடித்ததை வாங்கித் தருகிறேன்' என்று சொல்லி அந்தக் குழந்தை சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்றுவிட்டது.

    கடவுளின் நிறையருளை அன்று தான் முழுமையாக உணர்ந்தேன். இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியைக் கொடுத்தது. வாழ்க்கைப் பற்றிய எனது அணுகுமுறையை முற்றிலும் மாற்றியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரக்க உணர்வின் பெருக்கமே உண்மையான மகிழ்ச்சிக்கான நெருக்கமாக இருக்கின்றது. பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை என்றார் ஆண்டவர் இயேசு (தி.ப 20:35).

    -அருட்பணி ம.பென்னியமின், தோட்டப்பாளையம், வேலூர்.

    • இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு சீடர்கள் உத்தரவு சொன்னார்கள்.
    • இயேசுவை சுமக்க ஆரம்பித்த போது கழுதைக்கு புது வாழ்வு வந்தது.

    மிருகங்களில் அதிகம் விரும்பப்படாதது கழுதை. யாராவது கோபத்தில் நம்மை கழுதை என்று சொல்லிவிட்டால் நம் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    ஒரு கிராமத்தில் கழுதைக்குட்டி ஒன்றை இரு வழிச்சந்தில் ஒருவன் கட்டி வைத்துவிட்டு போனான். அவன் நினைத்தான், இந்த கழுதையினால் இனி யாருக்கும் பலனில்லை. இது எப்படியாவது மரித்துப்போகட்டும் என கட்டிவைத்தான்.

    அந்த கழுதையின் நிலைமையானது, விரும்பும் இடத்திற்கு போக முடியாது, விரும்பும் ஆகாரம் சாப்பிட முடியாது, அதை பராமரிக்க யாருமில்லை, அருகில் யாரும் வர முடியாமல் நாற்றமெடுக்கும் நிலைமை.

    இன்று அநேக மனிதர்களும் இப்படி தனித்துவிடப்பட்ட நிலைமையில் தான் உள்ளனர். கழுதையின் நினைவு, என் கட்டுகளை யார் அவிழ்ப்பார்கள்? எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? மற்ற மிருகங்களை போல என் நிலை எப்போது மாறும்? என ஏங்கி நிற்கிறது. அப்படிப்பட்ட கழுதையைத் தான் இயேசு பார்த்தார், மனதுருகினார்.

    இயேசு சீடர்களை பார்த்து சொல்கிறார், "உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்" (மாற்கு 11:2). "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள். உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான்" என்று சொல்லி, அவர்களை அனுப்பி னார் (மாற்கு 11:3).

    அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள் (மாற்கு 11:4).

    அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர், நீங்கள் கழுதை குட்டியை அவிழ்க்கிறது என்னவென்று கேட்டார்கள் (மாற்கு 11:5).

    இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு சீடர்கள் உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, சீடர்களைப் போகவிட்டார்கள். (மாற்கு 11: 6)

    இயேசுவிடம் அந்த கழுதை வந்தபோது கட்டப்பட்ட நிலை மாறியது, நாற்றமெடுக்கும் நிலைமை மாறினது, கழுதைக்கு வஸ்திரங்களை போட்டார்கள், இயேசு அதன் மேல் ஏறினார். யாருக்கும் பிரயோஜனமில்லாத கழுதைதான் இயேசுவை சுமக்கும் கழுதையாய் மாறினது. அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள். வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள் (மாற்கு 11:8).

    இயேசுவை சுமக்க ஆரம்பித்த போது கழுதைக்கு புது வாழ்வு வந்தது. என்றைக்கு நீ இயேசுவை சுமக்க ஆரம்பிக்கிறாயோ? அன்று உங்களுக்கும் உயர்வு வரும்.

    பழைய ஏற்பாட்டில் ஒரு சம்பவம் நடந்தது. அது என்னவென்றால், கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று. கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் என்னும் தீர்க்கதரிசி கழுதையை அடித்தான் (எண்ணாகமம் 22:23).

    ஒரு தீர்க்கத்தரிசியால் பார்க்க முடியாத தூதனை யாருக்கும் வேண்டாத கழுதையால் பார்க்க முடிந்தது. உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பிலேயாமைப் பார்த்து, 'நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்?' என்றது. (எண்ணாகமம் 22:28).

    கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி, 'நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்' (எண்ணாகமம் 22:32).

    'கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று. எனக்கு நீ விலகாமல் இருந்ததனால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன்' என்றார் (எண்ணாகமம் 22:33).

    யாருக்கும் வேண்டாதவனாய் இருக்கிறேன் என கவலைப்பட வேண்டாம். இயேசுவை சுமக்க, பார்க்க, உனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை மிகப்பெரிய பாக்கியமாய் நினை. சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார் (சகரியா 9:9) என்ற தீர்க்க தரிசன வார்த்தை வேதத்தில் எழுதி இருக்கிறது.

    கடவுளின் வாக்கு நிறைவேற எல்லாராலும் வெறுத்து ஒதுக்கப்படுகிற நிலைமை சில சமயங்களில் ஏற்படலாம். ஆனாலும் பொறுமையோடு காத்திரு. யாருக்கும் தேவையற்ற நீதான் இயேசுவுக்கு வேண்டும். இயேசு கழுதையின் மேல் ஏறின போது கழுதைக்கு வாழ்வு வந்தது, மதிப்பு வந்தது. உன்னுடைய வாழ்க்கையிலும் இயேசுவை சுமக்க தீர்மானித்தால் உனக்கும் நல்வாழ்வு உண்டாகும்.

    கிறிஸ்துதாஸ், ரீத்தாபுரம், கன்னியாகுமரி மாவட்டம்.

    • முதியோர் இல்லங்களில் வாழும் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.
    • நம்மை சுயபரிசோதனை செய்யக்கூடிய கேள்வி இது.

    மனிதன் தன்னுடைய வாழ்வில் நன்மைகள் அனுபவிப்பதற்கும், சுகத்தோடு எல்லாவித வளமோடு வாழவும், அவன் தன் பெற்றோரை மதித்து நடக்க வேண்டும்.

    நாம் ஒவ்வொருவரும், நண்பர்களிடத்தில் அன்பாகவும், வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளை மதித்தும் நடக்கின்றோம், பணிவுடன் பேசுகின்றோம். ஆனால், நம்மைப் பெற்றெடுத்து, வளர்த்து, தங்கள் முழு உழைப்பையும் நமக்காகவே செலவழித்த தாய், தந்தையரிடம் அன்பாகவும், அவர்களை மதித்தும் நடக்கின்றோமா?

    நம்மை சுயபரிசோதனை செய்யக்கூடிய கேள்வி இது. வேதாகமம் மூலம் இந்த கேள்விக்கு நாம் விடை பெறலாம்.

    "உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவி கொடு, உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே" (நீதிமொழிகள் 23:12)

    "தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்தி விடுகிறவன் இலச்சையையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்" (நீதிமொழிகள் 19:26)

    "உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்து இருப்பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக" (எபேசியர் 6:2,3)

    இவ்வாறு வேதாகமம், தாய் தந்தையரை மதிக்கவேண்டும், அவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்த வேண்டும், அவர்கள் தேவையை அறிந்து அவர்கள் கேட்காமலே நாம் அவர்களை அன்புடன் கவனிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

    ஆனால் இன்றைக்கு நடப்பது என்ன?

    பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தன்னைப்பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையருக்கு வயதாகும் போது பலர் அவர்களை கவனிப்பதில்லை. ஒரு வேளை சாப்பாடு கூட கொடுக்காமல், அவர்களைத் திக்கற்றவர்களாக துரத்தி விடும் கல் நெஞ்சக்காரர்களும் இருப்பதை செய்தித்தாள்கள் மூலம் அறிகிறோம்.

    இதுகுறித்து வேதாகமம் கூறுகின்றது;

    "எவனாகிலும் தகப்பனையாவது, தாயையாவது நோக்கி நான் உனக்கு செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாக (பணம்) கொடுக்கிறேன்" என்று சொல்லி, தன் பெற்றோரை கவனிக்காமல் இருந்தால், அவன் தேவனுடைய கட்டளையை மதிக்காமல் இருக்கிறான் என்பது பொருளாகும்.

    பெற்றோரின் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு, அவர்களை நேரில் போய் பார்த்து நலம் விசாரிக்காமல் இருப்பது, அல்லது அவர்கள் வயதாகி பலம் குன்றியவுடனே முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது, அல்லது தாய், தந்தையாரின் அருகில் இருந்தும் அவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடும் நிகழ்வுகள் பாவமான செயல்களாகும்.

    தன் மகனை, மகளைப் பார்க்க மாட்டோமா? பேரப்பிள்ளைகளை கொஞ்ச மாட்டோமா? என்று ஏக்கப் பெருமூச்சோடும், கண்ணீர் நீரூற்றோடும் தனிமையிலும், முதியோர் இல்லங்களிலும் வாழும் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.

    இன்றைக்கு நம் பெற்றோருக்கு நாம் எதைச் செய்கின்றோமோ, அது நாளைக்கு நம் வாழ்விலும் நடக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    "தங்கள் தகப்பனைப் பரியாசம் பண்ணி, தாயின் கட்டளைகளை அசட்டை பண்ணுகிற கண்ணை, நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்" (நீதிமொழிகள் 30:17) என்று வேதம் எச்சரிக்கிறது.

    வாருங்கள் நண்பர்களே, நம் வாழ்வு வளம் பெறவும், சுகமாய் வாழவும், இறைவனால் மேன்மை பெறவும், நம் பெற்றோரை மதித்து, அன்புடன் நடத்தி அரவணைப்போம். தேவனின் அருளும், பெற்றோரின் அன்பும் நம்மை மேன்மைப்படுத்தி வாழ்வில் வெற்றிகளைத்தரும்.

    நெல்லை மானக்ஷா.

    • காட்டு புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள்.
    • ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப் பாருங்கள்.

    மனிதனுக்கு ஏற்படும் கவலை அல்லது துக்கம் என்பது பல வடிவங்களைக்கொண்டது. நெருங்கியவர்களின் இழப்புகள், தோல்விகள், உதவியற்று தனித்துவிடப்பட்ட நிலைகள், பணி நெருக்கடிகள், பண நெருக்கடிகள், விரும்பிய கல்வி கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை, நல்ல வரன் அமையவில்லை, என் சொந்த வீட்டார் கூட என்னை புரிந்து கொள்ளவில்லை... என்று இந்தப்பட்டியல் மிகவும் பெரியதாய் நீளும்.

    இவ்வாறு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு நிகழ்கால, எதிர்கால கவலைகள் வந்து அவன் மனதை, உடலை வாட்டி வருத்துகிறது.

    வேதத்தில், எருசலேமுக்கு அருகில் பெத்தானியா என்ற ஊரில் மார்த்தாள்-மரியாள் என்ற சகோதரிகளுக்கு லாசர் என்ற சகோதரர் இருந்தார். இயேசு இந்த சகோதரிகளிடத்திலும் லாசருவிடத்திலும் அன்பாய் இருந்தார். இந்த லாசரு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். அப்பொழுது அவனுடைய சகோதரிகள் இயேசுவினிடத்தில் ஆளனுப்பி 'நீர் சினேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான், வந்து சுக மாக்கும்' என்று வேண்டினார்கள்.

    இயேசு பெத்தானியாவுக்கு வந்தபோது லாசரு இறந்து, உடல் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. மார்த்தாளும், மரியாளும் இயேசுவினிடத்தில் வந்து, "ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் மரித்து இருக்கமாட்டான்" என்று கூறி சத்தமிட்டு அழுதார்கள். அவளோடு கூட இருந்த உறவினர்களும் அழுதார்கள், இயேசுவும் கண்ணீர் விட்டார்.

    உடனே இயேசு கல்லறைக்குச் சென்று ''கல்லை எடுத்துப் போடுங்கள்'' என்றார். மரித்தவனுடைய சகோதரிகள் "ஆண்டவரே நாலு நாள் ஆயிற்று நாறுமே" என்றார்கள்.

    இயேசு அவளை நோக்கி "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்" என்றார்.

    கல்லறையின் கல்லை எடுத்தார்கள், பின்பு "லாசருவே வெளியே வா" என்று உரத்த சத்தமாய் இயேசு கூப்பிட்டார்.

    மரித்தவன் உயிரோடு வெளியே வந்தான். எல்லோரும் மிகவும் களிகூர்ந்து, மகிழ்ந்து சந்தோஷப்பட்டார்கள். கவலையான சூழ்நிலை, சந்தோசமாக, குதூகலமாக மாறியது.

    இன்றைக்கு நாமும் வாழ்க்கையில் எல்லாமே இழந்து விட்டோம், இழப்பதற்கு இனி ஒன்றுமேயில்லை என்று கண்ணீரோடு, கவலையுடன் நிற்கும்போது இறைமகன் இயேசுவிடம் கையேந்தினால் நிச்சயம் நம் வாழ்வும் சந்தோஷமாக மாறும்.

    இயேசு சொல்கிறார், "கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்". (மத்தேயு 6:27, லூக்கா 12:25).

    ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப் பாருங்கள். அவை விதைக்கிறதுமில்லை, நடுகிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதுமில்லை. ஆனால் அவைகளையும் பரமபிதா எந்த குறைவுமின்றி நடத்துகிறார்.

    காட்டு புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள். அவை நெய்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. ஆனாலும் அவைகளின் இலைகள், மலர்கள் எவ்வளவு அழகாக மகிமையாக உள்ளது.

    இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல் போகும் பறவைகள், செடிகளுக்கு தேவன் இவ்வளவு சிறந்ததை தரும் போது அவருடைய சாயலாக உள்ள நமக்கு எல்லாமே நிறைவாக தருவார்.

    ஆகவே நாம், நம்முடைய முயற்சியை மட்டும் சரியாக செய்து விட்டு எல்லா கவலைகளையும், வேதனைகளையும், துக்கங்களையும், கண்ணீரையும் இறைவன் மீது வைத்து விடுவோம். மரித்து நான்கு நாளான லாசருவின் சரீரத்தை உயிரோடு எழுப்பிய இயேசு, நிச்சயமாக நம்முடைய வாழ்விலும் உள்ள கண்ணீர், கவலை, துக்கத்தை நீக்கி, நம்மை சந்தோஷமாக மாற்றி ஆனந்த கிரீடத்தை தருவார்.

    நெல்லை மானேக்சா.

    • விவிலியத்திலுள்ள வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒரு நிபந்தனையுடன் தான் வருகின்றன.
    • வசனங்களை முழுமையாய்ப் படித்து புரிந்து கொள்வோம்.

    இன்சூரன்ஸ் வாங்கும்போது அதில் பளபளப்பான, வசீகரமான வாக்குறுதிகள் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். விற்பனை செய்யும் நிறுவனமும் அதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லி நம்மை மூளைச் சலவை செய்யும். விண்ணப்பத்தின் கடைசியில் நட்சத்திரக் குறியிட்டு, 'சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது' என நிறைய விஷயங்களைப் போட்டிருப்பார்கள். அதை யாரும் கண்டு கொள்வதில்லை.

    ஒரு தேவைக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகும் போது அவர்கள் அந்த வசீகரக் கொட்டை எழுத்துத் தகவல்களைக் கண்டு கொள்வதில்லை, அந்த நட்சத்திரக் குறியிட்ட சட்டதிட்டங்கள் என்ன சொல்கின்றன என்பதையே பார்ப்பார்கள்.

    'சாரி... உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது, ஏன்னா நீங்க இதைச் செய்யல. அல்லது இதை தப்பா செஞ்சுட்டீங்க' என மிகப்பெரிய முட்டுக்கட்டைகளைப் போட்டு நம்மை அதிர்ச்சியடையச் செய்வார்கள்.

    அப்படித் தான் பல வசனங்களை கிறிஸ்தவர்கள் இன்று பயன்படுத்துகிறார்கள். "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்" எனும் பிரபல வசனம் ஒன்று உண்டு. போட்டோக்களிலும், காலண்டர்களிலும் அதை எங்கும் காணலாம். அதை வீட்டின் வரவேற்பறையில் தொங்க விட்டுக்கொண்டு, 'நம்ம வாழ்க்கை இனிமேல் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல் இருக்கும்' என நினைத்துக் கொள்பவர்கள் எக்கச்சக்கம்.

    உண்மையில் இது பாதி வசனம் தான், இதன் முழுமையான வசனம் அதற்கு முன் வருகிறது. நட்சத்திரக் குறியிட்ட சட்ட திட்டங்களைப் போல.

    "பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால் நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்…" என்பதே முழுமையான வசனம்.

    நாம் செய்ய வேண்டியதை வசதியாக உதறிவிட்டு, கடவுள் ஆசி வழங்குவார் என நம்புகிறோம். அழகான அட்டைகளில் பாதி வசனங்களை மட்டும் எழுதி வரவேற்பு அறையில் தொங்கவிட்டு ஓய்வு எடுக்கும் போது அது 'பயனற்ற வழிபாட்டுக்கு இணையான செயலாக' மாறிவிடுகிறது.

    வெறுமனே பிரியாணி, பிரியாணி என வாசித்துக் கொண்டிருந்தால் வயிறு நிரம்பிவிடுவதில்லை. நல்ல சிலிர்ப்பூட்டும் வசனங்களை அரைகுறையாய் வாசித்துக் கொண்டே இருப்பதால் வாழ்வு மலர்ந்து விடுவதில்லை. இதை மனதில் கொள்ளவேண்டும்.

    ஆறுதலான மகிழ்ச்சியான வசனங்களை அடிக்கடி பார்ப்பதும், படிப்பதும் நல்லது தான், ஆனால் அந்த வசனங்கள் உண்மையிலேயே நமது வாழ்க்கையில் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதையே கவனிக்க வேண்டும்?

    "35 மதிப்பெண்கள் வாங்கினால் நீ பாசாவாய்". இப்படி ஒரு அறிவிப்பு பள்ளிக்கூட பலகையில் எழுதப்பட்டிருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அதை மாணவர்கள் பார்க்கின்றனர். ஒருவன் குறைந்த பட்சம் 35 மார்க் வாங்க வேண்டும் என மனதில் எழுதிக்கொள்கிறான். அதற்காக உழைக்கிறான்.

    இன்னொருவனோ கடைசி இரண்டு வார்த்தைகளான, "நீ பாசாவாய்" எனும் வார்த்தைகளை மனதில் எழுதுகிறான். திரும்பத்திரும்ப அதையே மனதில் சொல்லிக் கொள்கிறான். ஆனால் படிக்கவில்லை. கடைசியில் யார் வெற்றியடைவார்? யார் தோல்வியடைவார்? என்பதைச் சொல்லத் தேவையில்லை.

    விவிலியத்திலுள்ள வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒரு நிபந்தனையுடன் தான் வருகின்றன. அதை அறிந்தும் அறியாதது போல நாம் நடந்து கொள்வதும், எல்லாம் நடக்கும் என மூட நம்பிக்கை கொள்வதும் வேடிக்கை தான்.

    உதாரணமாக, "கர்த்தரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்" எனும் வசனத்தை பல இடங்களில் நாம் பார்த்திருப்போம். பல விஷயங்களை நாம் நமது விருப்பப்படி ஆரம்பித்து விட்டு, "கர்த்தரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்" என நம்பிக்கொள்கிறோம்.

    சங்கீதம் 37:5 சொல்வது இதைத் தான்: "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்".

    திருவிவிலியம் இதை "உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்" என்கிறது.

    அதாவது இரண்டு விஷயங்களை நாம் செய்தால் தான் கடவுள் அந்த செயலை நிகழ்த்திக் காட்டுவார். ஒன்று, நமது வழியை ஆண்டவரிடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டாவது, அவரையே நம்பியிருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்று பிழைத்தாலும் அது நடைபெறாது.

    கடவுளிடம் வழியை ஒப்படைக்கிறோம், ஆனால் நம்பவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். "உன் விசுவாசத்தின் படியே உனக்கு ஆகட்டும்" என கடவுள் சொல்லி விடுவார்.

    கடவுளிடம் வழியை ஒப்படைக்காமல், அவரை நம்புகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். "விதைக்காத இடத்தில் அறுவடை செய்ய முயல்வதைப் போல" அது முடிந்து விடும்.

    எனவே, அரைகுறை வசனங்களைப் பேசி நம்மை துண்டிவிடுபவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்போம். வசனங்களை முழுமையாய்ப் படித்து புரிந்து கொள்வோம். எந்த ஒரு ஆசீர்வாதத்தைப் பெறவும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவோம். இறைவனின் வழியில் நிலைத்திருப்போம்.

    சேவியர், சென்னை.

    • நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.
    • ஒருவன் தன்னுடைய உடல் உறுப்புகளில் நாவை அடக்குவது மிகவும் கடினமான காரியம்.

    கர்த்தரிடத்தில் ஒருபோதும் அநீதி இல்லை. (சங்கீதம் 92:14).

    நீதியுள்ள ஜனங்களை கர்த்தர் ஒருபோதும் அழிய அனுமதித்தது இல்லை. இதற்கு உதாரணம் ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த அபிமெலேக்கு என்பவன். இந்த அபிமெலேக்கு, கேரார் என்ற இடத்தில் ராஜாவாக இருந்தான்.

    கானான் தேசத்திற்கு தென்புறத்தில், இருந்த பெலிஸ்தியர்களின் எல்லையின் விளிம்பில் மத்தியத்தரை கடல் பட்டணமான காசாவுக்கும், வறண்ட நிலப்பரப்பின் வடக்கே இருந்த பெயர்செபாவுக்கும் நடுவிலே ஆபிரகாம் குடியிருந்தான். அப்போது அவனுடைய மனைவியாகிய சாராளை அபிமெலேக்கு தனக்கென வரவழைத்துக் கொண்டான். இதை கர்த்தர் அபிமெலேக்குவின் கனவில் தோன்றி எச்சரித்தார்.

    கர்த்தரின் பார்வையில் அபிமெலேக்கு நீதியுள்ளவனாக காணப்பட்டபடியால் கர்த்தர் அவனை அழிக்கவில்லை. எச்சரித்து திருத்தினார். ஆபிரகாம் கர்த்தரிடம் வேண்டுதல் செய்த போது, அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவனுடைய வேலைக்காரிகளையும் குணமாக்கி பிள்ளை பெறும்படி அனுக்கிரகம் செய்து அவர்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 20).

    நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம். ஒருவன் சொல் தவறாதவனாக இருந்தால், அவன் பூரண புருஷனும் தன் சரீரம் முழுவதையும் கடிவாளத்தினால் அடக்கிக் கொள்ளக் கூடியவனுமாய் இருக்கிறான்.

    ஒருவன் தன்னுடைய உடல் உறுப்புகளில் நாவை அடக்குவது மிகவும் கடினமான காரியம். தன்னுடைய நாவை ஒருவன் அடக்கி விட்டான் என்றால் தன்னுடைய வாழ்க்கையின் எல்லாவிதமான காரியங்களிலும் அவன் நல்லவனாக வாழ முடியும்.

    நெருப்பு போன்றது இந்த நாவு. அநீதி நிறைந்த உலகத்தைப் போன்றது இந்த நாவு. நம்முடைய அவயங்களில் நாவானது முழு சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தை கொளுத்தி விடுகிறது. இந்த நாவு அடங்கப்படாத ஒரு உறுப்பு, பொல்லாங்கானது, மரணத்தை தரும் விஷம் நிறைந்ததுமாய் இருக்கிறது.

    ஆண்டவரைத் துதிக்கும் நாம், சபிக்கிறதுக்கும் அநீதி நிறைந்த வார்த்தைகளை பேசுவதற்கும் இந்த நாவை உபயோகிக்கவே கூடாது (யாக்கோபு 3:10).

    அநீதியினால் சகலவித வஞ்சகம் உண்டாகி மனிதனை கெடுத்துவிடும். சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற மனிதனுக்கு ஆக்கினை தான் முடிவாக அமையும். (2 தெசலோனிக்கேயர் 2:11).

    அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்கு கூலி கொடாமல், அவனை சும்மா வேலை வாங்குகிறவனுக்கு ஐயோ! என்று எரேமியா தீர்க்கதரிசி கிறிஸ்துக்கு முன் 604-ல் இஸ்ரவேலில் இருந்த தீய அரசர்களுக்கு விரோதமான நியாய தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லும் போது இவ்வாறு சொல்லுகிறார் (எரேமியா 22:14).

    இயேசுவானவர் தம்முடைய ஊழிய நாட்களிலே தம்முடைய சீடர்களை பார்த்து, ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுடைய ஒரு உக்கிராணக்காரன் (மேனேஜர்) அநீதியான உலக பொருளை எப்படி தனக்கு நீதியாக சம்பாதித்து கொண்டான் என்பதை அவர்களுக்கு விளக்கும் விதமாக சொன்னார். தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து அவரவர் கடன்களை பாதியாக குறைத்து அவர்களை விடுவித்தான். இந்த அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய் செய்தான் என்று எஜமான் கண்டு அவனை மெச்சி கொண்டான். அவன் தன் ஆஸ்திகளை அழித்து போடுகிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டதின் நிமித்தமாக கணக்கு எல்லாம் ஒப்புவிக்க சொல்லும் சமயத்தில் அந்த உக்கிராணக்காரன் புத்தியாய் செய்தான் என்று சொல்லி அநீதியான உலகப் பொருளால் உங்களுக்கு சினேகிதரை சம்பாதியுங்கள் என்று இயேசுவானவர் சீடர்களுக்கு அறிவுறுத்தினார். (லூக்கா 16:9).

    கடனாக கொடுக்கிற பணத்திற்கும், ஆகாரத்துக்கும், கடனாக கொடுக்கிற வேறு எந்த பொருளுக்கும் உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக. (உபாகமம் 23:19)

    மோசே மூலமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த கட்டளைகளில் ஒன்றான வட்டி வாங்கக் கூடாது என்பதை அந்த உக்கிராணக்காரன் கடைப்பிடித்தது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அவனது இந்த செயல் கடன்பட்டவர்களிடத்தில் மட்டும் அல்ல தன்னுடைய எஜமான் இடத்திலும் அவனுக்கு ஒரு நல்ல பெயரை உண்டாக்கினது. இந்த உக்கிராணக்காரன் தனக்கு கிடைத்த அநீதியான உலக பொருளை நீதியை சம்பாதிப்பதற்கு உபயோகித்துக் கொண்டது போல நாமும் அநீதியான உலகப் பொருளுக்கு ஆசைப்பட்டு கொண்டு இராமல் அநீதியை செய்வதிலிருந்து வெளியே வந்து நீதியை செய்கிறவர்களாக வாழ்வோம்.

    சூரியனுக்கு கீழே நியாயஸ்தலத்தில் அநியாயமும், நீதி ஸ்தலத்தில் அநீதியும் இருக்கிறது. சகல எண்ணங்களையும் சகல செய்திகளையும் நியாயம் தீர்க்கும் காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் (பிரசங்கி 3:16,17).

    இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தினால் நாம் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டுள்ளோம். எனவே நம்மை நீதிக்கு அடிமைகளாக மாற்றிக் கொள்வோமாக. அக்கிரமத்தை நடப்பிக்கும்படி நம்முடைய அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுக்காமல் பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நம்முடைய அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுத்து பாவத்திற்கு நீங்கி, நீதியை செய்கிறவர்களாக மாற்றுருவாக்கம் பெறுவோம்.

    முனைவர் இந்திரா கெட்சி டேவிட், நெல்லை.

    • இனிமையான தருணங்களை நினைத்துப் பார்க்க இப்போது யாருக்கும் நேரமில்லை.
    • கண்டித்து உணர்த்துபவர்களிடம் தயக்கம் இன்றி மன்னிப்பு கேட்கலாம்.

    "சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்".

    அன்பானவர்களே, 'சிட்சித்து' என்றால் 'கடிந்து கொள்ளுதல்' அல்லது 'கண்டித்து உணர்த்துதல்' என்று பொருள் படும். தேவனால் கண்டித்து உணர்த்தப்படுகிற மனிதன் பாக்கியவான். ஏன் எனில் தீங்கு அல்லது தீமை வருவதற்கு முன்பாக அவர் நம்மை கண்டித்து உணர்த்துகிறார்.

    வேதம் சொல்கிறது, "இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வ வல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்" என்று யோபுவின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

    ஆம், பிரியமானவர்களே! எவர் மேல் கர்த்தர் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களை கண்டித்து, எச்சரித்து, தீமை செய்யாதபடி அவரை பாதுகாக்கிறார். தன் மீது அன்பு செலுத்துபவர்களை, ஒரு தகப்பனைப்போல கர்த்தர் பாதுகாத்து, கண்டித்து வழி நடத்துகின்றார்.

    ஒரு தகப்பன் தான் நேசிக்கும் மகன் அல்லது மகள் தவறு செய்கிற போது உடனடியாக மனம் பதறிப்போய் அந்த செயலைக்கண்டிக்கிறார். இது அவர் தன் மகன் அல்லது மகள் மீது வைத்திருக்கும் அன்பு, பாசத்தினால் வருவது. ஒரு சிறிய தவறு பெரிய குற்றத்தில் கொண்டு போய் விடாதபடி எச்சரித்து திருத்துவது ஒரு அன்பான தந்தையின் கடமை. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது வைத்துள்ள நிபந்தனை இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பாசத்தின், அன்பின் வெளிப்பாடாக இது அமைகின்றது. அதுபோலவே தேவனும் நம்மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்புடன் செயல்படுகின்றார்.

    ஆகவே, தேவன் ஒரு விஷயத்தில் நம்மை எச்சரிக்கிறார் என்றால் நாம் மனம்திரும்பி நல்ல வழியில் வாழ வேண்டும் என்றே விரும்புகிறார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதுபோலவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டித்து வளர்க்கிறார்கள் என்றால், வருங்காலத்தில் அவர்கள் சிறந்தவர்களாக மாற வேண்டும் என்பதற்காகத்தான்.

    பெற்றோரிடம் இருந்து எச்சரிக்கை, கண்டிப்பு வரும் போது அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு மனம் மாற வேண்டும். மாறாக அதை எதிர்ப்பதோ, அதற்காக பெற்றோர் மீது கோபம் கொள்வதோ, ஆலோசனை கூறுபவர்களை வெறுப்பதோ கூடாது. ஆனால் இன்றைக்கு நாம் வாழும் உலகில், நம்மால் உதவி பெற்றவர்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் நாம் அறிவுரை, ஆலோசனை வழங்கினால் அவர்கள் நம்மை எதிரியாய் பார்க்கும் நிலை தான் உள்ளது.

    நட்போ, காதலோ, குடும்பமோ எல்லா உறவுகளுமே இப்போதெல்லாம் தொட்டால் சுருங்கும் தொட்டாஞ்சிணுங்கியாக அல்லது சற்றே அழுத்தினால் உடைந்துவிடும் முட்டைகளாக மாறிவருகின்றன.

    ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றுக்கருத்து வந்துவிட்டாலோ, அல்லது தவறைச் சுட்டிக்காட்டி விட்டாலோ அவ்வளவு தான்... ஒன்று விலகல்.. அல்லது நீடித்த மவுனம்.. அல்லது நிரந்தர பிரிவு. இதுதான் இன்றைய வாழ்வியல் வழக்கமாக உள்ளது.

    அதுநாள் வரை நிகழ்ந்த பல அன்பான, இனிமையான தருணங்களை நினைத்துப் பார்க்க இப்போது யாருக்கும் நேரமில்லை.

    செடிக்குத் தண்ணீர் ஊற்றி மரமாக்கிய தோட்டக்காரனாய் இருந்தாலும் ஒரு இலையைக் கிள்ள அவனுக்கு உரிமை இல்லாத சூழல் தான் இப்போது காணப்படுகிறது. `தண்ணீர் ஊற்றியது ஏனோ கணக்கில் இல்லை; இலை கிள்ளியதுதான் கணக்கு' என்பதுபோல உலக வாழ்க்கை காணப்படுகின்றது.

    குழந்தைகள் கடற்கரையில் மணிக்கணக்கில் கட்டும் மணல் வீட்டின் உறுதியும், ஆயுளும் எவ்வளவு நேரம் நீடிக்குமோ அதுபோலத்தான் உறவுகள், நட்பின் ஆயுட்காலம் என்பது போல மாறிப்போனது கவலைப்பட வேண்டிய விஷயம்.

    உறவுகள் பலவீனப்படாமல் நீடிக்க.. அன்பான தருணங்களையும், தக்க சமயத்தில் கிடைத்த பரஸ்பர உதவிகளையும் பாராட்டலாம். அவற்றை அடிக்கடி நினைத்துப் பார்க்கலாம். சுட்டிக்காட்டப்படும், எச்சரிக்கை விடப்படும், கண்டித்து உணர்த்தப்படுகிற தவறுகளை பிடிவாதமாக மறுக்கக்கூடாது. ஒருவேளை நாம் செய்வது தவறுதானா என்று நிதானமாக சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஒரு வேளை நாம் செய்வது தவறென்றால் அச்சூழ்நிலையை விட்டு மாற வேண்டும்.

    கண்டித்து உணர்த்துபவர்களிடம் தயக்கம் இன்றி மன்னிப்பு கேட்கலாம். அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் கூட 'நான்' என்ற வீம்பைத் தொடராமல், மன்னிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளலாம்.

    நம் மீது கூறப்படும் கண்டிப்புகளை, எச்சரிக்கைகளை, நல் ஆலோசனைகளை, மாற்றுக் கருத்துக்களை அப்படியே உதறி விடக்கூடாது. அவைகள், நம் நன்மைக்காக நாம் மனந்திருந்தி நல்ல வழியில் வாழ்வதற்காக கூறப்பட்டவை என்பதை ஏற்க வேண்டும். அதை ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.

    இறைவன் மூலம் வரும் எச்சரிக்கைகள், பெற்றோர் மூலம் வரும் ஆலோசனைகள் எப்போதுமே நம்மை நல்வழிப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    'பிரம்பும்' கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்' என்று வேதாகமம் சொல்கிறது. ஆகவே பெற்றோர்கள், ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள் மூலம் நமக்கு வருகின்ற கண்டிப்புகள், ஆலோசனைகள் நம்மை நாளைக்கு உயர்வான இடத்தில் நிச்சயமாக கொண்டு போய் சேர்க்கும்.

    நல் ஆலோசனைகளை ஏற்போம், நாளும் நல்வழியில் நடப்போம்.

    நெல்லை மானேக்சா.

    • உன் முழு இருதயம், முழு ஆன்மா, முழு உள்ளத்தோடு கடவுளுக்கு அன்பு செய்.
    • மனிதனை அன்பு செய்வது கடவுளை அன்பு செய்வதற்கு சமம் என்று சொன்ன இயேசு,

    ஒரு முறை திருச்சட்ட நூல்களைக் கரைத்துக் குடித்திருந்த ஒருவர் இயேசுவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "திருச்சட்ட நூலிலேயே தலை சிறந்த கட்டளை எது?". பழைய ஏற்பாட்டைப் புரட்டிப் பார்த்தால் 613 கட்டளைகள் உண்டு. யூதர்களைப் பொறுத்தவரை இவை எல்லாமே மிக முக்கியமானவை, கடைபிடிக்கப்பட வேண்டியவை. இயேசு என்ன சொல்லப் போகிறார்?, அவர் ஒன்றைச் சொன்னால் இன்னொன்றைச் சொல்லி அவரை மடக்கலாம் என அவர்கள் காத்திருந்தார்கள்.

    இயேசு அமைதியாய்ச் சொன்னார்: "திருச்சட்டத்திலுள்ள அத்தனை கட்டளைகளையும் இரண்டே இரண்டு கட்டளைகளில் அடக்கி விடலாம். உன் முழு இருதயம், முழு ஆன்மா, முழு உள்ளத்தோடு கடவுளுக்கு அன்பு செய். உன் மீது நீ அன்பு செய்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய். எல்லா கட்டளைகளுக்கும் அடிப்படை இவை தான்" என்றார். கிறிஸ்தவத்தின் தலையாய கட்டளைகள் இவை தான். "கடவுளை நேசி, மனிதனை நேசி". இன்னொரு இடத்தில் இயேசு சொல்வார்: 'கண்ணில் காணும் மனிதனை அன்பு செய்யாமல், கண்ணில் காணாத கடவுளை அன்பு செய்யவே முடியாது' என்று.

    இதில் மிகவும் வியப்பான விஷயம் என்னவென்றால், 'மனிதனை அன்பு செய்வது கடவுளை அன்பு செய்வதற்கு சமம்' என்று சொன்ன இயேசு, 'கடவுளை அன்பு செய்வது மனிதனை அன்பு செய்வது போல', என சொல்லவில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாய்ச் சிந்தித்தால் உண்மையான அன்பு உள்ளத்தில் நிறைந்திருந்தால், நமது செயல்கள் எல்லாமே அன்பின் வெளிப்பாடாய் அமைந்திருந்தால் அதுவே மிகச் சிறந்த கிறிஸ்தவ வாழ்வு என்கிறார் இயேசு.

    நற்செய்தியை அறிவிப்பதையோ, ஆராதனைகளை நடத்துவதையோ, போதனைகள் செய்வதையோ, ஏன் விசுவாசத்தையோ கூட இயேசு முன்னிலைப்படுத்தவில்லை. அன்பை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறார். அன்புக்கு முன்னால் சாதீய, இன வேறுபாடுகள் அடிபட்டுப் போகின்றன. மத, திருச்சபை நிகழ்வுகள் பின் வரிசைக்குச் சென்று விடுகின்றன. என்பதை எல்லாம் 'யார் அயலான்' எனும் கதையில் இயேசு விளக்குகிறார்.

    எல்லாம் இருந்தாலும், அன்பு இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. விண்ணகத்திற்கான நுழைவுச் சீட்டும் அன்பின் செயல்களைச் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை இயேசு மிக ஆழமாகப் பதிவு செய்கிறார். கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் அன்பின் செயல்களைச் செய்து, அன்பின் வடிவமாய் மாறும்போது தான் நாம் இறை சாயலை அணிந்து கொள்கிறோம். நமது சொல், செயல், சிந்தனை எல்லாமே அன்பை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். கட்டளையைப் புரிந்து கொள்வோம். அன்பைப் பகிர்ந்து வாழ்வோம்.

    ×