search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health minister"

    • கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    • ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பெற்றோருடன் வசித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி திடீரென மாயமானாள். தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த சிறுமி உடலை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அதே பகுதியில் வசித்த அஸ்பாக் ஆலம் (வயது 23) என்பவன் கைது செய்யப்பட்டான். இவனும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும் வேலைக்காக கேரளாவில் இருப்பதும் தெரியவந்தது.

    களமசேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல், அவள் படித்த பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது சிறுமியின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன டியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சிறுமியின் உடல் ஆலுவா கீழ்மடுவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அப்போது சிறுமியின் தோழி ஒருவர், தகனப்பெட்டியின் மீது கரடிப் பொம்மையை வைத்து கதறினார்.

    இது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்திற்கு ஆளாக்கியது. சிறுமியின் உடல் தகனத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர். இதுகு றித்து மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், நீதிக்கான அவர்களது போராட்டத்தில் அரசு துணை நிற்கும் என்றார். அவர்கள் என்னிடம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினர். அதனை நான் உறுதி செய்வேன் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அஸ்பாக் ஆலத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவனுக்கு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அஸ்பாக் ஆலம் மீது வேறு ஏதும் வழக்குகள் உள்ளனவா? அவனது பின்னணி என்ன என்பது பற்றி அறிய, ஆலுவா போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு பீகார் செல்ல உள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அஸ்பாக் ஆலத்துக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தடுப்பூசி பற்றாக்குறையால் உலகம் தவித்தபோது, இந்தியா சவாலை ஏற்றுக் கொண்டது.
    • மருத்துவ பரிசோதனைகளுக்கான வலுவான செயல்முறைகளை நாம் உருவாக்க வேண்டும்.

    ஐதராபாத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கு, தேசிய விலங்கு வள மையத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அவர் கூறியுள்ளதாவது: 

    இந்த மையம் 21 ஆம் நூற்றாண்டில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு ஆதரவாக தரமான சேவைகளை வழங்குவதன் மூலம், நாட்டின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்க முடியும்.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் உலகம் தவித்தபோது, இந்தியா இந்த சவாலை ஏற்றுக்கொண்டது. நமது விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி தங்கள் திறமையை நிரூபித்தனர். வெளிநாட்டு தடுப்பூசிகளின் இறக்குமதிக்கு 5-10 ஆண்டுகள் வரை ஆகும் போது, இந்தியா தடுப்பூசிகளை ஒரு வருட காலத்திற்குள் தயாரித்தது.

    தற்போது உலகில் தயாரிக்கப்படும் நான்கு மாத்திரைகளில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. எனவே, இப்போது இந்தியாவை மருந்து உற்பத்திக்கு மட்டுமல்ல மருந்து ஆராய்ச்சிக்கும் மையமாக மாற்ற விரும்புகிறோம். இதற்கு தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கான வலுவான செயல்முறைகளை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • லிப்டில் இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகள் சிலர் சிக்கிக் கொண்டனர்.
    • ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திட்டங்கள் தொடக்க விழாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் வருகை தந்தார்.

    அப்போது 3வது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு வந்த லிப்ட் திடீரென அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் பாதியிலேயே நின்றது. இதில், லிப்டில் இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகள் சிலர் சிக்கிக் கொண்டனர்.

    இதையடுத்து, லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீட்கப்பட்டனர். இதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விலங்குகள் கூட்டமாக இறப்பது கண்டறியப்பட்டால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
    • ஆந்த்ராக்ஸ் பரவும் இடங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலால் காட்டுப்பன்றிகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    கூட்டமாக இறந்து கிடந்த காட்டுப்பன்றிகளின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, ஆந்த்ராக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையினர் கூட்டாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இயற்கையாகவே மண்ணில் காணப்படும் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறை உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    காட்டுப்பன்றிகளின் சடலங்களை புதைக்கச் சென்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்குத் தேவையான தடுப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு கூறியுள்ளது.

    விலங்குகள் கூட்டமாக இறப்பது கண்டறியப்பட்டால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கபட்டிருப்பதாகவும், இதுபோன்ற இடங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

    • சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.
    • பொது சுகாதாரப் பள்ளி நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

    புதுச்சேரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் திறப்பது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. நாடு பொது சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான முறையை உருவாக்கியது.

    ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் பொது சுகாதாரத்தில் மிக உயர்ந்த பாடத்தை வழங்கும். நிலையான மதிப்பு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும். மேலும், சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.

    பொது சுகாதார கல்வி நிலையத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.66 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து, முழு உலகத்திற்கும் சேவை செய்யும். இது இந்தியத் தத்துவமான வசுதைவ குடும்பம் (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்). மருத்துவ மாணவர்கள், சுகாதார நிர்வாகிகள் இரக்கத்துடன் சேவைகளை வழங்குவதற்கு அழைப்பு விடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குட்கா ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அவரது உதவியாளருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. #Gutkhascam #CBI #MinisterVijayabaskar
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.



    அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

    அதன்பின்னர் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதன்பின்னர் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை.

    இந்த நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு எதிராகவும் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

    அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.

    இந்த முறையும் அமைச்சரின் உதவியாளர் ஆஜராகவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிகிறது. #Gutkhascam #CBI #MinisterVijayabaskar
    மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது உறுதி என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். #AIIMS #AIIMSinMadurai #Vijayabaskar
    சென்னை :

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பிய ஒருவருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது தொடர்பாக சில அதிகாரப்பூர்வமான விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், கடந்த 1-ந் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதின் தற்போதைய நிலை என்ன? என்று மத்திய அரசிடம் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கான விளக்கம் 4-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.

    அதில், பிரதம மந்திரியின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் இயக்குனர் சஞ்சய் ராய் இந்த அதிகாரப்பூர்வ தகவலை இ-மெயில் மூலம் அனுப்பி இருந்தார்.

    மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி குறித்து பெறப்பட்ட தகவல் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்து கொடுக்கப்பட்டு, மதுரை தோப்பூரை தேர்வு செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.



    அதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த மாறுதலும் இல்லை. எந்த தடையும் இல்லை. விதிமுறைப்படி அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது என்பதை தெரிவித்து இருக்கிறார்கள்.

    மத்திய அரசின் துணை நிறுவனமான ‘ஹையிட்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு அந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மண் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.15 கோடி நிதி அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை பணிகள் முடிந்து இப்போது விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுவிட்டது. முதற்கட்டமாக ரூ.1,264 கோடி உத்தேசமாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி நிதித்துறைக்கு அனுப்பி மத்திய மந்திரி சபை ஒப்புதலுக்கு அனுப்புவார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, பணிகளில் சுணக்கமோ, தாமதமோ, தடையோ இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ஒதுக்கப்பட்ட 200 ஏக்கர் நிலம் தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு சொந்தமான இடமாகும். ஒரு ஏக்கர் நிலம் கூட தனியாருக்கு சொந்தமானது கிடையாது. அதனால், நிலம் சம்பந்தமான எந்த பிரச்சினையும் இல்லை.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க விரைவில் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்க வேண்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க இருக்கிறார். நானும், சுகாதாரத்துறை செயலாளரும் 9-ந் தேதி மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவதில் எந்தவித சுணக்கமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். #AIIMS #AIIMSinMadurai #Vijayabaskar
    ×