search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Care"

    • பார்ஸ்லியில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.
    • சமையலில் சேர்க்கப்படும் சில மூலிகைகள், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன.

    சமையலில் உணவுக்கு சுவை கூட்டுவதற்காகவும், நிறத்துக்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படும் சில மூலிகைகள், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே…

    பார்ஸ்லி: பார்ஸ்லி தோற்றத்தில் கொத்தமல்லி போன்று இருக்கும். இதன் இலை, விதை, வேர் என அனைத்தும் உணவுக்கு சுவை கூட்டுவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. பார்ஸ்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், சோப், ஷாம்பு, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. இதில், ஆன்டி-ஆக்ஸிடண்டுகள், கரோட்டினாய்டுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பார்ஸ்லியில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. சிறுநீர் உற்பத்தியை பெருக்குகிறது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

    பிரிஞ்சி இலை: பிரிஞ்சி இலை எனப்படும் பிரியாணி இலையை, பச்சையாக எடுத்து தேநீர் தயாரித்து பருகி வரலாம். இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு பிரிஞ்சி இலை மிகவும் பயனுள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

    லெமன் கிராஸ்: லெமன் கிராசில் போலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், தயாமின், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைக்கொண்டு தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். இதனால், உயர் ரத்த அழுத்தம் குறையும். புற்றுநோய் செல்கள் அழியும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். கல்லீரல் சுத்தமாகும். பூஞ்சைத் தொற்று குறையும். இந்த புல்லில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைத் தோல் பாதிப்புகளுக்குத் தடவலாம். பொடுகு பிரச்சினை இருப்பவர்கள் லெமன் கிராஸ் எண்ணெய்யை தினமும் தடவி வந்தால் நாளடைவில் பொடுகுத் தொல்லை குறைவதுடன், முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்த எண்ணெய்யில் விளக்கேற்றும்போது, கொசு தொல்லை நீங்கும்.

    ஓரிகானோ: இது ஒரு சுவையூட்டி. இந்த மூலிகையைப் பசுமையாக மட்டுமின்றி, காய்ந்த நிலையிலும் பயன்படுத்தலாம். ஓரிகானோவை உணவில் சேர்த்துவந்தால் இருமல், பதற்றம், தலைவலி, ஒழுங்கற்ற மாதவிடாய், பல் வலி ஆகியவை நீங்கும். வயிறு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் தீரும்.

    ரோஸ்மேரி: புதினா குடும்பத்தைச் சேர்ந்த ரோஸ்மேரி, வாசனை மூலிகைகளில் ஒன்று. இதை தேநீராகத் தயாரித்துக் குடிக்கும்போது மனச்சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். இதில், வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இதனால் நினைவாற்றல் மேம்படும். தசை வலி நீங்கும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். மூளையின் உணர்ச்சிகள் சமநிலை அடையும்.

    • பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்
    • இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்

    நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் அது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) மற்றும் இதயத்தின் பம்ப் செய்யும் திறனை குறைத்து இதய செயலிழப்பையும் (ஹார்ட் பெயிலியர்) ஏற்படுத்துகிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு நீரிழிவு நோய் இல்லாதவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது 2 மடங்கு அதிகம்.

    1. டைப் – 2 நோயாளிகளுக்கு உயிராபத்து அதிகம் வருவது இதய நோய்களால்

    2. மற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு 3 – 4 மடங்கு அதிகம் வரும்

    3. பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்.

    மார்பு வலி, மாரடைப்பு, இரத்தக்குழாய் அடைப்பு, இதனால் உடலின் பல பாகங்கள் இரணமாகி, காயப்பட்டு, பயனற்று போதல் இவையெல்லாம் நீரிழிவு ஏற்படுத்தும் அபாயங்கள்.

    இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:

    1) புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துதல்,

    2) ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்,

    3) அதிக உடல் எடை இருந்தால், அதைக்குறைத்தல்,

    4) உங்கள் மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரியான எச்.பி.ஏ1 சி யை 7 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல்,

    5) மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுதல்,

    6) தினமும் உடற்பயிற்சி செய்தல்,

    7) நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், முட்டையின் வெள்ளை, கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுதல்.

    நீரிழிவு வியாதி உள்ளவர்கள் மேல்மூச்சு, தலைச்சுற்றல், மயக்கம், தடுமாற்றம், கிறுகிறுப்பு, நெஞ்சில் பார உணர்வு, பளு அழுத்துவது போல் உணர்வு இவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடி இ.சி.ஜி மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம்.
    • ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன.

    நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம். இதனை உட்கொள்வது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் உதவும்.

    வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், சர்க்கரை, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. மேலும் செரிமானத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் நார்ப்பொருளை கொண்டுள்ளது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவும்.

    ஆனால் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன. தினமும் இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். மேலும் பொட்டாசியத்தின் அளவும் மிக அதிகமாக இருப்பதால், வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால், தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

    வாழைப்பழம் சாப்பிடுவதால் பல்லில் துவாரம் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் நிறைய மாவுச்சத்து உள்ளது. அது பற்களுக்கு இடையில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். எனவே வாழைப்பழத்தை சாப்பிட்டதும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் இருக்கும் மாவுச்சத்து பற்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    வாழைப்பழத்தில், வைட்டமின் பி6 அதிக அளவில் காணப்படுகிறது. அதனை அதிகம் உட்கொள்வது நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். 'பாடிபில்டிங்' பயிற்சி செய்து கட்டுடல் அழகை பேணுவதற்காக வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படலாம். ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் காணப்படுகிறது. அதனை சமையலில் சேர்த்து தினமும் உட்கொண்டால், வாயு தொந்தரவு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பழுத்த வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் கலந்திருக்கும். இது செரிமானத்திற்கு நல்லது. எனினும் வாழைப்பழத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே அதிகம் உட்கொள்ளக்கூடாது.

    வாழைப்பழத்தில் கிளைசெமிக் கூறுகள் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் வாழைப்பழங்களை குறைந்த அளவுஉட்கொள்ளுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உட்கொள்வதுதான் சரியானது.

    சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைஉள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் குறைந்த அளவே வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது
    • குடைமிளகாய் சாறு எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது

    குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளது. குடைமிளகாய் காரமற்றது என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடைமிளகாய் வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது.

    கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும். பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் இருக்கிறது. குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

    இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது. இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும். குடைமிளகாயில் உள்ள கேயீன் என்னும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.

    குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடைமிளகாய் சாறு எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது

    குடைமிளகாயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை புற்று நோய் வராமல் தடுக்கிறது. தினமும் குடைமிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீர்ப்பை, கணையம், கருப்பை வாய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கலாம்.

    வைட்டமின் C மற்றும் வைட்டமின் E அதிகம் உள்ள குடைமிளகாய் நம் தோலுக்கு தேவையான சத்துகளை தந்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தோலில் ஏற்படும் சுருக்கத்தை போக்கி வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. செல்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தி தோலுக்கு உறுதியளிக்கிறது.

    குடைமிளகாய் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது வாய்வு தொல்லையை போக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.

    100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்துக்கள் :

    புரோட்டின் – 0.99 கிராம். சக்தி – 31 கலோரி. சோடியம் – 4 மி.கிராம். கொலஸ்ட்ரால் – இல்லை. கொழுப்பு – 0.3 மி.கிராம். தாதுச் சத்து – 6.02 மி.கிராம். பொட்டாசியம் – 211 மி.கிராம். மெக்னீசியம் – 12 மி.கிராம். வைட்டமின் சி – 127.7 மி.கிராம். கால்சியம் – 7 மி.கிராம். இரும்பு – 0.43 மி.கிராம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது.
    • முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    வளரும் குழந்தைகளுக்கு முட்டையை பச்சையாகக் கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்றும், பூப்படைந்த பெண்களுக்கு 'பச்சை முட்டை' தருவது நல்லது என்றும் கூறுகிறார்கள். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. 10 சதவீதம் புரதம் உள்ளது. இதில் கொழுப்பு சுத்தமாக இல்லை. கார்போஹைட்ரேட் சத்தும் குறைவு.

    மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. இதன் மஞ்சள் நிறம் குறிப்பிட்ட பறவை இனம் சாப்பிட்ட உணவில் உள்ள 'கரோட்டினாய்டு', 'ஸாந்தோபில்' எனும் மஞ்சள் நிறமிகளின் அளவை பொறுத்து உருவாகிறது. உதாரணமாக மஞ்சள் நிற மக்காச்சோளத்தை தின்று வளரும் பறவையின் முட்டை, அதிக அடர்த்தியுடன் கூடிய மஞ்சள் கருவைப் பெற்றிருக்கும். மஞ்சள் கருவில் உள்ள நிறமிகளில் 'லூட்டின்' எனும் நிறமிதான் அதிகம். 100 கிராம் கோழி முட்டையில் தண்ணீர் 75 கிராம், கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின்- ஏ, வைட்டமின்-டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட 7 வகை தாதுச்சத்துகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என பல சத்துகள் உள்ளன. ஒரு முட்டை சாப்பிட்டால் 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நேரத்தில் இரண்டு முட்டை சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்கு காலை உணவுக்கு தேவையான சக்தி கிடைத்துவிடும்.

    'முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கும்' என்று ஒரு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, குழந்தைகள், இளம்பெண்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றோர் அதிக சத்தைப் பெறுவதற்காக பச்சை முட்டையை குடிப்பார்கள். இதில்தான் ஆபத்து உள்ளது.

    'பச்சை முட்டை'யின் வெள்ளைக்கருவில் 'அவிடின்' எனும் புரதச்சத்து உள்ளது. இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் வைட்டமினுடன் இணையும்போது, பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் அழிந்துவிடும். இதன் பலனாக, முட்டையில் உள்ள பயாட்டின் முழுமையாக உடலில் சேரும். அவிடின் சத்தைவிட பயாட்டின்தான் நமக்கு முக்கியம். குறிப்பாகக் கூந்தல் வளர்ச்சிக்கு இது தேவை. ஆகவே, வேகவைத்த முட்டையை சாப்பிடுவதே நல்லது.

    முட்டையில் 'சால்மோனல்லா' போன்ற பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. முட்டையை அவிக்கும்போது, அவை இறந்துவிடும் என்பதால் நோய்த்தொற்று ஏற்படுவது தடுக்கப்படும். இப்போது ஹார்மோன் ஊசி போட்டுத்தான் பெரும்பாலான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் பாதிப்பு இறைச்சியில் மட்டுமல்லாமல், முட்டையிலும் இருக்கும் சாத்தியம் உள்ளது. முட்டையை வேகவைக்கும்போது இந்தப் பாதிப்புகள் குறைந்துவிடும். இருந்தாலும் நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கி பயன்படுத்துவதே மிக சிறந்தது.

    • வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
    • ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள்:

    உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உடல் எடை அதிகரிப்பது, உடலில் கொழுப்பு அதிகம் படிவது, மன அழுத்தத்தில் இருப்பது, கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவது, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரும் நிலைமை போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

    அதனை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உணவு பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் சில மாறுதல்களை செய்வதன் மூலம் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * உடல் எடையை குறைப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உடனடி பலன் தரக்கூடியது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் அதனை குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது.

    * உயர் ரத்த அழுத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தினமும் தவறாது நடைப்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். அதனை தொடர்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

    * வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    * மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இரண்டுமே உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை. அந்த பழக்கங்களை அறவே தவிர்ப்பது அவசியமானது.

    * உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வதும் நல்லது. காய்கறி ஜூஸ் பருகுவதும், குறிப்பாக கோதுமை புல் ஜூஸ் பருகுவது நன்மை அளிக்கும்.

    * பூண்டு, ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பையும் குறைக்கக்கூடியது. அதனால் தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது அவசியமானது.

    * செலரி எனப்படும் கீரையின் தண்டு பகுதியை சாப்பிடுவதும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த துணைபுரியும். அத்துடன் உடல் எடையை குறைப்பதற்கும் இந்த கீரை உதவி புரியும்.

    * மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதும் ரத்த அழுத்தத்தை சீராக நிர்வகிக்க உதவும்.

    • தினமும் ஒரு கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

    கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன. இதில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

    புதினா, கொத்தமல்லி... புதினா கீரையில் போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்சியம் 200 மி.கி., இரும்புச் சத்து 15.6 மி.கி., வைட்டமின்கள் ஏ,பி,சி சிறிதளவு உள்ளன. இது ரத்த சோகையைப் போக்க வல்லது.

    கொத்தமல்லி கீரையில் கால்சியம் 184 மி.கி., இரும்புச் சத்து 1042 மி.கி., வைட்டமின் ஏ 8,918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி, உள்ளன. இது பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்கும்.

    * முளைக்கீரையில் இரும்புச் சத்து 22.9 மி.கி., கால்சியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும் திறனுள்ளது.

    * அகத்திக் கீரையில் கால்சியம் 1,130 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5,400 மைக்ரோ கிராம் உள்ளன. வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன.

    * பொன்னாங்கண்ணி கீரையில் இரும்புச் சத்து 1.63 மி.கி, கால்சியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன.

    * பசலைக் கீரையில் வைட்டமின் ஏ 5,580 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து 1.14 மி.கி., பொட்டாசியம் 306 மி.கி போன்றவை உள்ளன.

    * வெந்தயக் கீரையில் கால்சியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2,340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93 மி.கி. உள்ளன.

    * புளிச்ச கீரையில் இரும்புச் சத்து 2.28 மி.கி, வைட்டமின் ஏ 2,898 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன.

    * முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6,780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்சியம் 440 மி.கி., பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். இது பார்வைக் கோளாறுகளை தடுக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர்.
    • ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்புகள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம் ஆகும்.

    தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான். உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர்.

    கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம்,ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது.

    இதய ரத்தக்குழாய்களில் மட்டும் அல்ல, உடலுக்குள் செல்லும் எல்லா ரத்தக்குழாய்களிலும் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. உதாரணமாக, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பக்கவாதம் உண்டாகிறது. சிறுநீரக ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீரக செயலிழப்பு நேரிடுகிறது. கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது கால் அழுகும் நிலை ஏற்பட்டு காலையே இழக்க நேரிடுகிறது.

    ஆனால், மற்ற உறுப்புகளை விட இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பாதிப்புகளும், உயிர் ஆபத்தும் அதிகம் நேரிடுகிறது. இதனால் தான் இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மனித உடல் முழுவதும் ரத்தம் கொண்டு செல்லும் பணியை இதயம் செய்கிறது. அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டால் அது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இது போன்ற ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்புகள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் "வரும் முன் காப்போம்" என்ற நிலைப்பாட்டில் இதய பராமரிப்பு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. சரிவிகித உணவு உண்பது, மது-புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்ப்பது, மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் மன அமைதியை பராமரிப் பது அவசியம். மேலும், முறையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைகள் போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான இருதய நலத்தையும், உடல் நலத்தையும் பெறலாம்.

    இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
    • இவற்றை தவிர்ப்பதன் மூலம், செயற்கையாக உருவாகும் முதுமை தோற்றத்தை தவிர்க்கலாம்.

    வயதிற்கும், தோற்றத்திற்கும் சம்பந்தமில்லாத நிலையில் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது, தோல் சுருக்கம் ஏற்படுவது, முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பது என இந்த காலத்து இளைஞர்கள், பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவை அனைத்திற்கும், அவர்களது தவறான உணவு பழக்கம் முக்கிய காரணமாகிறது.

    குறிப்பாக துரித உணவு கலாசாரம் மற்றும் மேலை நாடுகளின் உணவு பழக்க வழக்க தாக்கத்தினால், ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொண்டு உடலையும், இளமையையும் பாழ்படுத்திக் கொள்கிறார்கள். அந்தவகையில், இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவற்றை தவிர்ப்பதன் மூலம், செயற்கையாக உருவாகும் முதுமை தோற்றத்தை தவிர்க்கலாம்.

    1. குளிர்பானங்கள்

    குளிர்பானங்கள் கொஞ்சமாக குடித்தாலும் சரி, நிறைய குடித்தாலும் சரி அதன் மூலம் பாதிப்பு ஏற்படுவது உறுதி தான். இந்த குளிர்பானங்களை தொடர்ந்து குடித்தால் உடலில் உள்ள நீர் வற்றி, சருமம் பாதிக்கப்படும். இதனால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படும்.

    2. துரித உணவு

    தோல் பளபளப்பாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், நமது உடலின் ரத்த ஓட்டம் சீராக இருப்பதே. ஆனால், பாஸ்ட் புட், பீட்சா, பர்க்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிட்டால், கொழுப்பு அதிகமாகி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனாலும் வயதான தோற்றம், வெகுவிரைவிலேயே ஏற்படும்.

    3. இறைச்சி

    அதிக அளவில் இறைச்சி மட்டும் உட்கொள்வதால் உடலில் நச்சுகள் குவிந்து கொழுப்பு அதி கரிக்கிறது. இதனால் வைட்டமின் டி சத்து குறைந்து முதுமை நிலையை, இளமையிலேயே அடைகிறீர்கள்.

    4. உப்பு

    உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். ஆனால், உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் அது ஆபத்து தான். உப்பு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன்காரணமாக, தோலின் இறுக்கமான தன்மை சுருங்கி வயதானவர்கள் போன்ற தோற்றம் விரைவில் ஏற்படும்.

    5. மதுபானங்கள்

    அழகாகவும், இளமையாகவும் காட்சி அளிக்கும் பிரபலங்கள், பிறருக்கு தரும் முதல் டிப்ஸ் என்னவென்றால், அதிக தண்ணீர் குடியுங்கள் என்பதே. ஆம், மது அருந்துபவர்களுக்கு அதிகமாக தண்ணீர் இழப்பு ஏற்படும். இதனால், விரைவிலேயே தோல் பாதிக்கப்பட்டு, வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவார்கள்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தமிழ்நாட்டில் இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும்.
    • நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இட்லியை சாப்பிடக்கூடாது.

    நீரிழிவு நோய் (Diabetes) என்பது உலகளாவிய கவலைக்குரிய நோயாக மாறி வருகிறது. உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது அடுத்த அதிர்ச்சி செய்தி.

    இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    நீரிழிவு நோயாளிகள் சில உணவுகளை உண்பது அவர்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோயாளிகளாக (Diabetes) இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்கக்கூடாது. உடலுக்கு ஆற்றலை வழங்கும்படியான ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும். ஒரு இட்லியில் கிட்டத்தட்ட 58 கலோரிகள் இருக்கிறது. இதில் மாவு சத்து (கார்போஹைட்ரேட்) அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிக அதிகமாக இருப்பதாலும், நார்ச்சத்து குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இட்லியை சாப்பிடக்கூடாது. எண்ணெய் மற்றும் கொழுப்பு இல்லாமல் இருப்பதும், சுலபமாக ஜீரணமாகி விடுவதும் இதன் நன்மைகளாக கருதப்படுகிறது.

    அரிசி இட்லியை விட, ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி போன்றவற்றில் நார்ச்சத்து சற்று அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லது. இட்லிக்கு தொட்டு சாப்பிடுவதற்கு தேங்காய் சட்னியை விட புதினா சட்னி, தக்காளி சட்னி அல்லது சாம்பார் நல்லது. அரிசி இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடலாம். ரவா இட்லி, ராகி இட்லி அல்லது ஓட்ஸ் இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று இட்லி சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாட்டை பழங்கள் மேம்படுத்தும்.
    • வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    காலையில் பழங்கள் சாப்பிடும் விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒவ்வொரு நபருக்கும் வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு நிலவும். உடல் வகையும் மாறுபடும். அதற்கேற்ப பழங்களை சாப்பிட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பழத்திலும் பல்வேறு நொதிகள் மற்றும் அமிலங்கள் உள்ளன. அவை குடலில் உள்ள பாக்டீரியாக்களுடன் வினைபுரியும். அதன் செயல்பாடுகளை பொறுத்து அந்த பழங்கள் நன்மை செய்யுமா? தீமை செய்யுமா? என்பது தீர்மானிக்கப்படும்.

    யார் பழங்களை தவிர்க்க வேண்டும்?

    அசிடிட்டி, நெஞ்செரிச்சல், சளி, இருமல், சைனஸ், ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, நீரிழிவு, உடல் பருமன் போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    யார் சாப்பிடலாம்?

    மலச்சிக்கல், உலர் சருமம், வறண்ட கூந்தல், செரிமான கோளாறு, வளர்சிதை மாற்ற கோளாறு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் காலையில் பழங்கள் சாப்பிடலாம். குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாட்டை பழங்கள் மேம்படுத்தும். செரிமான செயல்பாடுகளை தூண்டும்.

    எப்படி சாப்பிட வேண்டும்?

    பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பால் பொருட்கள், தானியங்களுடன் கலந்து சாப்பிடக்கூடாது. இறைச்சி வகைகளுடன் பழங்களை கலந்தும் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அந்த உணவுப்பொருட்கள் நச்சுத்தன்மையுடையதாக மாறக்கூடும். உலர் பழங்களுடன் வேண்டுமானால் பழங்களை சேர்த்து சாப்பிடலாம். அவை ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்பதால் பாதிப்பை ஏற்படுத்தாது.

    காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * நமது உடலில் காலை 7 மணி முதல் 11 மணிக்குள் நச்சு நீக்கும் செயல்முறை நடைபெறும். அதற்கு தேவையான ஆற்றலை பழங்கள் கொடுக்கும்.

    * மற்ற உணவுப்பொருட்களுடன் ஒப்பிடுகையில் பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை. அவற்றை காலையில் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * காலையில் எழுந்த உடனே உடலுக்கு இயற்கையான சர்க்கரை தேவைப்படும். பழங்களை சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

    • 30 வயதைக் கடந்துவிட்டாலே உணவு பிரமிடைப் பின்பற்ற வேண்டும்.
    • தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது.

    மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும் நேரத்தையும் மாற்றிக் கொண்டுவிட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, அதில் ஏற்றத்தாழ்வை உருவாக்கலாம்.

    அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு இரண்டு இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, 4 மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை 6 மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு 8 மணிக்கு மிதமான சிற்றுண்டி.

    இதுதான் சரியான உணவுப் பழக்கம். சிலர் வாரத்தில் 5 நாட்கள் இப்படிச் சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்குப் பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது. சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம்.

    பொதுவாக 30 வயதைக் கடந்துவிட்டாலே உணவு பிரமிடைப் பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும், வைட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.

    நம் உடலை உள்ளும் புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×