search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ear care"

    • காது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இ.என்.டி. டாக்டரை அணுக வேண்டும்.
    • புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.

    காது கேளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் காது கேளாமை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளில் 5 சதவீதம் பேரும், பெரியவர்களில் 8.5 சதவீதம் பேரும், மூத்த குடிமக்கள் 50 சதவீதம் பேரும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

    காது கேளாமைக்கு காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வு என்ன? காதை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து கோவையில் உள்ள கொங்குநாடு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் எ.அனுபிரியா விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    காது கேளாமைக்கான காரணம்

    கேள்வி:- காது கேளாமைக்கான காரணம் என்ன?

    பதில்: பொதுவாக வெளி காது, நடு காது, உள் காது அல்லது செவி புலத்தில் ஏதாவது சேதம் ஏற்படுவதன் காரணமாக காது கேளாமை ஏற்படுகிறது. குறிப்பாக கன்டெக்டிவ், சென்சோநியூரல், இவை 2-ம் சேர்ந்து என்று 3 விதமான காது கேளாமை பிரச்சினை ஏற்படுகிறது.

    கன்டெக்டிவ் என்பது நடுத்தர மற்றும் வெளிப்புற காதில் ஏற்படும் பிரச்சினையால் வருகிறது. இது சரிசெய்யக்கூடியது. நோய் தொற்றுகள், காதின் மெழுகுகள், காதில் தேவையற்ற வெளிப்பொருட்களை நுழைத்தல், காதில் திரவம் உருவாதல், இஸ்டாசியன் குழாய் செயலிழப்பு, காதில் கட்டிகள், செவிப் பறையில் துளை போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும்.

    சென்சோநியூரல் என்பது உட்புற காதில் ஏற்படும் பிரச்சினைகளால் வருகிறது. இதற்கு முதுமை, தலையில் ஏற்படும் அதிர்ச்சி, ஓட்டோ-டாக்ஸிக் மருந்துகள், கட்டிகள், மரபணு காரணிகள் மற்றும் குறைபாடுகள், அதிகப்படியான இரைச்சல் ஆகியவை காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு மரபணு காரணிகள், காதில் மெழுகுகள், கிருமி தொற்று, நடுத்தர வயதினருக்கு செவிப்பறை துளைகள் காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது. முதியோருக்கு கட்டிகள் காரணமாக ஏற்படுகிறது.

    பரிசோதனைகள் என்ன?

    கேள்வி: காது கேளாமைக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?

    பதில்: காதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் முதலில் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். எங்களிடம் காதை காட்சிப்படுத்த ஓட்டோஸ்கோப் என்ற கருவி உள்ளது. இதன் மூலம் காதின் மெழுகு, கிருமிகள், செவிப்பறை துளை ஆகியவற்றை எளிதாக கண்டறிய முடியும். டியூனிங்போர்க் என்ற கருவி மூலம் செவித் திறன் இழப்பின் அளவு, அவற்றின் வகையை மருத்துவ ரீதியாக மதிப்பிடலாம். செவித்திறன் இழப்பின் அளவு மற்றும் வகையை உறுதிப்படுத்த தூய தொனி ஒலி அளவீடு செவித்திறன் சோதனை அறிவுறுத்தப்படும்.

    சி.டி. ஸ்கேன், டம்போரல் எலும்பு, எம்.ஆர்.ஐ. போன்ற பிற ஆய்வுகள் நோயாளியின் நிலையை பொறுத்து தேவைப்பட்டால் அறிவுறுத்தப்படும். புதிதாக பிறந்த செவித்திறன் ஸ்கிரீனிங் திட்டம் அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு மாத வயதுக்கு முன்பே கேட்கும் பரிசோதனையை செய்யலாம். இதன் மூலம் எந்த ஒரு பிரச்சினையும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.

    சிகிச்சைக்கான வழிமுறைகள்

    கேள்வி: சிகிச்சைக்கான வழிமுறைகள் என்ன?

    பதில்: சரியான நேரத்தில் சிகிச்சை செய்தால் அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம். காது மெழுகு வெளிப்புற தொற்றுகள் போன்ற சிறிய பிரச்சினைகளை வெளிநோயாளியாக சிகிச்சை அளிக்கலாம். செவிப்பறை துளைகள், நடுத்தர காதில் திரவம், கட்டிகள் போன்றவற்றுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். காது துவாரம் காரணமாக ஏதேனும் தொற்று ஏற்பட்டால் அதை அறுவை சிகிச்சை மூலம் மூட வேண்டும். செவித்திறன் இழப்பு மீளமுடியாவிட்டால் செவிப்புலன் உதவியை பயன்படுத்தலாம். ஓட்டோ-டாக்ஸிக் மருந்துகள் நிறுத்தப்பட்டால் செவித்திறன் இழப்பு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    மேம்பட்ட தொழில்நுட்பம்

    கேள்வி: மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் என்ன?

    பதில்: பிறக்கும்போதே காது கேளாத குழந்தைகளுக்கு காக்லியர் இம்பிளான்ட் முறையை பயன்படுத்தலாம். இது ஒரு மின்னணு சாதனம் ஆகும். இதை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி பயன் அடையலாம். இது சேதமடைந்த காது பகுதியை கடந்து செவி வழி நரம்புக்கு சிக்னல்களை கொண்டு செல்கிறது. ஒரு வயதுக்கு முன்பே இதை செய்தால் அந்த குழந்தைகள் மொழி வளர்ச்சிக்கு முன்பே அதிகபட்ச பலனை பெறுவார்கள்.

    போதுமான ஒலி- வாய்மொழி, மறுவாழ்வு மூலம் அவர்கள் சாதாரண செவித்திறன் கொண்ட மற்ற நபர்களை போலவே இயல்பான வாழ்க்கையை நடத்த முடியும். இந்த அறுவை சிகிச்சையை 5 வயது வரை செய்யலாம். இந்த உள்வைப்புகளை இம்பிளான்ட் ஒன்று அல்லது 2 காதுகளுக்கும் வைக்கலாம்.

    பிரஸ்பைகசிஸ் கொண்ட பெரியவர்கள் செவிப்புலன் கருவியை காதுக்கு வெளியே பயன்படுத்தலாம். இப்போது மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் வெளிப்புறமாக தெரியாமல் காதிற்கு உள்ள செவிப்புலன் கருவியை வைக்க முடியும். எண்டோஸ்கோப் மூலம் இப்போது நடுத்தர காது அறுவை சிகிச்சையை சிறிய துளை மூலம் செய்யலாம்.

    செவிப்புலன் பரிசோதனை

    கேள்வி: காது பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

    பதில்: காது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இ.என்.டி. டாக்டரை அணுக வேண்டும். 40 வயதுக்கு மேல் ஆண்டுதோறும் வழக்கமான செவிப்புலன் பரிசோதனையை செய்ய வேண்டும். குடும்பத்தில் காது கேளாமை இருந்தால் சந்ததிகளை இ.என்.டி. மருத்துவ ஆலோசகரிடம் சீக்கிரம் அழைத்து வந்து பரிசோதனை செய்யலாம். சத்தமுள்ள இடத்தில் வேலை செய்யும்போது காது பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தலாம். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.

    தவிர்க்க வேண்டும்

    கேள்வி: காதில் செய்யக்கூடாதது என்ன?

    பதில்: காதில் எந்த காரணத்தைக்கொண்டும் இயர்பட் பயன்படுத்தகூடாது. காது சொட்டு மருந்தை மருந்தகத்தில் வாங்கி ஆய்வு செய்யாமல் பயன்படுத்தகூடாது. சூடான எண்ணெய்யை காதுக்குள் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சத்தமாக இசையை கேட்பதை தவிர்க்க வேண்டும். காது கேளாமை என்பது முதுமை அடைந்தவர்களுக்கு மட்டும் என்று நாம் நினைக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காது இரைச்சல் என்பது நோயே அல்ல.
    • இந்தப் பிரச்சனை சிலருக்கு விட்டு விட்டு இருக்கும்.

    அனைத்து இசையையும், பேச்சையும் கேட்பதற்காக படைக்கப்பட்டது தான் காது. அந்த காதுக்குள்ளேயே இரைச்சல் கேட்பது பலருக்கும் பெரும் தொல்லையாக இருக்கும் இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு அந்த பிரச்சனை உள்ளது.

    காது இரைச்சல் (Hnnitus) என்பது என்ன?

    காது இரைச்சல் என்பது நோயே அல்ல. அது ஒரு உணர்வு (Sensation) உடலில் இருக்கும் ஒரு நோயின் வெளிப்பாடு. இதற்கான காரணம் காதிலும் இருக்கலாம். உடலில் வேறு பகுதியிலும் இருக்கலாம். காதுக்குள் வண்டு ரீங்காரம் செய்வது போன்றோ, விசில் அடிப்பது போன்றோ, அல்லது 'ஸ்விங்' என்று காற்று அடிப்பது போன்றோ இருந்தால் ஒரு நபருக்கு காது இரைச்சல் இருக்கிறது என அர்த்தம். இந்தப் பிரச்சனை சிலருக்கு விட்டு விட்டு இருக்கும். வேறு சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும். இந்த இரைச்சல் சுற்றுப்புற சூழல் அமைதியாக இருந்தால் அதிகமாக தெரியும். குறிப்பாக இரவில் இதனால் தூக்கம் குறைவதுடன் மனஅழுத்தம் அதிகரிக்கும்.

    தற்காலிக காரணங்கள்

    * வெளிக்காதில் இயற்கையாக சுரக்கின்ற மெழுகு கட்டி யாகி காதை அடைத்துக்கொள்ளுதல்.

    * அயல் பொருட்கள் ஏதாவது அடைத்துக் கொண்டால்.

    * காளான் தொற்று ஏற்பட்டால்

    * அடிக்கடி சளி பிடிப்பதால்

    * நடுக்காதில் நீர் கோர்த்துக் கொண்டால் மற்றும் சீழ் பிடித்தால் காதில் இரைச்சல் கேட்கும்.

    * தொண்டையையும் காதையும் இணைக்கிற 'காது மூக்கு தொண்டைக்குழாய் சுழற்சி அடைந்து வீங்கிக் கொண்டாலும் காது இரைச் சல் வரும். ஒலி மாசு தரும் போது இரைச்சல் ஒலி மாசு இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். பெருநகரங்களில் சாதாரண மாக 90 டெசிபல் சத்தம் கேட்டுக் கொண்டிருக் கிறது.

    *இயந்திரங்களுக்கு மத்தியில் வேலை செய்பவர்கள் பாதிப்படைகின்றனர்.

    * 'வாக் மேன்' அல்லது 'இயர் போன்' அதிகமாக பயன்படுத்துகிறவர்களுக்கு பாதிப்பு அதிகம்.

    * விமான நிலையம் போன்ற அதிக சத்தம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

    அதிக ஒலியினால் 'காக்ளியர்' எனும் உள்காது நரம்பு அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி, அங்கு இருக்கும் 'நரம்பிழைகள்' சிதைந்து விடுகின்றன. இதனால் காது கேட்கும் திறன் குறைந்து அதனால் இரைச்சல் ஏற்படும்.

    நிரந்தர குறைபாடு

    * மேற்கூறிய அதிக ஒலி மாசுவினால் காது கேட்கும் திறன் நிரந்தரமாக பாதிப்படையும்.

    * வயதானவர்களுக்கு இயற்கையாகவே கேட்கும் திறன் குறைந்து, அதனால் இரைச்சல் ஏற்படும்.

    *பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இரைச்சல் ஏற்படும்.

    * நடுக்காதில் 'எலும்பு முடக்கம்' எனும் நோய் ஏற்படும் போது எலும்புகள் குறுகி ஒலி அதிர்வுகள் உள்காதிற்குள் செல்வது தடைபடும். இது உடனே சரி செய்ய முடியாவிட்டால் நாளடைவில் காது கேட்கும் திறன் பாதித்து அது நிரந்தர குறைபாடாக மாறும்.

    * பல்வேறு நோய்களுக்கான மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது காது திறன் பாதிக்கப்பட்டு, இரைச் சல் ஏற்படும். உதாரணமாக காசநோய், மலேரியா, மன நோய், புற்றுநோய், இருதய நோய்.

    சிகிச்சை

    மேற்கூறியவற்றில் நிரந்தரக் குறைபாடு ஏற்பட்டு காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் போது, "காது கருவி பொருத் துதல்" ஒன்றே தீர்வு. ஏனென்றால் எவ்வளவு சதவீதம் திறன் பாதிக்கப்பட்டுள்ளதோ, அந்த குறைபாட் டிற்கு தகுந்த சத்தம் உள்ளே செல்லும்போது காதிற்குள் கேட்கும் இரைச்சல் முற்றிலும் நிற்கும். அதனால் கட்டாயம் கருவி (Hearing Aid) பொருத்திக் கொள்ள வேண்டும்.

    * ஆடியோகிராம், HRCT ஸ்கேன், MRI ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் இரைச்சலுக்கான காரணம் கண்டறிந்து சரி செய்யலாம்.

    * இரைச்சலுக்கு தற்போது மறைபோலி தொழில்நுட்பம், டி.ஆர்.டி. போன்ற முறைகளும் இப்போது பிரபலம் அடைந்து வருகின்றன.

    மேலும் ஆலோசனை களுக்கு தயங்காமல் அழையுங்கள். செல்: 9626297922.

    மு. கண்ணன் நிறுவனர், இன்ஸ்டா ஹியரிங் சொல்யூஷன்ஸ்

    • ‘காட்டன் பட்ஸ்’ கொண்டு காதுகளை மூடுவதும் நல்லது.
    • வளிமண்டலத்தில் நிலவும் குளிர்ந்த ஈரப்பதம் பூஞ்சை தொற்றுக்கு சாதகமானது.

    காதில் வலி, இரைச்சல், சிவந்து போகுதல், திரவம் வெளியேறுதல் போன்றவை இருந்தால், அவை காதில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். குளிர், சைனஸ், காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்றவையும் காதில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும். வளிமண்டலத்தில் நிலவும் குளிர்ந்த ஈரப்பதம் பூஞ்சை தொற்றுக்கு சாதகமானது. பெரியவர்களுடன் ஒப்பிடும்போது சிறுவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

    இந்த தொற்றால் காது வலி தோன்றும். குளிர்ந்த காற்றால் வலி அதிகரிக்கும். முறையான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் கேள்வித்திறனில் பாதிப்பு ஏற்படலாம்.

    காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்?

    * குளிர்ந்த காற்று வீசும் சமயங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்ல நேர்ந்தால் வெப்பத்தை தக்க வைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். 'காட்டன் பட்ஸ்' கொண்டு காதுகளை மூடுவதும் நல்லது.

    * புகைப்பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும்போது காது குழாய்கள் வீக்கமடையும். அது காதுவலிக்கு வித்திடும். காதில் தொற்று ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும்.

    * செல்போனில் பேச இயர் போனை அதிக நேரம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மணிக்கணக்கில் இசை கேட்பதும் நல்லதல்ல. அதுவும் காதுவலிக்கு வழிவகுத்துவிடும்.

    * பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதும் இன்றியமையாதது. குழந்தைகளுக்கு எந்தவொரு நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுக்கும் தன்மை தாய்ப்பாலுக்கு இருக்கிறது. காதில் ஏற்படும் தொற்றுவில் இருந்தும் குழந்தைகளை தாய்ப்பால் பாதுகாக்கும்.

    • காதுகளில் இருந்து திரவம் வடியும்போது இரு காதுகளும் அடைப்பட்டது போன்று உணரலாம்.
    • காது கேளாமைக்கான ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் இவை.

    பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் காதுகேளாமை பிரச்சினையை எதிர்கொள்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் பலரும் காதுகேளாமைக்கு ஆளாகிறார்கள். சிகரெட்டில் படிந்திருக்கும் ரசாயனங்கள், தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களில் இருந்து வெளிப்படும் அதிக ஓசை போன்றவை இளைஞர்களை பொறுத்தவரை காதுகேளாமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. ஆரம்பக்கட்டத்தில் வெளிப்படும் ஒருசில அறிகுறிகளை கவனத்தில் கொண்டு சிகிச்சை அளித்தாலே காதுகேளாமை பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். காது கேளாமைக்கான ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் இவை.

    1. காதுகளில் சத்தம் கேட்பது:

    காதுகளில் இரைச்சல் ஏற்படுவது, திடீரென காதுகளில் சத்தம் கேட்பது என காதுகளில் வெவ்வேறு விதமான சப்தங்கள் எழுவது 'டின்னிடஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது தைராய்டு பாதிப்பு, இதய நோய், காதுகளில் தொற்று போன்ற பிரச்சினைகளை குறிக்கும். பொதுவாக வயதானவர்கள்தான் டின்னிடஸுடன் தொடர்புடைய காதுகேளாமை பிரச்சினைக்கு ஆளாவார்கள். இது போன்ற அறிகுறிகளை அனுபவித்தால் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது.

    2. ஒலிகள் சத்தமாக கேட்பது:

    திடீரென்று உரத்த குரலில் சத்தம் எழுவதை கேட்டு திடுக்கிடுகிறீர்களா? அப்படி உரத்த ஒலியை கேட்கும்போது உடலில் உள்ள செல்கள் அதிர்வடைந்து தூண்டப்படும். எனவே அத்தகைய சத்தங்கள் திடுக்கிட வைக்கும். அல்லது காதுகளை சிதைத்துவிடும்.

    3. நெரிசலான இடங்களில் பேசுவதில் சிக்கல்:

    அமைதியான சூழல் கொண்ட இடத்தில் மற்றவருடன் பேசுவதில் எந்த சிரமமும் இருக்காது. ஆனால் உணவகம், கிளப் போன்ற மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மற்றவருடன் பேசும்போது அசவுகரியத்தை எதிர்கொண்டால் காதுகளை பரிசோதிக்க வேண்டியது அவசியமானது. மற்றவர்கள் பேசும் வார்த்தைகள் சரியாக கேட்காவிட்டாலோ, ஓரிரு வார்த்தைகள் புரியாமல் போனாலோ செவிப்புலன் பாதிக்கப்பட்டிருப்பதாக அர்த்தம். பிறர் பேசுவதை சரிவர புரிந்து கொள்ள முடியாமல், பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானால் காதுகளை பரிசோதித்தாக வேண்டும்.

    4. காது அடைப்பது போன்ற உணர்வு:

    காதுகளில் இருந்து திரவம் வடியும்போது இரு காதுகளும் அடைப்பட்டது போன்று உணரலாம். வயது அதிகரிக்கும்போது சில ஒலிகள் துல்லியமாக கேட்காமல் போகலாம். சிலருக்கு எந்த ஓசையும் கேட்காமல் போகலாம். குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் அதிகம் இறங்கினாலும் காது அடைப்பட்டது போன்ற உணர்வு ஏற்படும். இதே பிரச்சினை நீடித்தால் காதுகளை பரிசோதிப்பது நல்லது.

    5. மறதி

    சில விஷயங்களை தெளிவாக கேட்க முடியாதபோது அதனை நினைவில் கொள்வது கடினமாகிவிடும். சில நேரங்களில் மறதி ஏற்படுவதற்கு கூட, காது கேளாமை காரணமாக இருக்கலாம். மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு செவிவழி தூண்டுதல் தேவை. இல்லாவிட்டால் அல்சைமர் அல்லது டிமென்ஷியா பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய அறிகுறிகளில் சிலவற்றை சந்தித்தால் காதுகளை உடனடியாக பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

    • குழந்தைகளின் செவித்திறனை பிறந்தது முதல் 3 வயதுக்குள் கண்டறிவது மிகவும் அவசியம்.
    • வீட்டில் காது கேளாத குழந்தை இருந்தால் தனித்து விடாது தினமும் பேசவேண்டும்.

    உறவு முறைத் திருமணம் தாய் வழித் தொற்றுகளான ரூபெல்லா மேக நோய் அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிற தொற்று நோய்கள், பயன்படுத்தப்படும் நச்சு மருந்துகள், கடும் மஞ்சள் காமாலை போன்றவை பிறந்த குழந்தையின் காது நரம்பை பாதிக்கின்றன. இதனால் பிறப்பின் போதே குழந்தை காது கேளாத் தன்மையை பெறுகிறது.

    தற்போது அறிவியல் வளர்ச்சியால் குழந்தையின் கேட்கும் திறனை முதல் நாளிலேயே கண்டறிந்து விடலாம். இதற்காக இரண்டு விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.செவித்திறனை இழந்து அவதிப்படுகிறவர்களுக்காக காதில் பொருத்திக் கொள்ளக் கூடிய சிறிய உபகரணங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

    'ஆர்.எச். நெகட்டிவ்' குருதி முறை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி கருவுற்றிருக்கும் போது தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். கூரிய பொருட்களை காதில் இடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இயர்போனில் பாடல்கள் கேட்கும் போது இசை சத்தமாக இருந்தாலோ நீண்ட நேரம் கேட்டாலோ, காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும்.

    சத்தமான இடங்களை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி எண்ணெய் அல்லது திரவங்களை காதில் இடக்கூடாது. கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவற்றை கடைபிடித்தால் நாம் கேட்கும் திறன் இழப்பை தடுக்க முடியும்.

    காது கேட்கும் திறனை இழந்தால், அது நமக்கு பெரும் இழப்பாக அமையும். பிறரோடு உரையாட இயலாமல் போவதே காது கேளாமையின் முக்கிய பாதிப்பாகும். இதனால் குழந்தைகளால் பேச்சு மொழியை வளர்க்க முடியாமல் போகிறது. காது கேளாமையும், இடைச்செவியழற்சி போன்ற காது நோய்களும் குழந்தைகளின் கல்வி பயிலும் முறையை அதிகமாக பாதிக்கிறது.

    எனினும் காது கேளாமை குறைபாடு உள்ளவர்களுக்கு தகவல் தொடர்புக்கான வாய்ப்பை கொடுத்தால் அவர்களும் பிறரைப் போல செயலாற்ற முடியும். தகவல் தொடர்பு தடைபடும் போது அது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது.தனிமை, பிரிவு, அதிருப்தி போன்ற உணர்வுகளை உண்டாக்குகிறது. காது கேளாத பெரியவர்களில் பலர் வேலை வாய்ப்பின்றி துன்பப்படுகிறார்கள். வேலையில் இருப்போரும் பொதுவாக உழைப்பவரோடு கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.

    காது கேளாத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைப் போக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது. குழந்தைகளின் செவித்திறனை பிறந்தது முதல் 3 வயதுக்குள் கண்டறிவது மிகவும் அவசியம். மொழி வளர்ச்சிக்கும், பேச்சு வளர்ச்சிக்கும் உகந்த கால கட்டம் இதுவே ஆகும்.

    இக்கால கட்டத்தில் கண்டறிந்து தகுந்த பயிற்சி அளித்தால் சாதாரண குழந்தைகள் போல் அனைத்து அறிவு சார் திறனும் பெற்று குழந்தைகள் ஒளிர்விடுவார்கள். வீட்டில் காது கேளாத குழந்தை இருந்தால் தனித்து விடாது தினமும் பேசவேண்டும். இது அவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க நன்கு உதவும்.சைகை மொழியில் அவர்களுடன் பேசுவதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். செவித்துணைக் கருவிகள் நன்முறையில் உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்டறிய வேண்டும்.

    பெற்றோருக்கு அடுத்த பங்கு ஆசிரியர்களிடம் உள்ளது. 'வாய் வழிக் கல்வி' முறையே காது கேளாத குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். கல்வி கற்றுக் கொடுக்கும்போது கண்டிப்போடு இருப்பதை விட அன்போடு இருப்பது மிக முக்கியம். பிற மாணவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை இவர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும்.அவர்கள் சொல்வதை காது கொடுத்துக்கேட்போம்.

    காது கேளாதோரை நம்மோடு இணைப்போம்! நாம் அவர்களோடு இணைவோம்!

    • இயர் போன்களால் காது கேளாமல் போவது மட்டும் பிரச்சினையல்ல.
    • நம்முடைய காதுகள் ஓரளவுதான் அதிர்வுகளை தாங்கும்.

    பாட்டுப் பிரியர்களுக்கு 'இயர் போன்' மகிழ்ச்சியான சாதனமாக தோன்றலாம். ஆனால் அது காதுகளுக்கு மிக ஆபத்தானது. 'இயர் போன்கள்' காதுக்குள்ளே புகுந்து இசையால் காதுகளை அடைத்துவிடுகிறது. இவை அதிக பயன்பாட்டிற்கு வந்தபிறகு, காது கோளாறுகளுடன் ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் இரைச்சல் நேரடியாக செவிப்பறைகளை தாக்குவது தான்.

    பொதுவாக ஒலி இரண்டு வகைப்படும். பரவலாக வந்து காதில் விழும் ஒலி ஒருவகை. மற்றொன்று ஒரே நேர்கோட்டில் பயணித்து காதுகளை அடையும் ஒலி. இரண்டாவது ஒலி அலைகள் காதுகளை சேதப்படுத்தும். 'இயர் போன்' இசை அந்த இரண்டாவது ஒலி வகையைச் சேர்ந்தது. அந்தச் சத்தத்தை கேட்க மனம் விரும்பலாம். ஆனால் காதுகள் ஏற்றுக்கொள்ளாது.

    நம்முடைய காதுகள் ஓரளவுதான் அதிர்வுகளை தாங்கும். இரைச்சல் 40 டெசிபல் அளவை தாண்டும்போது காதுகள் மெல்ல செவிட்டுத்தன்மையை அடைகிறது. தினமும் இயர் போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு சிறிது காலத்தில் மற்றவர்கள் சத்தமாக பேசினால்தான் காதுகள் கேட்கும். சிறிய சத்தங்கள் கேட்காமலே போய்விடக்கூடும். இவைதான் காது கேளாமையின் அறிகுறிகள்.

    இயர் போன்களால் காது கேளாமல் போவது மட்டும் பிரச்சினையல்ல. அதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதுதான் வாழ்வின் சோகம். பேசும் சக்தியும், சிந்திக்கும் திறனும் குறையும். நினைவாற்றல் மங்கும். அடிக்கடி தலைவலி, தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் ஏற்படும். மயக்கம், உடல் நடுக்கம், மன அழுத்தம் இவை அத்தனையும் தொடர்ந்து வரும்.

    தகவல் தொடர்பு மையங்களான கால் சென்டர்களில் வேலை செய்பவர்கள் இயர் போன்களை காதில் மாட்டிக் கொண்டு இரவு பகலாக மற்றவர்கள் பேசுவதை கேட்டு பணி செய்தே ஆக வேண்டும். அவர்கள் தங்கள் காது விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணி நேஇரத்தில் சத்தத்தை குறைத்து வைத்துக் கொள்ளலாம்.

    இன்று இயர் போனை உடலின் அங்கம்போல பயன்படுத்துபவர்கள் அநேகம். நாகரிகமாய் உடை அணிந்து கிளம்புபவர்கள்கூட உடையின் உள்ளே இயர்போனை இணைத்து அதை காதில் திணித்து பயணத்தை பாட்டுக் கேட்டபடி தொடர்கிறார்கள். அவர்கள் வண்டியில் இருந்து இறங்கிய பின்பும் இயர்போன் இசையை நிறுத்தாமல் அப்படியே சாலையை கடப்பது அவர்களை விபத்தில் சிக்க வைக்கிறது.

    வாழ்நாள் முழுவதும் நமக்கு கேள்வித்திறன் தேவை. அதை பாதியிலேயே தொலைத்து விட்டால் மீதி காலத்தை எப்படி கழிப்பது? இயர் போன் கேட்கும் பழக்கம் உடையவர்கள் காது கேட்பதில் லேசாக ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக காது சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி காது கேட்கும் சக்தியை பரிசோதனை செய்யுங்கள்.

    குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்க்கலாம்.
    குழந்தையின் காதுகள் மிகவும் மிருதுவானவை. எனவே குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

    காதுகளைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் குழந்தையின் காதுகளில் பட்ஸ், ஊக்கு போன்றவற்றை நுழைக்காதீர்கள். காதுகளைப் பராமரிக்க இயல்பாகவே சிபம் என்ற மெழுகு போன்ற திரவம் காதுகளில் சுரக்கும். அதனை அழுக்கு என்று தவறாக புரிந்துகொண்டு சுத்தப்படுத்தி விடாதீர்கள். காதுகளின் வெளிப்புறத்தைமட்டும் மாதம் ஒருமுறை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவது நல்லது.

    குழந்தையின் காதுகளில் ஏதேனும் சிறிய பூச்சி சென்றுவிட்டால், சுத்தமான எண்ணெயை அவர்களின் காதுகளில் ஊற்றி, முதலில் அந்தப் பூச்சியைச் செயலிழக்கச் செய்யுங்கள். அதன் பின்னர் காது-மூக்கு-தொண்டை சார்ந்த மருத்துவரை அணுகி, பூச்சியினை எடுத்துவிடுவது நல்லது. எக்காரணம் கொண்டும் சூடான எண்ணெய், தண்ணீரை காதில் ஊற்றாதீர்கள்.

    குழந்தைகள் காதில் பட்டாணி, காய்கறிகள் போன்று எளிதில் நீரில் ஊறக்கூடிய பொருளை நுழைத்துவிட்டால், எக்காரணம் கொண்டும் காதுகளில் தண்ணீர் ஊற்றாதீர்கள். அவை தண்ணீரில் ஊறி வெளியே எடுக்க முடியாத நிலைக்கு போய்விடலாம். எனவே உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. அதேபோல காதில் சீழ் வடிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.



    குழந்தைகள் பாடல் கேட்க அல்லது போனில் பேச என இயர் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில்கூட இயர் போனுக்கு பதில் ஹெட் போன்களைப் பயன்படுத்தலாம்.

    குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஆசாரிகளிடம் இருக்கும் காது குத்தும் ஊசியை ஒரு முறை ஆண்ட்டி செப்டிக் மருந்தில் முக்கி எடுக்க வேண்டியது அவசியம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியை தடுக்கலாம்.

    பச்சிளம் குழந்தைகளின் காது தசைகள் மிகவும் மென்மையானவை எனவே அவர்கள் காதினைச் சுத்தம் செய்யும்போது மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து மெதுவாக வெளிப்புறம் மட்டும் துடைத்து எடுக்கலாம்.
    காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? எதனால் செவித்திறன் குறைகிறது? இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம்.
    செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் திருவள்ளுவர். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. பொதுவாக, கேட்கும் திறனுக்கும், பேச்சுத் திறனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. பிறக்கும் போதே குழந்தைகளின் காதுகள், கேட்கும் சக்தியை இழந்து விட்டால் அவர்களுக்கு பேச்சு வராது. அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் கேட்கும் திறன் எவ்வளவு முக்கியம் என்று.

    கேட்கும் திறனால் மட்டுமே மொழித்திறன் உருவாகி குழந்தை பேச தொடங்குகிறது. இத்தகைய கேட்கும் திறன் கொண்ட காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? எதனால் செவித்திறன் குறைகிறது? இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷினி கூறியதாவது:-

    மனித உடலில் காதுகள் ஒரு இன்றியமையாத உறுப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. காதுகளுக்கு கேட்கும் திறன் மட்டுமல்லாது இன்னும் சில திறன்களும் இருக்கிறது. அவைகள், உடலின் சமநிலையை பாதுகாத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளையும் செய்கின்றன.

    உடலின் சமநிலை மாறுபடும்போது, தள்ளாட்டம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகியவை வந்துவிடும். அதுமட்டுமின்றி தூங்கி எழும்போதும், ஒரு பக்கம் சாய்வதாலும் உடலின் சமநிலை மாறுபட்டு கிறுகிறுப்பு வர வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்வதென்றால், நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடப்பதற்கும் காதுகள் மிக அவசியமாகிறது.

    பொதுவாக காதுகளின் அமைப்பு 3 பிரிவுகளாக உள்ளது. ஒன்று, வெளிக் காது. 2-வது நடுக்காது. 3-வது உள்காது. வெளிக்காது என்பது, செவி மடலில் இருந்து காது சவ்வு பகுதி வரை இருக்கும். நடுக்காது, ஜவ்வு பகுதியில் இருந்து காது நரம்பு தொடங்கும் பகுதி வரை இருக்கும். உள்காது, காது நரம்பில் இருந்து மூளை நரம்பு மண்டலம் வரை இருக்கும். இதில் செவிப்பறை என்பது நடுக்காதில் இருக்கும்.

    இத்தகைய முக்கியத்துவம் பெற்ற காதுகளுக்குள் புகும் ஒலி அலைகளின் சத்தம் 20 முதல் 20 ஆயிரம் ஹெட்ஸ் (அளவீடு) வரை தான் இருக்க வேண்டும். இந்த அளவீடு ஒலி அலைகளுக்கு சத்தம் குறைவாக இருந்தால் கேட்காது.

    காதுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. அடிக்கடி சளிப்பிடித்தல், தொண்டை வலி, விபத்து போன்ற காரணங்களால் காதுகள் பாதிக்கப்படும். பொதுவாக நடுக்காதுக்கும், மூக்குக்கும் இடையே ஒரு துளை இருக்கும். அதன்வழியே கிருமிகள் எளிதாக நடுக்காதை சென்றடைந்து விடும். அந்தக்கிருமிகள் நடுக்காதில் உள்ள செவிப்பறையை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கேட்கும் திறன் குறையும். இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.

    பெரியவர்களை பொறுத்தவரை, அடிக்கடி சளிப்பிடித்தல், மூக்கு தண்டு வளைதல், மூக்கில் கட்டி, சைனஸ் தொந்தரவு, பிற கட்டிகள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கும். காது வலியுடன் சீழ் வடியும், சிலருக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு முகவாதம் வரலாம். கண் இமைகள் மூடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது. அப்போதும் சரிவர கவனிக்காமல் போனால் மூளையில் சீழ் கட்டிகள் தோன்றலாம். அதனால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படலாம்.



    பொதுவாக காதுகள் பாதிக்கப்படும் போது, முதலில் தலைவலி, காது வலி ஏற்படும். காதுக்குள் கொப்பளங்கள் தோன்றும். அதற்கடுத்த நிலையில் சீழ் வடியும். இதுபோன்று அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக காதுகளை பொறுத்தவரை பாதுகாப்பு என்பது முக்கியமானது.

    அதிக சத்தத்தை கேட்கக் கூடாது. அவ்வாறு சத்தத்தை கேட்க நேர்ந்தால் காதில் முன்னெச்சரிக்கையாக பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வாகனங்களில் உள்ள காற்று ஒலிப்பான் (ஏர்ஹாரன்) மற்றும் கூம்புவடிவ ஒலி பெருக்கி சத்தமும் ஆகாது. காதை சுத்தப்படுத்த குச்சி, பட்ஸ் உபயோகிக்க கூடாது. சாதாரணமாக, விபத்தில் காதில் அடிபடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அடிக்கடி சளிப்பிடிக்க விடாமல் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

    வாகனங்களில் போகும்போது காற்றின் வேகத்தில் பூச்சிகள் காதுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் தூங்கும் போது காதில் எறும்பு, சிறு பூச்சிகள் நுழைய வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அவ்வாறு இல்லையென்றால் தலையின் அடிப்பகுதி பாதிக்கப்படுவதுடன், மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். இதுதவிர வயதானவர்களுக்கு காதில் புற்றுநோய்க்கிருமி தொற்றும் ஏற்படலாம்.

    பொதுவாக குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும் 1½ வயதில் சரளமாக பேச ஆரம்பிக்கும். 2 வயதில் அதற்கு சிந்திக்கும் திறன் வளரும். பரம்பரை வழியாக, சொந்தத்தில் திருமணம் செய்வதால் பிறவிக்குறைபாடாக காதுகேளாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தையை 3 மாதங்களில் கண்டறிந்து விடலாம்.

    அதன்பிறகு ஒரு வருடத்தில் ஆடியோகிராம், பெரா ஆகிய 2 பரிசோதனைகள் மூலம் காதின் எந்தப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். பொதுவாக பிறவிக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உள்காதில் மற்றும் நரம்பில் தான் பிரச்சினைகள் இருக்கும்.

    பொதுவாக காதுகளை பாதுகாக்க மற்ற சிறப்பு பயிற்சிகள் ஏதும் கிடையாது. ஆனால் தலைசுற்று, கிறுகிறுப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள சிறப்பு பயிற்சிகள் இருக்கிறது. கண்களுக்கு ஓய்வு கொடுப்பதை போன்று காதுகளுக்கு ஓய்வு கொடுக்க முடியாது. அதற்கு ஓய்வே கிடையாது. 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டு தான் இருக்கும். அதனால் தான் தூங்கும் போது கூட ஏதாவது ஒரு சத்தம் கேட்டால் விழித்து கொள்கிறோம்.

    ஹெட்போனில் தொடர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டே தூங்குவதாலும், அதிக சத்தமாக வைத்து பாட்டு கேட்பதாலும், குறிப்பிட்ட மருந்து, மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவதாலும் காது நரம்புகள் வலுவிழந்து போகிறது. இதனால் காதுகளின் செவித்திறன் குறைந்து போகும். இதற்கு ஓட்டோடாக்சிசிட்டி என்று பெயர்.



    தலையில் மூளைக்கு அருகில் கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் உள்ளது. அதனால் மிகுந்த எச்சரிக்கையாக இந்த உறுப்புகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனால் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனருகில் இருக்கும் மற்ற உறுப்பும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பல்வலி வந்தால் தலைவலி வரும். கழுத்து வலி வந்தால் காது வலி வரும். இந்த பாதிப்பை ரெபர்டு ஆட்டாலாஜியா என்று மருத்துவம் கூறுகிறது.

    காதுகள் எப்போதும் உலர்வாக இருக்க வேண்டிய பகுதி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதனால் குளிர் காற்று, குளிர்ந்தநீர் காதுக்குள் போகக்கூடாது. அது காதின் ஆரோக்கியத்தை கெடுத்து பாதிப்பை உண்டாக்கும். அம்மை நோயை அலட்சியப்படுத்தக்கூடாது. அதனாலும் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும். உள்காதில் நீர் கோர்த்தால் காது கேட்காது. அப்போது இரைச்சல், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

    காது தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டது. அதற்காக காதுக்குள் ‘செரூமன்‘ என்னும் ஒருவகை திரவம் சுரக்கிறது. அந்த திரவம் காதை சுத்தப்படுத்தும். ஒரு சிலருக்கு ‘செரூமன்‘ திரவத்தால் அழுக்கு சேருவதுண்டு. அதனை அகற்ற மருத்துவரின் துணையோடு காதுக்குள் ஊசி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்ய வழி இருக்கிறது.

    ‘ரூபெல்லா‘ எனும் வைரஸ் கிருமி பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேட்காமல் போகும். அதற்காக முன்னெச்சரிக்கையாக வளர்இளம் பெண்களுக்கு ரூபெல்லா தடுப்பு ஊசி போடுவது நடைமுறையில் உள்ளது. இதனால் காது கேளாமை என்னும் பிறவிக்குறைபாட்டை தடுத்து விடலாம்.

    அதிக சத்தமான இடி மற்றும் பட்டாசு வெடிப்பதை கேட்டால் காது சவ்வு கிழிந்து விடும். சில தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களில் இருந்து அதிக சத்தம் வரும். இதுபோன்ற அதிக சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் காதின் செவித்திறன் பாதிக்கப்படும். அதனால் அங்கு பணியாளர்கள் உள்பட அனைவரும் வருடம் ஒரு முறை செவித்திறன் குறித்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    அதேபோல் குழந்தைகள் விளையாட்டாக சிறு பொருட்களை காதுக்குள் போட்டுக்கொள்வார்கள். அதனை வெளியில் சொல்லவும் தெரியாது. அதுபோன்ற சமயத்தில் பெரியவர்கள் அதனை கண்டறிந்து டாக்டரிடம் சென்று அதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்து அதனை அகற்ற வேண்டும். கையில் கிடைத்த சிறு பொருட்களை கொண்டு காதை குடையக்கூடாது. அதிக நேரம் ஒரே காதில் வைத்து செல்போன் பேசக்கூடாது. இவ்வாறு காதுகள் விஷயத்தில் அக்கறை செலுத்தினால் காதுகளை பாதுகாக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    பட்ஸை கொண்டு காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வது என்பது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஊக்கு, ஹேர்- பின், தீக்குச்சி, பென்சில், பட்ஸ், பைக் சாவி என எது கையில் கிடைத்தாலும், அதை காதுக்குள்விட்டுக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. காதில் அழுக்கை நீக்குவதுதான் சுகாதாரம் என்று நினைப்பதும், காது குடைவதால் சுகமாக இருப்பதும்தான் இதற்குக் காரணங்கள். இரண்டுமே ஆபத்தான பழக்கங்கள்.

    ஏதாவது கூர்மையான பொருளை வைத்துக் காதைக் குடைவதால், காதிலிருந்து அழுக்கு வெளியேறுவதற்கு பதிலாக அதிகமாக உள்ளேதான் செல்கிறது. அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். தவறுதலாகச் செவிப்பறையில் அந்தப் பொருள்பட்டு கிழித்துவிட்டால், காதுவலி, காதில் புண், காது கேட்காமல் போவது, காதினுள் வீக்கம் ஏற்பட்டு வாயை அசைக்க முடியாமல் போகும் ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகளிருக்கின்றன.

    அதோடு புண்களால் தொற்றுகள் ஏற்படவும் இது வழிவகுக்கும். மேலும், இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது.

    காதில் உள்ள மெழுகு போன்ற படலம் நம் காதுகளை தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாக்கவே உருவாகிறது. அதனால் காதில் உள்ள தூசி மற்றும் அழுக்கை எடுக்கவோ, காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யவோ கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



    காதில் உள்ள அழுக்கை எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு?

    காதில் உள்ள அழுக்கை எடுக்க காது குழாய் வழியாக பட்ஸை விடும் போது, நாம் கொடுக்கப்படும் அழுத்தம், காதில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனையும் பாதிக்கிறது. எனவே காதில் உள்ள மெழுகு படலம் அதிக அளவு உருவாகி காதின் மேற்புறத்தில் வரும் போது மட்டுமே காதை சுத்தம் செய்ய வேண்டும்.

    காதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது ஏன்?

    காதில் பட்ஸ் பயன்படுத்தும் போது அது காதினுள் சிக்கி கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதோடு பட்ஸில் உள்ள காட்டன், ஒரு பிளாஸ்டிக் குச்சியின் இரு முனையிலும் வைக்கப்பட்டுள்ளதால் அது காதினுள் செல்வதற்கும் கூட அதிக வாய்ப்புள்ளது. மேலும் பருத்தியாலான பட்ஸின் பஞ்சுகள் காதுக்குள் அலர்ஜியையும் ஏற்படுத்தும். இதனால்தான் பட்ஸ் வைத்து காது குடைவதை முற்றிலும் தவிர்க்கச் சொல்கிறோம். காதைச் சுத்தம் செய்யவே தேவையில்லை என்பது ஒருபுறமிருக்க, பட்ஸால் சுத்தம் செய்வது கூடவே கூடாது.

    எனவே இந்த பட்ஸை கொண்டு காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வது என்பது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
    ×