search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disgruntled MLAs"

    • மகாராஷ்டிராவை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல அமைதி தேவை.
    • இப்போது தான் உத்தவ் தாக்கரே பொதுவெளியில் தோன்றுவது அதிகரித்து உள்ளது.

    மும்பை :

    சிவசேனா பிளவுபட்டுள்ள நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கும், ஷிண்டே தலைமையிலான அணிக்கும் வார்த்தை போர் வலுத்துள்ளது.

    குறிப்பாக ஆதித்ய தாக்கரே கட்சியை மீண்டும் வலுப்படுத்த நடத்தி வரும் பேரணியில் அதிருப்தி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை கடுமையாக சாடி வருகிறார்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியின் செய்தி தொடர்பாளரான தீபக் கேசர்கர் எம்.எல்.ஏ. தெற்கு மும்பையில் வார்டு அளவிலான சிவசேனா அலுவலகத்தை திறந்து வைத்து ஊழியர்களிடம் பேசியதாவது:-

    நாங்கள் முக்கியமான 3 கேள்விகளை எழுப்பி உள்ளோம். அந்த கேள்விகளுக்கு இன்னும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. அதில் ஒன்று முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே எத்தனை முறை மந்திராலயாவில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிவசேனா உறுப்பினர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கினாரா?. இப்போது தான் அவர் பொதுவெளியில் தோன்றுவது அதிகரித்து உள்ளது.

    மகாராஷ்டிராவை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல அமைதி தேவை. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள தலைவர்களுக்கு எதிரான பேரணிகளை ஏற்பாடு செய்து அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

    கடந்த 2½ ஆண்டுகளில் மகா விகாஸ் அகாடி அரசு மத்திய அரசை விமர்சிப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளது. மத்திய அரசுடன் நல்லுறவை வைத்துக்கொள்ளாவிட்டால், எப்படி வளர்ச்சி அடைய முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிருப்தி அணி பின்னால் பலம்வாய்ந்த சக்தி இருப்பதாக கூறுகின்றனர்.
    • எத்தனை தலைமுறை ஆனாலும் சிவசேனாவை அழிக்க முடியாது.

    மும்பை :

    மும்பை சிவ்ரி பகுதியில் சிவசேனா சாக்கா அலுவலகத்தை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார். அப்போது அவர் கட்சியினர் இடையே பேசியதாவது:-

    சேனாவால் வணங்கப்பட்டு வந்தவர்கள், தற்போது பா.ஜனதா ஆதரவுடன் கட்சியை உடைத்து உள்ளனர். பா.ஜனதா ஆதரவுடன் அதிருப்தி அணியினர் உள்ள போதிலும், அவர்களிடம் என்ன அதிகாரம் இருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. இதற்கு முன் பல முறை சிவசேனாவை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    தற்போது அவர்கள் சிவசேனாவை அழிக்க திட்டமிட்டு உள்ளனர். அவர்களின் (அதிருப்தி அணி) பின்னால் பலம்வாய்ந்த சக்தி இருப்பதாக கூறுகின்றனர். அதிருப்தி அணியினர் யாரின் கைப்பாவையாக உள்ளார்களோ அவர்கள் சிவசேனாவை அழிக்க விரும்புகின்றனர். மும்பையில் நமது காவி கொடியை அழித்துவிட்டு, அவர்களின் சொந்த கொடியை பறக்கவிட விரும்புகின்றனர்.

    பல வல்லுநர்கள் துரோகிகள் வேறு கட்சியில் சேருவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என கூறுகின்றனர். ஒரு கட்சி அவர்களை தங்களுடன் சேர அழைப்பும் விடுத்தது. அவர்கள் சேனாவை அழிக்க விரும்புகின்றனர். ஆனாலும் சிவசேனா இருக்கிறது. தாக்கரேவின் தொடர்பும் சேனாவுடன் இருக்கிறது.

    எத்தனை தலைமுறை ஆனாலும் சிவசேனாவை அழிக்க முடியாது. சிவசேனா- தாக்கரே உறவை முறிக்க அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் பால் தாக்கரேவின் படத்தை பயன்படுத்த கூடாது. நீங்கள் எனது கட்சியை திருட விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு கொள்ளையர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சமீபத்தில் ராஜ் தாக்கரே அதிருப்தி அணியினர் என்னை அணுகினால் அவர்களை நவநிர்மாண் சேனாவில் இணைத்து கொள்வேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஏக்நாத் ஷிண்டேவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தவ் தாக்கரே மறுப்பு.
    • ஏக்நாத்ஷிண்டே பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை.

    மும்பை :

    ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனாவில் அதிருப்தி அணியை உருவாக்கி உள்ளார். இந்தநிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுகாஸ் கண்டே, சாம்புராஜ் தேசாய் ஆகியோர் உத்தவ்தாக்கரே மீது பரபரப்பு குற்றச்சாட்டைதெரிவித்து உள்ளனர். இதில் நக்சலைட்டுகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தவ் தாக்கரே மறுத்துவிட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து முன்னாள் உள்துறை இணை மந்திரி சம்புராஜ் தேசாய் கூறுகையில், " ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக கூட்டம் நடக்க உள்ளதா என உத்தவ் தாக்கரேவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. நான், ஆமாம் கூட்டம் நடைபெற உள்ளது என்றேன். அப்போது ஏக்நாத் ஷிண்டேவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட கூடாது என எனக்கு உத்தரவு வந்தது " என்றார். அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே மீது கூறிய இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை காங்கிரசை சேர்ந்த மற்றொரு முன்னாள் உள்துறை இணை மந்திரி சாதேஜ் பாட்டீல் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " சாம்புராஜ் தேசாய் கூறுவது போல ஒரு கூட்டம் நடைபெறவே இல்லை. ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை சேர்ந்தவர். அவருக்கு பாதுகாப்பு வழங்க முதல்-மந்திரி ஏன் மறுக்க போகிறார்?. கட்சிரோலி பொறுப்பு மந்திரி என்பதால் அவருக்கு ஏற்கனவே கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. எனவே ஏக்நாத்ஷிண்டே பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை " என்றார்.

    மேலும் முன்னாள் உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் கூறுகையில், "மகா விகாஸ் அகாடி ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டேக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது பாதுகாப்பை அதிகரிக்கக்கூடாது என உத்தவ் தாக்கரே ஒருபோதும் அறிவுறுத்தவில்லை. ஏக்நாத் ஷிண்டேக்கு மிரட்டல் கடிதம் வந்தபோது போலீசாருக்கு உரிய உத்தரவுகளை வழங்கியிருந்தேன். எனவே இந்த பிரச்சினை பற்றி விவாதிப்பது தேவையற்றது" என்றார்.

    • சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்துவரப்பட்டனர்.
    • மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த 2½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிவசேனா தலைமையிலான ஆட்சி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். இ்ந்தநிலையில் காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது.

    இதற்காக கோவாவில் முகாமிட்டு இருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்துவரப்பட்டனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வருகையையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் அவர்கள் வருவதற்காக தனிவழிபாதைகள் அமைக்கப்பட்டன. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    சபாநாயகர் தேர்தலில் வாக்குப்பதிவு நடத்துவதற்காக விதான் பவன் அருகில் உள்ள சொகுசு ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள், தங்கியிருந்த ஓட்டலுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதீத பாதுகாப்பை சிவசேனா முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மும்பையில் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அஜ்மல் கசாப்புக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு போடப்படவில்லை. நீங்கள் ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? அங்கிருந்து யாராவது தப்பி ஓடிவிட போகிறார்களா? ஏன் இவ்வளவு பயம்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதியான அஜ்மல் கசாப் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது உயிருடன் பிடிபட்டவர் ஆவார்.

    • பட்னாவிஸ் 3-வது முறையாக மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கு முன்பு 2014 முதல் 2019 வரை 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தனர்.
    • 2019 தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் 5 நாட்கள் பதவி வகித்தார். பெரும்பான்மை இல்லாததால் பொறுப்பு ஏற்ற 5-வது நாளில் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கி இருந்து நெருக்கடி அளித்து வந்தனர்.

    மொத்தம் உள்ள 56 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றதால் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த சிவசேனா தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து ஆட்சியை காப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டு உத்தரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக இருந்தது. ஜூலை 31-ந்தேதி வரை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் கவர்னர் பகத்சிங் கோஷியா ரியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தார். அப்போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஏக்நாத் ஷிண்டே அணியில் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்றும் பட்னாவிஸ் கூறினார்.

    இதையடுத்து மகாராஷ்டிரா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் உத்தரவிட்டார். சிறப்பு சட்டசபையை இன்று காலை 11 மணிக்கு கூட்டி மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கவர்னர் தனது உத்தரவில் தெரிவித்தார்.

    சட்டசபை முதன்மை செயலாளர் ராஜேஷ் பாகவத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சிவசேனா தரப்பில் சுப்ரீம் கோட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பிர்தி வானே ஆகியோர் அடங்கிய கோடைக்கால அமர்வு நேற்று மாலை 5 மணிக்கு விசாரணை நடத்தியது. இரவு 9 மணியளவில் விசாரணையை முடித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இது தொடர்பாக நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க போவதில்லை. அதே நேரம் இந்த மனு மீது பதில் அளிக்குமாறு சட்டசபை செயலாளர் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். இதற்கு 5 நாட்களில் பதில் அளிக்கலாம்.

    அந்த பதில் மனுவின் தகுதியின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பான மற்ற வழக்குகள் சேர்த்து ஜூலை 11-ந்தேதி விசாரிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த மனுக்கள் மீதான விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி முடிவுக்கு உட்பட்டது.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, "சட்டசபையில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பம் இல்லை. முதல்-மந்திரி பதவியையும், சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்றார்.

    பெரும்பான்மை இல்லாததால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே இரவு 11.44 மணியளவில் கவர்னர் மாளிகை சென்று கோஷியாரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவருடன் அவரது மகன்கள் ஆதித்ய தாக்கரே, தேஜாஸ், சிவசேனா தலைவர்கள் நீலம் கோர்கே அரவிந்த் சாவந்த் ஆகியோர் உடன் சென்றனர்.

    ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர் புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்-மந்திரியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். உத்தவ் தாக்கரே பதவி விலகியதால் இன்று நடைபெற இருந்த மகாராஷ்டிரா சிறப்பு சட்டசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    உததவ் தாக்கரே பதவி விலகியதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது.

    அந்த கட்சிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 39 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 11 சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.

    மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி என்று மாநில பா.ஜனதா டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இன்று காலையில் ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜனதா மேலிட பார்வையாளர் டி.ரவி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுகிறார்.

    முன்னதாக அவர் மும்பை திரும்பிய சிவசேனா அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டேயும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பா.ஜனதா ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு கவர்னரை தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கவர்னர் கோஷியாரை இன்று மாலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள். தங்களுக்கு 156 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு (பா.ஜனதா 106, சிவசேனா அதிருப்தி 40, சுயேட்சை 10) இருக்கும் கடிதத்தை கவர்னரிடம் அளிக்கிறார்.

    இதை தொடர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுவார். தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். இதைத்தொடர்ந்து அவர் நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்னாவிஸ் 3-வது முறையாக மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கு முன்பு 2014 முதல் 2019 வரை 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தனர்.

    2019 தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் 5 நாட்கள் பதவி வகித்தார். பெரும்பான்மை இல்லாததால் பொறுப்பு ஏற்ற 5-வது நாளில் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார்.

    தற்போது சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து அதிருப்தி குழுவின் ஆதரவுடன் பட்னாவிஸ் 3-வது தடவை முதல்-மந்திரியாகிறார்.

    • நீங்கள் திரும்பி வந்து, என்னை நேருக்கு நேராக சந்தித்தால் வழிபிறக்கும்.
    • உங்கள் மனதளவில் நீங்கள் இன்னும் சிவசேனாவில் தான் உள்ளீர்கள்.

    மும்பை :

    சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளதால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

    அதே நேரத்தில் சட்டசபையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பை திரும்புமாறு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது:- இப்போதும் ஒன்றுமில்லை. நீங்கள் திரும்பி வந்து என்னுடன் உட்காருங்கள். பொதுமக்கள், சிவசேனா தொண்டர்களிடம் நிலவும் குழப்பத்தை போக்குங்கள். நீங்கள் திரும்பி வந்து, என்னை நேருக்கு நேராக சந்தித்தால் வழிபிறக்கும்.

    கட்சியின் தலைவராகவும், குடும்ப தலைவனாகவும் உங்கள் மீது இன்னும் எனக்கு அக்கறை உள்ளது. நீங்கள் கடந்த சில நாட்களாக கவுகாத்தியில் சிக்கி உள்ளீர்கள். ஒவ்வொரு நாளும் புதிய செய்தி வருகிறது. உங்களில் பலர் தொடர்பில் இருக்கிறீர்கள். உங்கள் மனதளவில் நீங்கள் இன்னும் சிவசேனாவில் தான் உள்ளீர்கள். உங்களின் குடும்பத்தினரும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தங்களது சொந்த லாபத்திற்காக இங்கு யாரும் இல்லை.
    • இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் சந்தோஷமாக, நன்றாக உள்ளனர்.

    மும்பை :

    சிவசேனாவுக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் முகாமிட்டுள்ள மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர் தங்கி உள்ள ஓட்டலுக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் விரைவில் மும்பை வருவேன். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இந்துத்வாவை முன்எடுத்து செல்வதற்காக அவர்களின் சொந்த விருப்பத்தில் பேரில் இங்கு வந்து உள்ளனர். சிலர் (சிவசேனா தலைமை) எங்களுடன் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறுகின்றனர். அப்படி இருந்தால் அந்த எம்.எல்.ஏ.க்களின் பெயரை அவர்கள் வெளியிட வேண்டும்.

    பால்தாக்கரேவின் கனவான சிவசேனாவை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அவரின் இந்துத்வா பாதையில் நாங்கள் தொடர்ந்து நடப்போம். இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் சந்தோஷமாக, நன்றாக உள்ளனர். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களது சொந்த லாபத்திற்காக இங்கு யாரும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல ஏக்நாத் ஷிண்டே முகாமில் உள்ள மந்திரி உதய் சாமந்த் கூறுகையில், "மும்பையில் உள்ள எந்த ஒரு சிவசேனா தலைவர்களுடனும் நாங்கள் தொடர்பில் இல்லை. நாங்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் மட்டுமே தொடர்பில் உள்ளோம்" என்றார்.

    அதிருப்தி முகாமில் உள்ள 15 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சிவசேனா கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.
    • எதிர்க்கட்சியான பா.ஜனதா புதிய அரசை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே கடந்த 20-ந்தேதி சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரி அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரட்டினார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

    மொத்தம் உள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏக்களில் 38 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் உள்ளனர். சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் அவருடன் உள்ளனர். மொத்தம் 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதிருப்தி எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருப்பதால் உத்தவ் தாக்கரே ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தனது அரசை காப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உத்தவ் தாக்கரே மேற்கொண்டார்.

    சிவசேனா அனுப்பிய கடிதத்தை ஏற்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கும் கடந்த சனிக்கிழமை துணை சபாநாயகர் நர்ஹாரி ஜிர்வால் தகுதி நீக்க நோட்டீசை அனுப்பினார். இதற்கு நேற்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இதை எதிர்த்து ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை தாங்கள் வாபஸ் பெற்று விட்டதாகவும், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து இருந்தனர். தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த மனு நீதிபதிகள் சூரியகாந்த், பர்டிவாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான மகாராஷ்டிரா மாநில சட்டசபை செயலகத்தின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஜூலை 12-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஜூலை 12-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் தகுதி நீக்க நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    மேலும் சட்டசபையில் பலப்பரீட்சை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மகாராஷ்டிரா அரசு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிராகரித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாகும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் சுற்று வெற்றியாக கருதப்படுகிறது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, "தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு பால்தாக்கரேவின் இந்துத்துவா கொள்கைக்கும், எனது குரு ஆனந்த் திதேகவின் லட்சியத்துக்கும் கிடைத்த வெற்றியாகும்" என்றார்.

    சிவசேனா கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கிறது. எதிர்க்கட்சியான பா.ஜனதா புதிய அரசை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மகாராஷ்டிரா முன்னாள் பா.ஜனதா முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆகியோரை ஏக்நாத் ஷிண்டே கடந்த சில தினங்களுக்கு முன்பு வதேதாராவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து புதிய ஆட்சியை அமைப்பதில் பா.ஜனதா தீவிரமாக இருக்கிறது.

    ஏக்நாத் ஷிண்டே ஓரிரு நாட்களில் மும்பை வருகிறார். அவர் கவர்னர் கோஷியாரியை சந்தித்து மனு ஒன்றை அளிக்க உள்ளார். மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனால் சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

    மற்றொரு திட்டமாக பா.ஜனதாவே கவர்னரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளது. சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும். இதையேற்று உத்தவ் தாக்கரே பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிடுவார்.

    சட்டசபையில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து விடும். அப்போது புதிய ஆட்சியை அமைக்கலாம் என்று பா.ஜனதா கருதுகிறது. வருகிற 3-ந்தேதிக்குள் புதிய அரசை பா.ஜனதா அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்ய ஏக்நாத் ஷிண்டே முடிவு செய் துள்ளார். இது தொடர்பாக அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் அமைப்பு விதிகள் குறித்து அவர் மூத்த வக்கீல்களிடம் கேட்டு அறிந்தார்.

    மகாராஷ்டிராவில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு அரசியல் பரபரப்பு நீடித்து இருக்கும்.

    • கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
    • எங்கள் கட்சியினரே எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் எதிர்ப்பு அணி உருவாகி உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டு, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வேண்டும் என்று சிவசேனாவை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    இந்த சர்ச்சையால் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து சிவசேனா தொண்டர்கள் மத்தியில் சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

    காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் எங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்று பலர் எங்களிடம் கூறினார்கள், ஆனால் எங்கள் கட்சியினரே எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர். மே 20 அன்று, ஏக்நாத் ஷிண்டேவிற்கு முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே வழங்கினார்.

    ஆனால் அவர் தற்போது நாடகம் நடத்தி சென்றுவிட்டார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்திக்கு சென்றுள்ளனர், அங்கு வெள்ளம் ஏற்பட்டு பலர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு ஆனந்தமாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களின் ஒரு நாள் சாப்பாட்டுக்கான செலவு ரூ. 9 லட்சம், இது பெரும் அவமானத்திற்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவுகாத்தி ஓட்டலில் சிவசேனாவின் 8 மந்திரிகள் உள்பட அந்த கட்சியை சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
    • ஒரு வாரமாக இழுபறி நீடித்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் இனி அடுத்தடுத்த புதிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜனதா-சிவசேனா கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றன. ஆனால் தேர்தலுக்கு பின்னர் தனது இந்துத்வா கொள்கைக்கு முரணான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்து சிவசேனா அரசியல் அரங்கை அதிர வைத்தது.

    கட்சிக்கு எதிராக திரும்பிய எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பதவியை பா.ஜனதா தங்களுக்கு 2½ ஆண்டுகள் விட்டு தர மறுத்ததால், சிவசேனா இந்த தடாலடி நடவடிக்கையை மேற்கொண்டது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலம் சிவசேனா- 55, தேசியவாத காங்கிரஸ்- 53, காங்கிரஸ்- 44 என்ற நிலையில், பா.ஜனதா வசம் மட்டும் அதிகபட்சமாக 106 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது.

    இந்தநிலையில் மராட்டியத்தில் கடந்த 20-ந் தேதி இரவில் பரபரப்பு அரசியல் திருப்பம் ஏற்பட்டது. சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல். ஏ.க்கள் கட்சி தலைமைக்கு எதிராக திரும்பினர். அவர்கள் இரவோடு, இரவாக குஜராத் மாநிலம் சூரத் சென்று, பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு விரைந்து அங்குள்ள ஓட்டலில் முகாமிட்டனர்.

    தற்போது, அந்த ஓட்டலில் சிவசேனாவின் 8 மந்திரிகள் உள்பட அந்த கட்சியை சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி அணிக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் குடும்ப விசுவாசியாக இருந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமை தாங்குகிறார். அவர்கள் பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க வேண்டும் என்று சிவசேனா தலைமையை தொடர்ந்து வலியுறுத்தினர்.

    ஆனால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த உத்தவ் தாக்கரே, தனது அரசை கப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    இது தொடர்பாக சிவசேனா அனுப்பிய கடிதத்தை ஏற்று அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கடந்த சனிக்கிழமை சட்டசபை செயலாளர் மூலம் துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்ற கேள்வியுடன் நேற்று மாலை 5.30 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் தங்களை தகுதிநீக்கம் செய்ய அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "துணை சபாநாயகர் நர்ஹரி ஜர்வாலுக்கு எதிராக நாங்கள் அளித்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதில் முடிவு எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை. மேலும் சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவராக அஜய் சவுத்திரியை நியமித்த துணை சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்.

    தங்களது அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டு இருந்தது. மேலும் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை தாங்கள் திரும்பபெறுவதாகவும், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையின்போது அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நீரஜ் கிஷன் கவுல், "துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலை நீக்க கோரும் தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோரும் விவகாரத்தில் அவரால் முடிவு எடுக்க முடியாது" என வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் ஏன் மும்பை ஐகோர்ட்டை நாடவில்லை என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த வக்கீல் நீரஜ் கிஷன் கவுல், "காலம் மிகக்குறைவாக உள்ளது. பலம் கொண்ட சிவசேனா, மனுதாரர்களின் வீடுகளை தாக்கி அரசு எந்திரத்தை முடக்கி வருகிறது. மனுதாரர்கள் அசாமில் எருதுகளை போல கொல்லப்பட்டு, 40 உடல்கள் மட்டும் மும்பை திரும்பும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் மனுதாரர்களுக்கு உகந்த பாதுகாப்பு சூழல் இல்லை" என வாதிட்டார்.

    ஆனால் சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் அஜய் சவுத்திரி மற்றும் தலைமை கொறடா சுனில் பிரபு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, "2020-ம் ஆண்டு ராஜஸ்தான் ஐகோர்ட்டை தவிர, சபாநாயகரின் நடவடிக்கைகளில் இதுவரை கோர்ட்டு தலையிடவில்லை" என வாதிட்டார். மேலும் சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் அஜய் சவுத்திரி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் தேவ்தத் காமத், இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது, தகுதி நீக்க நடவடிக்கைகளுக்கு இதுவரை கோர்ட்டு தடை விதித்தது இல்லை என கூறினார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரையும் தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ரிட் மனு தொடர்பாக 5 நாட்களுக்குள் பதில் அளிக்க மகாராஷ்டிரா சட்டமன்ற செயலாளர், துணை சபாநாயகர், சட்டமன்ற குழு தலைவர் அஜய் சவுத்திரி, சிவசேனா தலைமை கொறடா சுனில் பிரபு மற்றும் மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக அதிருப்தி அணியினர் விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 12-ந் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் முக்கியமாக சட்டசபையில் பலப்பரீட்சை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிராகரித்தனர். இது தேவையற்ற சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்த அவர்கள், இந்த விஷயத்தில் சட்டவிரோதமாக எதுவும் நடந்தால், அப்போது கோர்ட்டை அணுகலாம் என்று கூறினர்.

    இது தவிர அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், அவர்களின் சொத்துகளுக்கும் மகாராஷ்டிரா அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 11-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த இடைக்கால தீர்ப்பை கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது பாலாசாகேப் தாக்கரேயின் (பால் தாக்கரே) இந்துத்வாவுக்கு கிடைத்த வெற்றி என ஏக்நாத் ஷிண்டே வலைதளத்தில் பதிவிட்டார்.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, அதிருப்தி அணிக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், அந்த அணியுடன் சேர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் என்று கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மும்பையில் பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே அசாமில் முகாமிட்டுள்ள அதிருப்தி அணியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மும்பை வர உள்ளதாகவும், அவர்கள் கவர்னரை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரத்திற்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது. சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறும் பட்சத்தில் உத்தவ் தாக்கரே அரசு தோற்கடிக்கப்பட்டு கவிழ்வதற்கான சாத்தியகூறுகள் நிலவுகிறது. இதனால் அவரது அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    எனவே ஒரு வாரமாக இழுபறி நீடித்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் இனி அடுத்தடுத்த புதிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

    • திரும்பி வர விரும்புபவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.
    • அதிருப்தியாளர்கள் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர்.

    மும்பை :

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், அவர்கள் சிவசேனாவின் புதிய அணியை உருவாக்கி உள்ளதாக நேற்று அறிவித்தனர். அவர்களின் எதிர்ப்பு காரணமாக மராட்டியத்தில் ஆளும் மகா விகாஸ் அகாடி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எனது வெளிப்படையான சாவல் என்னவென்றால் உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். கடந்த காலங்களில் சகன் புஜ்பால், நாராயண் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்ற கட்சியில் இணைவதற்காக சிவசேனா எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    அதிருப்தியாளர்கள் குழுவுக்குள்ளும் அதிருப்தி ஏற்படலாம். அவர்கள் மீண்டும் மும்பைக்கு வந்தவுடன் உண்மையான அதிருப்தி எங்கு இருக்கிறது என்று தெரியும். சிவசேனா மற்றும் பாலாசாகேப் தாக்கரே ஆகியோரின் பெயரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கவுகாத்தியில் ஓட்டலில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு உள்ள அதிருப்தியாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

    அதிருப்தியாளர்கள் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர். எனவே அவர்கள் ஏன் இன்னும் கவுகாத்தியில் இருக்கிறார்கள். மும்பை வாருங்கள். வரவேற்க நானே விமான நிலையத்திற்கு செல்வேன். திரும்பி வர விரும்புபவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன. கவுகாத்தியில் உள்ள பலருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜனதா முதல்-மந்திரி ஆக்குகிறதா என்று பார்ப்போம்.

    உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் தந்தை பெயரையோ அல்லது வதோதரா, சூரத், டெல்லியில் உள்ள உங்களின் தந்தையின் பெயரையோ பயன்படுத்தி வாக்குகளை பெறுங்கள்.

    அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிர் மற்றும் உடைமைகள் சேதமாகி உள்ள நிலையில், அவர்கள் அங்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நிதியுதவி செய்கின்றனர். அதிருப்தியாளர்கள் தங்கியுள்ள ஓட்டலில் 340 அறைகள் உள்ளன. இது 18 மாடி கட்டிடம். இதில் அதிருப்தியாளர்கள் 3 தளங்களை பதிவு செய்துள்ளனர். நானும் இந்த ஓட்டலில் 40 அறைகள் கேட்டு மின் அஞ்சல் அனுப்பி வருகிறேன்.

    உத்தவ் தாக்கரேவை சுற்றுலா பயணியாக அசாமுக்கு அழைக்க அசாம் முதல்-மந்திரிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மராட்டியம் மற்றும் அசாம் சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன். எனவே அங்குள்ள ஓட்டலில் முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் எனக்கு இன்னும் பதில் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த நோட்டீசை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
    • திலீப் லாண்டே என்ற எம்.எல்.ஏ. கவுகாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

    மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-தேசிய வாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் சிவ சேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான தனி அணியை உருவாக்கி உள்ளார்.

    மொத்தம் உள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றுள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமானதால் பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு சமரசப்படுத்த முயன்றனர். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

    முதல்- மந்திரி பதவியை விட்டு விலக தயார் என்று உத்தவ் தாக்கரே அறிவித்தும் பார்த்தார். அதையும் அதிருப்தி அணி ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்- மந்திரி பதவியைதான் விரும்பவில்லை என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

    மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதோடு தனது தலைமையிலான குழுதான் உண்மையான சிவசேனா என்றும் அவர் உரிமை கோரினார்.

    இந்த நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முதலில் 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சஞ்சய்ராய் முல்கர், ஸ்ரஹிமேன்படேல், ரமேஷ் பார்னரே, பாலாஜி கல்யாண்கர் ஆகிய 4 உறுப்பினர்களுக்கு நோட் டீஸ் அனுப்பி உள்ளது. மொத்தம் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நாளை மறுநாளுக்குள் நோட்டீஸூக்கு பதிலளிக்க சட்டமன்ற துணை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    மும்பையில் புதன்கிழமை மாலையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. 27-ந்தேதிக்குள் விளக்கத்தை அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக சிவசேனா எம்.பி. அரவிந்த் சவாந்த் தெரிவித்தார்.

    மேலும் 16 அதிருப்தி எ.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரியும் துணை சபாநாயகருக்கு சிவசேனா கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசையும் இணைத்து இருக்கிறது.

    இந்த நோட்டீசை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். 27-ந்தேதி அவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மேலும் ஒரு சிவசேனா எம்.எல்.ஏ. அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்துள்ளார்.

    திலீப் லாண்டே என்ற எம்.எல்.ஏ. கவுகாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அதிருப்தி குழுவில் உள்ள சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.

    ஆனால் தனக்கு மொத்தம் 52 எம்.ஏல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஷிண்டே தெரிவித்து உள்ளார். 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 12 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் இருப்பதாக அவரது தரப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தாங்கள்தான் உண்மை யான சிவசேனா என்று துணை சபாநாயகருக்கு ஏக்நாத் ஷிண்டே கடிதம் அனுப்பி உள்ளார். இன்று பிற்பகல் அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த நிலையில் சிவ சேனா கட்சியின் ஆலோ சனை கூட்டம் இன்று நடக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

    ×