search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Airport"

    • துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது.
    • சுமார் ரூ.85 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் ஆண் ஊழியர், தனது இரவு பணியை முடித்துவிட்டு நேற்று விமான நிலைய ஊழியர்கள் வெளியேறும் வாசல் வழியாக வந்து கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவர் அணிந்திருந்த ஷூவை கழற்றும்படி பாதுகாப்புப் படை வீரர்கள் கூறினர். அவர் ஷூவை கழற்ற மறுத்ததால் சந்தேகம் அடைந்த வீரர்கள் அவரை தனி அறைக்குச் சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் காலில் அணிந்திருந்த சாக்சுக்குள் 3 சிறிய பார்சல்கள் இருந்தன. அவைகளைப் பிரித்துப் பார்த்தபோது தங்கம்இருந்தது தெரியவந்தது. சுமார் 1.281 கிலோ எடையுடைய தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒப்பந்த ஊழியரையும், தங்கத்தையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுங்கத்துறை அதிகாரிகள் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
    • சர்வதேச விமானம் உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர்.

    ஆலந்தூர்:

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் அபுதாபியில் இருந்து வரும் சென்னை விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அவர்களுடைய உடமைகளையும் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள் யாரிடமும் தங்கம் சிக்கவில்லை.

    மேலும் அந்த சர்வதேச விமானம் உள்நாட்டு விமானம் செல்ல இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் வயர்கள் செல்லக்கூடிய பகுதியில் நம்பர் லாக்குடன் கருப்பு நிற டேப் சுற்றப்பட்டு சோப் வடிவில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மொத்தம் 4½ கிலோ தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 ½ கோடி ஆகும். கடத்தல் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோான பரவல் அதிகரித்த போது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பின்னர் நிலைமை சீரானதும் சென்னைக்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், மீண்டும் படிப்படியாக விமான சேவைகளை தொடங்கின. ஆனால் ஹாங்காங், மொரிஷியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் ஹாங்காங்- சென்னை- ஹாங்காங், இடையே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விமான சேவையை, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து, இயக்க உள்ளது. முதலில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும், இந்த விமான சேவைகள், பயணிகள் வரவேற்பை பொறுத்து, வாரத்தில் 7 நாட்களும், தினசரி இயக்கப்பட இருக்கிறது.

    இதேபோல் சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு, ஏர் மொரிஷியஸ் விமான சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளன. வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்கள் இயக்கப்பட்ட இந்த விமான சேவைகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விமான சேவையை தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹாங்காங், மொரிஷியஸ் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட இருப்பது பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக ஹாங்காங் விமான சேவை, தொழில்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவைகளாக விளங்கி இருந்தது. அதோடு ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு, இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் தொழில் துறையினர் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைப்போல் ஏர் மொரிஷியஸ் விமானம், மாணவ மாணவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவையாக செயல்பட்டது. மொரிசியஸ் நாட்டில் பல்வேறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், ஏராளமான மாணவ மாணவிகள், மொரிஷியசில் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக, விமான சேவைகள் இல்லாததால், இந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் சென்று மொரிசியஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அதிகம் பண செலவு, பயண நேரம் ஏற்பட்டு மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • விமானத்தை இயக்குவதற்கு முன், இயந்திரங்களை சரி பார்த்த போது விமானத்தில் ஏசிக்கு தேவையான ஆக்சிஜன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
    • பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் சென்னையில் அவதிக்கு உள்ளாகினர்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து 276 பயணிகளுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு புறப்பட இருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை இயக்குவதற்கு முன், இயந்திரங்களை சரி பார்த்த போது விமானத்தில் ஏசிக்கு தேவையான ஆக்சிஜன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

    இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தங்கள் நாடுகளுக்கு செல்ல இருந்த பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் சென்னையில் அவதிக்கு உள்ளாகினர்.

    • பாதுகாப்பு அதிகாரிகள் பயணி விஜய கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர்.
    • சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக விஜய் கிருஷ்ணாவிடம் மேலும் விசாரணை நடத்தினர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பினர். அப்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த விஜய கிருஷ்ணா (வயது 35) என்ற பயணியின் கைப்பையை ஸ்கேனில் பரிசோதித்த போது, அபாய எச்சரிக்கை மணி ஒலித்தது.

    இதனால் பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், பயணியின் கைப்பையை தனியே எடுத்து சென்று பரிசோதித்தனர். அந்த கைப்பைக்குள், துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டு ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். அது 9 எம்.எம் ரகத்தை சேர்ந்த குண்டு ஆகும். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் பயணி விஜய கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது விஜய கிருஷ்ணா, 'தான் அமெரிக்காவில் வசிப்பதாகவும், காலையில் லண்டனிலிருந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டு, தற்போது டிரான்சிட் பயணியாக மதுரை செல்ல உள்நாட்டு விமான நிலையம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். தான் அமெரிக்காவில் ரைபிள் கிளப் உறுப்பினர். எனவே எனது சொந்த உபயோகத்திற்காக துப்பாக்கி குண்டுகளை, அமெரிக்காவில் இருக்கும்போது, ஆன்லைனில் வாங்கினேன், அதில் ஒரு குண்டு தவறுதலாக இந்த பையில் இருந்திருக்கிறது. நான் அந்தப் பையை கவனிக்காமல் எடுத்து வந்து விட்டேன்'என்று தெரிவித்தார்.

    ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள் விஜய கிருஷ்ணாவின் பயணத்தை ரத்து செய்து, அவரையும், துப்பாக்கிக் குண்டையும், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

    சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக விஜய் கிருஷ்ணாவிடம் மேலும் விசாரணை நடத்தினர். அதன்பின்பு, துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்த போலீசார், பயணி விஜய கிருஷ்ணாவை, விசாரணைக்கு அழைக்கும் போது, மீண்டும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நேற்று இரவு அனுப்பி வைத்துள்ளனர்.

    • 30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
    • மொத்தமாக 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை 20 செ.மீ வரை மழை கொட்டியதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்ணீர் தேங்கியதால் விமானங்களை இயக்க முடியவில்லை. வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வந்த விமானங்களும் தரை இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. நேரம் செல்லசெல்ல ஓடுதளத்தில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால் விமானத்தை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்த சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அரபு நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், சென்னை விமான நிலையத்திற்கு வந்த 30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மொத்தமாக 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஓடு தளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றினால்தான் வழக்கமான விமான சேவைகளை இயக்க முடியும். இதனால் இன்று இரவு 11 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு பயணிகள், சரக்கு, தனி, ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வகையிலான விமானங்களும் வருவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் அப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இருந்தபோதிலும் பெங்களூரு, டெல்லி, திருச்சி, கோவை, மதுரை, போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    • சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை.
    • நான் இதுவரை தரம்குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மணிப்பூர் சம்பவத்திற்காக முதலில் குரல் கொடுத்தது நான்தான். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என எப்படி சொல்வீர்கள்?

    என்னுடைய டுவீட்டில் தெளிவாகவே நான் கூறியுள்ளேன். சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. இதுவரை நான் தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.

    புரிந்து கொள்ளாதவர்களை பற்றி நான் என்ன செய்ய முடியும்? வேளச்சேரி, செம்மஞ்சேரி பெயர்களில் உள்ள அர்த்தம் என்ன?

    அரசாங்க கோப்புகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது

    திரவுபதி முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்ற போது காங்கிரஸ் கட்சியினர் சொன்னது என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • பயண நேரம் குறைவு என்பதால் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • வழக்கமான கட்டணத்தை விட தற்போது 3 மடங்கு விமான கட்டணங்கள் உள்ளன.

    ஆலந்தூர்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள்(12-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்கள், பஸ்களில் டிக்கெட்கள் இல்லை. அரசு சிறப்பு பஸ்கள் அனைத்திலும், ஏற்கனவே பயணிகள் முன்பதிவு செய்து விட்டனர்.

    இதையடுத்து விமான பயணத்தை பெரும்பாலானோர் தற்போது தேர்வு செய்து வருகிறார்கள். பயண நேரம் குறைவு என்பதால் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று முதல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவை செல்லும் விமானங்களில் வழக்கத்தை விட பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) இந்த விமானங்களில், பெரும்பாலான டிக்கெட் விற்று தீர்ந்தன. ஒரு சில உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த டிக்கெட் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன. வழக்கமான கட்டணத்தை விட தற்போது 3 மடங்கு விமான கட்டணங்கள் உள்ளன. சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,390. ஆனால் இன்றும், நாளையும் இதன் கட்டணம் ரூ.11,504 ஆக உள்ளது. இதேபோல் தூத்துக்குடி-ரூ.13,287, கோவை-ரூ.13,709, திருச்சி-ரூ.13,086, மதுரை-ரூ.13,415 ஆக உயர்ந்து உள்ளன.

    விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும், சொந்த ஊரில் தங்கள் குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகையை, கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் கட்டணத்தை பற்றி யோசிக்காமல், போட்டிப்போட்டுக் கொண்டு, விமான பயணம் செல்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில், பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

    • சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 4.6 லட்சம். உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 10.5 லட்சம்.
    • சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1,218 விமானங்கள் அதிகரித்து உள்ளன.

    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம், 3,129 சர்வதேச விமானங்கள், 8,962 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் முழுவதும், சென்னை உள்நாட்டு விமான நிலையம், சர்வதேச விமான நிலையம் இரண்டிலும் சேர்த்து மொத்தம் 12,873 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

    நாள் ஒன்றுக்கு சராசரியாக 104 சர்வதேச விமானங்களும், 299 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 403 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த செப்டம்பர் மாதம் சென்னை சர்வதேச உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. மொத்தம் 17.6 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதில் சர்வதேச பயணிகள் 5.02 லட்சம். உள்நாட்டு பயணிகள் 12.58 லட்சம் ஆவர். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட மொத்த விமானங்கள் 10,873. அதில் சர்வதேச விமானங்கள் 2,704. உள்நாட்டு விமானங்கள் 8,169. நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 சர்வதேச விமானங்களும், 272 உள்நாட்டு விமானங்களும் மொத்தம் 362 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 2022 செப்டம்பரில், சென்னை விமான நிலையத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 15.1 லட்சம். அதில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 4.6 லட்சம். உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 10.5 லட்சம்.

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1,218 விமானங்கள் அதிகரித்து உள்ளன. அதேபோல் பயணிகள் எண்ணிக்கை, 1.8 லட்சம் அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில் ஒப்பிட்டுப் பார்க்கையில், சென்னை விமான நிலையத்தில், விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள், தொழில், வர்த்தக துறையினர் அதிகரித்து வருவதால், இந்த சாதனையை சென்னை விமான நிலையம் படைத்து உள்ளது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

    • தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தினகரன் என்பவரும் உதவி வந்தது தெரிந்தது.
    • வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக கிலோ கணக்கில் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் தங்கம் கடத்தல் குறையவில்லை. மேலும் தங்கம் கடத்தலுக்கு சென்னை விமான நிலையம் முக்கிய இடமாக மாறி வந்தது.

    இந்த நிலையில் தங்கம் கடத்தலுக்கு உதவியதாக சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கும்பலுக்கு துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிலர் உதவி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துப்புரவு பணியில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வரும் சீனிவாசன் என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரிடம் சோதனை நடத்தினர். அவர், தனது உள்ளாடைக்குள் ஒரு கிலோ தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 3.70 கிலோ தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    வெளிநாடுகளில் இருந்து வரும் கடத்தல் கும்பலிடம் சென்னை விமான நிலையத்துக்குள் சீனிவாசன் தங்க கட்டிகளை வாங்கி அதனை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து கொடுத்து உதவி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.70 கோடி ஆகும்.

    மேலும் இந்த தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தினகரன் என்பவரும் உதவி வந்தது தெரிந்தது. அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். கைதான சீனிவாசன், தினகரன் எந்தெந்த தங்கம் கடத்தல் கும்பலிடம் தொடர்பில் இருந்தனர், அவர்களிடம் தங்க கட்டிகளை கொடுத்து சென்றவர்கள் யார்? அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேறு எந்த ஊழியர்களும் உதவினார்களா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலகம் முழுவதும் 1922-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது.
    • வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.

    மீனம்பாக்கம்:

    உலகம் முழுவதும் 1922-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் சர்வதேச வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.

    சென்னை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் வாயிலாக சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 450 விமான சேவைகள் கையாளப்படுகின்றன.

    சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் செயற்கைகோள் வாயிலாக கடல் மேல் செல்லும் விமானங்களை கண்காணிப்பதற்கான நவீன தொழில் நுட்பங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. அதே போல தென் இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரம் அடி முதல் 46 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் விமானங்களில் உள்ள விமானிகளுடன் தொடர்பு கொள்ள அதி உயர அலைவரிசை தொழில்நுட்பமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் தென் இந்தியா முழுவதும் 1500 விமானங்கள் கையாளப்படும். விமானங்கள் தடையில்லாமல் வானில் பறக்க, தரையிறங்க, ஓடுபாதைக்கு செல்ல, வானில் ஒரு விமானத்துடன் மற்றொரு விமானம் மோதாமல் இருக்க செய்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் பணி ஆகும். எந்தொரு பயணிக்கும் பாதிப்பு இல்லாமல் விமான பயணத்தை மேற்கொள்ள தரையில் இருந்து கையாளும் பணியை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விமானத்தில் பயணம்செய்ய மிகவும் குறைவான பயணிகளே முன்பதிவு செய்து இருந்தனர்.
    • செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது

    ஆலந்தூர்:

    இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் இருந்து இன்று அதிகாலை 2:10 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரவேண்டும். இதேபோல் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:10 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட்டு செல்லும்.

    இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்ய போதுமான பயணிகள் இல்லாததால் இந்த 2 விமானங்களின் சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டன.

    இந்த விமானத்தில் பயணம்செய்ய மிகவும் குறைவான பயணிகளே முன்பதிவு செய்து இருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பயணிகள் வேறு விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டன.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, போதிய பயணிகள் இல்லாததால் 2 இலங்கை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது என்றனர்.

    ×