search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cesarean"

    • தாய்மை பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்.
    • அனைவரின் கவனமும் கர்ப்பிணியின் மீது இருக்கும்.

    ஒன்பது மாத புதிய உயிர் ஒன்றை உருவாக்கும் பயணம் பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம். நாம் நினைப்பதைக் காட்டிலும், தாயின் வயிற்றில் கரு உருவாவது மிகவும் சிக்கலான விஷயம். இந்த காலகட்டத்தில் கணவன், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் கவனமும் அந்த கர்ப்பிணியின் மீது இருக்கும். கர்ப்பிணியை சந்திக்கும் மூத்தவர்கள், "வயிறு மேல இருக்கு… பெண் குழந்தைதான்" என்பது உள்பட பல்வேறு விஷயங்களைச் சொல்லிச் சென்றுவிடுகின்றனர்.

    கர்ப்பகாலத்தில், கர்ப்பிணியின் உடலில் பலவிதமான அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் சில அறிகுறிகளை வைத்து பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என கணித்துவிட முடியும் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

    மக்கள் மத்தியில் பொதுவாக நிலவி வரும் கர்ப்பகாலம் குறித்த தவறான நம்பிக்கைகளையும் அவற்றுக்கான சரியான அறிவியல் விளக்கங்களையும் தெரிந்துகொள்வோம்.

    தவறான நம்பிக்கை – 1

    தாயின் வயிற்றுக் கோணத்தை வைத்தும், பருமனை வைத்தும் பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. கர்ப்பமான தாயின் வயிறு மேலே இருந்தால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் எனவும், கீழே இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் எனவும் கூறுவர்.

    உண்மை நிலை:

    தாயின் வயிற்றில் தோலுக்குக் கீழே உள்ள கொழுப்பு படலத்தின் அளவு, தசை வலிமை, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தே கருவைச் சுமக்கும் வயிற்றின் அளவு மாறுபடும். எனவே, தாயின் வயிற்றின் அமைப்புக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    தவறான நம்பிக்கை – 2

    தாய்க்கு உப்புச் சுவை பிடித்தால், ஆண் குழந்தையும் இனிப்புச் சுவை பிடித்தால், பெண் குழந்தையும் பிறக்கும்.

    உண்மை நிலை:

    நமது உடலில் தாது உப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்போது உடல் தானாகவே சுவைத்தேடல் மூலம் குறைபட்ட ஊட்டச்சத்தைக் கேட்டுப்பெறும். இதை `ஃபுட் க்ரேவிங்' என்பார்கள். `ஃபுட் க்ரேவிங்'குக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் எந்தசம்பந்தமும் இல்லை.

     தவறான நம்பிக்கை – 3

    கர்ப்பமுற்ற மூன்றாவது மாதத்தில் தாய் அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தைக்கு முடி அதிகம் இருக்கும்.

    உண்மை நிலை:

    குழந்தையின் உச்சந்தலை, முடியின் அடர்த்தி பரம்பரை மரபணுக்களைப் பொறுத்தது. இதற்கும் வாந்தி, நெஞ்செரிச்சல் ஆகியவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    தவறான நம்பிக்கை – 4

    தாய்க்கு வலியில்லாத சுகப்பிரசவம் ஆகியிருந்தால், அவரது பெண்ணுக்கும் சுகப்பிரசவமே ஆகும்.

    உண்மை நிலை:

    இதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. குழந்தையின் எடை, வயிற்றில் குழந்தையின் நிலை, தாயின் இடுப்பு எலும்பின் சுற்றளவு, கர்ப்பகாலத்தில் தாயின் உணவுக்கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் ஆகியவையே சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என முடிவு செய்யும் முக்கியக் காரணிகள்.

     தவறான நம்பிக்கை – 5

    கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதால், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

    உண்மை நிலை:

    கருவுற்ற தாயின் வயிற்றின் கீழ்ப் பகுதியில் ஏழு அடுக்குத் தோல் படலம் கருவைப் பாதுகாக்கிறது. இந்த தோல் படலம், வெளியில் இருந்து வரும் எதிர்பாராத அதிர்வுகளிடம் இருந்து கர்ப்பப்பை நீரில் மிதக்கும் கருவைப் பாதுகாக்கிறது. கரு முட்டையில் விந்து நுழைந்து, கர்ப்பப் பையில் கரு பதிந்ததும், `செர்விக்ஸ்' எனப்படும் கர்ப்பப்பை வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளும். இதனால் மேற்கொண்டு விந்து நுழைய முடியாது. ஆகையால், உடலுறவு கொள்வதால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அதீத ரத்தப் போக்கு, வெள்ளைப்படுதல், கருச்சிதைவுக்கான வாய்ப்பு மற்றும் வேறு சில கோளாறுகள் உள்ள தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உறவு வைத்துக் கொள்வது நல்லது.

    தவறான நம்பிக்கை – 6

    குங்குமப் பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.

    உண்மை நிலை:

    தோலின் நிறம், மெலனின் நிறமியின் அளவைப் பொறுத்தது. குழந்தையின் கண், காது, மூக்கு, கை, கால் உள்ளிட்ட உடற்பகுதிகளின் அமைப்பு, தோலின் நிறம், குணாதிசயங்கள் ஆகியவை, தாய், தந்தை, முன்னோர்கள் ஆகியோரின் மரபணுக்களைச் சார்ந்தது. தாய் ஊட்டச்சத்து பானங்களைப் பருகுவதன் மூலமாகவோ குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிடுவதனாலோ, குழந்தையின் சரும நிறத்தில் எந்த மாறுதலும் ஏற்படாது.

    தவறான நம்பிக்கை – 7

    கர்ப்பகாலத்தில் தாயின் ஊட்டச்சத்துக்காக இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால், குழந்தையின் சரும நிறம் கறுக்கும்.

    உண்மை நிலை:

    இது உடல்நலத்துக்கே ஆபத்தான, மிகத்தவறான நம்பிக்கை. கர்ப்பிணிக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மிகவும் அவசியம். இந்தியாவில், பிரசவ காலத்தில் ஏற்படும் மரணங்களில், 50 சதவிகிதம் ரத்த சோகையினால் ஏற்படுகிறது. இந்த நோய் வராமல் தடுக்க, மருத்துவர் ஆலோசனையின் பேரில் தாய்மார்கள் கட்டாயம் இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.

     தவறான நம்பிக்கை – 8

    மாதவிலக்கு தள்ளிப்போன மூன்றாவது மாதத்தில் தான் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உடனே செய்து கொண்டால், கரு கலைந்துவிட வாய்ப்புஉண்டு.

    உண்மை நிலை:

    இந்த தவறான நம்பிக்கை, தமிழகத்தில் பல குடும்பங்களில் நிலவுகிறது. சிக்கலான பிரசவத்தில் மிக முக்கியமானது எக்ட்டோபிக் கர்ப்பம். இந்த நிலையில் கர்ப்பப்பைவாய் வழியாக உள்ளே நுழையும் விந்தணு, கரு முட்டையை அடையாமல், இடையில் உள்ள கருக்குழாயில் தங்கி, அங்கேயே கரு உருவாகி வளரத் தொடங்கிவிடும். கருவின் எடையைத் தாங்க முடியாமல் கருக்குழாய் வெடித்து, சிசுவுக்கு ஆபத்து ஏற்படும். கரு, முட்டையில் தான் உருவாகி வளர்ந்து வருகிறது என்பதை உறுதிசெய்துகொள்ள, மாதவிலக்கு தள்ளிப்போனதுமே கட்டாயம் மகப்பேறு மருத்துவரை சந்தித்து, ஸ்கேன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    தவறான நம்பிக்கை – 9

    தாயின் வயிற்றில் மச்சம் இருந்தால், சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்.

     உண்மை நிலை:

    மச்சம் என்பது, நிறமியைத் தயாரிக்கும் தோல் செல்களான மெலனோசைட்கள், தோலில் ஒரு சில இடங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் மச்சம் உருவாகிறது. மனிதர்களுக்கு 40 வயது வரை புதிய புதிய மச்சங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. தோலின் நிறத்தைப் பொறுத்து இவை சிவப்பு, கறுப்பு, பழுப்பு என பல நிறங்களில் உடலில் தோன்றும். இதற்கும் கர்ப்பத்துக்கும், பிரசவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    தவறான நம்பிக்கை – 10

    குழந்தையின் உடல்பருமன் முன்னோர்களின் மரபணுக்களை மட்டுமே சார்ந்தது.

    உண்மை நிலை:

    கருவுற்றிருக்கும் தாய்மார்களின் தவறான உணவுப் பழக்கம் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். கருவுற்ற சமயத்தில் அதிக அமிலத்தன்மை உடைய உணவுகள், மசாலா மற்றும் நிறைவுறாக் கொழுப்பு கலந்த உணவுகளைத் தாய்மார்கள் சாப்பிட்டால், அவை குழந்தையின் உடல்பருமனை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே, கருவுற்ற காலத்தில் தாய்மார்கள் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு, பயறு வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்
    • அடுத்த குழந்தைக்கு 2-லிருந்து 4 வருடங்கள் இடைவெளி தேவை.

    தற்போது இந்தியாவில் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

    அநேகமாக சிசேரியன்தான் என்று முடிவு செய்துவிட்டால், சிகிச்சைக்கு 6-8 மணி நேரத்துக்கு முன்பாகவே திட உணவு சாப்பிடக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடலின் வெப்பநிலை போன்ற கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்; எனிமா கொடுப்பது, சிறுநீர் வெளியேற கதீட்டர் சொருகுவது, உடலைச் சுத்தப்படுத்துவது, குளுக்கோஸ் சலைன் ஏற்றுவது போன்ற முன் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படும்.

    குழந்தையின் இதயத் துடிப்பு கண்காணிக்கப்படும். கர்ப்பிணிக்குப் பொருத்தமான ரத்தம் தயாராக வைத்துக் கொள்ளப்படும். பொதுவாக, சிசேரியனுக்கு மூச்சு வழியாகத் தரப்படும் பொதுவான மயக்கம், முதுகில் ஊசி போட்டு பெறப்படும் முதுகுத் தண்டுவட மயக்கம் (ஸ்பைனல் அல்லது எபிடூரல்) ஆகியவை பயன்படுத்தப்படுவது நடைமுறை.

    இவற்றில் பொதுவான மயக்கத்தில் கர்ப்பிணி உறங்கிவிடுவார். வலி தெரியாது. மற்ற மயக்கத்தில் கர்ப்பிணிக்கு நினைவு இருக்கும். குழந்தையை வெளியில் எடுப்பதைக் காண முடியும். என்றாலும் வலி தெரியாது.

    சிசேரியனுக்குப் பின்…

    சிசேரியன் செய்யப்பட்ட பிறகு 3 - 5 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியது இருக்கும். இரண்டாம் நாளில் சாப்பிடத் தொடங்கலாம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு மாடிப்படி ஏறலாம். ஒரு மாதம் கழிந்த பிறகு பல வேலைகளைச் செய்ய முடியும். அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதை மட்டும் சில மாதங்களுக்குத் தள்ளிப் போட வேண்டும்.

    அடுத்த குழந்தைக்கு 2-லிருந்து 4 வருடங்கள் இடைவெளி தேவை. இரண்டாவது குழந்தைக்கான சிசேரியன் என்றால், குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால், கருத்தடை அறுவை சிகிச்சைக்காக இன்னொரு முறை வயிற்றைக் கிழிக்க வேண்டியது வரும்.

    • சில பெண்கள், பிரசவ வலிக்கு பயந்து அவர்களே ஆபரேஷனை விரும்புகிறார்கள்.
    • இளம் தாய்மார்களிடையே ‘சிசேரியன்’ வழக்கமானதாகி விட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சிசேரியன் அல்லது சி-செக்ஷன் ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில், ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறக்கும் விகிதம் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    குறிப்பாக, 2015-2016 நிதிஆண்டில் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறப்பது 40.9 சதவீதத்தில் இருந்து 47.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இளம் தாய்மார்களிடையே 'சிசேரியன்' வழக்கமானதாகி விட்டது.

    இதுகுறித்து ஐதராபாத்தில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியின் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா ரெட்டி கூறியதாவது:-

    பிரசவ அறையில் தொடர் கண்காணிப்பு, சிசேரியனுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. வலி நிவாரணம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அது பாதுகாப்பான வழிமுறைதான்.

    பெண்கள், தாமதமாக திருமணம் செய்கிறார்கள் அல்லது 35 வயதில் தாமதமாக கர்ப்பம் தரிக்கிறார்கள். அவர்களுக்கு சிசேரியனை தவிர்க்க முடியவில்லை. சில பெண்கள், பிரசவ வலிக்கு பயந்து அவர்களே ஆபரேஷனை விரும்புகிறார்கள்.

    இயற்கை பிரசவம், தாய், குழந்தை இரண்டு பேருக்குமே ஆபத்தும், சிக்கலும் நிறைந்தது. இயற்கை பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்க நாள்தோறும் 30 நிமிட நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிளிங் அல்லது நடைபயிற்சி மூலம் இதய துடிப்பை அதிகரிக்க வேண்டும். வாரத்துக்கு ஒன்று அல்லது 2 தடவை யோகா வகுப்புகளுக்கு செல்லலாம். சில பெண்களுக்கு மருத்துவ மற்றும் கர்ப்பகால கோளாறுகள் இருக்கலாம். அவர்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    கர்ப்பிணிகள், போதிய புரதம் மற்றும் ஆற்றலை அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சிசேரியன் முடிந்த பிறகு தாய்மார்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சுகபிரசவம் செய்த பெண்கள் சீக்கிரமே தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவர். ஆனால், சிசேரியன் செய்த பெண்களுக்கு கொஞ்சம் கடினம்தான். என்னென்ன பராமரிப்புகள், வழிமுறைகள், டிப்ஸ் (C-Section Recovery Tips) போன்றவை இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

    * குழந்தை பிறந்து 2 வாரம் வரை வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலியைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள். சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.

    * தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளை உண்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

    * டாக்டர் உங்களை நடக்கலாம் என சொன்னதும், நீங்கள் நடக்கத் தொடங்கிவிடுங்கள். நடப்பது நல்லது. குறைந்தது 20-30 நிமிடங்களாவது நடப்பது நல்லது.

    * உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம். குறிப்பாக, சத்தான உணவு வேண்டும். புரோக்கோலி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது.

    * கர்ப்பக்காலம், பிரசவத்துக்கு பின் சில காலம் வரை மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கும். வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் கால்களுக்கு சின்ன ஸ்டூல் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மலம் கழிக்க சுலபமாக இருக்கும்.

    * முதல் 6 வாரத்துக்கு அதிக எடையை தூக்க வேண்டாம். வலி முழுமையாக நீங்கிய பின் உங்களது தினசரி வேலைகளை செய்யலாம்.

    * சி-செக்‌ஷன் செய்த பிறகு, குழந்தை பிரசவித்த பிறகு ஒருவித மோசமான மனநிலை இருக்கும். இது இயல்புதான். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உங்கள் துணையுடன், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். மாம்ஸ் கம்யூனிட்டியில் சேர்ந்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    * சில வாரங்கள் வரை வஜினல் டிஸ்சார்ஜ் இருக்கும். குழந்தை வயிற்றில் இருந்த போது உள்ள தேவையில்லாத திசுக்கள், ரத்தம் ஆகியவை வெளியேறும். முதல் வாரம் அடர்சிவப்பாக வெளியேறும் பிறகு பிங்க், பிரவுன், மஞ்சள் என நிறம் மாறி வரும். அப்புறம் தானாக டிஸ்சார்ஜ் நின்றுவிடும். இதற்காக பயம் தேவையில்லை.

    * கொலஸ்ட்ரம் என்ற சீம் பால், உங்கள் குழந்தைக்காக உங்களது மார்பகங்களில் உருவாகுவதால் வீக்கமாக இருக்கலாம். இது இயல்புதான்.



    * சி-செக்‌ஷன் சர்ஜரி என்பது பெரிய சர்ஜரிதான். உடல் தன்னை சரிசெய்து கொள்ள நேரத்தை எடுத்துக்கொள்ளும். 6 வாரங்களுக்கு அவ்வப்போது ஓய்வு எடுங்கள். குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்குங்கள். குழந்தையின் துணி, டயாப்பர் மாற்ற உங்களது துணை, உறவுகள் ஆகியோர் உதவும்படி கேட்டு கொள்ளுங்கள்.

    * 6-7 வாரங்களுக்கு பிறகு நீங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம். மிதமான, மெதுவான முறையில் ஈடுபடுவது நல்லது.

    * மலச்சிக்கல், நீர் வறட்சி, உடல் சூடு, சிறு சிறு சூடு கட்டிகள் வராமல் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

    * முதல் 4-6 வாரங்கள் வரை ஸ்விம்மிங், டப்பில் சூடாக குளியல் போன்றவற்றைத் தவிர்க்கவும். அனஸ்திஷியா, மருந்துகள் ஆகியவை உடலிருந்து வெளியேற தினமும் ஒரு டம்ளர் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சை சாறை குடியுங்கள். இதனால் உடலில் சேர்ந்துள்ள மருந்து கழிவுகள் வெளியேறும்.

    * புரதம், இரும்புச்சத்து, விட்டமின் சி உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். புரத உணவுகளை சாப்பிட்டால் திசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காயம் விரைவில் மறையும். ரத்தப்போக்கை ஈடு செய்ய இரும்புச்சத்து உணவுகள் உதவும். விட்டமின் சி உள்ள உணவுகள் தொற்றுகள் வராமல் பாதுகாக்கும்.

    * பட்டைத் தூளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டையும் குழம்பு, கீரை, காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இளநீர் குடிப்பது நல்லது. செம்பருத்தி டீ குடிக்கலாம். கர்ப்பப்பையை சுத்தமாக்கும்.

    * தழும்பின் மீது ஃப்ரெஷ் ஆலுவேரா ஜெல்லை பயன்படுத்துங்கள். ஸ்கரப் செய்ய கூடாது. மைல்டான பாடிவாஷ் பயன்படுத்துங்கள். தழும்பின் மீது விட்டமின் இ காப்சூலில் உள்ள எண்ணெயைத் தடவலாம்.

    * முதல் 3-4 மாதங்களுக்கு உங்கள் முடி அதிகமாக உதிரும். அடர்த்தி குறைந்து போகலாம். இதுவும் இயல்புதான். ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுகிறது. சிவப்பான, அடர் ஊதா நிறத்தில் கூட ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கலாம். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

    * நீங்கள் தும்மும் போது, இரும்பும் போது, சிரிக்கும்போது ஒரு கையால் உங்கள் வயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள்.

    * 2-3 மூச்சுகள் ஆழ்ந்த மூச்சாக இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். இதை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள். இதனால் நுரையீரல் உள்ள அடைப்புகள் நீங்கும். படுத்துக்கொண்டே இருப்பதால் உள்ள அசௌகரியம் நீங்கும்.

    * மருத்துவர் அனுமதித்த பிறகு மிதமான பயிற்சிகளை செய்யுங்கள். யோகா, ஜிம் செல்வது போன்றவற்றில் ஈடுபடலாம். 
    பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், கர்ப்பப்பை இறக்கத்தால் பாதிக்கப்படுகிற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
    கருவில் குழந்தையை சுமக்கும் அனைத்து பெண்களும் விரும்பும் விஷயம் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பது தான். சிசேரியன் என்றால் வயிற்றை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவாரம் படுக்கையில் இருக்கவேண்டும். 6 மாதத்திற்கு எந்த ஒரு கடினமான வேலையும் பார்க்கக்கூடாது என்று பாடாய் படுத்திவிடும் சிசேரியன் முறை குழந்தை பிறப்பு. எனவேதான் பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    சுகப்பிரசவம் ரொம்பவே நல்லதுதான். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், கர்ப்பப்பை இறக்கத்தால் பாதிக்கப்படுகிற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேற்றுவது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்... இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை தளர்த்திவிடும்.

    பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலும், அதிக எடை தூக்குதல், ரொம்பவும் உடம்பை வருத்துகிற மாதிரியான வேலைகளைச் செய்வதன் மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை பொதுவாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்து இறங்கிவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சரி செய்யறது சுலபம். வலை மாதிரியான ஒன்றின் முனையை கர்ப்பப்பையோட பின் பக்கத்துலயும், இன்னொரு முனையை இடுப்பெலும்புலயும் சேர்த்து தைத்துவிடலாம். இதனால் கர்ப்பப்பை தன்னோட இயல்பான இடத்துக்கே வந்துடும். இந்த சிகிச்சைக்குப் பிறகு எடை தூக்காம இருக்க வேண்டியது முக்கியம்.

    கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டால் அது தனக்குப் பக்கத்துல உள்ள சிறுநீர்ப்பை, மலப்பைகளையும் சேர்த்து இழுக்க ஆரம்பிக்கும். சிறுநீர்ப்பை இறங்கத் தொடங்கினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், முழுமையாக சிறுநீரை வெளியேற்றாத உணர்வும் ஏற்படும். தவிர, அந்தப் பைக்குள் எப்போதும் சிறுநீர் தங்கி, நோய் தொற்றினை ஏற்படுத்தும். அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.

    இதே மாதிரிதான் மலப்பை இறக்கத்திலேயும் பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும்போது சிறுநீர் பை, மலப்பைகளையும் சேர்த்து தூக்கி வச்சுத் தைக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் அவர்கள்.

    எதையுமே கவனிக்காமல் விட்டால், பிரச்சனை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம். பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாமல், கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள் பலவீனமாகி, அதன் விளைவாக, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். கர்ப்பப்பை இறக்கத்தை இப்ப லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமாக ரொம்ப சுலபமா சரி செய்ய முடியும் என்றும் ஆறுதலாக தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.
    தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.
    மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலிகள், பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் இவற்றையெல்லாம் சந்திப்பது, பெண்களைப் பொருத்தவரை இன்றளவும் சவாலான விஷயங்களாகத்தான் இருக்கின்றன. தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.

    ஆனால், அது வசதி படைத்தவர்களுக்குத்தான் சாத்தியமாகிறது. சாதாரண மக்களுக்கும் சென்றடையும் வகையில், இப்போது பிஸியோதெரபி பயின்ற சில பெண் மருத்துவர்கள் வீடு தேடி வந்தும் கற்றுத் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.

    ‘‘கர்ப்பம் தரித்த முதல் மாதத்திலிருந்தே பெண்களுக்கு உடலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பத்தோடு தொடர்புடைய உடற்கூறு மாற்றங்களானது உடலின் வளர்ச்சி, நீரை தக்க வைத்து, பிரசவத்திற்குத் துணை புரியும் கட்டமைப்புகளை தளர்வடையச் செய்தல் போன்றவை அடங்கும். இந்த மாற்றங்கள் முதுகெலும்பு மற்றும் உடலின் எடையைத் தாங்கக்கூடிய மூட்டுகளில் மேலும் சுமையை அதிகரிக்கும்.   

    கருவின் வளர்ச்சிக்கேற்ப ஒரு பெண்ணின் அடிவயிறு, இடுப்பு போன்ற பகுதிகளில் தசைகளில் இறுக்கம் ஏற்படும். ஏனெனில், எடை அதிகரிக்க, அதிகரிக்க அப்பகுதிகளில் அழுத்தம் ஏற்படுவதால் தசைகள் வலுவிழந்து இறுக்கமடைகின்றன. தசைகள் வலுவடைவதற்கான இறுக்கமாக இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. எலும்பு மூட்டுகளை இணைப்பவையாகவும், மூட்டுகளில் முக்கிய ஆதரவாகவும் விளங்கும் தசை நார்கள் மென்மை அடைந்துவிடும்.

    தசைகளில் ஏற்படும் இந்த இறுக்கம் மற்றும் தசை நார்கள் வலுவின்மையால், 2-வது ட்ரைமெஸ்டர் காலங்களில் தோள் பட்டை மற்றும் கழுத்து வலி, கீழ் முதுகுவலி, இடுப்பு வலி, கணுக்கால்களில் வலி மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை என பல்வேறு பிரச்னைகளுக்கு மூல காரணமாகிறது. கர்ப்பம் ஒரு பெண்ணின் உடலில் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது. மேலும், பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை திரும்பும்போது ஏற்படும் அழுத்தத்தை தாங்குவதற்கேற்றவாறு இடுப்பு தசைகள் விரிந்து கொடுப்பதும், பிறப்புறுப்பின் தசைகள் தளர்வடைவதும் அவசியம்.

    பிஸியோதெரபி மருத்துவர் உதவியோடு கருவுற்ற தாயின் சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் குடல் ஆகியவற்றை ஆதரிக்கும் முக்கிய தசைகளுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம், கர்ப்ப காலத்திலும், அதற்குப் பின்னரும் ஏற்படும் வலிகளைத் தடுக்க முடியும். கர்ப்ப காலத்திலேயே தசைகளுக்கு வலுவூட்டுவதன் மூலம் பிரசவ வலி மற்றும் பிரசவத்திற்குத் தயாராகும் தசைகளை (வயிறு, இடுப்பு மற்றும் பின்புற தசைகள்) கட்டுப்படுத்துவதற்கான திறனைப் பெற முடியும். பிரசவ நேரத்தில், எப்படி இடுப்புப்பகுதியில் (Pelvic floor) திறம்பட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இயன்முறை மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

    சரியான அழுத்தம் கொடுப்பதால் Pelvic floor-ல் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் பிரச்னைகளின் வாய்ப்பை குறைக்கும். ஏனெனில், பிரசவ நேரத்தில் இடுப்பில் ஏற்படும் அதிர்ச்சி, ஒரு பெண்ணுக்கு உடலுறவின்போது வலி, சிறுநீர் வெளியேற்றம் கட்டுப்படுத்துவதில் சிரமம் (Urine incontinence) மற்றும் இடுப்பு உறுப்பு பிறழ்வு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

    இடுப்பு மண்டலத்தில் உள்ள தசைகள், இணைப்பு திசுக்கள் மற்றும் நரம்புகளை மதிப்பிடுவதற்கு இயன்முறை மருத்துவத்தில் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் உள்ளன. ஒரு இயன்முறை மருத்துவர் உதவியோடு இந்தப் பயிற்சிகளை செய்வதால் பிரசவ நேரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை கர்ப்பிணிப்பெண் எளிதில் சமாளித்துவிடலாம்.

    கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்குப் பின்னரும், இடுப்பு மற்றும் வயிற்று தசைகள் உள்ளிட்ட இடுப்பு உறுப்புகளை ஆதரிக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் ஒரு பெண் எந்த அளவிற்கு, விரைவாக தன் உடல் செயல்பாட்டை துவங்க ஆரம்பிக்கிறாள் என்பதைப் பொறுத்தே பிரசவத்திற்குப்பின் அவளது முந்தைய உடலமைப்பை விரைவில் மீட்டெடுக்க முடியும்.

    குழந்தை பிறந்த பிறகு பிரசவத்தின் போது இழந்த ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உங்கள் உடல் மீட்டெடுக்கும். முதல் மாதத்தில், ஒரு நாற்காலியிலிருந்து எழுவது, தொட்டிலிலிருந்து குழந்தையை தூக்குவது, தாய்ப்பால் கொடுப்பது, குளிப்பது போன்ற வழக்கமான தினசரி பணிகளைச் செய்வதற்கு ஏதுவானதாக உங்கள் உடல் இருந்தாலே போதுமானது.

    2, 3-வது மாதங்களில் உங்கள் உடல் கொஞ்சம் தேறிய பின்னர், 10 நிமிடங்கள் வரை செய்யக்கூடிய மிதமான பயிற்சிகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அதுவும் உங்கள் மருத்துவரின் ஆலோசனை மற்றும் பிஸியோதெரபிஸ்ட்டின் உதவியோடு செய்வது நல்லது. 4, 5 மாதங்களுக்குப்பிறகு, வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை படிப்படியாக அதிகரித்து செய்யலாம். 
    கர்ப்ப கால மிகை வாந்தி நோயினால் அளவுக்கதிமான வாந்தி இருந்துகொண்டே இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சாதாரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்கள் முதல் சில வாரங்களுக்கு வாந்தி எடுப்பார்கள். காலை வேளைகளில் இது ஓரிரு முறை இருக்கும். தாய்மார்களின் உடல் நிலையினை இது பாதிக்காது. இவர்கள் நன்கு உணவினை எடுத்துக்கொள்வார்கள். மேலும், எடை குறையமாட்டார்கள். ஆனால், கர்ப்ப கால மிகை வாந்தி நோயினால் அளவுக்கதிமான வாந்தி இருந்துகொண்டே இருக்கும்.

    இது, முதல் பிரசவத்திற்குத்தான் அதிகபட்சமான தாய்மார்களிடையே காணப்படும். இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இந்த கர்ப்ப கால மிகை வாந்தி நோயில், வாந்தி வரும் உணர்வும் வாந்தியும் உணவைக் கண்டால் ஒரு ருசியற்ற நிலையும் இருப்பதோடு அது சிறிது சிறிதாக அதிகரித்து அதனால் ஏற்படும் பட்டினியால் தாயின் உடல் நலத்தையே பாதித்துவிடும். இதனால் அத்தாய் உடல் எடையை இழப்பதோடு தோலெல்லாம் சுருங்கி, அவர்கள் செய்யக்கூடிய சாதாரண வீட்டு வேலையைக் கூடசெய்ய முடியாமல் படுக்கையில் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

    நோய் முற்றிய நிலையில் அத்தாய் மிகவும் மெலிந்து? கண்களெல்லாம் குழிவிழுந்து, தோல் உலர்ந்து, கண்களெல்லாம் மஞ்சள் பூத்து, நான்கு உலர்ந்து, உதடுகள் வெடித்து இருக்கும். வயிற்றில் மேல் பகுதி வலிக்கும். காபி நிறத்தில் வாந்தி வரலாம். பின்னர், நோயாளிக்குச் சிறுநீர் போவதும் குறைந்து மயக்க நிலைக்கு வந்து விடுவார்கள். நாடித்துடிப்பு வேகமாகவும் மெல்லியதாகவும் இருப்பதோடு இரத்த அழுத்தம் குறைந்துவிடும். உடல் வெப்பம் குறைந்து முழுமையான மயக்க நிலையினை நோயாளிகள் அடைந்து இறந்துவிடும் வாய்ப்புகள்கூட உண்டு. ஆனால், மருத்துவம் முன்னேற்றமடைந்த இன்றைய காலகட்டத்தில் இதனால் நோயாளிகளின் இறப்பு என்பது நிகழக்கூடியது அல்ல.

    கர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை

    இந்நோய்க்கு, சாதாரண உணவு மாற்றங்களும், நம்பிக்கை அளித்தலுமே போதுமானதாகும். ஆரம்பக் கட்ட கர்ப்பத்தில் வாந்தி வருவது சாதாரண நிகழ்ச்சியே என்பதை எடுத்துச் சொலி, உணவு விஷயத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். நீண்ட இடைவெளிய்ல் அதிக அளவு உணவு உட்கொள்வதை விடுத்து சிறிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக உணவினைச் சாப்பிடுவது நல்லது. அதோடு மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சாப்பிட்டாலேயே இந்நோய் குணமாகிவிடும். கடுமையான நோயுடைய தாய்மார்களுக்குச் சிரை (இரத்தக்குழாய்) வழியாக குளுகோஸ் கொடுக்க வேண்டியதாயிருக்கும்.
    குறைபிரசவத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் எச்சரிக்கையாக இருந்தால் அதை தள்ளி போடலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குறைபிரசவம் என்றால் என்ன?

    பொதுவாக கருவின் வயது 40 வாரங்கள் என வரையறுக்கபட்டுள்ளது. ஆனால் இந்த 40 வாரங்கள் முற்று பெறாமல் 37 வாரங்களிலோ அல்லது அதற்கு முன்போ பிரசவம் தொடங்கி விட்டால் அதை குறைமாதபேறு அல்லது குறைபிரசவம் என சொல்கிறார்கள். கர்ப்பிணி பெண்களில் குறைந்தது 10% பேருக்கு இந்த குறைமாத பேறு உண்டாகிறது.

    குறைபிரசவம் எதனால் ஏற்படுகிறது?

    குறைபிரசவம் உண்டாவதற்கான சரியான காரணம் இது தான் என வரையறுக்க முடிவதில்லை. சில சமயம் பெண்களின் இயக்குநீர்கள், நச்சுக்கொடி, வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம் என சொல்லபடுகிறது. கீழ்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்று குறைமாதபேறு உண்டாவதற்கு காரணமாக சொல்லபடுகிறது.

    1. கர்ப்ப பையின் வாய்ப்பகுதி பலமில்லாமல் இருந்தால்
    2. கர்ப்ப காலத்தின் தொடக்க காலத்தில் ரத்த போக்கு உண்டாகியிருந்தால்
    3. இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருந்தால்
    4. சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால்
    5. கர்ப்ப காலத்தில் சரியான சத்து மிகுந்த உணவை உட்கொள்ளாமல் இருந்தால்.

    குறைபிரசவம் ஏற்பட போகிறது என்பதை எவ்வாறு கண்டறிவது?

    குறைமாதபேறு ஏற்படபோகிறது என்பது முன்பே தெரிந்துவிட்டால் மருத்துவரை அணுகி உங்களின் பிரசவத்தை சில நாட்களுக்கு
    ஒத்தி வைக்கலாம். கீழ்காணும் இந்த அறிகுறிகள் குறைமாதபேறு ஏற்படபோகிறது என்பதன் முன்னறிவிப்பாகும்.

    1. பிறப்புறுப்பிலிருந்து நீரானது ரத்தகசிவுடன் வெளியாவது

    2. அளவுக்கு அதிகமான அழுத்தமானது இடுப்பு மற்றும் அடிவயிற்றில் ஏற்படுவதால்

    3. பிரசவ காலத்தில் ஏற்படும் கர்ப்பபை சுருங்கி விரியும் நிகழ்வு இப்போதே ஏற்படும்.

    குறைபிரசவத்தை எவ்வாறு தடுக்கலாம்?

    குறைபிரசவத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் எச்சரிக்கையாக இருந்தால் அதை தள்ளி போடலாம். உங்கள் மகபேறு மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளிகளில் சந்திப்பது நல்லது. இதற்கு முன்பே குறைமாத பேறு ஏற்பட்ட பெண்களுக்கு மருத்துவர் ப்ரோஜெஸ்டிரான் ஊசியை போடுவதன் மூலம் குறைமாத பேறு ஏற்படாமல் தடுப்பார்.

    மேலும் கனமான பொருட்களை கையாள கூடாது, சிரமம் நிறைந்த வேலைகளை செய்யகூடாது மேலும் உடலுறவு கொள்ள கூடாது. இவற்றை கடைபிடித்தால் குறைபிரசவத்தை தள்ளி போடலாம்.

    எல்லாக் குழந்தைகளுக்கும் தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத் தந்தையும் முக்கியம்தான். பிரசவத்தின் போது மனைவிக்கு மனதளவில் தயாராக கணவன் உதவ வேண்டும்.
    கர்ப்பம் என்பது நோயல்ல அச்சப்படுவதற்கு... அது பெண்ணுக்கே கிடைத்துள்ள ஓர் அற்புதமான அனுபவம் உணர்ந்து ரசிப்பதற்கு! கர்ப்பிணியானவள் தான் தாயாகப் போகிறோம் எனும் மகிழ்ச்சி ஒருபுறம், சுகப்பிரசவம் ஆக வேண்டும் எனும் எதிர்பார்ப்பு மறுபுறம் மனதை அழுத்த, இரு வேறு மனநிலைகளையும் சமாளித்துக்கொண்டு, தன்னைக் கவனித்துக்கொள்வதன் மூலம் வயிற்றில் வளரும் சிசுவையும் பேணிக்கொண்டு வருகிறாள்.

    குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் வரப்போகிறார் எனும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் கர்ப்பிணியைப்போல் கணவருக்கும் தொற்றிக் கொள்வதுண்டு. கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே மனைவிக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையே உதிர்க்க வேண்டும். முக்கியமாக மூன்றாவது டிரைமெஸ்டரின்போது, மனைவிக்கு ஆதரவாகவே பேச வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் வாக்குவாதம் கூடாது. மனதளவில் காயப்படுவதற்கு வாய்ப்பே தரக்கூடாது.

    ஒருவேளை மனைவிக்கு சிசேரியன் தேவைப்படுமானால், அதற்கு அவர் மனதளவில் தயாராக உதவ வேண்டும். கணவரும் அதற்குத் தயாராகிவிட வேண்டும். மருத்துவர் அனுமதித்தால், பிரசவத்தின்போது மனைவியின் அருகில் கணவர் இருக்கலாம். கணவருக்கு இது ஒரு புதிய அனுபவமாகவும் மனைவிக்கு ஆறுதலாகவும் இருக்கும்.

    எல்லாக் குழந்தைகளுக்கும் தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத் தந்தையும் முக்கியம்தான். எனவே, குழந்தை பிறந்தவுடன், எவ்வளவு விரைவில் குழந்தையைத் தூக்கிவைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவில் தூக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தந்தைக்கும் குழந்தைக்கும் உள்ள உறவு வலுப்படும். குழந்தை பிறந்த பிறகும் மனைவிக்கு உணர்வுபூர்வமாக மிகுந்த ஆதரவை அளிக்க வேண்டும். குழந்தையின் வளர்ப்பிலும் பங்கெடுத்துக்கொள்ளலாம். இவ்வாறான உதவிகள் தாயின் மனதில் உற்சாகத்தைக் கொடுக்கும். அது தேவையான தாய்ப்பால் சுரப்புக்கு உதவும்.
    ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போவதை சில அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
    பிரசவத்தில் மிகவும் சிக்கலானது குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக நிகழும் பிரசவம். அதாவது 37 வாரங்களுக்கு முன்னதாக நடக்கும் இத்தகைய பிரசவம் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது. இதனைக் குறை பிள்ளைப்பேறு என்றும், இப்படி குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தை என்றும் அழைப்பார்கள்.

    ஆரோக்கிய குறைபாடு, சுவாசிப்பதில் சிரமம், போன்ற பாதிப்புகள், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற தொற்று பாதிப்புகள் போன்றவற்றை இந்த குறைபிரசவ குழந்தைகள் எதிர்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

    குறை மாத பிரசவத்திற்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

    கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இந்த கருப்பை சுருக்கம் உண்டாகும். இந்த சுருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி அதிகரித்த அளவு இருந்தால் அது குறை மாத பிரசவ அறிகுறியாக இருக்கலாம். வயிற்றைச் சுற்றி இறுக்கமாக ஒரு கயிற்றால் கட்டுவது போன்ற வலி தோன்றும். இந்த வலி விட்டு விட்டு வரும். கீழே படுப்பதால் அல்லது உங்கள் அங்க நிலைகளை மாற்றுவதால் இந்த பிரசவ வலி குறையாது.

    கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இடுப்பில் ஒரு வித அழுத்த அவ்வப்போது உண்டாகும். ஆனால் இந்த அழுத்தம் மிக அதிகம் உணரப்படும்போது, அது குறை மாத பிரசவ வலியின் அறிகுறியாக இருக்கலாம். இடுப்பு வலி ஏற்படுவதன் காரணம், குழந்தை வெளியில் வர முயற்சிப்பது ஆகும். குழந்தை பிறக்கக் கூடிய நிலைக்கு வந்துவிட்டதை இந்த வலி உணர்த்தும்.

    பிறப்புறுப்பில் திடீரென்று அதிக நீர் வெளியேற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். குறைமாத பிரசவத்தின் மற்றொரு அறிகுறி, சிவப்பு இரத்தம் வெளியேற்றம் அல்லது நீர் வெளியேற்றம். கர்ப்பப்பை வாய் அல்லது பிறப்புறுப்பு வாய் திறந்து கொள்வதால் இந்த நீர் வடிதல் ஏற்படலாம்

    மாதவிடாய் வலியை ஒத்த வலி பிரசவத்தின் அறிகுறியாகும். மோசமான வயிற்று வலியைப் போல் தொடங்கும் இந்த வலி பிரசவ வலியின் ஆரம்ப அறிகுறியாகும். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வலி குறையாது.

    முதுகுத் தண்டின் கீழ் பகுதியில் அதிக வலி, மற்றும் உங்களால் எங்கும் அசைய முடியாத வலி, உட்கார முடியாமல் நிற்க முடியாமல் வலி ஆகியவை இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. வலியுடன் கூட, கீழ் முதுகு பகுதியில் ஒரு வித அழுத்தத்தை நீங்கள் உணர முடியும். அதிக பாரத்தை சுமக்கும்போது உண்டாகும் உணர்வு போல் இந்த உணர்வு இருக்கும்
    பாதுகாப்பான பிரசவத்திற்கு, பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் இருந்திட வேண்டும்.
    தமிழகத்தில் 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதனால் தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. பல்வேறு நன்மைகள் இருப்பதால் உலக நல நிறுவனம் மருத்துவமனை பிரசவத்தை தான் பரிந்துரைக்கிறது. இந்தியாவில் பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களில் 38 சதவீதத்தினர் பிரசவத்திற்குப் பிந்தைய ரத்த போக்கால்தான் இறக்கின்றனர். 1990-ம் ஆண்டில், உயிரோடு குழந்தை பிறந்த 1 லட்சம் பிரசவங்களில் 516 தாய்மார்கள் இறந்தனர்.

    அந்த இறப்பு விகிதம் 2016-ம் ஆண்டில் 130 ஆக குறைந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் முறை அதிகரித்ததே. பிரசவத்தில், தாய் உயிர் பிழைத்தாலும் அவளின் ஏராளமான குழந்தைகள் இறந்தன. உதாரணத்திற்கு 16 குழந்தைகள் பிறந்தால் அதில் 8 குழந்தைகள் வரை இறந்தன. இவற்றில் எல்லாம் இன்றையை அறிவியல் தொழில் நுட்பம் மாற்றி உள்ளது. சமூகப் பொருளாதார வளர்ச்சியும் இம்மாற்றம் உருவாக காரணமாகியுள்ளது.

    கருப்பையில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் சில குறைபாட்டை கூட அறுவைசிகிச்சைகள் மூலம் கருப்பையிலேயே சரிசெய்ய முடியும். குறை பிரசவக் குழந்தைகள், எடைகுறைவான குழந்தைகளைக் கூட காப்பாற்றிவிடும் ஆற்றல் பெற்றுள்ளோம். நவீன கருவிகள், சிறப்பு மருத்துவர்கள், புதிய மருந்துகள், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை நிபுணத்துவம் இதை சாத்தியப்படுத்தியுள்ளது. பெண் உறுப்பு வழியாக குழந்தை பிறப்பில் திடீரென சிக்கல் ஏற்பட்டாலோ, குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, நல்ல மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, தாய்-சேய் இருவரையும் காப்பாற்ற முடியும். பிரசவத்திற்குப் பிறகு சிக்கல்கள் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை வழங்கி காப்பாற்ற முடியும்.

    பிறக்கும் போது குழந்தைகளின் கழுத்தைச் நச்சுக் கொடி சுற்றியிருந்தாலோ, தலைக்கு பதில் கால் முதலில் வந்தாலோ, குறுக்கு வாக்கில் குழந்தை இடுப்பெலும்புக்குள் சிக்கிக் கொண்டாலோ, நஞ்சுக்கொடி முன் கூட்டியே கருப்பையில் இருந்து பிரிந்தாலோ, பிரசவத்திற்கு முந்தைய ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அடிப்படை கட்டமைப்புகள் உள்ள மருத்துவமனையில் பிரசவம் நடந்தால் காப்பாற்றிவிடலாம்.

    வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் காப்பாற்ற முடியாது. ஆனால், நமது மருத்துவமனைகளின் தரம் குறைவாக உள்ளது. இது கூவத்தூர் போன்ற சம்பவங்களை உருவாக்குகிறது. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசியமான மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் இல்லை. 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குறைந்த பட்சம் 6 செவிலியர்கள் தேவை. ஆனால் தமிழகத்தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு செவிலியரோ அல்லது இரு செவிலியரோ மட்டுமே உள்ளனர்.

    பாதுகாப்பான பிரசவத்திற்கு, பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் இருந்திட வேண்டும். எப்போதும் தயார் நிலையில் உள்ள அறுவை அரங்கம் இருக்க வேண்டும். ரத்த வங்கியோ அல்லது ரத்த சேமிப்பு வங்கியோ நிச்சயம் தேவை. அல்ட்ராசவுண்டு ஸ்கேனும், சி.டி.ஜி (குழந்தையின் இதய துடிப்பை கண்டு பிடிப்பது) கருவி மிகவும் அவசியம். இவை இல்லாமல் பிரசவம் பார்க்கும் நிலையில், பிரசவத்தின் போது திடீர் சிக்கல்கள் ஏற்பட்டால், தாயையும் சேயையும் காப்பாற்ற முடியாது.

    எந்த பிரசவமும், எந்த நேரத்திலும் சிக்கலாக மாற வாய்ப்புண்டு. தாய் சேய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே, எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு கட்டாயப்படுத்துவதே கூவத்தூர் போன்ற கொடுமைகளுக்குக் காரணம். பிரசவம் பார்ப்பதற்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் தேவையான அவசியக் கட்டமைப்பு உள்ள மருத்துவ நிலையங்களில் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும். வட்டாரம் தோறும் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று அல்லது நான்கு மையங்களை உருவாக்கிட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதுவே கூவத்தூர் போன்ற நிகழ்வுகளை தடுத்திடும்.

    டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
    சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். இதற்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
    ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என்று சொல்வார்கள். அத்தகைய பெரும்பேறு பெற்றது தாய்மை. தாய்மார்களுக்கு குழந்தையின் வருகை ஒரு அற்புதமான நிகழ்வாகும். அதே சமயம் கடினமானதாகவும் மற்றும் நிறைய பொறுப்புகளும் இருக்கும். தூக்கத்திக்கு நேரம் இருக்காது, உணர்ச்சிகளின் ஏற்ற தாழ்வு அதிகமாக இருக்கும். நீங்கள் அனுபவிப்பது சாதாரணமாக எல்ல தாய்மார்களுக்கும் ஏற்படுவதாகும்.

    ஆனால் சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். தாய்மார்களுக்கு பொதுவாகவே பேபி ப்ளூஸ் அனுபவம் இருக்கும். குழந்தை பிறந்தவுடன் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வினால் மனநிலை அலைபாயும். குழந்தை பிறந்து இரண்டு வாரங்களுக்கு மேல் மனநிலையில் சமநிலை இல்லை என்றால் அவர்கள் பிரசவத்துக்குப்பின் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

    பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கண்ணை பார்த்து பேச மாட்டார்கள். மற்றும் குறைவாகவே புன்னகைப்பார்கள். இந்த கோளாறு மிகவும் குறைவான அளவிலேயே கண்டறியப்படுகிறது. இதற்கான போதுமான விழிப்புணர்ச்சி நம்மிடையே இல்லை. பிரசவத்தின் பொழுது ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வு நிலை குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் சம நிலைக்கு வந்துவிடும். இதற்கான அறிகுறிகள் பிரசவ நேரத்தில் மற்றும் குழந்தை பிறந்த முதல் 12 மாதங்களில் தோன்றும்.

    காரணங்கள் :

    முந்தய பிரசவத்தின் பொழுது மன அழுத்தம்
    குடும்ப பாரம்பரிய மன அழுத்தம்
    கர்ப்பமாக இருக்கும் பொழுது அதிர்ச்சியான சம்பவம்
    பிரசவத்தின் பொழுது சிக்கல் அல்லது குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சினை
    பிரசவத்தை நினைத்து கலக்கம்
    வலுவான ஆதரவு இன்மை

    அறிகுறிகள் :

    குடும்பத்தாரையும் நண்பர்களையும் முற்றிலும் தவிர்த்தல். உங்களையும் குழந்தையையும் பாதுகாக்க முடியாமல் போகுதல், குழந்தையுடன் நெருக்கமாக உணராமல் இருப்பது மற்றும் பிணைப்பு இல்லாமல் இருப்பது, தீவிரமாக மனம் அலை பாய்வது, பதற்றம் மற்றும் பீதி அடைதல்.

    மிக குறைவாக அல்லது அதிகமாக தூங்குவது தினசரி செய்யும் வேலை களில் நாட்டம் இல்லாமல் இருத்தல், குழந்தையை காயப்படுத்துவது போன்ற எண்ணங்கள்.

    தற்கொலையை தூண்டி விடும் எண்ணங்கள், மிக அதிக கோபம் மற்றும் எரிச்சல், குற்ற உணர்வு மற்றும் அவமானம் காரணமே இல்லாமல் அடிக்கடி அழுவது, தன்னை தானே தனிமை படுத்திக்கொள்வது

    புள்ளிவிபரம் :


    குழந்தையை பராமரிக்காமல் இருப்பது, உதாரணமாக பால் புகட்டுவது, டயபர் மாற்றாமல் இருப்பது, உரிய நேரத்தில் சொட்டு மருந்து கொடுக்காமல் இருத்தல், இந்த குழந்தை என்னுடையது இல்லை, போன்ற எண்ணங்கள்.

    7 தாய்மார்களில் ஒருவருக்கு பிரசவத்துக்கு பின் மன அழுத்தம் உள்ளது.

    50 சதவீதம் தாய்மார்களுக்கு இந்த கோளாறு இருக்கிறது என்று தெரியாது.

    20 சதவீதம் தாய்மார்களின் தற்கொலைகள் (இந்த கோளாறினால் பாதிக்கபட்டவர்கள்), தாய்மார்களின் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது.
    10 சதவீதம் தந்தைகள் குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

    முதல் பிரசவத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் இரண்டாம் பிரசவத்தின் பொழுது 50 சதவீதம் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. 49 சதவீதம் தாய்மார்கள் தங்கள் மனஅழுத்தத்துக்கான சிகிச்சை எடுத்து கொள்ள மாட்டார்கள்.

    மகப்பேற்று சுகாதார நிலையை தற்காத்து கொள்ள சில வழிமுறைகள் :

    ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும் மற்றும் , போதுமான தண்ணீர் பருகவும்.

    குழந்தை தூங்கும் பொழுது தூங்குதல், மிதமான நடைப்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி, உங்கள் கணவருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,
    தன்னைத்தானே தனிமை படுத்திக்கொள்ளாமல் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்பில் இருங்கள்.

    உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மன அழுத்தத்தை பற்றி மனம் விட்டு பேசுங்கள். வெளியே இயற்கை சூழலில் சிறிது நேரத்தை செலவிடுங்கள் உங்களை நீங்கள் முதலில் பராமரித்து கொள்வது அவசியம்

    சிகிச்சை

    பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம் மூன்று மாதத்திற்குள் சரி ஆகிவிடும், ஆனால் அன்றாட வாழ்க்கையில் சாதாரண செயல்பாடுகளில் இந்த பிரச்சினை தலையிடும் பொழுது, உடனே மன நல மருத்துவரை அணுகி இதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. கவுன்சிலிங் மற்றும் சைகோதெரபி மூலமாக குணப்படுத்த முடியும். மன அழுத்தம் தீவிரமாக இருந்தால் உங்கள் மன நல ஆலோசகர், மனநல மருத்துவரிடம் பரிந்துரைப்பார். பிரசவத்திற்கு பின் மன அழுத்தத்துக்கு ஆளான 90 சதவீதம் பேர் மருந்துகள் மூலமாக குணம் அடைந்து இருக்கிறார்கள்.

    பிரசவத்துக்கு பின் ஏற்படும் கோளாறு தாய்மார்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, சில தந்தைமார்களுக்கும் ஏற்படும்.

    1-ல் 20 தந்தைமார்கள் மற்றும் 1-ல் 7 தாய்மார்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்த அடுத்த நொடி ஒரு தாயும் பிறக்கிறாள், தாய்மையை போற்றுங் கள், குழந்தையை பெற்ற அனைத்து தாய்மார்களும் ஒரு உயிரை இந்த மண்ணில் அறிமுக படுத்தும் அதிசய பிறவி!!

    vcopevandhana@gmail.com
    ×