search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Covid Vaccine"

    • அரசுகளுக்கு ரூ.325, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • விரைவில் தனியார் மருத்துவமனைகளில் மருந்து விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தான இந்த மருந்துக்கு இன்கோவேக் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசு தினமான இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தனர்.

    இந்த மருந்து அரசுக்கு ரூ.325 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை வாங்குவதற்காக தனியார் மருத்துவமனைகள் முன்கூட்டியே ஆர்டர் செய்திருப்பதால், விரைவில் தனியார் மருத்துவமனைகளில்  இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது
    • குவாட் கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

    உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக இருப்பதால், தடுப்பூசிகளின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான குவாட் (QUAD) கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது என்றும் கூறினார்.

    உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பனா ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவு குறித்து பேசிய அவர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கும் என்றார்.

    • இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
    • கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன.

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வாழ்த்துகள் நரேந்திர மோடி. சிறந்த நிர்வாகத்துக்கான மற்றொரு மைல் 200 கோடி தடுப்பூசிகள். கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடனான எங்கள் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
    • கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள், கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன. இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பூஸ்டர் டோஸ் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 75 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வரை 199 கோடியே 87 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று 200 கோடி என்ற மைல்கல்லை கடந்தது.

    இந்த சாதனையை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியா மீண்டும் வரலாறு படைத்திருப்பதாக கூறிய அவர், தடுப்பூசி இயக்கத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்வதற்கு பங்களித்தவர்களை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

    இந்த சாதனைக்காக பொதுமக்களுக்கு மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, வயதுவந்தவர்களில் 98 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 90 சதவீதம் பேர் இரண்டு தவணையும் செலுத்தி உள்ளனர். 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 82 சதவீதம் பேர் முதல் டோஸ் செலுத்த உள்ளனர். 68 சதவீதம் பேர் 2 தவணையும் செலுத்தி உள்ளனர். 12-14 வயதினரில் 81 சதவீதம் பேர் முதல் தவணையும், 56 சதவீதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள்.

    • இந்தியாவில் 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
    • பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான இடைவெளி 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

    இதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 10ம்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. இரண்டாவது டோஸ் செலுத்திய பிறகு பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வரும் 15ம் தேதி முதல் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். நாட்டின் 75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு, ஜூலை 15ம் தேதியில் இருந்து 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி மத்திரி அனுராக் தாகூர் கூறுகையில், "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த கொண்டாட்டத்திபோது, ஜூலை 15ம் தேதி முதல் அடுத்த 75 நாட்கள் வரை, 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்திய மக்கள் தொகையில் 96 சதவீதம் பேர் முதல் தவணையும், 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட 77 கோடி மக்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மொத்தம் 16 கோடி பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி வாய்ந்தவர்கள். இவர்களில் 26 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 193 கோடியை கடந்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது.

    இதற்கிடையே, நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை தற்போது 193 கோடியைக் கடந்துள்ளது. 

    இந்நிலையில், இந்தியாவில் 88 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி உள்ளனர் என சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் கூறுகையில், இந்தியாவில் வயது வந்தோரில் 88 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்போது 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தி உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க புதுமையான வழிகளை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. 3-வது அலை வராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    சமீபத்தில் 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை அடைந்து இந்தியா புதிய சாதனை படைத்தது. இதுவரை 107 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. விரைவில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணி

    இந்த நிலையில் சில மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவிலேயே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    ஜார்க்கண்ட், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மராட்டியம், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 48 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 50 சதவீதத்துக்கு குறைவாகவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2-வது டோஸ் தடுப்பூசியும் குறைந்த அளவிலேயே போடப்பட்டு இருப்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

    நாகாலாந்தில் உள்ள கிபிரே மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 16.1 சதவீதம் பேருக்கே முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அவுரங்காபாத்தில் (மராட்டியம்) 46.5 சதவீதமும், தியோகரில் (ஜார்க்கண்ட்) 44.2 சதவீதமும் போடப்பட்டுள்ளது. இது மாதிரி 48 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு குறைவான அளவில் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 48 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.  காணொலி வாயிலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர்களும், அந்தந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனைக்  கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க புதுமையான வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களை கேட்டுக்கொண்டார். 

    “கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வைப் பரப்பவும், வதந்திகளை எதிர்த்துப் போராடவும் உள்ளூர் மதத் தலைவர்களின் உதவியைப் பெறலாம். இதுவரை தடுப்பூசி மையங்களுக்கு மக்களை அழைத்து வந்து தடுப்பூசி போடப்பட்டது. இப்போது வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவதற்கான நேரம் வந்துவிட்டது.  தடுப்பூசி போடாதவர்களுக்கு முதல் டோஸ் செலுத்துவதை உறுதி செய்யுங்கள். அதே கவனத்தை 2வது டோஸ் செலுத்துவதிலும் செலுத்துங்கள்” என பிரதமர் அறிவுறுத்தினார்.

    ×