search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Back pain"

    • உடலை ஒரு பிளாங் நிலையில் சமப்படுத்தவும்.
    • உடலை ஒரு பிளாங் நிலையில் சமப்படுத்தவும். பலர் இடுப்பு வலி, முதுகுவலி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

    அலுவலகத்தில் சரியான இருக்கை இல்லை என்றாலும், வீட்டில் இருந்து வேலை செய்யும் போது இருக்கையில் ஏற்படும் தவறான உடல் தோரணை இல்லாததால், ஒருவர் முதுகுவலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பலர் இடுப்பு வலி மற்றும் முதுகுவலி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், சில பயிற்சிகளை முறையாக செய்வதன் மூலம் முதுகுவலியில் இருந்து விடுபடலாம்.

     ஒற்றை பக்க உடற்பயிற்சி

    இது கீழ் முதுகு, அடிவயிறு மற்றும் தொடைகளின் தசைகளை வலிமையாக்குகிறது. இதை செய்ய, இரு பிட்டங்களும் தனித்தனியாகவும், இரு கைகளும் தரையில் தோள்களுக்கு வெளியே இருக்கும் வகையிலும் உங்கள் உடலை ஒரு பிளாங் நிலையில் கொண்டு வாருங்கள். மெதுவாக உங்கள் நேரான கைகளையும் இடது முழங்காலையும் உயர்த்தி சமநிலையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். அதே தோரணையில் இருக்கும்போது, கை மற்றும் காலை இழுத்து, சில நொடிகள் உங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இப்போது இந்த பயிற்சியை இடது கை மற்றும் வலது காலால் செய்யுங்கள்.

    பாந்தர் தோள்பட்டை தட்டு உடற்பயிற்சி

    இது பின்புறம், கால்கள் மற்றும் உடலின் நடுத்தர பகுதியை பலப்படுத்தும். இந்த பயிற்சியை தரையிறக்க, முதலில் பிளாங்க் நிலைக்கு வாருங்கள். உடலின் முழு எடை பலகைகள் மற்றும் கைகளில் பலகைகளில் இருக்கும், முதுகெலும்பு நேராக இருக்கும். இப்போது உங்கள் முழங்கால்கள் இரண்டையும் தரையில் இருந்து இரண்டு முதல் மூன்று அங்குலங்கள் மெதுவாக உயர்த்தவும், பிட்டம் சீராக இருக்க முயற்சிக்கவும். வலது தோள்களை இடது தோளில் வைக்கவும். தரையில் விரல்களைக் கொண்டு, இடது கையை வலது தோளில் நகர்த்தவும்.

     லெக் லிப்ட் பயிற்சிகளுடன் பிளாங்

    இது முதுகெலும்பை வலுவாகவும் பிட்டம் மிகவும் நெகிழ்வாகவும் ஆக்குகிறது. அனைத்து எடையும் கை மற்றும் கால்விரல்களில் இருக்கும் வகையில் உடலை ஒரு பிளாங் நிலையில் சமப்படுத்தவும். உடலை காற்றில் வைத்து முதுகெலும்பை நேராக வைக்கவும்.

    இப்போது மெதுவாக வலது காலை உடலில் மேல்நோக்கி உயர்த்தி சிறிது நேரம் பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த காலை கீழே கொண்டு வந்து இடது காலை உயர்த்தி காற்றில் நிறுத்துங்கள். இதை முடிந்தவரை பல முறை செய்யுங்கள்.

    • முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல்.
    • வைட்டமின் டி சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    தண்டுவட எலும்புகள் தேய்வதால் வரும் வாதத்தை சித்த மருத்துவத்தில் தண்டக வாதம் என்றுகூறுவோம். தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையே சதையாலான டிஸ்க்" இருக்கும். இதன் இடையில் சைனோவியல் திரவம் என்ற எண்ணெய் போன்ற பொருள் நிரப்பப்பட்டிருக்கும். இவை ஒரு மெத்தை போல் இருந்து, தண்டுவட எலும்புகள் உராய்வில்லாமல் ஒழுங்காக செயல்படவும், உடல் அசைவிற்கும் உதவுகிறது.

    எலும்புகளுக்கு இடையேயுள்ள டிஸ்க்" நீர்த்துவம் குறைந்து, உலர்ந்து சுருங்கி இருந்தால் அது 'ஸ்பாண்டிலோசிஸ்' என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள டிஸ்க் ஒருபுறமாக அல்லது இருபுறமாக வெளியேநீட்டி நிற்பது ஹெர்னியேட்டட்டிஸ்க்' எனப்படும்.

    டிஸ்க் வீங்கி மிருந்தால் அது பல்ஜிங் தண்டுவட எலும்புகளின் ஓரத்திலிருந்து எலும்புகள் துருத்தி வளர்ந்து காணப்பட்டால் ஆஸ்டியோபைட் அல்லது ஸ்பர்' என்றும் விபத்து, காயங்களில் டிஸ்க்குகளில் ஏற்படும் வீக்கங்கள் அல்லது அழற்சிகள் ஸ்பாண்டிலைடிஸ்' என்றும் அழைக்கப்படும்.

     காரணங்கள்:

    அடிபட்ட காயங்கள் விபத்துக்கள் காரணமாகவும், தொழில் ரீதியாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சுமை தூக்குபவர்கள் மற்றும் டெய்லர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல், உட்கார்ந்து எழும்புவதில் சிரமம், நடை மாறுபடுவது போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1)அமுக்கரா சூரணம் 1 கிராம். சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. பவள பற்பம் 200 மி.கி, குங்கி லிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    3) அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    4) தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித்தைலம் சிவப்புருக்கில் தைலம் விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம் குக்கில் தைலம் உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு இடுப்பு கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும்.

    வெந்நீரில் இவாதாடக்கி வாதநாராயணன் முடக்கற்றான், தழுதாழை நொச்சி பழுத்த எருக்கம் இலை இவைகளில் ஒன்றை எண்ணெய்யில் வதக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் வேண்டும்.

    கொல்சியம் வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு முருங்கை கீரை, முட்டையின் வெள்ளை கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை வெந்தயம் உளுந்து இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • கைகளை நீட்டிக்கும் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வரலாம்.
    • நீங்கள் உட்காரும் நாற்காலியும் சவுகரியமாக இருக்க வேண்டும்.

    தற்போதைய காலகட்டத்தில் லேப்டாப், கணிணி முன்னிலையில் உட்கார்ந்து வேலை செய்யும் சூழல் உண்டாகி உள்ளது. இதனால் கூட நிறைய பேருக்கு முதுகுவலி, கைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

     இந்த கணினி கைவலி பிரச்சனை பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்பது பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில் இது ஒரு நபரின் வாழ்க்கையை பொருத்தது. அவர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறார் என்பதையெல்லாம் பொருத்து அமைகிறது என்று தெரிவித்து உள்ளனர்.

    இந்த கணிணி கைவலியின் முதல் அறிகுறியாக முள்ளெலும்பு உணர்வுகள் முதல் பாதிக்கப்பட்ட உடல் பாகங்களில் உணர்வு இழப்பு மற்றும் உணர்வின்மை வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

     கம்பியூட்டரிலேயே உட்கார்ந்து டைப் பண்ணுவது, மவுஸ் கிளிக் செய்வது சில மணி நேரம் வேண்டும் என்றால் சவுகரியமாக தோன்றலாம். ஆனால் நேரம் ஆக ஆக கைவலிக்க ஆரம்பித்து விடும். ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரே மாதிரியான உடல் அசைவுகளை செய்து கொண்டே இருக்கும் போது அந்த பகுதி தசைகள் வலிக்கத் தொடங்கி விடுகின்றன.

    இந்த வலி அப்படியே அவர்களின் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வரை பரவ ஆரம்பித்து விடுகிறது. வலியால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்க நீங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

     என்னசெய்யலாம்...?

    வேலை பார்க்கும் சமயங்களில் சிறிது ரிலாக்ஸ் மற்றும் கைகளை நீட்டிக்கும் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வரலாம். தசைகள் ஓய்வெடுக்க சிறிது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுக்கலாம். அதே நேரத்தில் கைவலியை குறைக்க குளிர் ஒத்தடமும் கொடுக்கலாம்.

    இதைத் தவிர்த்து நீங்கள் வேலை செய்யும் இடம், மேஜை உங்களுக்கு செளகரியமாக இல்லை என்றால் அதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள கீபோர்டு, ஹேண்ட் ரெஸ்ட், கம்ப்யூட்டர் மவுஸ், ஜாய்ஸ்டிக் போன்றவற்றை உங்க பயன்பாட்டிற்கு வசதியாக எந்த இடத்தில் சவுகரியமாக இருக்குமோ அங்கே வைத்துக் கொள்ளுங்கள்.

     மேலும் தொடர்ந்து கைகளை பயன்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள். சிறிது நேரம் கை தசைகளுக்கு ஓய்வு கொடுங்கள். அதே மாதிரி நீங்கள் உட்காரும் நாற்காலியும் சவுகரியமாக இருக்க வேண்டும். நீங்கள் உட்காரும் விதத்திற்கு ஏற்றவாறு சரி செய்யக்கூடிய நாற்காலியை பயன்படுத்துங்கள். நேராக அமர்ந்து வேலை செய்யுங்கள்.

    அதே மாதிரி உங்க கம்ப்யூட்டர் மானிட்டரும் உங்களுக்கு ஏற்றவாறு சரி செய்யக் கூடிய வகையில் அமைந்திருப்பது நல்லது. அப்பொழுது தான் உங்க கோணத்திற்கு ஏற்ப திருப்பிக் கொள்ள முடியும். கைகளுக்கான தன்னியக்க தசைபயிற்சி போன்றவைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார்
    • அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற 2-வது தேசிய போட்டியின் போது முதுகு வலி ஏற்பட்டதாக ஷ்ரேயாஸ் ஐயர் தொடரின் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகினார்.

    பின்னர், மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்.

    அதன் பிறகு, ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. அப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    அப்போட்டியின் 4 மற்றும் 5-ம் நாட்களில், முதுகு வலி காரணமாக ஷ்ரேயாஸ் விளையாடவில்லை. முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு அவர் அறுவை சிகிக்சை செய்திருந்தார்.

    இந்நிலையில், முதுகு வலி காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ், முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும்.
    • இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி.

    யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு வலி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    உலகில் பலதரப்பட்ட வயதுடைவர்களுக்கு உலக அளவில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும். வேலைப்பளு காரணமாக உடல் சார்ந்த குறைபாடுகளில் மக்களுக்கு ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு பிரச்சினை இடுப்பு வலி. இடுப்பு வலி ஏற்படுவதால் மக்களின் அன்றாட பணிகள், உடற்பயிற்சி, மற்றும் தூக்கம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் தற்போது, அமெரிக்காவின் மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் யோகாவை பற்றிய ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    அதாவது பண்டைய இந்திய உடல் மற்றும் ஆன்மீக பயிற்சியான யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு வலி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     யோகா பயிற்சி மேற்கொள்வதால் வலி நிவாரணம் அளிக்கும் என்றும், உடலின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என்றும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வு முன்னணி எழுத்தாளரான, எல். சூசன் விலாண்ட் கூறியுள்ளார்.

    நாள்பட்ட அல்லாத குறிப்பிட்ட இடுப்பு வலியால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு, யோகா சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே எல். சூசன் விலாண்ட் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் இடுப்பு வலி குறைய யோகா பற்றி தனித்தனியாக 12 ஆய்வுகளை மதிப்பீடு செய்து பார்த்தோம் என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.

     உடற்பயிற்சி முறை செய்பவர்களுடன் யோகா பயிற்சி மேற்கொள்பவரை ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்படி ஒப்பிட்டு பார்க்கையில் யோகா பயன்படுத்திய நோயாளர்களுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களில் இடுப்பு வலியில் மிதமான மேம்பாடுகள் காணப்பட்டுள்ளது.

    அதேபோல் வலியும் சற்று குறைந்து காணப்படுகிறது என்று உறுதியாக ஆதாரங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    • முதுகுத்தண்டு சார்ந்த அழுத்தத்தால் வரக்கூடிய வலிகள்.
    • மூட்டுகள் அனைத்தையும் பலப்படுத்த உதவும் மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உண்டு.

    மூட்டுவலி.. ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உடலில் தோள்பட்டை, கை மூட்டு, கால் மூட்டு என்று உடலில் எங்கெல்லாம் மூட்டுகளின் இணைப்புகள் உள்ளனவோ அங்கு பலவீனமடையும் இடத்தில் மூட்டுகளில் வலியை உணரலாம்.

    முடக்குவாதம் சார்ந்த மூட்டுவலிகள், முதுகுத்தண்டு சார்ந்த அழுத்தத்தால் வரக்கூடிய வலிகள், குனிய முடியாமல் இருப்பது, நிமிர முடியாமல் இருப்பது, சற்று கனமாக இருந்தாலும் எடை தூக்க முடியாமல் இருப்பது என்று பல வலிகள் அனுபவிப்பது எல்லாமே மோசமான அசெளகரியம். இந்த மூட்டு வலிகளின் தீவிரம் குறைய மூட்டுகள் அனைத்தையும் பலப்படுத்த உதவும்

    மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உண்டு. அப்படியான மூலிகைகளை ஒன்றிணைத்து செய்யகூடிய சரக்கொன்றை கஷாயம் தயாரிக்கும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.

    சிற்றரத்தை சூரணம் - 2 கிராம்

    நெருஞ்சில் சூரணம் - 2 கிராம்

    ஆமணக்கு சூரணம் - 2 கிராம்

    தேவதாரு சூரணம் - 2 கிராம்

    முக்கிரட்டை சூரணம் - 2 கிராம்

    சீந்தில்கொடி சூரணம் - 2 கிராம்

    சரக்கொன்றை சூரணம் - 2 கிராம்

    தண்ணீர் - 300 மில்லி

    செய்முறை:

    தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து அனைத்து மூலிகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். 100 மில்லியாக வந்ததும் வடிகட்டி குடிக்கவும். கசப்பு சுவை சார்ந்தது என்றாலும் கூட மூட்டுகளுக்கு அருமையான பலமான வலுவை அளிக்கும். எல்லா விதமான வலிகளை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. முதுகுத்தண்டு, மூட்டு வலி பாதிப்புக்கு அறுவைச் சிகிச்சைதான் தீர்வு என்று சொல்லப்பட்டாலும் இந்த மூலிகை கஷாயம் வலியற்ற வேதனையற்ற நிலையை அளிக்கிறது. இவை அனைத்தும் உடலின் தேய்மானத்தை குறைத்து உடல் ஆரோக்கியம் காக்கும். மூட்டுகளை பலப்படுத்தி உடலை பலப்படுத்த இந்த கஷாயம் உதவும்.

    மருந்துகள், களிம்புகள் கூட இந்த கஷாயம் குடித்து வருவதன் மூலம் வலிகள் குறையும். தொடர்ந்து 2 மண்டலங்கள் என சாப்பிட்டு வந்தால் வலிகள் 30-50 சதவீதம் வரை குறைவதை உணர்வீர்கள். இது உடல் அமைப்புக்கு மட்டும் அல்லாமல் உடல் செயல்பாடு அனைத்துக்கும் இவை முக்கியமானது. மூளை அனுப்பும் தகவல் சிறு மூளை வழியாக முதுகுத்தண்டுக்கு வந்து அங்கிருந்து உற்பத்தியாகும் நரம்புகளின் செயல்பாடு காரணமாக தான் உடல் சீராக இயங்குகிறது.

    • இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் இருக்கும்.
    • தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    திரிகோணாசனம் என்பது ஆங்கிலத்தில் triangle pose என்று அழைப்பார்கள். இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் உடல் இருக்கும்படி செய்யும் இந்த ஆசனம் ஜீரணத்தை மேம்படுத்தவும், தொப்பையை குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதற்கும் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு கொடுக்கிறது.

    உடல் தசைகளை நன்கு நீட்டி மடக்கும் இலகுவான தன்மையையும் உடலுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும். குறிப்பாக தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    ஜீரணக்கோளாறுகள் தான் உடலில் நிறைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றை சரிசெய்யவும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் திரிகோணாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கை, கால், இடுப்பு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றை வளைத்து நீட்டி செய்கின்ற இந்த ஆசனம் அடிவயிற்று பகுதி மற்றும் ஜீரண மண்டலத்தை தூண்டும் வேலையை செய்கிறது.

    முக்கோணம் போன்ற நிலையில் இருக்கும் இந்த திரிகோணாசத்தை செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தில் இருக்கும் அடைப்பு போன்றவை நீங்கும். ஆழமாக சுவாசிக்க உதவி செய்யும்.

    நன்கு மூச்சை இழுத்து அதிகமான ஆக்சிஜன் அளவைப் பெற முடியும். இதனால் நுரையீரலுக்கும் அதிக அழுத்தம் ஏற்படாமல் அதன் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச மண்டல பிரச்சினை இருப்பவர்கள் இந்த திரிகோணாசனத்தை செய்து வருவது நல்லது.

    முதுகு வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த திரிகோணாசனம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இந்த ஆசனம் செய்யும்போது மார்பு பகுதி விரிவடைந்து மூச்சு விடுவது மிக எளிதாக இருக்கும். ஆழமாக மூச்சை இழுத்து விட முடியும். இதனால் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் அழுத்தம் குறைந்து இடுப்பு மற்றும் முதுகுவலி குறைய ஆரம்பிக்கும்.

    இந்த திரிகோணாசனம் செய்யும் போது உடல், மனம் இரண்டுமே ரிலாக்சாக இருக்கும். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் மன அழுத்தம், பதட்டம், டென்ஷன், மனச்சோர்வு ஆகியவை குறையும்.

    சிலருக்கு இடுப்பை வளைத்து செய்யும் எந்தவித வேலைகளும் செய்யவே முடியாது. ஏனெனில் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். இந்த இறுக்கத்தை குறைத்து இடுப்பு தசைகளை நெகிழ்வுத் தன்மையோடும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

    திரிகோணாசனம் செய்யும் போது ஒட்டுமொத்த உடலும் வலிமை அடையும். அதோடு இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். குறிப்பாக இடுப்பு தசைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கச் செய்து தொப்பையை குறைக்க உதவி செய்கிறது.

    • நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம்.
    • பெண்கள் தினமும் யோகா பயிற்சி செய்வதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஸ்ட்ரெஸ் குறையும்.

    அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்தாலும் சரி, வீட்டு வேலையாக இருந்தாலும் சரி பெண்களுக்கு எப்போதும் வேலைகளுக்கு குறைவு இருக்காது. எப்போதும் ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கு போதிய ஓய்வு தேவை என்பதை வீட்டில் உள்ளவர்கள் முதலில் உணர வேண்டும்.

    குடும்பத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களை சரிவர கவனிக்க வேண்டும். இதற்காகவே பெண்கள் முதலில் உடற்கூறு விஷயத்தில் வலிமை உடையவராக இருத்தல் அவசியம்.

    ஆண், பெண் இருவருக்குமே உடற்கூறு வலிமை மிக முக்கியம். 25 வயதிற்கு மேல் நாம் அனைவரும் குடும்பம், வேலை மற்ற விஷயங்களுக்காக நம் உடலை பராமரிப்பதை மறந்துவிடுகிறோம். எனவே நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம். உடலை சீராக வைத்துக்கொள்ள பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    நீங்கள் உறங்கும் படுக்கை விரிப்பு அல்லது மெத்தை மிகவும் கடினமாகவோ, மிகவும் லேசானதாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினை வராமல் தடுக்கும். சரியான அளவு தலையணையை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தடுக்கலாம்.

    தூக்கம் மிகவும் முக்கியம். ஆண், பெண் இருவருமே வேலைப்பளு காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். சரியான அளவு தூங்கினால்தான் உங்கள் தசை, மூட்டு மற்றும் உடல் சீராகும்.

    பெண்கள் முடிந்தவரை நீண்டநேரம் நின்றுகொண்டு வேலை செய்வதை தவிர்க்கவும். நீண்ட நேரம் நிற்பதால் உங்கள் மூட்டில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி வருவதை தவிர்க்கலாம். எத்தனை வேலைகள் செய்தாலும் அதற்கிடையே உங்கள் உடலுக்கான உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

    ஆண், பெண் இருவருமே ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல் தசைகள், மூட்டு லகுவாகும். தசை இழுப்பு பயிற்சிகள் செய்வது மிகவும் அவசியம். தினமும் காலையில் எழுந்தவுடன் 10 நிமிடங்கள் செய்வது அவசியம்.

    பெண்கள் தினமும் யோகா பயிற்சி செய்வதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஸ்ட்ரெஸ் குறையும். முதுகு, தசை பயிற்சி செய்வதால் முதுகுவலியை கட்டுப்படுத்தலாம்.

    சரியான காலணிகள் அணிவதன் மூலமும் முதுகு, மூட்டு மற்றும் குதிகால் வலிகளை தவிர்க்கலாம். வாரம் ஒருதடவையாவது உங்கள் தசை மற்றும் எலும்புகளை லகுவாக வைத்துக்கொள்ள மசாஜ் செய்வது அவசியம்.

    உடற்பயிற்சி தினமும் செய்வதால் உங்கள் தசை வலுப்பெறும். இதனால் எலும்புகள் வலுப்பெறும். உடல் வலிமை அதிகரிக்கும். எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மருத்துவரின் ஆலோசனைபடி செய்வது உத்தமம்.

    உங்கள் மூட்டு, முதுகு, தோள்பட்டை, கழுத்து போன்றவை வலுவாக இருத்தல் அவசியம். இதற்கான உடற்பயிற்சி மிக அவசியம்.

    நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்க்க வேண்டும். இதனால் உங்கள் தசைகள் இறுகி முதுகு வலி, கால்வலி போன்றவை ஏற்படலாம்.

    கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது அதற்கான தனி நாற்காலியை பயன்படுத்தவும். இதனால் முதுகுவலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    நீங்கள் உண்ணும் உணவில் புரதச்சத்து மிகவும் அவசியம். இதனால் தசைகள் வலுவாகும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வைட்டமின் டி குறைபாட்டால் கால்ஷியம் குறைவு ஏற்படுகிறது. இதனால் மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கால்ஷியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

    முடிந்த வரை உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். எண்டார்ஃபின் எனும் ஹார்மோன் சுரந்து உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது சான்றோர் வாக்கு.

    • முதுகு தண்டுவட பாதிப்பு மிகக்கொடுமையானது.
    • சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுகெலும்பு காயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    விளையாடும்போதோ, விபத்தின்போதோ முதுகெலும்பில் ஏற்படும் காயம் ஒட்டுமொத்த உடல் இயக்க செயல்பாடுகளையும் முடக்கிவிட வாய்ப்புள்ளது. 'ஸ்பைனல் கார்டு இஞ்சுரி' எனப்படும் இந்த முதுகு தண்டுவட பாதிப்பு மிகக்கொடுமையானது. சக்கர நாற்காலியில் முடங்கும் நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடியது.

    சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஐந்து லட்சம் பேர் முதுகெலும்பு தண்டுவட பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, முதுகெலும்பு காயம் உள்ளவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதுகெலும்பு காயம் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. பெண்களை விட ஆண்கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    பேரதிர்ச்சி ஏற்படுத்தும் விபத்துக்களில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளாகுபவர்களில் 90 சதவீதம் பேர் முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சாலை விபத்துகள், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுவது, வன்முறையில் பாதிப்புக்குள்ளாவது போன்றவை இதில் அடங்கும். முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு நாள்பட்ட வலி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பலர் மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள். ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுகெலும்பு காயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது: கார் விபத்துக்கள்தான் பெரும்பாலும் முதுகு தண்டுவட காயத்திற்கு முக்கிய காரணமாகின்றன. அதனால் சீரான வேகத்தில் கார் ஓட்டுவது அவசியம். கார் ஓட்டும்போது உடன் பயணிப்பவர்களுடன் பேசுவது, எதையாவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பது போன்ற கவனச்சிதறல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கார் ஓட்டுபவரும், உடன் பயணிப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது மிகவும் அவசியமானது.

    தடுமாறி விழுதல்: எதிர்பாராதவிதமாக உயரமான பகுதியில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுவதும் முதுகெலும்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சைக்கிளிலோ, இருசக்கர வாகனத்திலோ செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து விட்டால் முதுகெலும்பில் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆதலால் கவனமாக செயல்பட வேண்டும்.

    விளையாட்டு: விளையாடும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானது. ஜிம்னாஸ்டிக் போன்ற உடலை வளைத்து சாகசம் செய்யும் விளையாட்டுகளின்போது பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும் அது முதுகெலும்பு பகுதியை கடுமையாக பாதித்துவிடும்.

    மதுப்பழக்கம்: மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்கு மூல காரணமாகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.

    • 90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.

    முதுகு எலும்புகள், தசைகள், வட்டுகள் மற்றும் தசை நார்கள் ஆகியவற்றின் கூட்டுக் கட்டமைப்பைக் கொண்டது முதுகுத்தண்டுவடம். உடலின் சீரான இயக்கத்துக்கு உதவுவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் பெண்களையே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அல்லது வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சரியான தோரணையில் உட்காராதது, அதிக கனமான பொருட்களைத் தூக்குவது, திடீர் இயக்கம், தும்மல், இருமல், உடலை முறுக்குதல், நீண்ட நேரம் நிற்பது, இடைவெளியின்றி நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது, கழுத்து முன்னோக்கி இருக்கும்படி உட்காருவது, தொடர் தூக்கம், செய்யும் வேலையின் தன்மை மற்றும் வாழ்க்கை முறையினால் கூட முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு வலி ஏற்படலாம். இதுதவிர தசைப்பிடிப்பு, குடலிறக்கம், தசை இறுக்கம், இடுப்பு, மூட்டு வலி, எலும்பு முறிவு அல்லது காயங்கள், தசைநார் இறுக்கம் போன்றவற்றாலும் வலி ஏற்படலாம்.

    சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவது என சத்து குறைபாட்டாலும் முதுகுவலி உண்டாகும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் குழந்தைப்பேறின்போது ஏற்படும் ஹார்மோன் கோளாறு மற்றும் உடல் மாற்றங்களாலும் முதுகுத்தண்டில் வலி வரலாம்.

    ஷிங்கிள்' எனப்படும் வைரஸ் தொற்றினால் உண்டாகும் தோல் நோய், புற்றுநோய் கட்டிகள், முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் சேதம் ஏற்படுவது, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை நோய்த்தொற்று, இடுப்பு அழற்சி நோய், காய்ச்சல், முதுகெலும்பு தொற்று ஆகியவையும் முதுகுவலிக்கு காரணமாகும். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ, ரத்தப் பரிசோதனை, நரம்பியல் சோதனைகள் மூலம் முதுகுத்தண்டு பிரச்சினையின் தீவிரத்தைக் கண்டறிய முடியும். 90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.

    வலியைக் குறைக்கும் சிகிச்சைகள், தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். உடற்பயிற்சிகள், உடலின் சமநிலையைப் பராமரித்தல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் முதுகுவலி வருவதை தடுக்கலாம். ஏரோபிக் பயிற்சிகள், யோகா, நீச்சல், நடைப்பயிற்சி போன்றவற்றை தினசரி செய்வது, முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் சிறப்பாக செயல்பட உதவும்.

    தினசரி காலை உணவைத் தவறாமல் சாப்பிட வேண்டும். இது அன்றைய நாளின் தொடக்கத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடல் பருமன் மற்றும் அதிக எடையும் முதுகு வலிக்கான முக்கியக் காரணமாகும். எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

    • முதுகுவலியை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது.
    • இயல்பான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம்.

    ஐ.டி.துறையில் வேலை செய்யும் பலர், இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதுடன் முதுகுவலியையும் உணர்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது. மேலும் இயல்பான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம். இதோ அதற்கான சில வழிகாட்டுதல்கள்...

    பால் பொருட்கள் : கால்சியம் குறைபாடு எலும்பு வலி, தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உயிரணுக்களுக்கு எரிபொருளாக உதவுவதோடு, முதுகுவலிக்கு சிறந்த மருந்தாகவும் செயல்படும். எனவே பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை, அன்றாட உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

    புரதம் நிறைந்த உணவு : தினை, உளுத்தம் பருப்பு, பீன்ஸ், எள் போன்றவை புரதச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. அவை முதுகுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், சேதமடைந்த திசுக்களை சரிசெய்து விரைவாக குணமடைய உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டுள்ளது.

    பழங்கள் : புளூபெர்ரி, அன்னாசி மற்றும் திராட்சை போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்ட பழங்கள் உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஏனெனில் அவை வலி நிவாரணியாகவும், முதுகுவலியை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் எல்லாவற்றையும் போலவே, அளவோடு சாப்பிடும்போது பலன் அதிகபட்சமாக இருக்கும்.

    மூலிகைகள் : இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இலவங்கப்பட்டை, துளசி போன்றவற்றிலும் உள்ளது. நாம் பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களான மஞ்சள் போன்றவை வலியைக் குறைத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அவற்றை மிதமாக உட்கொள்வது அவசியம்.

    பச்சை காய்கறிகள் : வைட்டமின்-சி மற்றும் பி-12 நிறைந்த சில காய்கறிகளான கத்தரிக்காய், முருங்கைக்காய், கீரை, புரோக்கோலி போன்றவற்றால் முதுகெலும்பு வலுப்பெறுகின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் சேதமடைந்த செல்களை சீரமைக்கவும் உதவும்.

    • உடல் எடை கண்காணிப்பது என்பது மூட்டு வாத நோய்களுக்கு மிக அவசியம்.
    • முதுமை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு மூட்டுகளை பாதிக்கிறது.

    மூட்டுவலியும், முதுகுவலியும் பெண்களின் ஆரோக்கியத்தினை பாதிக்கும் ஒரு அங்கமாகவே உள்ளன. பிரசவத்திற்கு பின்னர் பெண்களில் பெரும்பாலானவர்கள் முதுகு வலி அனுபவிக்காத நாட்களே இல்லை எனலாம். முதுகு வலி ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஏனெனில் மகப்பேற்றின் போது அளவில் பெரிதாகும் கருப்பையானது கீழ் முதுகு மற்றும் இடுப்பு மூட்டுகளில் ஏற்படுத்தும் அழுத்தத்தின் விளைவாக முதுகுவலி உண்டாகக்கூடும்.

    மகவை சுமக்கும் அனைத்து பெண்களும் இத்தகைய வலியினையும் சுமந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் வருத்தமான ஒன்று. இயற்கையாக ஏற்படும் இத்தகைய மாறுதல்களால் உண்டாகும் முதுகு தண்டுவட வலி ஒருபுறமிருக்க, மாறிப்போன வாழ்வியல் நெறிமுறைகளால் இது போன்ற தொந்தரவுகள் இன்னும் சற்று கூடுதலாகி, பெண்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து, ஆரோக்கியத்திற்கான பாதையைக் கடினமாக்குகிறது.

    முதுகு தண்டுவடப் பகுதியில் தண்டுவட எலும்புகளின் இடையே உள்ள சவ்வு வீக்கம், சவ்வு சரிவு போன்ற பல்வேறு நோய்நிலைகள் இன்றைய நவீன காலத்தில் பெண்களை அதிகம் தாக்கி அவர்களை துன்புறுத்துவது இயல்பாகிவிட்டது. அதுமட்டுமின்றி தண்டுவட எலும்புப் பகுதியில் ஏற்படும் கட்டிகளும் முதுகு வலிக்கு காரணமாகின்றன.

    ஆகவே பெண்கள் நாட்பட்ட முதுகு வலியில், ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று எண்ணி அலட்சியம் காட்டாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனுக்கும் அவர்கள் தான் ஆணி வேர். முதுகுவலி ஒருபுறமிருக்க, பெண்களுக்கு வயோதிகப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் கீல்வாதம் அவர்களை அதிகம் துன்புறுத்தும். இந்த மூட்டு வாத நோயை 45 வயது கடந்த பெண்கள் அனைவரும் அனுபவிக்க தயாராக வேண்டிய நிலை உள்ளது வருத்தம் தான். ஏனெனில் பெண்களில் மூன்றில் இருவருக்கு இந்த மூட்டு வாதம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வாழ்வியலை பாதிக்கிறது.

    பொதுவாக இரு முழங்கால் மூட்டுகளில் உண்டாகும் இந்த முதுமை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு மூட்டுகளை பாதிக்கிறது. மூட்டுகளில் வீக்கம், வேதனை, நடப்பதில் சிரமம், உட்கார்ந்து எழுவதில் சிரமம், கால்களை நீட்டி மடக்குவதில் சிரமம், தாங்கி தாங்கி நடத்தல் போன்ற மூட்டு வாத நோயின் பல குறிகுணங்களைக் கொண்டு பெண்கள் பலர் அன்றாட வாழ்க்கையைக் கடக்கின்றனர். பல்வேறு நோய் நிலைகள் பெண்களின் மூட்டுக்களை பாதிக்கும் தன்மையுடையதால் மருத்துவரை அணுகி நோய்நிலையைக் கணித்து சிகிச்சையை துவங்குவது நல்லது.

    சித்த மருத்துவ மூலிகைகள் பல பெண்களின் மூட்டுக்களின் வாதம் சார்ந்த அனைத்து நோய் நிலையிலும் நல்ல பலன் தருவதாக உள்ளன. தசமூலம், ஓமம், முருங்கை, முடக்கறுத்தான், மூக்கிரட்டை, பிரண்டை, மஞ்சள், இஞ்சி, ஆமணக்கு, நொச்சி, குந்திரிக்கம், அரத்தை, குறுந்தொட்டி, அமுக்கரா, நிலவேம்பு, திரிபலை,திரிகடுகு, குங்கிலியம் போன்ற மூலிகைகள் அவற்றில் சில. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வலி நிவாரணி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

    மூட்டுக்கள் சார்ந்த வலி நோய்களுக்கு சித்த மருத்துவம் எளிமையாக வலியுறுத்துவது முருங்கையைத் தான். நவீன உலகத்தில் எதெற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை நாட துவங்கி விட்டதால், முருங்கை போன்ற மருத்துவ குணமிக்க எளிய மூலிகை மருந்துகள் பல நம் நாட்டினருக்கு மறந்தே போய்விட்டது.

    முருங்கை கீரையுடன் மூட்டு வலியை குறைக்கும் மருத்துவகுணமுள்ள, இஞ்சி, பூண்டு, மிளகு, பெருங்காயம், மஞ்சள், சீரகம் இவற்றுடன் சிறிது உப்பிட்டு சூப் வைத்து அருந்தினால் மூட்டுகளுக்கு வலிமை கிடைக்கும். அடிக்கடி இதனை எடுத்து வர பெண்கள் வயோதிக பருவத்தில் கூட மூட்டு நோயில் இருந்து விடுபட்டு வீறு நடை கொள்ள முடியும்.

    சித்த மருத்துவ மருந்தான 'குந்திரிக்க தைலம்' எனும் மருந்தினை மூட்டுகளின் வீக்கத்தின் மீது தடவி வெந்நீரில் ஒத்தடமிட வீக்கம் குறைந்து நிவாரணம் தரும். பிண்ட தைலம் எனும் சித்த மருந்தையும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

    மூட்டு வலியால் அவதியுறும் பெண்கள் பாலில், மஞ்சள்பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து தொடர்ந்து எடுக்க நிச்சயம் நல்ல பலன் தரும்.

    சர்வ ரோக நிவாரணியான அமுக்கராக் கிழங்கு சேர்ந்த அமுக்கரா சூரணம் எனும் சித்த மருந்தை பாலில் கலந்து எடுப்பதன் மூலம் மூட்டு வலி, முதுகு வலி சார்ந்த நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதை வீக்கமான இடத்தில் முட்டை வெண்கருவுடன் சேர்த்து பற்று போட்டாலும் வீக்கம் குறைந்து வலி குறையும்.

    மூட்டு வாதத்திற்கென தனிச்சிறப்பு மிக்க கீரை முடக்கறுத்தான். முடக்கறுத்தான் கீரையில் உள்ள லுடியோலின் மற்றும் அபிஜெனின் குளுகுரோனிட் ஆகிய முக்கிய வேதிப்பொருட்கள் மூட்டு வீக்கத்தை குறைப்பதோடு, தேய்ந்த குருத்தெலும்புகளுக்கு புத்துணர்வு தந்து மீண்டும் வளர்ச்சி பெற உதவுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சூடு தன்மையுள்ள முடக்கறுத்தான் கீரை நோய்க்கு காரணமாகும் சித்த மருத்துவம் கூறும் வாதம்,கபம் இவற்றை குறைத்து மூட்டு வலியை குறைக்கும். அவ்வப்போது முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டாலும், சூப் வைத்து குடித்தாலும் வாதத்தை குறைக்கும்.

    மூட்டு சார்ந்த நோய்களுக்கு வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களில் வாதம் பாதிப்படைவதே முதன்மைக் காரணம் என்கிறது சித்த மருத்துவம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வதும். அவ்வப்போது மலச்சிக்கலை போக்கிக் கொள்வதும் வாதத்தை குறைக்கும் எளிமையான வழிமுறைகள்.

    சாதாரணமாக ஏற்படும் இடுப்பு வலி, முதுகு தண்டுவட எலும்பு பகுதிகளில் வலி, மூட்டு வலி மற்றும் வீக்கங்களுக்கு நொச்சி, ஆமணக்கு இலை, எருக்கு இலை, வாதமடக்கி எனும் தழுதாழை இலை, வாத நாராயணன் இலை இவைகளில் ஒன்றை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றடமிட நல்ல பலன் தரும். அல்லது இவை சேர்ந்த சித்த மருந்துகளை பயன்படுத்தலாம். இவற்றில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் வீக்கத்தை உண்டாக்கும் காரணிகளை தடுக்க கூடியதாக உள்ளன.

    நொச்சி இலையை குளிக்கின்ற வெந்நீரில் போட்டு குளிக்க இடுப்பு வலி, மூட்டு வலிகளை குறைக்கும். அல்லது யூகலிப்டஸ் இலைகளை போட்டு குளித்தாலும் வலி குறையும். மூட்டுகளில் சேரும் கபமாகிய குளிர்ச்சியும், வாதமாகிய வாயுவும் வலியை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுவதால் குளிர்ச்சி, வாயுவை அதிகரிக்கும் உணவு வகைகளையும், பழக்கவழக்கங்களையும் மூட்டுகளில் வாதம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    வலிகளை குறைக்க மருந்துகளை உட்கொண்டு சளைத்தவர்கள், வலியைக் குறைக்க தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் சிறிது கற்பூரம், கொஞ்சம் ஓமம் சேர்த்து காய்ச்சி பதமான சூட்டில் மேலே தடவி வர நிவாரணம் தரும். மூட்டு வீக்கங்களுக்கு சோற்றுக்கற்றாழை மடலை சூடாக்கி ஒத்தடம் இடுவது நல்லது. இயற்கையாக வீக்கமுருக்கி செய்கை தன்மையுள்ள மஞ்சளையும், கல்லுப்பையும் சேர்த்து வறுத்து துணியில் முடிந்து ஒத்தடம் இடுவதும் வீக்கம் குறைய வழிவகை ஆகும்.

    ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாதம், ருமட்டாய்டு எனும் முடக்கு வாதம், யூரிக் அமிலம் உப்பு படிவதால் ஏற்படும் கீல்வாதம் ஆகிய மூன்று முக்கிய வகைகளுமே பெண்களை அதிகம் பாதிப்பதாக உள்ளது. கருவில் பிள்ளையை சுமந்து உச்சக்கட்ட வலியான பிரசவ வலியை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளும் பெண்கள், இத்தகைய மூட்டு வலிகளை தாங்க முடியாமல் தவிப்பது ஒட்டு மொத்த குடும்பத்தையும் அவலநிலைக்கு ஆளாக்கும். நோயின் தன்மையை பிரித்தறிந்து துவக்கத்திலேயே சித்த மருத்துவத்தை நாடுவது நோயின் தீவிரத்தை குறைத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட உதவும்.

    சித்த மருத்துவத்தின் தனி சிறப்பு வெளி மருத்துவ முறைகள் 32 என்பதும் தான். சித்த மருத்துவத்தின் புற மருத்துவ முறைகளில் சிறப்பு மிக்க ஒன்று பற்று போடும் முறை. மூட்டு வலி,முதுகு தண்டுவட வலி போன்ற நோய் நிலைகளில் வீக்கத்தை குறைக்கவும், எலும்புகளை வன்மைப்படுத்தவும் ஆவாரை இலை,முருங்கை இலை, கருப்பு உளுந்து இவற்றுடன் சேர்த்து முட்டை வெண்கருவுடன் பற்று போட்டு வர சிறந்த பயன் தரும். சித்த மருத்துவம் கூறும் உள்மருந்துகளை மட்டும் பயன்படுத்துவதை விடுத்து வெளி மருந்துகளையும் பயன்படுத்தினால் ஆரோக்கியம் விரைவில் கிட்டும்.

    உடல் எடை கண்காணிப்பது என்பது மூட்டு வாத நோய்களுக்கு மிக அவசியம். அதனைக் கருத்தில் கொண்டு பெண்கள் உடல் எடையை அதிகரிக்காமல் பேணிக்காக்க வேண்டும். அத்துடன் உணவே மருந்து எனும் சித்த மருத்துவ அடிப்படையினை பின்பற்ற துவங்கினால் மூட்டு வலி மாத்திரம் அல்ல, இன்னும் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளையும் தடுத்து நலமான வாழ்க்கையை வாழ முடியும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    ×