search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aryan Khan"

    • அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
    • புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரி சமீர் வான்கடேவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    மும்பையில் போதைபொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஒரு சொகுசு கப்பலில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். அவரை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது செய்து விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் ஆர்யன்கான் மீது வழக்கு பதியாமல் இருக்க அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது.

    இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரி சமீர் வான்கடேவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அதில் அவர் இன்று மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளது.

    • ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
    • ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.க்கு தகவல் போனது.

    புதுடெல்லி :

    மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2-ந்தேதி புறப்பட்டுச்சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கூடிய விருந்து நடைபெறுவதாகவும், அதில் பலர் கலந்து கொண்டிருப்பதாகவும் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு படை அதிகாரிகள் அதிரடியாக அந்த கப்பலில் சோதனை நடத்தினர். இதில் போதைப்பொருள் பயன்படுத்தி பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் (வயது 25) உள்ளிட்டோர் பிடிபட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன்கான் குற்றமற்றவர் என கூறப்பட்டுள்ளது.

    இவ்வழக்கில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர்வான்கடே தலைமையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் பல குறைபாடுகளை, போதைப்பொருள் தடுப்பு படையின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) கண்டுபிடித்தது.

    மேலும், ஆர்யன்கானை வழக்கில் இருந்து தப்பிவிக்க சமீர் வான்கடேயும், அவரது சக அதிகாரிகளும் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாகவும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்தது.

    இதில் அவர்களுக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.க்கு தகவல் போனது.

    இதன் பேரில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்பூர் என 29 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

    இந்த சோதனையில் என்ன பிடிபட்டது என்பது தெரியவரவில்லை.

    சமீர் வான்கடே, கடந்த ஆண்டு மே மாதம் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையில் இருந்து சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்.
    • இவர் கதை ஒன்றை எழுதி முடித்துள்ளார்.

    இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான். இவர் தற்போது கதை ஒன்றை எழுதி முடித்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் பெயரிடப்படாத கிளாப் போர்ட் மற்றும் கதை எழுதிய புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு "கதை எழுதி முடித்துவிட்டேன்.. ஆக்‌ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.


    ஆர்யன் கான்

    இதற்கு, " யோசித்தது.. நம்பியது.. கனவு கண்டது நடந்தது.. முதல் ஒன்றுக்கு எனது வாழ்த்துகள். அது எப்போதும் சிறப்பானது." என்று நடிகர் ஷாருக்கான் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    ஆர்யன்கான் பதிவு

    இந்த கதையானது வெப்தொடரின் கதை என்றும் 2023-ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    மும்பை போதைப்பொருள் வழக்கில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டு, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்திற்கு மாற்றப்பட்டார்.
    புதுடெல்லி :

    மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு, சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

    அப்போது, மும்பை மண்டல என்.சி.பி., இயக்குனராக இருந்த சமீர் வான்கடே, இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து மும்பை போதைப்பொருள் வழக்கில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டு, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்திற்கு மாற்றப்பட்டார்.

    இந்த சூழ்நிலையில் போதை மருந்து வழக்கில் சிக்கிய ஆர்யன் கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலையானார். இந்நிலையில் மும்பையிலிருந்து சென்னையில் உள்ள வரி சேவை இயக்குநரகத்திற்கு சமீர் வான்கடே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    தூக்கத்திற்காக கஞ்சா பயன்படுத்தியதாக ஆர்யன் கான் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.
    மும்பை :

    மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய விசாரணை அமைப்பான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். நடுக்கடலில் கப்பல் சென்றபோது நடந்த இந்த சோதனையில், அங்கு போதைப்பொருள் விருந்து நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போதை விருந்தில் கலந்து கொண்டதாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்(வயது23) உள்பட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் சுமார் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஆர்யன் கான் வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்குழு சமீபத்தில் சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஆர்யன் கான் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்பதால் அவர்கள் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை எனக்கூறப்பட்டது. இந்தநிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆர்யன் கான் தனக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

    அதாவது 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, ஆர்யன் கான் சரியாக தூக்கம் இன்றி தவித்துள்ளார். அவர் தனது தூக்க பிரச்சினைக்கு தீர்வு தேடியபோது கஞ்சா பயன்படுத்தினால் தூக்க கோளாறு நீங்க வாய்ப்புள்ளதாக அவர் சில இணைய கட்டுரைகளை படித்துள்ளார்.

    இதற்காக அவர் அங்கு கஞ்சா வாங்கி பயன்படுத்த ஆரம்பித்ததாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் அவர் முன்பு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல ஆர்யன் கான் தனது செல்போனில் நண்பர்களுடன் போதைப்பொருள் குறித்து வாட்ஸ்-அப்பில் உரையாடியதையும், குறுந்தகவல்கள் அனுப்பியதையும் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் அந்த உரையாடல்களுக்கும் தற்போது அவர் மேல் பதியப்பட்டுள்ள வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்தது.

    சோதனையின்போது ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்படவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் ஆர்யன் கான் பங்கை நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே அவர் சந்தேகத்திற்கிடமின்றி குற்ற சதியில் ஈடுபட்டுள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை போன்ற காரணங்களால் ஆர்யன் கான் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    போதைப்பொருள் வைத்திருந்ததாக கைதான ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
    மும்பை:

    மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்ததாக பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 

    இந்நிலையில், இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் 14 குற்றவாளிகளின் பெயரை குறிப்பிட்டு 6,000 பக்கங்களை தாக்கல் செய்துள்ளது.

    இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் 5 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) இன்று விடுவித்தது.

    போதிய ஆதாரம் இல்லாததால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

    ஆர்யன் கானை கைது செய்த முதல் அதிகாரிகள் குழு முக்கியமான எந்த விதிமுறைகளையும் சரியாக பின்பற்றவில்லை என சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டவர்களின் கட்டாய மருத்துவப் பரிசோதனை, ரெய்டுகளின் வீடியோ பதிவு மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களுக்கான ஆதாரங்களை உறுதிப்படுத்துதல் போன்ற எதுவும் கிடைக்கவில்லை என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து என்சிபி டைரக்டர் ஜெனரல் பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாட்ஸ்ஆப் உரையாடல், கோர்ட்டில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேவையான உடல் உறுதியான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தார்

    போதை பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சொகுசு கப்பல் வழக்கு உள்பட 6 வழக்குகள் போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
    மும்பை :

    மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் சோதனை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் போதை பொருள்வழக்கில் ஆர்யன் கான் மற்றும் அவருடன் கைதான அர்பாஸ்மெர்ச்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் மும்பை ஐகோர்ட்டால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அப்போது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவின் முன் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று ஆர்யன் கான் தென்மும்பையில் உள்ள போதை பொருள் அலுவலகத்தில் ஆஜரானார். மாடல் அழகு முன்முன் தமேச்சாவும் ஆஜரானார்.

    இதேபோல ஆர்யன் கான் நேற்று நவிமும்பையில் போதை பொருள் சிறப்பு புலனாய்வு பிரிவிலும் ஆஜரானார். அவர் போதை பொருள் வழக்கு தொடர்பாக துணை இயக்குனர் ஜெனரல் சஞ்சய் குமார் சிங் தலைமையிலான குழுவினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார். மேலும் அதிகாரிகள் வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.

    போதை பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சொகுசு கப்பல் வழக்கு உள்பட 6 வழக்குகள் போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதில் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆர்யன் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் உடல்நிலையை காரணம் காட்டி ஆஜராகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.
    மும்பை :

    போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2-ம் தேதி மும்பை - கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(23), உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது ஆர்யன்கான் உள்ளிட்டோருக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. 

    ஆர்யன்கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். குறிப்பாக, சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என கூறினார்.

    இதற்கிடையே, போதைப் பொருள் வழக்கில் பொது சாட்சியான பிரபாகர் சாயில், போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றம்சாட்டினார். 

    இந்நிலையில்,  என்.சி.பி அதிகாரி சமீர் வான்கடே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு ஆர்யன்கான் உள்பட ஏனைய 4 பேர் மீதான போதைப் பொருள் வழக்கை விசாரிக்க உள்ளது என போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

    ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் ஷாருக்கான் மேலாளர் பூஜா தத்லானி, ஆர்யன் கானிடம் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
    மும்பை :

    போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2-ந் தேதி மும்பை- கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(வயது23) உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர். இந்தநிலையில் ஆர்யன்கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மராட்டிய மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். குறிப்பாக சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என கூறினார்.

    இந்தநிலையில் சொகுசு கப்பல் போதை பொருள் வழக்கில், பொது சாட்சியான பிரபாகர் சாயில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். அதில் அவர் போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக தெரிவித்தார். இந்த பேரம் தொடா்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு முக்கிய சாட்சியான கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி ஆகியோர் லோயர் பரேல் பகுதியில் அக்டோபர் 3-ந்தேதி சந்தித்து பேசியதாக கூறியிருந்தார்.

    பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டு குறித்து மும்பை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டில் கூறியது போல, கடந்த 3-ந் தேதி லோயர் பரேல் பகுதியில் உள்ள வணிகவளாகம் அருகில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி, கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா ஆகியோர் சந்தித்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.

    ஆர்யன்கான், ஷாருக்கான்

    இதில் பூஜா தத்லானியின் கார் என கூறப்படும் நீல நிற மெர்சிடஸ் பென்ஸ் காரில் இருந்து இறங்கும் பெண் ஒருவர், கிரன் கோசவியிடம் பேசும் காட்சிகள் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    பின்னர் கிரன் கோசவி, அந்த பெண், சாம் டிசோசா ஆகிய 3 பேரும் அவர்களது வாகனங்களில் தனித்தனியாக அங்கு இருந்து புறப்பட்டு செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கண்காணிப்பு கேமரா காட்சிகளில் 3 பேரும் சந்தித்து பேசியது மட்டும் தெரிகிறது. ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க சாம்டிசோசாவை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை" என்றார்.

    இதேபோல கிரன் கோசவியின் காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதும் தெரியவந்து உள்ளது. எனவே போலீஸ் போல நடித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக மற்றொரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் ஷாருக்கான் மேலாளர் பூஜா தத்லானி, ஆர்யன் கானிடம் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

    ×