search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 மற்றும் 8ம் வகுப்புகள்"

    5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அதிமுக அரசு கைவிட வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #PublicExams #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-19-ம் கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு” என்று, பெற்றோரும் இளம் மாணவ-மாணவியரும் அதிர்ச்சிக்கு ஆளாகி மன அழுத்தத்தினால் அல்லலுறும் வகையில், அ.தி.மு.க அரசு அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே அடிமைத்தனமாக நகல் எடுத்து அட்சரம் பிசகாமல் அ.தி.மு.க அரசு செயல்படுத்துவது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சராக உள்ள செங்கோட்டையன் ஆகியோரின் “குதர்க்க மனப்பான்மை”யைப் பிரதிபலிக்கிறது.

    மத்திய அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று புதிய கல்விக் கொள்கையை வகுத்த ஈரம் காய்வதற்குள், மத்திய பா.ஜ.க அரசே நினைத்துப்பார்க்காத அவசரத்தில், அதை அ.தி.மு.க அரசு பள்ளிப்பருவத்தில் உள்ள மாணவர்கள் மீது திணிப்பதும், கல்விக் கூடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் முதல் வகுப்பிலிருந்து வேலைக்குப் போகும் வரை பரீட்சை எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நெருக்கடியைச் சுமத்துவதும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.

    ஏழை, எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களையும், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களையும் “நுழைவுத் தேர்வு” “போட்டித் தேர்வு” “பொதுத் தேர்வு” என்று பலவந்தப்படுத்தி கிராமப்புறக் கல்வியறிவை அப்படியே தகர்த்தெறிந்து விட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசும், அதற்கு தலைஆட்டும் பொம்மை போல் அ.தி.மு.க அரசும் செயல்படுவது மன்னிக்க முடியாத துரோகம்.

    ஏற்கனவே, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என்று கட்டாய பொதுத் தேர்வுகள் இருக்கின்ற நிலையில், இப்போது 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என்பது, ஒரு மாணவன் 12-ம் வகுப்பு படித்து வெளியில் வருவதற்குள் ஐந்து பொதுத்தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயத்திற்கும், மன ரீதியிலான துன்பத்திற்கும் தள்ளப்படுகிறான். இந்த பொதுத்தேர்வுகள் பள்ளிப் பருவத்தில் உள்ள மாணவனின் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைப்பதற்குச் சமம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க அரசும் உணரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.



    5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் என்பது ஏதோ டெண்டரில் அ.தி.மு.க அமைச்சர்கள் கமி‌ஷன் அடிப்பது போன்றது அல்ல என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும். கல்வியாளர்களையும், பெற்றோர்களையும் ஏன் மாணவர்களையும் கூட கலந்து ஆலோசித்து மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை அரை வேக்காட்டுத்தனமாக அவசர கோலத்தில் எடுப்பது பல தலைமுறைகளை பாதித்து விடும்.

    ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசின் “காவிமய கல்வி” மற்றும் “சமூக நீதி” மற்றும் “கிராமப்புற மாணவர்களை” பாதிக்கும் நடவடிக்கைகளுக்கும் கண்ணை மூடி, கையைக் கட்டிக்கொண்டு, ஆமாம் சாமி போட்டு ஒத்துழைப்பதை அ.தி.மு.க அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு, மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும்; கைவிட்டு, அதுகுறித்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PublicExams #MKStalin
    5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #PublicExam #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியில் அரசு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.

    இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு சார்பில் தினமும் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் யாவும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது.

    பொது மக்களின் அடிப்படை வசதிகள் யாவும் உடனுக்குடன் அரசு செயல்படுத்தி வருகிறது.



    இந்தியாவிலேயே பள்ளி கல்வி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. கல்வித்துறைக்கு பல கோடி ஒதுக்கப்பட்டு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் “தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறதே?’ என்று கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது, “மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம். ஆனால் தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளோம். எனினும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி தான் அது பற்றி முடிவு எடுக்க உள்ளோம். மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை” என்று கூறினார். #PublicExam #Sengottaiyan
    மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. #PublicExams
    சென்னை:

    ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



    “5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்கள் ரூ.100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணிநேரம் நடைபெறும்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #PublicExams
    ×