search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 மாநில சட்டசபை தேர்தல்"

    • தெலுங்கானாவில் 1.20 கோடி கியாஸ் இணைப்புகள் உள்ளன.
    • ஆண்கள் பெயரில் உள்ள இணைப்புகள் பெண்கள் பெயரில் மாற்ற கியாஸ் ஏஜென்சி அலுவலகம் முன்பாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    தெலுங்கானாவில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ரூ.500-க்கு சமையல் கியாஸ் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.

    அதன்படி வருகிற 28-ந்தேதி காங்கிரஸ் தோற்றுவித்த நாளை முன்னிட்டு தெலுங்கானாவில் பெண்கள் பெயரில் உள்ள கியாஸ் இணைப்புகளுக்கு மகாலட்சுமி என்ற புதிய திட்டத்தில் ரூ.500 மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 1.20 கோடி கியாஸ் இணைப்புகள் உள்ளன.

    பெண்கள் பெயரில் கியாஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் மானிய விலையில் வழங்கப்படும் என தெரியவந்ததால் ஆண்கள் பெயரில் உள்ள இணைப்புகள் பெண்கள் பெயரில் மாற்ற கியாஸ் ஏஜென்சி அலுவலகம் முன்பாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    • புயலுக்கு முன்பும்-புயலுக்கு பிறகும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் பாதிப்பு குறைந்தது.
    • பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:-நிவாரணப் பணிகள் உங்களுக்குத் திருப்தியை அளிக்கின்றனவா? இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

    தமிழ்நாடு அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசின் குழு முழுமையாக வரவேற்றுப் பாராட்டி இருக்கிறது. 'சரியான நேரத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்' என்றும், 'உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது' என்றும், 'அதற்காக இந்த அரசை நாங்கள் பாராட்டுகிறோம்' என்றும் ஒன்றியக் குழு பாராட்டி இருக்கிறது.

    இதே கருத்தை, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் என்னைச் சந்தித்தபோது தெரிவித்தார்.

    அரசியல் ரீதியாக ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் எங்களுக்குமான கொள்கை முரண்பாடுகள் அனைவரும் அறிந்ததே. அதனையும் தாண்டி இந்தளவுக்குப் பாராட்டுகிறார்கள் என்றால், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம்.

    கடுமையான மழை இரண்டு நாட்கள் இடைவிடாது பெய்கிறது. மழை நின்றதும் நிவாரணப் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். மறுநாளே போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பானது மூன்று நாட்களுக்குள் கிடைத்து விட்டது. புறநகரில் ஒரு சில பகுதிகள் நீங்கலாக நான்கைந்து நாட்களுக்குள் மற்ற அனைத்துப் பகுதிகளும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டன.

    தண்ணீரில் மூழ்கியிருந்த பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்தோம். அவர்களையும் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்து அமர்த்தினோம். நானே பல்வேறு பகுதிக்குச் சென்றேன். 20 அமைச்சர்கள், 50 ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ் அதிகாரிகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் களத்தில் இருந்தார்கள். வெளிமாவட்டங்கள் அனைத்தில் இருந்தும் ஆதரவுக் கரம் நீண்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த நொடி வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    புயலுக்கு முன்பும்-புயலுக்கு பிறகும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் பாதிப்பு குறைந்தது. பொதுவாக மக்கள் பணியாற்றும் நாங்கள் மேலும் மேலும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுதான் நினைப்போம். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். இன்னும் அதிகமாக மக்களுக்கு உதவவே நான் ஆசைப்படுகிறேன்.

    கேள்வி:-பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. நீர் வடிந்து தேங்காமல் இருப்பதற்கு இயற்கையால் உருவான அந்த நிலத்தை முழுவதுமாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்குமா? அது போல வேளச்சேரியிலும் பல இடங்கள் சதுப்பு நிலமாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது?

    பதில்:- பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும். தென்சென்னை பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பயன்பாடு குறித்து நிச்சயமாக மறு ஆய்வு செய்யப்படும். இந்த சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், வனத்துறை ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முழுமைத் திட்டத்தில் வெள்ளத் தடுப்பிற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் அது வெளியிடப்படும். இந்த மூன்றாவது முழுமைத் திட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம் பெறும். சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்பு நிலங்களையும் மேம்படுத்தி, வெள்ள பாதிப்புகளைக் குறைத்து, ஒரு நிலைக்கத்தக்க திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்த மூன்றாவது முழுமைத் திட்டம் நிச்சயம் வழிவகுக்கும்.

    கேள்வி:- சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளும் தண்ணீர் வடியும் பாதைகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கின்றன. கனமழை பெய்யும்போது எல்லா ஊர்களிலுமே இது போன்ற நிலைமை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளைச் சுணக்கம் காட்டாமல் அகற்ற அரசு முன் வருமா?

    பதில்:- ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு எப்போதும் முனைப்புடன் உள்ளது. எவ்வித ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு ஆகும். நீர்நிலைகளையும், வெள்ளச் சமவெளிகளையும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் இருந்து காக்க வேண்டும். அத்தகைய நீர்நிலைகளைச் சுத்தம் செய்து அகலப்படுத்த வேண்டும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 2021 முதல் நவம்பர் 2023 வரை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 350 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 475.85 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, நீர்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் 19,876 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 220.45 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    கேள்வி:-முதலமைச்சராகிய நீங்களும் கவர்னரும் கலந்து பேசி, நிர்வாகத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளைப் போக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருக்கிறது. கவர்னர் உங்களை அழைத்திருக்கிறார். அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை இது களையும் என்று நம்புகிறீர்களா?


    பதில்:-கவர்னர் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு பல முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அரசு விழாக்களிலும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார் பேசினார். எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பது அல்ல பிரச்சனை. கவர்னர் மனம் மாறித் தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.

    கேள்வி:-மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இச்சூழலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

    பதில்:-மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தான். இது பாராளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்சனைகள்தான் தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான் பா.ஜ.க அதிகம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பா.ஜ.க. பெற்றுள்ளது.

    பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பா.ஜ.க. பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் மூலமாக பாராளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம். மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என பேசி வருகின்றனர்.
    • சதி செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும்.

    தெலுங்கானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது.

    மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்- மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாரத ராஷ்டிரிய சமிதி மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சதி செய்து வருவதாக தெலுங்கானா டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தனர்.

    தெலுங்கானா காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள் புன்னா கைலாஷ், சாருக் கொண்டா வெங்கடேஷ் சிலுகா மதுசூதன் ரெட்டி ஆகியோர் டி.ஜி.பி.யிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீஹரி, ராஜேஸ்வர ரெட்டி, பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் ஆகியோர் 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என பேசி வருகின்றனர்.

    மேலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகின்றனர். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து 100 மணி நேரம் கூட ஆகாத நிலையில் சதி செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    இதனால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.
    • சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    ராய்ப்பூர்:

    5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது. மத்தியபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட் சியை கைப்பற்றியது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.

    இந்நிலையில் சத்தீஸ்கர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    கட்சியின் மேலிட பார்வையாளர்களான மத்திய மந்திரிகள் அர்ஜூன் முண்டா, சர் பானந்தா சோனவால் மற்றும் பொதுச்செயலாளர் துஷ்யந்த்குமார் கவுதம் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட 54 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று புதிய முதல்வரை தேர்வு செய்கிறார்கள். ஒருமித்த கருத்துடன் முதல்-மந்திரி தேர்வு நடைபெறும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    ராமன்சிங், ரேணுகாசிங், அருண்சிங் ஆகியோரின் பெயர்கள் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    • புருனே, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியட்நாம் ஆசிய நாடுகளுக்கு ராகுல் காந்தி செல்ல இருந்தார்.
    • மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல் தோல்வி குறித்து ராகுல் காந்தி நேற்று ஆய்வு செய்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஒரு வாரம் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். நேற்று முதல் 15-ந்தேதி வரை புருனே, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியட்நாம் ஆசிய நாடுகளுக்கு செல்ல இருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பிறகு கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல் தோல்வி குறித்து ராகுல் காந்தி நேற்று ஆய்வு செய்தார். இன்று ராஜஸ்தான், மிசோரம் தேர்தல் குறித்து ஆய்வு செய்கிறார்.

    • தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 71 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    • மழை காலங்களில் ஒழுகும் தன்மையுள்ள மண் குடிசையில் வசித்து வரும் கமலேஷ்வருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை.

    போபால்:

    மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஒழுகும் மண் குடிசை வீட்டில் வசிக்கும் தொழிலாளி சுயேட்சையாக நின்று எம்.எல்.ஏ.வாகி புதிய சாதனை படைத்துள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா அமோக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி பிடித்துள்ளது. இங்குள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகளை பாரதிய ஜனதா வெற்றி பெற்றாலும், 2-வது இடத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    இந்தநிலையில் இந்த மாநிலத்தில் ஒரே ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அங்கீகாரத்தை பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த கமலேஷ்வர் டோடியார் பெற்றுள்ளார். 33 வயதான இவர் தனது பள்ளி பருவ காலத்திலேயே கல்வி கற்க கடுமையான போராட்டங்களை சந்தித்தவர். அவரது தாயார் கூலி வேலைக்கு சென்றும், கோழி வளர்ப்பில் கிடைத்த முட்டைகளை விற்றும் அதில் கிடைத்த பணத்தில் படிக்க வைத்தார்.

    ஆதிவாசி பழங்குடி இனத்தைச் சேர்ந்த கமலேஷ்வருக்கு மக்கள் பணியாற்ற வேண்டும், பிற்படுத்தப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடியின, தாழ்த்தப்பட்ட பல்வேறு மக்களுக்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக பொது சேவையில் ஆர்வத்துடன் பணியாற்றினார். இதனுடன் டிபன் டெலிவரி செய்யும் தொழிலையும் மனம் கூசாமல் செய்தார். டெல்லியில் சட்டப்படி பண்பை படித்த போதும் அங்கும் டிபன் டெலிவரி தொழிலாளியாகவே வலம் வந்தார் கமலேஷ்வர்.

    ஆனாலும் அவரது உழைப்பு மற்றும் மக்கள் சேவைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது. கடந்த இரண்டு முறை சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் விடாமுயற்சியுடன் தனது சேவையை தொடர்ந்தார் கமலேஷ்வர் டோடியார்.

    இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்ட பாரத் ஆதிவாசி இயக்கத்தின் சார்பில் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள சைலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார் கமலேஷ்வர் டோடியார். இந்த தொகுதியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக செல்வாக்குடன் களத்தில் இறங்கி பணியாற்றினர். ஆனாலும் கமலேஷ்வர் மனம் தளராமல் தனது ஏழ்மையை எண்ணி ஒதுங்கி விடாமல் தேர்தலில் புதிய சரித்திர சாதனையை படைத்துள்ளார்.

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 71 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 66 ஆயிரத்து 601 ஓட்டுகளும், பாரதிய ஜனதா வேட்பாளருக்கு 41 ஆயிரத்து 584 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

    இவர் சார்ந்துள்ள புதிய கட்சியான பாரத் ஆதிவாசி இயக்கம் ராஜஸ்தான் மாநிலத்தை மையமாக கொண்ட கட்சி. ஆனாலும் மத்திய பிரதேசத்தில் கமலேஷ்வரின் எளிமையான மக்கள் சேவையே அவரை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்துள்ளது.

    மழை காலங்களில் ஒழுகும் தன்மையுள்ள மண் குடிசையில் வசித்து வரும் கமலேஷ்வருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை. தேர்தலின் போது மோட்டார் சைக்கிளிலேயே தனது ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பணம் இல்லாததால் சாப்பிடாமல் பசித்த வயிற்றுடனே பிரசாரம் செய்து மக்களை சந்தித்துள்ளார்.

    மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கூட கார் வசதி இல்லாததால் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சட்டமன்ற செயலகத்திற்கு ஆவணங்களை சமர்ப்பிக்க மோட்டார் சைக்கிளிலேயே சென்றுள்ளார் கமலேஷ்வர் டோடியார். பழங்குடியின சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் அதற்கு தேவையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற இருப்பதாக கமலேஷ்வர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் சார்ந்துள்ள பாரத் ஆதிவாசி இயக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்தவும், சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட போவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் நமது இயற்கை உலகத்தை பாதுகாக்கவும், தூய்மையான ஆற்றலை ஊக்குவிக்கவும் மாசுபாட்டை குறைக்கும் கொள்கைகளை எங்கள் இயக்கம் ஆதரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் என்றாலே கோடிக்கணக்கில் பணம் கொட்டும் இந்த காலத்தில் கமலேஷ்வர் டோடியார் தனது ஏழ்மையையே மூலதனமாகக் கொண்டு சாதித்துள்ளார். ஆனால் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பணக்கார எம்.எல்.ஏ.வாக ஸ்பெக்ட்ரம் என்பவர் உள்ளார். அவருக்கு 223 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் எளிய சாமானியராக, எவ்வித பணபலமும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு பிரதான அரசியல் கட்சிகளை வீழ்த்தி அம்மாநிலத்தில் ஒரே சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை எட்டிப்பிடித் துள்ளார் கமலேஷ்வர் டோடியார்.

    இவரது எளிமையான வாழ்க்கை, அவர் அரசியலில் சாதித்த வெற்றி, ஏழ்மையிலும் மக்கள் பணியாற்றினால் உரிய அங்கீகாரம் தேடி வரும் என்பதற்கு முக்கிய உதாரணமாக பேசப்படுகிறது.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • ரேவந்த் ரெட்டியை தொடர்ந்து, 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தெலுங்கானாவின் புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் ரேவந்த் ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். மாநில வளர்ச்சி மற்றும் குடிமக்களின் நலனுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்பதை உறுதி அளிக்கிறேன்.

    • மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
    • முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜஸால்:

    வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 8.57 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 82 சத வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. கடந்த 4-ந் தேதி (திங்கட் கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.

    இக்கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், காங்கிரசுக்கு ஓரிடம்தான் கிடைத்தது.

    இந்நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் முதல்-மந்திரியாக கட்சித் தலைவா் லால்டுஹோமா தோ்வு செய்யப்பட்டாா்.

    இதைத் தொடா்ந்து, மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

    மாநில முதல்-மந்திரியாக லால்ஹோமா நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

    74 வயதாகும் லால்டு ஹோமா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கலாமா என்று கட்சி மேலிடம் ஆலோசித்தது.
    • பாட்டி விக்ரமார்காவுக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம் என அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த மாநிலத்தில் துணை முதல் மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. துணை முதல் மந்திரி போட்டியில் பாட்டி விக்ரமார்கா மற்றும் உத்தம் ரெட்டி ஆகியோர் உள்ளனர்.

    இவர்கள் இருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கலாமா என்று கட்சி மேலிடம் ஆலோசித்தது.

    ஆனால் தலித் ஒருவரை துணை முதல்-மந்திரி ஆக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி பாட்டி விக்ரமார்காவுக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம் என அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பா.ஜனதா மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    இந்த நிலையில் 3 மாநிலத்துக்கும் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-மந்திரி தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 4½ மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது. கட்சி தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்காக புதுமுகம் அவசியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதனால் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்யப் படலாம் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார். அவருக்கு 5-வது முறையாக முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் மேலிடம் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்க தயக்கம் காட்டி வருகிறது.

    • காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஆர்வம் காட்டாமல் மாநிலத் தேர்தல்களில் கவனம் செலுத்தியது.
    • தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் நாளை கூடும் என அறிவிக்கப்பட்டது

    பா.ஜனதா கட்சியை 2024 பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைந்து ஒரே அணியில் திரண்டால்தான் முடிவும் என பீகார் மாநில முதல் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் கருதினர்.

    இதனால் நிதிஷ் குமார், லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், உத்தர பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முயற்சி மேற்கொண்டனர். இதன் முதல் கூட்டம் பீகாரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கர்நாடகாவில் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது இந்திய கூட்டமைப்புக்கு இந்தியா எனப் பெயரிடப்பட்டது. இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் எனத் தெரிவித்தனர். இது பா.ஜனதாவுக்கு சற்று பயத்தை கொடுத்தது. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சிகளுள் ஆலோசனை நடத்தி தங்கள் பக்கமும் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன என காண்பித்தது.

    3-வது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றது. அப்போது தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இந்த கூட்டணியில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில்தான் ஐந்து மாநில தேர்தல் தேதி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஆர்வம் காட்டாமல் மாநிலத் தேர்தல்களில் கவனம் செலுத்தியது. இதனால் அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தனர். காங்கிரஸ் கட்சி மாநிலத் தேர்தல் முக்கியமானது எனத் தெரிவித்து அதில் கவனம் செலுத்தியது. சாதி வாரியாக கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரசை அகிலேஷ் யாதவ் வெளிப்படையாக விமர்சித்தார். மேலும், உ.பி.யில் பெரும்பாலான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்றார். இதனால் இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.

    இந்த நிலையில்தான் ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ்க்கு பெரிய அடி விழுந்தது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்தது. தெலுங்கானாவில் மட்டும் ஆட்சியை பிடித்தது. இப்போது, காங்கிரஸ் தனியாக நின்றதன் காரணமாக தோல்வியை சந்தித்தது. இந்தியா கூட்டணியில் கட்சியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் விமர்சனம் வைக்கப்பட்டது.

    தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் நாளை கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரசின் 4 மாநில தேர்தல் தோல்வி பாராளுமன்ற தேர்தலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்த கூட்டத்தில மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. தங்களது கட்சி பிரதிநிதிகளை அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

    முக்கியமான தலைவர்கள் பங்கேற்காமல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றால் அது சரியாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கூட்டம் டிசம்பர் 3-வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
    • தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.

    அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

    தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

    தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.

    தனிமாநிலமாக உருவாக காரணமாக இருந்தவரை மக்கள் அகற்ற சில காரணங்கள் கூறப்படுகின்றன.

    அந்த வகையில், "மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலை அதிகம் கவனம் செலுத்தியது. அதிக அளவில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள். வாரிசுகளின் அதீத ஆதிக்கம். காங்கிரஸ் கட்சி மற்றும் ரேவந்த் ரெட்டியை குறைத்து மதிப்பிட்டது. முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது. அதீத அதிகாரம். இரண்டு முறை தொடர் ஆட்சியில் இருப்பதால் இயல்பான மக்களின் மனநிலை" உள்ளிட்டவைகளை காரணங்களாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×