search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "206 பவுன் நகை கொள்ளை"

    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவத்தில் வேலைக்காரி மற்றும் உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    ஜமீன் பல்லாவரம், கார்டன் உப்ராப் நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் யோகசேரன். தியாகராயநகரில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    நேற்று முன்தினம் மாலை வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி, வேலைக்கார பெண் மகாராணி ஆகியோரை கட்டிப் போட்டு 206 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    இது குறித்து பல்லாவரம் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் வேலைக்கார பெண் மகா ராணியின் திட்டப்படி மதுரையை சேர்ந்த உறவினர் மூலம் இந்த கொள்ளையை நடத்தி இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து மகா ராணியை கடந்த 2 நாட்களாக போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வந்தனர். அப்போது அவர், பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

    அவர் கொடுத்த தகவலின் படி கொள்ளையில் ஈடுபட்டு மதுரையில் பதுங்கி இருந்த உறவினர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த அருண் குமார் (32) மதுரையை சேர்ந்த செல்வம் (28), சுரேஷ் (26) உசிலம்பட்டி கவுதம் ஆகிய 4 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் அருண்குமார் கோவையில் ரப்பர் தொழில் செய்து வருகிறார். கொள்ளையடித்த நகைகளை அவர்கள் கோவையில் உள்ள ஒரு கடையில் அடகு வைத்திருப்பது தெரிந்தது.

    தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்து சென்று இன்று மதியம் 206 பவுன் நகையை மீட்டனர்.

    வங்கி மேலாளர் யோக சேரனின் சொந்த ஊர் மதுரை ஆகும். கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு சென்ற போது பக்கத்து வீட்டை சேர்ந்த மகாராணியை வீட்டு வேலை செய்ய பல்லாவரத்துக்கு அழைத்து வந்து இருக்கிறார்.

    வீட்டில் அவருக்கு கீழ் பகுதியில் தங்க இடம் ஒதுக்கி இருந்தார். தினமும் காலையும், மாலையும் யோகசேரன் தங்கி உள்ள அறையை சுத்தம் செய்தார்.

    கொள்ளை நடந்த வீடு.

    மதுரையில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக யோக சேரன் வங்கி லாக்கரில் இருந்த மகளின் நகை உள்பட 206 பவுன் நகையை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

    இதனை கண்ட மகாராணிக்கு நகை மீது ஆசை ஏற்பட்டது. அதனை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

    இது பற்றி மகாராணி கோவையில் உள்ள உறவினர் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவரும் உறவினர்கள் செல்வம், சுரேஷ், கவுதம் துணையோடு கொள்ளை திட்டத்தை வகுத்தார்.

    திட்டப்படி நேற்று முன்தினம் யோக சேரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அருண்குமார் உள்பட 4 பேரும் முகமூடி அணிந்தபடி வீட்டுக்கு புகுந்தனர். அவர்களுக்கு உதவியாக மகாராணியும் எந்தவித சத்தமும் போடாமல் வீட்டுக் கதவை திறந்து விட்டு இருக்கிறார்.

    போலீசாரின் விசாரணையை திசை திருப்புவதற்காக மகாராணியையும் கட்டுப்போட்டு நகையை அள்ளி சென்று இருக்கிறார்கள்.

    மதுரையில் கைதான அருண்குமார் உள்பட 4 பேரையும் இன்று மாலை போலீசார் சென்னை அழைத்து வருகிறார்கள். அவர்களுடன் மகாராணியையும் சேர்த்து வைத்து மேலும் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    அப்போது கொள்ளை திட்டம் வகுத்தது எப்படி? அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்ற விபரம் தெரிய வரும். #PallavaramRobbery
    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    ஜமீன் பல்லாவரம், கார்டன் உட்ராப் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் யோகசேரன். தியாகராயநகரில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    இவர்களது வீட்டின் கீழ் பகுதியில் வேலைக்கார பெண் ராணி என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி வீட்டில் இருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்த 5 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் வேலைக்கார பெண் ராணி ஆகியோரை கட்டிப் போட்டனர். பின்னர் அவர்களது வாயில் துணியை திணித்து விட்டு பீரோவில் இருந்த 206 பவுன் நகையை அள்ளி தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முகமூடி கும்பலை பிடிக்க துணை கமி‌ஷனர் முத்துசாமி தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். கொள்ளையர்களின் உருவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    யோகசேரன் தனது மனைவியின் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். மதுரையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நகைகளை வங்கியில் இருந்து எடுத்து வந்திருந்தார்.

    நேற்று காலைதான் மதுரையில் இருந்து திரும்பி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்நேற்று மதியம் வீட்டுக்கு வந்த முகப்பேரில் வசிக்கும் அவர்களது மகள் செந்தமிழ் காவியா தனது 175 பவுன் நகைகளையும் வங்கி லாக்கரில் வைக்கும்படி பெற்றோரிடம் கொடுத்து சென்று உள்ளார். அந்த நகையுடன் சேர்த்து மொத்தம் 206 பவுன் நகையை கொள்ளையர்கள் சுருட்டி சென்று விட்டனர்.

    இந்த கொள்ளையில் வேலைக்கார பெண் ராணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. முகமூடி கொள்ளை கும்பல் கதவை தட்டிய போது ராணிதான் கதவை திறந்து விட்டு உள்ளார். அவர் கொள்ளையர்களை கண்டதும் கூச்சலிடாதது ஏன்? யோகசேரன் வீட்டில் நகை இருப்பது கொள்ளையர்களுக்கு எப்படி தெரியும் என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இதையடுத்து ராணியை தனியாக அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் திட்டமிட்டு முகமூடி கும்பலை வரவழைத்து நகையை கொள்ளையடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ராணியை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். முகமூடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ராணியின் செல்போனை கைப்பற்றி கொள்ளை நடந்த நாளில் அவர் யார்? யாருடன் பேசினார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர். #PallavaramRobbery 
    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரம் கார்டன் உட்ராப் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் யோகசேரன் (வயது 55). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ரெப்போ வங்கியில் மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி.

    இவர்களுக்கு திலகன் என்ற மகனும், செந்தமிழ்காவியா என்ற மகளும் உள்ளனர். திலகன், பல் டாக்டர் ஆவார். செந்தமிழ் காவியாவுக்கு திருமணமாகி கணவருடன் சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார்.

    யோகசேரனின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவரது வீட்டில் மதுரையைச் சேர்ந்த ராணி என்ற பெண், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டின் மாடியில் யோகசேரன், தனது மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். தரைதளத்தில் உள்ள வீட்டில் வேலைக்காரி ராணி வசித்து வருகிறார்.



    மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட செந்தமிழ் காவியா, தனது 175 பவுன் தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைப்பதற்காக நேற்று மதியம் தனது தாய் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் யோகசேரன், சுப்புலட்சுமி மட்டும் இருந்தனர். திலகன் வீட்டில் இல்லை. நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டு வேலைக்காரி ராணி, மாடிக்கு சென்று கதவை தட்டினார். யோகசேரன் கதவை திறக்கவும் அவர் உள்ளே சென்றார்.

    அப்போது திபுதிபுவென 5 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். முகத்தில் முகமூடி அணிந்து இருந்த அவர்கள், கத்தி கூச்சலிட்டால் கொன்று விடுவோம் என்று தங்கள் கையில் இருந்த கத்தியை காட்டி யோகசேரனை மிரட்டினர்.

    பின்னர் யோகசேரன், அவருடைய மனைவி சுப்புலட்சுமி, வேலைக்காரி ராணி ஆகிய 3 பேரையும் கத்திமுனையில் மிரட்டி தாங்கள் தயாராக கொண்டு வந்த சணலை கொண்டு கைகளை கட்டினர். சத்தம் போடாமல் இருக்க 3 பேரின் வாயில் துணியை வைத்தும் அடைத்தனர்.

    அதன்பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்த கொள்ளையர்கள், அதில் லாக்கரில் வைக்கும்படி கூறி அவரது மகள் செந்தமிழ்காவியா கொடுத்துச்சென்ற 175 பவுன் நகைகள் மற்றும் சுப்புலட்சுமி அணிந்து இருந்த நகைகள் என மொத்தம் சுமார் 206 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

    பின்னர் அந்த நகைகளை தாங்கள் கொண்டு வந்த ஒரு பையில் போட்டுக்கொண்டனர். நாங்கள் தப்பிச்செல்லும் வரையில் யாரும் கத்தி கூச்சலிடக்கூடாது. மீறி கத்தினால் கொன்று விடுவோம் என்று மீண்டும் மிரட்டி விட்டு, நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

    சிறிது நேரத்துக்கு பிறகு யோகசேரன் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரின் கைகட்டுகளை அவிழ்த்து விட்டனர். இதுபற்றி பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு சென்னை தெற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என அந்த பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதாகவும், கொள்ளையர்களில் 2 பேர் காதில் கடுக்கன் அணிந்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள், செந்தமிழ் காவியாவை பின்தொடர்ந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டனரா? அல்லது வங்கி மேலாளர் என்பதால் வீட்டில் நகை, பணம் இருக்கும் என்ற எண்ணத்தில் வந்து கைவரிசையை காட்டினரா? என விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கொள்ளை நடந்த நேரத்தில் அந்த வழியாக வந்து சென்றவர்கள் குறித்து அந்த பகுதியை சுற்றி சாலைகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    கொள்ளையர்கள் யாருடனாவது செல்போனில் பேசினார்களா? என அந்த நேரத்தில் அந்த பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 206 பவுன் நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PallavaramRobbery 
    ×