search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 உலகக்கோப்பை கிரிக்கெட்"

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தியது.
    நாட்டிங்காம்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் ஹோல்டரின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. 

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் கூட சொற்ப ரன்களில் வெளியேறினர். 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பகார் ஜமான், பாபர் ஆசம் இருவரும் தலா 22 ரன்கள் எடுத்தனர். வகாப் ரியாஸ் 18 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கெயில் வலுவான அடித்தளம் அமைத்தார். அவர் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹோப் 11 ரன்களிலும், பிராவோர ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

    பின்னர் இணைந்த பூரன்-ஹெட்மயர் ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்  சென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி, 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பூரன் 34 ரன்களுடனும், ஹெட்மயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஓஷேன் தாமஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று இங்கிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்  311 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து பந்து வீச்சை மாளிக்க முடியாமல் திணறியது. 39.5 ஓவர்களில் 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது. 

    தென் ஆப்பிரிக்க அணியில் அதிக பட்சமாக தொடக்க வீரர் டி காக் 68 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் ஆக பென் ஸ்டோக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில், ஸ்டோக்சின் அதிரடியால் 311 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று இங்கிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 

    தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் முதல் ஓவரை வீசினார். வழக்கமாக முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர்தான் வீசுவார்கள் ஆனால், இந்த போட்டியில் சுழற்பந்துவீச்சை கேப்டன் டுபிளசிஸ் தேர்வு செய்தார். அவரது முயற்சிக்கு பலனும் கிடைத்தது. தாகிர் இரண்டாவது பந்திலேயே விக்கெட் எடுத்தார். துவக்க வீரர் பேர்ஸ்டோ டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இது இங்கிலாந்து வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனினும் அடுத்து வந்த வீரர்கள் பதற்றமின்றி கவனமாக ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ஜேசன் ராய்- ஜோ ரூட் ஜோடி வலுவான அடித்தளம் அமைக்க, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஜேசன் ராய் 54 ரன்களிலும், ஜோ ரூட் 51 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

    கேப்டன் இயன் மார்கன் தன் பங்கிற்கு, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். விறுவிறுப்பாக ஆடிய அவர் 4 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பட்லர் (18), மொயின் அலி (3), வோக்ஸ் (13) ஆகியோர் விரைவில் பெவிலியன் திரும்பினர். 

    ஆனால் மறுமுனையில் நங்கூரம் போல் நின்று தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை தெறிக்க விட்ட ஸ்டோக்ஸ், அரை சதம் கடந்தார். அணியின் ஸ்கோரும் 300ஐ தாண்டியது. ஆனால், 49வது ஓவரின் கடைசி பந்தில், அவர் நிகிடியிடம் விக்கெட்டை இழந்தார். களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஸ்டோக்ஸ், 79 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 89 ரன்கள் சேர்த்தார்.

    கடைசி ஒவரில் பிளங்கட் மற்றும் ஆச்சர் இருவரும் சேர்ந்து 11 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. 

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாகிர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

    இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது. 
    உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

    லண்டன்:

    உலக கோப்பை போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டனும் டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

    உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

    கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணி இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. 3 முறை இறுதிப்போட்டியில் தோற்று உள்ளது. 1979-ல் வெஸ்ட்இண்டீசிடமும், 1987-ல் ஆஸ்ரேலியாவிடமும், 1992-ல் பாகிஸ்தானிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

    லண்டனில் இன்று நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் ஆட்டத்தில், துவக்க விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்தபோதிலும், இங்கிலாந்து அணி விறுவிறுப்பாக ஆடி வருகிறது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கியது.

    உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பை பாணியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.


    முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை லண்டன் ஓவலில் சந்திக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர் பேர்ஸ்டோ 2வது பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் ஜேசன் ராயுடன், ஜோ ரூட் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து ஆடினர். 9-வது ஓவரில் 50 ரன்னை எட்டியது.
    லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு புதிய கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்பரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்று தொடங்கி வரும் ஜூலை மாதம் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் 45 லீக் போட்டிகள், 3 நாக்-அவுட் போட்டிகள் என சுமார் 12 நகரங்களில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். இதில் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோத உள்ளன.



    இந்நிலையில் உலக கோப்பை தொடங்குவதை முன்னிட்டு, கிரிக்கெட்டின் பிறப்பிடமான லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நம்பர் 1 வீரரான விராட் கோலியை கவுரப்படுத்தும் விதமாக அவரது மெழுகு சிலை தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.



    விராட் கோலியின் இந்த மெழுகு சிலை வரும் ஜூலை 15ம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு லண்டனில் இருக்கும் கோலியின் ரசிகர்கள் நேரில் சென்று பார்வையிட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.     

    விராட் கோலியுடன் இணைந்து கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பையில் மீண்டும் களமிறங்க உள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணியில் இருந்து, இவர் உலக கோப்பையில் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

    இன்றளவும் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. பல்வேறு தொடர்களில் பலமுறை  ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

    உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடங்க உள்ளது. முதல் சுற்றான இதில், இங்கிலாந்து-தென்ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

    இதில் கமெண்டரி பாக்ஸில் சச்சின், வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

    சச்சின் டெண்டுல்கரின் இந்த புதிய அவதாரம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் மதியம் 1.30 மணி அளவில் தனி தொகுப்பாக 'Sachin Opens Again' எனும் தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது.

        
     
    உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 நாடுகளின் கிரிக்கெட் கேப்டன்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்தனர்.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை 11 இடங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. 

    இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

    இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத்துடன் 10 நாட்டு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் சந்தித்தனர். அவர்கள் ராணியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் ரிஜிஸ்டர் செய்யும் என ஷாய் ஹோப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. வெஸ்ட் இண்டீஸ் தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 421 ரன்கள் குவித்தது. 3-வது வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் 86 பந்தில் 101 ரன்களும், தொடக்க வீரர் லிவிஸ் 54 பந்தில் 50 ரன்களும், அந்த்ரே ரஸல் 25 பந்தில் 54 ரன்களும் அடித்தனர்.

    50 ஓவர் உலகக்கோப்பையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. மேலும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்னை எட்டும் முதல் அணியாக இங்கிலாந்து இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

    இந்நிலையில் நாங்கள்தான் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற சாதனையை படைப்போம் என ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாய் ஹோப் கூறுகையில் ‘‘500 ரன்களை எட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. முயற்சி செய்தால் இந்த அரிய சாதனையை எங்களால் படைக்க இயலும். 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற பெயர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிகப்பெரிய பேட்டிங் ஆர்டரை வைத்திருக்கும் எங்களால் இந்த சாதனையை எட்ட முடியும்’’ என்றார்.



    வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பிராத்வைட் கூறுகையில் ‘‘இந்த சாதனையை உங்களால் எட்ட முடியுமா?, அதற்கான சாத்தியக்கூறுகள் உங்களிடம் உள்ளதா? என்று நீங்கள் கேட்டால், நிச்சயமாக இருக்கு என்பேன். எனினும், அதிகாரப்பூர்வமான ஆட்டங்களில் 10-ம் நிலை வீரர்கள் வரை சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்க வாய்ப்பில்லை. இதனால், எதார்த்தமான ஸ்கோர் குறித்து நாம் பேசுவது அவசியம்’’ என்றார்.
    நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை (மே 30-ந்தேதி) தொடங்குகிறது. இதற்குமுன் 10 அணிகளும் தலா இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதின.

    முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 179 ரன்னில் சுருண்டது, பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், முகமது சமி, பும்ரா ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். இந்த அணியின் சுழற்பந்து வீச்சு குறித்து சில சந்தேகம் உள்ளது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட கேப்டன் விராட் கோலி முடிவு செய்ததார்.

    இந்தியா 37.1 ஓவர்கள் வீசியது, இதில் சாஹல் (6), குல்தீப் யாதவ் (8.1) மற்றும் ஜடேஜா (7) ஆகியோர் 21.1 ஓவர்கள் வீசினர். அதேபோல் நேற்றைய வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று பேரும் இணைந்து 29.3 ஓவர்கள் வீசினர். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் சோதனைக்கு உள்ளாகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.

    ஆடும் லெவனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்களா? அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர கேதர் ஜாதவ் ஆகியோருடன் இந்தியா களம் இறங்குமா? என்பது தென்ஆப்பிரிக்கா போட்டியின்போதுதான் தெரியவரும்.
    10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. அதைத்தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

    இதுவரை 11 உலகக்கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 5 முறையும், வெஸ்ட்இண்டீஸ், இந்தியா அணிகள் தலா 2 தடவையும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன.



    12-வது உலகக்கோப்பை போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் உலகக்கோப்பை தொடர் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் நுழைந்தன.

    போட்டி அமைப்பில் இந்த முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1992 உலகக்கோப்பையில் பின்பற்றப்பட்ட முறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும்.

    ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.



    ‘லீக்’ ஆட்டம் ஜூலை 6-ந்தேதியுடன் முடிகிறது. முதல் அரையிறுதி (1-வது இடம் பிடிக்கும் அணி VS 4-வது இடம் பிடிக்கும் அணி) ஜூலை 9-ந்தேதியும், 2-வது அரைஇறுதி (2-வது இடம் பிடிக்கும் அணி - 3-வது இடம் பிடிக்கும் அணி) ஜூலை 11-ந்தேதியும், இறுதிப் போட்டி ஜூலை 14-ந்தேதியும் நடக்கிறது.

    லண்டன் ஓவல் மைதானத்தில் தொடக்க விழா நடக்கிறது. முதல் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து- டு பிளிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இரு அணியும் சமபலம் பொருந்தியவை என்பதால் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தரவரிசையில் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும் உள்ளன.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை ஜூன் 5-ந்தேதி சந்திக்கிறது.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. தற்போது 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் 3-வது தடவையாகவும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் 2-வது தடவையாகவும் கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளன.

    கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து இதுவரை உலகக்கோப்பையை வென்றது இல்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியை நடத்துவதால் முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதேபோல தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்துக்கு காத்திருக்கின்றன.



    போட்டி அமைப்பு முறை சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் இருப்பதால் முன்னணி அணிகள் அரைஇறுதியில் நுழைவதில் சவால் இருக்கலாம். வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்.

    ஏற்கனவே கோப்பையை வென்ற அணிகள்தான் மீண்டும் கோப்பையை வெல்லுமா? சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றுமா? என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது.

    ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக போராடும். இதனால் ரசிகர்களுக்கு இந்த கிரிக்கெட் திருவிழா நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
    வங்காளதேசத்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், டோனி சதம் அடித்து அசத்தினர்.
    கார்டிப்:

    10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று இந்திய அணி, வங்காளதேசத்தை கார்டிப்பில் எதிர்கொண்டது. பயிற்சி ஆட்டம் என்பதால் இரு அணிகளிலும் தலா 14 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மோர்தசா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அங்கு நிலவிய மேகமூட்டமான சூழல் தொடக்கத்தில் பந்து வீச்சுக்கு உதவியது. ஷிகர் தவான் ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். ஆனால் போக போக ஆடுகளத்தன்மை பேட்டிங்குக்கு உகந்ததாக மாறியது. கேப்டன் விராட் கோலி தனது பங்குக்கு 47 ரன்கள் (46 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். விஜய் சங்கர் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.


    102 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை (22 ஓவர்) பறிகொடுத்து இந்திய அணி தடுமாறிய நிலையில் 5-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலும், டோனியும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர். அவ்வப்போது பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட இவர்கள் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர். அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல் சதம் அடித்தார். 4-வது பேட்டிங் வரிசையில் யார்? ஆடுவார் என்ற புதிருக்கு ராகுலின் பேட்டிங் விடை அளிப்பதாக அமைந்தது.

    அணியின் ஸ்கோர் 266 ரன்களாக உயர்ந்த போது லோகேஷ் ராகுல் 108 ரன்களில் (99 பந்து, 12 பந்து, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார். மறுமுனையில் டோனி அதிரடியில் பின்னியெடுத்தார். அபு ஜெயத்தின் பந்துவீச்சில் சிக்சர் அடித்து மூன்று இலக்கத்தை கடந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சதம் அடித்த டோனி 113 ரன்களில் (78 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்), ஷகிப் அல்-ஹசனின் சுழலில் ‘கிளன் போல்டு’ ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 21 ரன்கள் எடுத்தார்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 7 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 11 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த வங்காளதேச அணி மொத்தம் 9 பவுலர்களை பயன்படுத்தியது கவனிக்கத்தக்கது.

    அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 90 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ×