search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "110வது பிறந்த நாள்"

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #PerarignarAnna #Anna #MKStalin
    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பல்வேறு கட்சிகள் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கும் மலர் தூவினார்.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

    எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டக் கழக செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், இ.கருணாநிதி, பெரிய கருப்பன், டி.ஆர்.பி. ராஜா, கே.எஸ்.ரவிச்சந்திரன், தொழிலாளர் அணி செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி, பல்லாவரம் ரஞ்சன்.

    கட்சி நிர்வாகிகள் துறைமுகம் காஜா, பூச்சிமுருகன், வி.எஸ்.ராஜ், ராமலிங்கம், அகஸ்டின், ஐ.கென்னடி, ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மா.பா.அன்புதுரை, மதன்மோகன், சேப்பாக்கம் பா.சிதம்பரம், ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, சிற்றரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். #PerarignarAnna #Anna #MKStalin

    நொய்யல் ஆற்றை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் ரூ.150 கோடியில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் சின்னாறு மற்றும் காஞ்சிமாநதி இணைந்து நொய்யல் ஆறாக உருப்பெற்று, மேற்கு கிழக்காக, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக சென்று, கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தின் அருகில் காவிரியில் கலக்கின்றது.

    திருப்பூர் மாநகராட்சி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை நொய்யல் ஆறு கடக்கும் போது, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் மாசடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல தடுப்புச் சுவரின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வடிகால் அமைத்தல், தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், நடை பாதை அமைத்தல், கரையோர பூங்கா மற்றும் அலங்கார விளக்குகள் அமைத்தல், அணைக்கட்டு பகுதியினை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.

    இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வரும் காலத்தில் நொய்யல் ஆறு மாசடையாமல் இருப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெடுஞ்சாலைகளில் அதிகமாக சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அவ்விடங்களில் சோதனை அடிப்படையில், வாகனப் பதிவெண் பலகையினை படிக்கும் தானியங்கி புகைப்படக் கருவிகள் மற்றும் வாகன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் 25 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
    கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    உச்சநீதிமன்ற தீர்ப்பானது ஆதிதிராவிடர்- பழங்குடியினர் வன்கொடுமைகள் (எஸ்.சி, எஸ்.டி.) தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளது. எனவே வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தி அவசர சட்டம் இயற்ற வேண்டும். இதனை அரசியல் சாசனம் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் ஆதிதிராவிட- பழங்குடியின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உண்மை நிலையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ரெயிலை மறிப்பதற்காக அரியலூர் கல்லூரி சாலையில் இருந்து அரியலூர் ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது அங்கு ரெயில் நிலைய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில், அரியலூர் போலீசார் இரும்பு தடுப்புவேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் ரெயிலை மறிப்பதற்காக மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதில் 12 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 110 பேரையும் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனர். 
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNassembly
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் மற்றும் சமூகத் தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறை, கலைத் தொண்டு, தமிழ் உணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நம் நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒன்று ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைத்துத் தொடங்கப்படும்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக் கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டு தோறும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழாய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையில், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கியச் சுற்றுலா, உலகத் தமிழர் கலைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

    ஆங்கில மொழி அறிஞர்கள், ஆங்கில மொழிச் சொற்களை தொகுத்தல் முறையில் அணியமாக்கி, மொழி ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு வழங்கி வருகின்றனர். அதுபோல், உலகின் பழமையான மொழிகளுள் மூத்த மொழியாகக் கருதப்படும் நம் தமிழ் மொழியிலும் அத்தகைய தொகுப்பு தேவை என்பதை உணர்ந்து, “சொற்குவை” என்ற திட்டம் தொடங்கப்படும்.

    அவை இணையதளப் பொது வெளியில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர் களும், மொழியியல் ஆராய்ச்சி யாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும். இதற்கென ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் (எம்.ஏ.) பயிலும் மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில், இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் தேர்வின் அடிப்படையில் முதலாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள், இரண்டாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்களுக்கு மாதந் தோறும் கல்வி உதவித்தொகையாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ஆண்டுக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #MGRStudyChair
    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் கைத்தறி துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். #TNAssembly
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

    உடல்நலத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் வழங்கக்கூடிய சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் தேவை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

    எனவே, சிறுதானியப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், விதை உற்பத்தி மற்றும் விநியோகம், தொகுப்பு செயல் விளக்கம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, சிறுதளைகள் விநியோகம் போன்ற பணிகளுக்காக, நடப்பாண்டில் 6 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

    வாழை சாகுபடியில் சிக்கன நீர் மேலாண்மைக்காக நடப்பாண்டில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்படும் 10,000 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைப் பதற்கு விவசாயிகளுக்கு மானியமாக 27 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    காய்கறிகளை பசுமைக் குடில், நிழல் வலைக்குடில் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிரிடுதல், ஏறு கொடிகள் மற்றும் பற்று கொடிகளான காய்கறி மற்றும் பழங்களுக்கு ஆதாரமாக பந்தல் அமைத்தல், நிலப்போர்வை அமைத்தல் போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

    கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு, வரும் பொங்கல் 2019 முதல் ஜுன் மாதம் வரை கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    மொத்தமுள்ள பெடல் தறிகளில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு ஏற்கனவே உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் 9,692 பெடல் தறிகள் போக எஞ்சிய 1,558 பெடல் தறிகளுக்கு மேற்படி 6 மாத காலம் கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியில் ஈடுபடுத்தப் பட்டு வரும் 6,975 பெடல் தறிகள் போக எஞ்சிய 4,275 பெடல் தறிகளுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை 5 மாதங்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்றி இருக்கும் மொத்தமுள்ள 11,250 பெடல் தறிகளுக்கும் விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு அரசுக்கு 15 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

    ஜவுளித் தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

    தமிழ்நாடு அரசின் விலையில்லா சீருடைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சீருடைத் துணிகளை பதனீடு செய்வதை முக்கிய பணியாக கொண்டு தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    சீருடைத் துணிகளை பதனிடுவதன் மூலம் இவ்வாலை பிப்ரவரி முதல் ஆகஸ்ட் முடிய 7 மாதங்கள் முழுமையாக செயல்படுகிறது. மீதமுள்ள 5 மாதங்கள் பதனிடுவதற்கு போதுமான துணி இல்லாததால் குறைந்த திறனுடன் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையை கருத்திற் கொண்டு இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சீருடைத் துணி பதனீட்டு பணி இல்லாத காலங்களில் தொடர் வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் ஆலையை தொடர்ந்து லாபத் தில் இயக்க செய்யவும், ஒரு தொகுதிக்கு 2 டன் வீதம் 60 எஸ் கோம்டு நூல் சாயமிடும் திறன் கொண்ட சாயமிடும் அலகு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக் கப்படும்.

    தமிழ்நாடு, தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் தலா 20 லட்சம் பட்டு முட்டை களை பதனம் செய்யும் திறன் கொண்ட இரண்டு பல்நிலை குளிர் பதன அலகுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகின்றன.

    வெண்பட்டு முட்டை உற்பத்தியினை அதிகரித்து அதனை பதனப்படுத்திட, மேலும் ஒரு, 20 லட்சம் பட்டு முட்டைகளைப் பதனம் செய்யும் திறன் கொண்ட பல்நிலை குளிர்பதன அலகு, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.

    தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக் கூடுகளை முழுவதுமாக பயன்படுத்தி பட்டு நூல் உற்பத்தி செய்ய, போதுமான பட்டு நூற்பு அலகுகள் இல்லை என்பதால், பட்டுக் கூடுகளுக்கு பிந்தைய பட்டு நூற்பு பிரிவினை வலுப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் பட்டு நூற்பு அலகுகளை நிறுவிட மாநில அரசின் பங்காக நிதியுதவி பின்வருமாறு வழங்கப்படும்.

    400 முனைகள் கொண்ட மூன்று தானியங்கி பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட, ஒரு கோடியே 5 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் வழங்கப் படும்.

    200 முனைகள் கொண்ட ஒரு தானியங்கி பட்டு நூற்பு அலகினை நிறுவிட, 19 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரு தானியங்கி டூபியான் பட்டு நூற்பு அலகினை நிறுவிட, 11 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    100 முனைகள் கொண்ட பல்முனை பட்டு நூற்பு அலகுகள் 25 நிறுவிட, மாநில அரசின் பங்காக ஒரு கோடியே 6 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    இரண்டு தனியார் பட்டு முறுக்கேற்றும் அலகுகளும், ஒரு அரசு பட்டு முறுக்கேற்றும் அலகும் நிறுவிட, 10 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொண்டு அமர்கின்றேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையங்களில் தோட்டக்கலை அறிவியல் பட்டயப் படிப்பு துவங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly #HorticultureCourses
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் இயங்கி வரும் காய்கறி மகத்துவ மையத்திலும், தோட்டக்கலை அறிவியல் சார்ந்த ஈராண்டு பட்டயப் படிப்பு நடப்புக் கல்வி ஆண்டில் துவங்கப்பட்டு, ஆண்டுதோறும் ஒவ்வொரு மையத்திலும் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

    இவ்விரண்டு மையங்களிலும், மாணவர்கள் பயில்வதற்காக ஏற்கனவே உருவாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் வசதிகளை உருவாக்குவதற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

    மாதவரத்தில் இயங்கி வரும் ஈராண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்பு மையமும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று, தோட்டக்கலைத் துறையின் மூலம் நடத்தப்படும்.

    வேளாண் சார்ந்த அனைத்து துறைகளின் விரிவாக்க சேவைகளையும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் இதுவரை 146 வட்டாரங்களில் 219 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில், மேலும் 9 வட்டாரங்களில் இம்மையங்கள் 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

    நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் புதிதாக “இரு நூற்றாண்டு பசுமைப் புல்வெளி” எனும் புதிய பூங்கா ஒன்று 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    மேலும், வருடந்தோறும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அரசு ரோஜாப் பூங்காவிற்கு வருகை புரிவதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, வாகனம் நிறுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, நீலகிரி நகரத்தில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். ஆக மொத்தம் 127 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இன்று நான் அறிவித்துள்ள இத்திட்டங்கள் மூலம் தமிழ்நாடு வேளாண்மையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேலும் செழிக்க வழிவகை ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #HorticultureCourses
    ×