சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆடித்தபசு 11-ம் திருநாளான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணனராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.
கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.
Published on

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.

கொடியேற்றம்

இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கொடிபட்டம் வீதி உலா நடந்தது.

காலை 7.05 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவில் 9-ம் திருநாளான வருகிற 26-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஆடித்தபசு 11-ம் திருநாளான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணனராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பக்தர்களுக்கு காட்சி

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.05 மணிக்கு மேல் சிவபெருமான் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 11.45 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 29-ந் தேதி (புதன்கிழமை) சுவாமி அம்பாள் இரண்டு சப்பரங்களில் ஒரே நேரத்தில் சப்தா வர்ணத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

கொடியேற்ற விழாவில் தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. திலீபன் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ், நகராட்சி கமிஷனர் லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com