search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
    • எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தமிழக அமைச்சர் உதயநிதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து வில்லியனூர், மரப்பாலம் மற்றும் அண்ணாசிலை சதுக்கம் ஆகிய இடங்களில் பேசினார்.

    உதயநிதி பேச தொடங்கிய போது, எல்லாரும் நல்லா இருக்கீங்களா, நீங்க திரும்ப கேட்க மாட்டீங்களா என கேட்டார். அப்போது தொண்டர்கள் நல்லா இருக்கீங்களா? என கோஷ மிட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி, ஏதோ சுமாரா இருக்கேன். நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை? என்றார்.

    உதயநிதி பேச தொடங்கிய போது, தி.மு.க.-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரிய கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தனர். தான் பேசி முடிக்கும் வரை கட்சி கொடியை கீழே இறக்கும்படி உதயநிதி கேட்டுக் கொண்டார். இதனால் கூட்டணி கட்சியினர் அப்செட் ஆகினர். இருப்பினும் அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.

    பிரசாரத்தில் வழக்கம் போல உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை எடுத்து காட்டுவார். அதுபோல் புதுச்சேரி பிரசாரத்தில் எய்ம்ஸ் கல்லை காட்டுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து எய்ம்ஸ் செங்கல் புதுச்சேரி வரை பேமஸ் ஆகிவிட்டதா? எனக்கேட்டு செங்கல்லை எடுத்துக்காட்டிய உதயநிதி நீங்கள் காட்ட சொன்னதால்தான் கல்லை காட்டுகிறேன். இந்த கல்லுக்கு அவ்வளவு டிமாண்ட். நான் காட்டினது கல்லு, அவர் காட்டினது என பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.

    மரப்பாலத்தில் பேசும் போது, தொண்டர் ஒருவர் ஆபாசமாக பேசினார். அப்போது உதயநிதி, நீ கெட்ட வார்த்தையில் பேசிட்டு போய்விடுவாய், போலீஸ் என்மீது வழக்கு போடும். ஆனால் அதற்காக நான் பயப்பட மாட்டேன் என்றார்.

    • 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.
    • இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.

    கடந்த 23-ந் தேதியுடன் முழு ஆண்டு தேர்வு முடிந்து, சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.

    இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி. பாடபுத்தகம் வாங்கப்பட்டது. இந்த பாடபுத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் வாகனம் மூலம் தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். மிக குறைவாகவும், ஒரு சில பாடங்களுக்கு பாடபுத்தகம் வராமலும் உள்ளது. 3,4,6-ம் வகுப்புகளுக்கு ஒரு பாடங்களுக்கு கூட புத்தகங்கள் வரவில்லை.

    இவற்றையும் உடனடியாக வாங்கி பள்ளி மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும். மே 1-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 3-ந் தேதிமுதல் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும்.

    • போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 27-ந் தேதி முதல் தொகுதி வாரியாக சென்று திறந்த ஜீப்பில் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று போலீஸ் நிலையம் எதிரே உள்ள பொன்னுமாரியம்மன் கோவிலில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இந்தநிலையில் முத்தியால்பேட்டை மந்தை வெளி மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசிக்கொண்டிருந்த போது திடீரென பிரசார வாகனத்தின் மீது எங்கிருந்தோ வீசப்பட்ட கல் ஒன்று வந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இருப்பினும் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தனது பேச்சை தொடர்ந்தார். அதன்பின் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் வீட்டின் மாடிகளில் யாரும் உள்ளார்களா? எனவும் டார்ச் லைட் மூலமாக அடித்து பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மாதம் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த மர்ம நபர் யாரேனும் முதலமைச்சர் பிரசார வாகனம் மீது கல் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
    • வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார்.

    புதுச்சேரி:

    இந்தியா கூட்டணி கட்சி சார்பில் புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

    அவர் தொகுதி வாரியாக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார். அப்போது வள்ளலார் சாலையில் வாக்கு கேட்டு வேனில் சென்று கொண்டிருந்தார்

    இன்று காலை முதலே புதுவையில் வெயில் சுட்டெரித்தது. காலை 11.10 மணி அளவில் வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பிரசாரம் செய்த வைத்திலிங்கம் திடீரென மயங்கி அருகில் இருந்த வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மீது சரிந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். வேனை நிறுத்தி அருகேயிருந்த வீட்டில் அமர வைத்தனர்.

    அருகாமையில் இருந்த டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் வைத்திலிங்கத்தை பரிசோதித்தார். அப்போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிக வெயில் இருப்பதால் குடிநீர், ஜூஸ் பருகும்படி டாக்டர் அறிவுருத்தினார்.

    இதையடுத்து வைத்திலிங்கத்துக்கு எலுமிச்சை ஜூஸ் அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பகல் 11.30 மணியளவில் மீண்டும் ஜீப்பில் ஏறி வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார்.

    • வாய்க்காலுக்கு மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பினர்.
    • சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தேங்காய்திட்டு வசந்த் நகர் என்ற பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வசந்த் நகர் 3-வது குறுக்கு தெருவில் நடந்த இந்த பணியில் இன்று காலை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    மரப்பாலம் துணைமின் நிலையம் பின்புறம் சுற்று சுவரையொட்டி தூர்வாரி வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி கொண்டிருந்னர்.

    அப்போது மின் துறையின் 33 ஆண்டுகள் பழைமையான சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே தொழிலாளர்கள் சிக்கினர்.

    இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். இதில் 3 தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கியும் கால்வாய் தண்ணீரில் மூழ்கியும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் 3 பேரும் அரியலூர் நெட்டகுறிச்சியை சேர்ந்த பாக்கியராஜ், பால முருகன், ஆரோக்கியராஜ் என்பது தெரியவந்தது.

    மீதமுள்ள 3 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வாய்க்காலுக்கு மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பினர்.

    சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் மினி லாரியில் வைத்து தொழிலாளர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பாகூர் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    புதுச்சேரியையொட்டிய மாநில எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் தேர்தல் பொது பார்வையாளராக பியூஷ் சிங்லாவும், தேர்தல் காவல் பார்வையாளராக அமன்தீப் சிங்ராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தேர்தல் காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அமன்தீப் சிங் ராய் புதுச்சேரி எல்லைப் பகுதியான திருக்கனூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வாகன சோதனையின் போது எந்தவித பாரபட்சமும் இன்றி அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் தேர்தல் துறையின் சோதனைச் சாவடி ஊழியர்கள், துணை ராணுவ படையினர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து எல்லைப் பகுதிகளான முள்ளோடை, சோரியாங்குப்பம், மணமேடு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளுக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.

    இதேபோல் தேர்தல் பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் சிங்லா ஏம்பலம், பாகூர் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    • அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
    • பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    தமிழகம்-புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.

    அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    தினமும் 93 முதல் 94 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    நேற்று 94.64 டிகிரி வெயில் பாதிவாகியுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

    இதனால் பொதுமக்களும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், கோடை வெயிலை சமாளிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு மற்றும் பழச்சாறுகளை வாங்கி பருகி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனையும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தால் வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். மேலும் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவதால் காலை 8 மணிக்கே பிரசாரத்தை தொடங்கும் வேட்பாளர்கள் மதியம் 12 மணிக்குள் முடித்துக் கொள்கின்றனர்.

    அதன் பிறகு வெயில் தாழ்ந்தவுடன் மாலை 6 மணிக்கு மீண்டும் பிரசாரத்தை தொடங்குகின்றனர்.

    • ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் பிரபல ரவுடிகளும் அடங்குவார்கள். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகள், தங்களின் வழக்கு செலவு, குடும்ப செலவுக்கு சிறைக்குள் இருந்தபடி, செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாத, மாதம் மாமூல் வசூலித்து வருகின்றனர்.

    இந்த வசூல் பணிகளை 2-ம் கட்ட ரவுடிகள் வசூலித்து ரவுடியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர்.

    இதனை தடுப்பதற்காக ஜெயிலில் அடிக்கடி ரவுடிகள் அறைகள் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பார்சல் கிடந்தது. அதனை எடுத்து ஜெயில் வார்டன்கள் பிரித்து பார்த்தபோது, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் உட்பட 5 செல்போன்கள், ஒய் பை மோடம், பீடி கட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், 2 சார்ஜர், குட்கா பாக்கெட்டுகள் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அதனை பறிமுதல் செய்து காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

    ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார்.
    • உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து லாஸ்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரியில் காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதலமைச்சராக ரங்கசாமி திகழ்கிறார். மாணவர்கள் படிப்படியாக உயர்ந்து, நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசுடன் இணைந்து புதுச்சேரி அரசு செயலாற்றி வருகிறது. கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டவர் பிரதமர் மோடி.

    கொரோனா காலத்தில் அண்டை நாடுகள் பசி பட்டினியால் தவித்தபோது, இந்தியாவில் பசி பட்டினி கிடையாது. நாட்டின் பொருளாதாரத்தையும் மிக சிறப்பாக கையாண்டார். உள்நாட்டிலே கொரோனா தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு வழங்கினார்.

    நமச்சிவாயம் மண்ணின் மைந்தர். காங்கிரசில் பணியாற்றிய அவருக்கு முறையான அங்கீகாரம் இல்லாததால், பா.ஜனதா அவரை அடையாளம் கண்டு அமைச்சராக்கியது. தற்போது அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் மத்திய பா.ஜனதாவுடனும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசுடனும் ஒத்தகருத்து இருக்காது.

    அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் இதே நிலை தான். அதனால் உங்கள் ஓட்டுக்களை வீணாக்காதீர்கள். எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதிற்கு சமம்.

    உங்கள் ஓட்டுக்கு உரிமை, மரியாதை உள்ளது. அதை நிலைநாட்ட, உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

    • புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.
    • அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது.

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை தேர்தல் துறை இறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது.

    இந்த 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று இறுதி செய்துள்ளது. இதன்படி புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் புதுவை 739, மாகி 31,ஏனாம் 22, காரைக்காலில் 163 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

    சில வாக்குச்சாவடிகளை இணைத்து ஒரே இடத்தில் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 967 வாக்குச் சாவடிகளும் 618 இடங்களில் அமைந்துள்ளன.

    நகர பகுதியை பொருத்தவரை 534 வாக்குச்சாவடிகள் 344 இடங்களில் அமைந்துள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தவரை 427 வாக்குச்சாவடிகள் 274 இடங் களில் அமைந்துள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.

    அதில் புதுவையில் 180ம், காரைக்காலில் 35-ம் உள்ளன. மாகியில்7, ஏனாமில் 10 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த தேர்தல்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக தேர்தல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதன்படி புதுச்சேரி 3, ஏனாமில் 7 வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக கண்காணிக்கப்பட்ட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரசாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.
    • வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகம், புதுவையில் வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளதால் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 31-ந்தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரசாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.

    வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு மரப்பாலம் சந்திப்பிலும், 6.30 மணிக்கு அண்ணா சதுக்கத்திலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
    • அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சிறிய சிறிய அமைப்புகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் அந்தந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொகுதி வாரியாக இறங்கியுள்ளனர்.

    பிரதான 2 தேசிய கட்சிகள் இடையே நேரடி போட்டி மட்டுமின்றி அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மட்டுமின்றி மாநிலத்தின் முன்னணி நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    தற்போது கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அனுப்பி சிறிய சிறிய அமைப்புகள், இயக்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் நோக்கில் குறிப்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

    அப்போது குடியிருப்போர் நலசங்க அமைப்புகளிடம் இருந்து வரும் கோரிக்கைகளை கேட்கும் வேட்பாளர்கள், வெற்றிபெற்றதும் உடனே கோரிக்கையை நிறைவேற் றித் தருவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

    இதேபோல் அரசு ஊழியர்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள், மாணவர்-இளைஞர் அமைப்புகள் உள்ளிட்டோரையும் சந்தித்து வருகின்றனர்.

    முதல்கட்டமாக இந்நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்ததாக சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

    ×