search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன்-ரஷியா போர்
    X
    உக்ரைன்-ரஷியா போர்

    லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை- ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு

    உக்ரைன் போரின் தாக்கம், உலக அளவில் பசி பட்டினியை அதிகரிக்கச் செய்யும் என்று ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    04.05.2022

    22:00: உக்ரைனுக்கு அதிக அளவில் கனரக ஆயுதங்களை வழங்குவதற்காக ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயலாற்ற முடியுமா? என்பது குறித்து நெதர்லாந்து ஆராய்ந்து வருகிறது.

    21:30: ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து, ஜி7 அமைப்பின் மற்ற நாடுகளுடன் இந்த வாரம் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். 

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின்

    19:30: உக்ரைன் ராணுவத்திற்காக ஆயுதங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் மேற்கத்திய நாடுகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    18:30: உக்ரைன்-ரஷிய போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பெலாரஸ் திடீரென ராணுவப் பயிற்சியை தொடங்கி உள்ளது. ராணுவத்தின் திறன் மற்றும் தயார் நிலையை மதிப்பிடுவதற்கே இந்த பயிற்சி நடத்தப்படுகிறது என்றும், எந்த அண்டை நாடுகளையும் அச்சுறுத்தாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்  கூறி உள்ளார்.

    18:00: ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தடை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா கேட்டுக்கொண்டுள்ளார். ரஷியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க் மற்றும் இரண்டு பெரிய வங்கிகள், ஸ்விப்ட் வங்கி பரிவர்த்தனை முறையிலிருந்து துண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். 

    17:00: உக்ரைன் போரின் தாக்கம், உலக அளவில் பசி பட்டினியை அதிகரிக்கச் செய்யும் என்று ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு உள்நாட்டு போர்கள், மோசமான வானிலை மற்றும் பொருளாதார சிக்கல்களால் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டவர்களின் எண்ணிக்கை 19.3 கோடியாக அதிகரித்தது என்றும், உக்ரைன் போர் தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலைமை மேலும் மோசமடையும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது. 

    15.00: ரஷியா கைப்பற்றிய உக்ரைன் கிழக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை நிறுவ அந்நாடு முயற்சித்து வருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. அந்த பகுதிகளில் வணிக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ரஷ்ய ரூபிளை பயன்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    04.10: கிழக்கு பிராந்தியத்தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகவும் 27 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.  

    இது கடந்த ஒரு மாதத்தில் தினசரி பதிவுபடி அதிக இறப்பு எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்திவ்கா கோக் ஆலை மீது ரஷிய படைகள் வெடிகுண்டுகளை வீசியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்ததாக ஆளுநர் பாவ்லோ  கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.

    03.20: போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற கூடுதல் ஒருங்கிணைப்பு மனிதாபிமான பாதைகளை அமைக்க, ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் அனுமதிக்கும் என்று நம்புவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். 

    அசோவ்ஸ்டல் உருக்கு ஆலையில் இருந்து சுமார் 100 உக்ரைன் குடிமக்கள்
    வெளியேற அனுமதித்தது போன்று, மேலும் பல மனிதாபிமான பாதைகளை அமைக்க இரு நாடுகளின் தலைமைகளும் ஏற்பாடு செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    02.30:  உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்வதை ரஷிய படைகள் ஒரு போர் தந்திரமாக பயன்படுத்துவதாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனெடிக்டோவா குற்றம் சாட்டி உள்ளார். 

    கீவ் அருகே ரஷிய படையினர் தாக்குதலால் பேரழிவிற்குள்ளான இர்பின் நகருக்கு சென்ற அவர், உக்ரைன் மக்களை பயமுறுத்துவதற்காகவும், அவர்கள் சரண் அடையும் வகையிலும் ரஷிய படைகள் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறினார். 

    பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உக்ரைனில் தங்கியிருப்பதாகவும், ரஷியப் படைகள் திரும்பி வந்து விடுமோ என்ற பயத்தில் பேசுவதற்கு அவர்கள் அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

    ரஷிய ராணுவ வீரர்களால் பலாத்காரம், சித்திரவதை மற்றும் பிற சந்தேகத்திற்குரிய போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும் இரினா வெனெடிக்டோவா தெரிவித்தார்.

    12.50: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலையில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை வெளியேறிய பிறகும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் பொதுமக்கள் சிக்கியுள்ளதாக உக்ரைனில் உள்ள செஞ்சிலுவைச் சங்க தலைவர் பாஸ்கல் ஹண்ட் தெரிவித்துள்ளார். 

    அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றுவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆனால்  அந்த பகுதிகளில் மீண்டும் தீவிரமான சண்டை தொடங்கியதற்கான அறிகுறிகள் கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    03.05.2022

    21.00: இந்தியா, டென்மார்க் நாட்டு பிரதமர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, நாங்கள் உக்ரைன் விவகாரம் குறித்தும் பேசினோம். உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் பிரச்சினையை தீர்க்கும்படி நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவித்தார்.
     
    17.45: உக்ரைனில் நடைபெறுவது கொடூரமான மற்றும் புத்தியில்லாத போர் என போப் பிரான்சிஸ் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 

    நான் இப்போதைக்கு கீவ் செல்லவில்லை. நான் போக வேண்டிய இடம் கீவ் இல்லை. நான் முதலில் மாஸ்கோ தான் செல்ல வேண்டும். புதினை சந்திக்க வேண்டும் என்றார்.

    13.30: உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் சிறுவர்கள் உள்பட 10 லட்சம் பேரை சிறை பிடித்து அழைத்து வந்திருப்பதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான டாஸ்க் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×