search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    துப்பாக்கி சண்டை
    X
    துப்பாக்கி சண்டை

    மரியுபோல் நகருக்குள் ரஷிய படைகள் நுழைந்து கடும் துப்பாக்கி சண்டை

    உக்ரைன் ராணுவத்தினர் கடும் சவால் அளித்து வருவதால் ரஷியா மீண்டும் உக்ரைனின் ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளது.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதல் இன்று 25-வது நாளை எட்டியுள்ளது.

    தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து உக்ரைன் நகரங்களிலும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து உள்ளன.

    ரஷிய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். போர் தொடக்க நாளில் உக்ரைனின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் ஏராளமான ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டன.

    மேலும் உக்ரைன் ராணுவத்தினரின் செயல் பாட்டை தடுக்கும் வகையில் ரஷியாவின் தாக்குதல் இருந்தது. பின்னர் அரசு கட்டிடங்கள், குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

    இதற்கிடையே உக்ரைன் ராணுவத்தினர் கடும் சவால் அளித்து வருவதால் ரஷியா மீண்டும் உக்ரைனின் ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளது.

    கிழக்கு உக்ரைனில் உள்ள துறைமுக நகரமான மரியுபோலில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல் சில நாட்களாக மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. அந்நகரம் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் மரியுபோல் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. அங்குள்ள பெரும்பாலான கட்டிடங்கள் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் மரியுபோல் நகருக்குள் ரஷியாவின் பெரும் படைகள் நுழைந்துள்ளது.

    அந்நகர தெருக்களில் ரஷிய பீரங்கிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ரஷிய படைக்கும் உக்ரைன் வீரர்களுக்கும் இடையே தெருக்களில் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    அங்குள்ள எக்கு ஆலையில் இரு ராணுவத்தினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. மரியுபோல் நகருக்குள் ரஷிய படைகள் நுழைந்து இருப்பதால் அங்கு சண்டை தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கி உள்ள மக்கள் பெரும் பீதியுடன் உள்ளனர்.

    இதற்கிடையே மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷிய படை தடுத்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொண்டு செல்வதையும் தடுக்கிறார்கள் என்று உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.

    மேலும் பொதுமக்களை ரஷிய படைகள் வலுக்கட்டாயமாக மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றி ரஷிய கட்டுப்பாட்டு பகுதிக்கு அழைத்து செல்கிறார்கள் என்று மரியுபோல் நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.

    தலைநகர் கீவ்வுக்குள் நுழைய முயற்சித்தும் ரஷிய படைகளை உக்ரைன் ராணுவத்தினர் தடுத்து வருகிறார்கள். இதனால் கிவ்வின் புறநகர் பகுதிகளில் சண்டை நீடித்தபடி இருக்கிறது. அதே போல் கார்கிவ் நகரிலும் ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    இங்கு இரு பெரிய நகரங்களையும் கைப்பற்றும் முனைப்பில் ரஷிய படைகள் தாக்குதல்களை தொடுத்தாலும் அதனை உக்ரைன் வீரர்கள் முறியடித்து வருவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

    இதையும் படியுங்கள்... கொரோனா 4-வது அலை வருவதற்கு வாய்ப்பு இல்லை: மருத்துவ நிபுணர் சொல்கிறார்

    Next Story
    ×