search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியா-சீனா, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்  செசி ஜென் சாகி
    X
    இந்தியா-சீனா, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் செசி ஜென் சாகி

    இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து ஆதரவு - அமெரிக்கா அறிவிப்பு

    லடாக் எல்லைப் பகுதியில் பதற்றத்தை தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நாளை சந்தித்து பேசுகின்றனர்.
    புதுடெல்லி:

    கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அங்கு இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தி உள்ளன. இதனால் எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து வருகிறது.

    எனினும் படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    இதன் பலனாக பாங்காங் ஏரிக்கரை மற்றும் கோக்ரா பகுதிகளில் இருந்து இரு தரப்பினரும் படைகளை திரும்பப்பெற்று உள்ளன. இந்தநிலையில் நாளை  14-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. சுசுல்-மோல்டோ எல்லையின் சீன பகுதியில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த சந்திப்பில் இந்தியா சார்பில் ராணுவ அதிகாரி அனிந்தியா செங்குப்தா தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர். 

    இந்த பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் உள்ள ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது.  

    இந்நிலையில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை பேச்சுவார்த்தை மற்றும் அமைதி தீர்வுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்த வருவதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் செசி ஜென் சாகி தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சர்வதேச அளவில் சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தெளிவாக அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    சீனா அதன் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் முயற்சிகளை கண்டு 
    கவலையடைவதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி மேலும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×