search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காற்று மாசுபாடு
    X
    காற்று மாசுபாடு

    காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பு

    காற்று மாசு, மனித குல ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
    ஜெனீவா:

    மனித குலம் உயிர் வாழ்வதற்கு காற்று அவசியமானது. ஆனால் இப்போது நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இல்லை. அது மாசுபட்டிருக்கிறது. குறிப்பாக தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் வெளியிடுகிற புகையினால் மாசுபடுத்தப்படுகிறது. தொழிற்சாலைகள் வெளியிடுகிற நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்சைடுகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்தும், வாகனங்களில் இருந்து வெளிவருகிற ஹைட்ரோகார்பன்கள், கார்பன்மோனாக்சைடு ஆகியவை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. காற்றை இவை மாசுபடுத்துகின்றன. இப்படிப்பட்ட மாசுபட்ட காற்றை சுவாசிக்கிறபோது அது நுரையீரல் நோய்களுக்கு வழிநடத்தி, இறப்புக்கும் காரணமாகி விடுகிறது.

    உலக சுகாதார அமைப்பு

    இந்த தருணத்தில் 2005-ம் ஆண்டுக்கு பிறகு உலக சுகாதார அமைப்பு முதன்முதலாக காற்றுமாசு தொடர்பான அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

    2005-ம் ஆண்டு முதல் காற்று மாசுபாடு ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சான்றுகள் அதிகரித்துள்ளன. காற்று மாசு, மனித குல ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாக அமைந்துள்ளது. காற்று மாசுபாட்டால் உலகமெங்கும் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உரிய காலத்துக்கு முன்பாக இறக்கிறார்கள். பெரியவர்களில் இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை வெளிப்புற காற்று மாசுபாட்டால் ஏற்படும் முன்கூட்டிய மரணத்துக்கு முக்கிய காரணங்கள் ஆகின்றன. நீரிழிவு மற்றும் நரம்பு நோய்கள் போன்ற பிற விளைவுகளுக்கும் சான்றுகள் இருக்கின்றன. காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களின் ஆபத்து, புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காற்று மாசுபாடு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வருடாந்திர பி.எம்.2.5 க்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பை ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் என்பதை 5 மைக்ரோ கிராம் அளவுக்கு குறைத்துள்ளது. பி.எம்.10 க்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பு 20 மைக்ரோ கிராமில் இருந்து 15 மைக்ரோகிராம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

    பி.எம்.2.5 என்பது காற்றில் உள்ள 2.5 மைக்ரோமீட்டர் விட்டம் கொண்ட நுண்துகள்கள் ஆகும். பி.எம்.10 என்பது 10 மைக்ரோமீட்டர். இந்த நுண் மாசுகள் மனிதர்களின் நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஆழமாக ஊடுருவிச்சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்கள்படி காற்று மாசுபாடு அளவுகள் குறைக்கப்பட்டால், பி.எம்.2.5 தொடர்பான கிட்டத்தட்ட 80 சதவீத இறப்புகள் குறைக்கப்பட்டு விடலாம் என கூறப்படுகிறது.

    காற்று மாசு தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, காற்று மாசுவினால் அதிகளவில் பாதிக்கப்படுகிற மக்களில் பெரும்பாலோர் மத்திய மற்றும் குறைவான வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்தவர்கள்தான். உலக சுகாதார அமைப்பின் புதிய காற்று தர வழிகாட்டுதல்கள், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆதாரங்கள் அடிப்படையிலான மற்றும் நடைமுறை கருவி ஆகும். இதை நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க போராடுகிற நாடுகள் அனைத்தும், துன்பங்களைக் குறைக்கவும், உயிரைக்காப்பாற்றவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.


    Next Story
    ×