search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலையத்திற்கு வெளியே திரண்டுள்ள மக்கள்
    X
    விமான நிலையத்திற்கு வெளியே திரண்டுள்ள மக்கள்

    காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு- பீதியில் உறைந்த மக்கள்

    அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கெடுவை நீட்டிக்க மாட்டோம் என தலிபான்கள் கூறி உள்ளதால், விமான நிலைய பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். அந்தந்த நாடுகள் விமானங்களை காபூலுக்கு அனுப்பி தங்கள் குடிமக்களை மீட்டு வருகின்றன. இதேபோல் அங்கிருந்து வெளியேற விரும்பும் ஆப்கானிஸ்தான் மக்களையும் விமானங்களில் ஏற்றி அழைத்து செல்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னும் 1500 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 10000 பேர் வெளியேறுவதற்காக காத்திருக்கிறார்கள். 

    காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் முழுமையாக வெளியேற வேண்டும். அதன்பிறகு விமான நிலையம் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். 

    அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்காக கெடுவை நீட்டிக்க மாட்டோம் என தலிபான்கள் கூறி உள்ளதால், விமான நிலைய பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. விமான நிலையத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. விமான நிலையத்திற்கு வெளியே உள்ள மக்கள் அந்த பகுதியை காலி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின.

    அவர்கள் எச்சரிக்கை செய்ததை உறுதி செய்யும் வகையில், இன்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்தவர்கள் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.
    Next Story
    ×