search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராணுவத்தின் அமைதியான வளர்ச்சியை மிகைப்படுத்தி, அவதூறு செய்கிறது - நேட்டோ மீது சீனா குற்றச்சாட்டு

    நேட்டோ அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 30 நாடுகளுக்கிடையிலான சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் ராணுவ கூட்டணியான நேட்டோ, ரஷியாவை தனது முக்கிய அச்சுறுத்தலாக கருதுகிறது.
    பீஜிங்:


    நேட்டோ என்று அழைக்கப்படும் ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு' உலகின் மிகவும் சக்திவாய்ந்த பிராந்திய ராணுவ கூட்டணியாக அறியப்படுகிறது. இது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு கம்யூனிச விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள 1949-ல் அமைக்கப்பட்டது. நட்பு நாடுகளுக்கு இடையில் கூட்டுப்பாதுகாப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் இது நிறுவப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது 12 உறுப்பினர்களை கொண்டிருந்தது.

    ஆனால் தற்போது நேட்டோ அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 30 நாடுகளுக்கிடையிலான சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் ராணுவ கூட்டணியான நேட்டோ, ரஷியாவை தனது முக்கிய அச்சுறுத்தலாக கருதுகிறது.

    அதேவேளையில் சமீப ஆண்டுகளாக சீனாவின் வளர்ந்து வரும் ராணுவ திறன்களை பற்றி நேட்டோ மிகுந்த கவலை கொண்டுள்ளது. இதனை தனது உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்கு அச்சுறுத்தலாக நேட்டோ கருதுகிறது.

    குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் ராணுவ செல்வாக்கு அதிகரித்து வருவதையும், அங்கு சீனா, ராணுவ தளங்களை அமைத்துள்ளதையும் எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறது.

    இந்த நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ நாடுகளின் 31-வது மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதற்கு பிறகு முதல் முறையாக ஜோ பைடன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். நேட்டோவின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தீவிரமாக விவாதித்தனர்.

    அதைத்தொடர்ந்து மாநாட்டின் முடிவில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்பட்டது. அணு ஆயுதங்களை விரிவாக்குவது உள்ளிட்ட சீனாவின் நடவடிக்கைகள் விதிகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்கை அச்சுறுத்துவதாக நேட்டோ தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

    மேலும் அந்த அறிக்கையில் ‘‘சீனாவின் லட்சியங்கள் மற்றும் ஆக்ரோஷமான நடத்தை ஆகியவை விதிகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்கு மற்றும் கூட்டணி பாதுகாப்பு தொடர்பான பகுதிகளுக்கு முறையான சவால்களை முன்வைக்கின்றன. சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் தவறான தகவல்கள் பயன்படுத்தப்படுவது குறித்து நேட்டோ மிகுந்த கவலை கொண்டுள்ளது’’ எனவும் கூறப்பட்டிருந்தது.

    அதேவேளையில் சீனாவுடன் தாங்கள் பனிப்போரை விரும்பவில்லை எனவும், சீனா தங்களுக்கு எதிரி இல்லை எனவும் நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் கூறினார்.

    அண்மையில் ஜி-7 கூட்டமைப்பு மனித உரிமைகள் பிரச்சினைகள் பற்றி சீனாவை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், தற்போது நேட்டோ அமைப்பு சீன ராணுவம் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியிருப்பது கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

    இந்த நிலையில் சீன ராணுவத்தின் அமைதியான வளர்ச்சியை நேட்டோ மிகைப்படுத்தி கூறுவதாகவும், அவதூறு செய்வதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சீன அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சீனாவின் பாதுகாப்புக் கொள்கை தற்காப்பை அடிப்படையாகக் கொண்டது. பாதுகாப்பு மற்றும் ராணுவ நவீனமயமாக்கலுக்கான எங்கள் விருப்பம் நியாயமானது, சுதந்திரமானது மற்றும் வெளிப்படையானது. நேட்டோ, சீனாவின் வளர்ச்சியை பகுத்தறிவு முறையில் பார்க்க வேண்டும். அதோடு சீனாவின் நியாயமான நலன்களையும், உரிமைகளையும் அரசியலாக்குவதற்கும், மோதலை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×