search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகளை படத்தில் காணலாம்
    X
    மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகளை படத்தில் காணலாம்

    94 குழந்தைகளின் தந்தை மரணம் - மிசோரம் மக்கள் கண்ணீர்

    உலகிலேயே அதிக திருமணம் செய்தவர் என்ற பட்டத்தை மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜின்சோகா அகாசி யோன் பெற்று இருந்தார்.

    ஐஸ்வால்:

    உலகிலேயே அதிக திருமணம் செய்தவர் என்ற பட்டத்தை மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜின்சோகா அகாசி யோன் பெற்று இருந்தார்.

    76 வயதான அவருக்கு 39 மனைவிகள் உள்ளனர். 94 குழந்தைகள், 33 பேரக் குழந்தைகளும் இருக்கின்றனர். மகன்கள் பலருக்கும் திருமணமாகி 14 மரு மகள்களும் வீட்டில் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஜின்சோகா அகாசியோன் நேற்று திடீரென இறந்து விட்டார். ஏற்கனவே நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனால் 3 நாட்களாக ஊரிலேயே சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

    அவர் மரணம் அடைந்தது மிசோரம் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிசோரம் மாநில முதல்-மந்திரி மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    முதல்-மந்திரி சோரம் தங்கா வெளியிட்டுள்ள செய்தியில், “உலகில் பெரிய குடும்பத்துக்கு தலைமை தாங்கிய ஜின் சோகா அகாசி யோன் மரணம் மிசோரமுக்கு பேரழிப்பாகும். அவரால் இந்த பகுதி சுற்றுலா மையமாக திகழ்ந்தது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்“ என்று கூறியுள்ளார்.

    ஜின்சோகா அகாசியோன் தலைநகர் ஐஸ்பாலில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பக்தவாங் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய பூர்வீக ஊர் அதன் அருகில் உள்ளது.

    1942-ம் ஆண்டு அவருடைய தாத்தாவை அந்த கிராமத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டனர். இதனால் பக்தவாங் பகுதிக்கு வந்து நிலத்தை வாங்கி அங்கு குடிஅமர்ந்தார். அவருக்கும் பல மனைவிகள் இருந்தனர். அவர் விவசாயம் செய்து வந்தார்.

    அவருக்கு பிறகு மூத்த மகன் குடும்ப தலைவர் ஆனார். பின்னர் அவருடைய மூத்த மகனான ஜின்சோகா அகாசியோன் குடும்ப தலைவர் ஆனார். அவர்கள் சமூகத்தில் ஆண்கள் பல திருமணங்களை செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

    அதன்படி ஜின்சோகா அகாசியோன் பல திருமணங்களை செய்து கொண்டார். நினைத்த போதெல்லாம் புதிதாக திருமணம் செய்து கொள்வது வழக்கம்.

    ஒரு தடவை ஒரே ஆண்டில் 10 திருமணங்களை செய்து கொண்டார். அனைத்து மனைவிகள், மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இதற்காக 4 மாடிகள் கொண்ட பெரிய வீடு கட்டி இருந்தார்.

    கிட்டதட்ட ஒரு தங்கும் விடுதி போல அந்த வீடு காணப்படுகிறது. சுமார் 1000 பேர் வரை தங்கும் வசதி அங்கு இருக்கிறது. வீட்டின் மத்தியில் ஜின்சோகா அகாசியோன் படுக்கை அறை உள்ளது. இது இரட்டை படுக்கை கொண்டதாகும்.

    இரவில் எந்த மனைவி அவரோடு தங்குவது என்பதில் ஜின்சோகா அகாசி யோன் முடிவு செய்வார். பெரும்பாலும் சுழற்சி முறையில் மற்ற மனைவிகள் அவரோடு தங்குவார்கள்.

    அவரது இளம் மனைவியின் அறை அவரது அறைக்கு பக்கத்தில் இருக்கும்படி அமைத்து இருந்தார். மற்ற மனைவிகளின் அறை சற்று தள்ளி இருக்கும்.

    அனைவருக்கும் ஒரே சமையல் அறையில்தான் உணவு தயாரிக்கப்படும். ஒரு தடவை உணவு தயாரிப்பதற்கு 30 கோழி, 60 கிலோ உருளைகிழங்கு, 100 கிலோ அரிசி தேவைப்படும்.

    குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சமையல் செய்வார்கள். யாருக்கு என்ன வேலை என்பதை மூத்த மனைவி ஒதுக்கி கொடுப்பார். அவருடைய ஊரில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இவருடைய உறவினர்கள் ஆவார்கள்.

    அந்த ஊருக்கே அவர் தலைவராகவும் இருந்து வந்தார். அதிக பெண்களை திருமணம் செய்தவருக்கு அந்த ஊரில் அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது.

    அந்த வகையில் சொந்த ஊரில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் அவருக்கு செல்வாக்கு அதிகம்.

    இந்த நிலையில் அவர் இறந்து விட்டது அந்த பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. எங்கள் தலைவரை நாங்கள் இழந்து விட்டோம் என்று பலரும் கூறி கண்ணீர் வடித்தனர்.

    இந்த குடும்பத்தை பார்ப்பதற்கு என்றே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. இதனால் அவருடைய ஊர் சுற்றுலா மையமாகவும் திகழ்ந்து வந்தது.

    ஜின்சோகா அகாசியோன் இறுதி சடங்கை சிறப்பாக செய்வதற்கு கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். 

    Next Story
    ×