search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் ஜோ பைடன்
    X
    அதிபர் ஜோ பைடன்

    மியான்மர் ராணுவத்தின் செயல் மிகவும் கொடூரமானது - ஜோ பைடன் கண்டனம்

    மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
    வாஷிங்டன்:

    மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிப்ரவரி முதல் நாளில் ராணுவம் கவிழ்த்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவம் முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரையும் வீட்டு சிறையில் வைத்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்தப் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கொடூரமான அடக்கு முறைகளைக் கையாண்டு வருகிறது.

    இதற்கிடையே, மியான்மர் ராணுவம் நேற்று முன்தினம் ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. இதையொட்டி அரசு டிவியில் உரையாற்றிய ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் தலையில் சுட படுவார்கள் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்தார். அதனை மீறியும் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழக்கம் போல் வீதிகளில் இறங்கிப் போராடினர்.‌

    அந்த நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உட்பட 40 இடங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.‌ அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்களில் திடீரென வன்முறை வெடித்தது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

    இதையடுத்து போராட்டத்தை நசுக்குவதற்கு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.‌ இதுவரை இல்லாத வகையில் மிகவும் ஆக்ரோஷமாகவும் கண்மூடித் தனமாகவும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர். இதனால் ஆட்சி கவிழ்ப்பு நடந்த நாளிலிருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். 

    மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறைக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மியான்மர் ராணுவத்தை கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதேபோல் ஐரோப்பிய கூட்டமைப்பும், ஐ.நா. பொதுச்சபையும் மியான்மார் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் கண்டித்தன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    டெலாவேர் மாகாணத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், மியான்மர் ராணுவத்தின் செயல் முற்றிலும் மூர்க்கத்தனமானது. மிகவும் மோசமானது.  எனக்கு கிடைத்த  அறிக்கையின் அடிப்படையில், ஏராளமான மக்கள் முற்றிலும் தேவையில்லாமல் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
    Next Story
    ×