search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்
    X
    வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்

    மோடியின் சுற்றுப்பயணத்திற்கு பிறகு வங்கதேசத்தில் கலவரம்- 11 பேர் உயிரிழப்பு

    வங்கதேசத்தில் இஸ்லாமிய அமைப்பினர் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
    டாக்கா:

    வங்கதேச நாட்டின் சுதந்திர பொன் விழாவில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சனிக்கிழமை நாடு திரும்பினார். மோடி வருகைக்கு வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.

    மோடி வங்கதேசத்திற்கு வந்து சேர்ந்த வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவில் பிரதமர் மோடி முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகளை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய  போராட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் கடும் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். 

    சாலைகளை மறித்து போராடியதுடன், பேருந்துகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் தீ வைத்தனர். இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். பிரம்மன்பரியாவில் ஒரு ரெயிலை இஸ்லாமிய அமைப்பினர் கடுமையாக தாக்கியதில் ரெயில் பெட்டிகள் சேதமடைந்தன. 10 பயணிகள் காயமடைந்தனர். 

    போராட்டக்கார்களை கலைக்க முற்பட்டபோது பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×