search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல்
    X
    சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல்

    சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் எனத் தகவல்

    எகிப்தில் சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்கு கப்பலை நகர்த்துவதில் சிக்கல் தொடர்கிறது. இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
    கெய்ரோ:

    எகிப்தில் சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்கு கப்பலை நகர்த்துவதில் சிக்கல் தொடர்கிறது. இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

    எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக உள்ளது. 1869-ம் ஆண்டு திறக்கப்பட்ட 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும்.


    ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிச்செல்ல வேண்டியதை தவிர்த்து பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயண தூரத்தை குறைக்கும் நோக்கில் இந்த கால்வாய் கட்டப்பட்டது.‌ சர்வதேச வர்த்தகத்தில் அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில் இந்த சூயஸ் கால்வாயின் பங்கு மிக முக்கியமானது. உலகளாவிய வர்த்தக கப்பல் போக்குவரத்தில் சுமார் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது.

    இந்நிலையில் சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது.

    இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 280-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஒவ்வொரு நாளும் 9.6 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள் தெரிவிக்கின்றன.

    அதாவது ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப்போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ராட்சத சரக்கு கப்பலை கால்வாயின் கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் கடந்த 5 நாட்களாக நடந்து வருகின்றன. ஆனால் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் சூயஸ் கால்வாயின் தெற்கு முனையில் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

    கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சியில் 10 இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு எந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் மேலும் இரு இழுவை படகுகள் கப்பலை மிதக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

    வெள்ளிக்கிழமை அந்த கப்பலை மீண்டும் மிதக்க வைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும், கப்பலின் இடது பக்கத்தில் இருக்கும் மணல் மற்றும் சகதியை நீக்கும் முயற்சிகளில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் எவர் கிவன் கப்பலுக்கு தொழில்நுட்ப மேலாண்மை செய்யும் பெர்னார்டு ஷூல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஒரு மணி நேரத்துக்கு 2,000 கியூபிக் மீட்டர் சக்தியை உறிஞ்சி எடுக்கும் அகழ்வு எந்திரம் வியாழன் முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த கப்பலின் உரிமையாளரான ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசென் நிறுவனத்தின் தலைவர் யுகிடோ கப்பலை மீண்டும் மிதக்கவைப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருவதாகவும், இவை எதுவுமே பலன் தராத பட்சத்தில் கப்பலில் உள்ள கன்டெய்னர்கள் அனைத்தையும் அகற்றி விட்டு கப்பலை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார். ஆனால் இது சற்று கடினமானதாக அமையும் என்று அவர் கவலை தெரிவித்தார்.

    இதனிடையே கப்பலை நகர்த்தும் பணியில் எந்தவித முன்னேற்றமும் காணப்படாத நிலையில் கடலில் காத்திருக்கும் கப்பல்களில் சில தங்கள் பாதையை மாற்ற தொடங்கியுள்ளன.

    சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா - ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு சுமார் 2 வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். அதற்கேற்ப எரிபொருள், உணவு கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும். இதனால் பெரும்பாலான கப்பல்கள் சூயஸ் கால்வாய் திறப்புக்காக தொடர்ந்து காத்து நிற்கின்றன.

    இந்த நிலையில், சிக்கிக்கொண்டுள்ள சரக்கு கப்பலில் உள்ள  25 பணியாளா்களும் இந்தியா்கள் என்றும், எகிப்து நாட்டின் கால்வாய் ஆணையத்தின் இரண்டு மாலுமிகளும் கப்பலில் உள்ளனா் கப்பல் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×