search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரிஸ் ஜான்சன்
    X
    போரிஸ் ஜான்சன்

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

    ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.
    லண்டன்:

    உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்கிய முதல் நாடு இங்கிலாந்து ஆகும்.

    அந்த நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியது.

    இந்த தடுப்பூசி இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இதனிடையே அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதனால் அந்த தடுப்பூசிக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தற்காலிக தடை விதித்தன.

    ஆனால் ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.

    இதையடுத்து தற்போது மீண்டும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். தலைநகர் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போரிஸ் ஜான்சனுக்கு செலுத்தப்பட்டது.

    இந்த ஆஸ்பத்திரியில் தான் கடந்த ஆண்டு அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானபோது சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள போரிஸ் ஜான்சன் “கொரோனா பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் சிறந்த வழி. அனைத்து விஞ்ஞானிகளுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் நன்றி, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×