search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் டயர்களை கொளுத்திய போராட்டக்காரர்கள்
    X
    சாலையில் டயர்களை கொளுத்திய போராட்டக்காரர்கள்

    பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கவில்லை... லெபனானில் 7வது நாளாக போராட்டம் நீடிப்பு

    லெபனானின் நிதி நெருக்கடி, ஆறு மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி மக்களை வறுமையில் தள்ளியுள்ளது.
    பெய்ரூட்:

    லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்துடன் அரசியல் முட்டுக்கட்டையும் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண வலியுறுத்தி நாடு முழுவதும் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இன்று 7வது நாளாக போராட்டம் நீடித்தது.

    ஜூக், ஜல் அல்-டிப் மற்றும் அல்-தவ்ராவிலிருந்து தெற்கே தலைநகர் பெய்ரூட்டுக்குச் செல்லும் மூன்று முக்கிய சாலைகளை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். சாலைகளின் நடுவே டயர்களை கொளுத்தினர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெய்ரூட்டில், எதிர்ப்பாளர்கள் மத்திய வங்கியின் முன் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

    நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசு எதுவும் செய்யாததால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று நாங்கள் பலமுறை கூறினோம் என போராட்டக்குழுவினர் கூறுகின்றனர். டயர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ஒருவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றதாகவும், போலீசார் சரியான நேரத்தில் அவரை தடுத்துவிட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.  

    2019-ல் ஆரம்பித்த லெபனானின் நிதி நெருக்கடி, ஆறு மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. வேலை வாய்ப்புகள் மற்றும் மக்களின் சேமிப்புகளை அழித்துவிட்டது. நுகர்வோர் வாங்கும் சக்தியைக் குறைத்துவிட்டது. 

    பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. நாட்டின் பண மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை டாலருக்கு நிகரான லெபனான் பவுண்டின் மதிப்பு 10,000 ஆக வீழ்ச்சியடைந்தது. இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள நிலையில், பண மதிப்பு இந்த அளவிற்கு குறைந்துபோனதால், எதிர்ப்பாளர்கள் தினமும் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

    Next Story
    ×