search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    இந்தியா உள்பட 4 நாட்டு தலைவர்களின் பாதுகாப்பு பேச்சுவார்த்தை மார்ச் மத்தியில் நடைபெறுகிறது

    இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற கூட்டணியை கடந்த 2017-ல் உருவாக்கின.
    டோக்கியோ:

    இந்தோ பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், இந்தோ பசிபிக் பகுதியில் கடல் வழிகளில் யாரும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், இந்த கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

    இந்த கூட்டமைப்பின் வெளிவிவகார மந்திரிகள் மட்டத்திலான பாதுகாப்பு பேச்சுவார்த்தை கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி டோக்கியோவில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக 4 நாடுகள் தரப்பிலான 3-வது பாதுகாப்பு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது.

    இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் மார்ச் மத்தியில் தொலைதொடர்பு மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

    இதில் ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கொரோனா தடுப்பூசிகளை சீரான முறையில் வினியோகிப்பது மற்றும் பருவகால மாற்றங்களை எதிர்கொள்வது ஆகியவற்றை பற்றி ஆலோசனை மேற்கொள்வார்கள் என எதிர்நோக்கப்படுகிறது.

    கடந்த 2004ம் ஆண்டு இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவற்றுக்கு பின் உருவாக்கப்பட்ட 4 நாடுகளை அடக்கிய கட்டமைப்பு ஆனது, தற்பொழுது மண்டல பாதுகாப்பு விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.  இந்த கட்டமைப்பின் 4 தலைவர்களும் கலந்து கொள்ளும் முதல் மாநாடு இதுவாகும்.

    கடந்த மாதம் இந்த 4 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் ஆன்லைன் வழியே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், கிழக்கு மற்றும் தென் சீனக்கடல் பகுதிகளில் உள்ள நிலையை மாற்றும் சீனாவின் எந்தவொரு முயற்சிக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பது என்றும் ஒரு வெளிப்படையான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை நோக்கி பணியாற்ற ஒப்புக்கொள்வது என்றும் முடிவானது.
    Next Story
    ×