search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி
    X
    வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி

    எல்லையில் சண்டை நிறுத்தம் - இந்தியா பாகிஸ்தான் இடையிலான உடன்பாட்டுக்கு அமெரிக்கா வரவேற்பு

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அதனை மீறி தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்ததால், இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது.

    இதற்கிடையே, சண்டை நிறுத்தத்தை உறுதியுடன் கடைப்பிடிக்க இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் தொலைபேசி வழியாக நடத்திய ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.

    அதில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ள இருதரப்பு முக்கியப் பிரச்சினைகளை தீர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதி மொயீத் யூசுப் ஆகியோர் எல்லைகளில் அமைதியை உறுதி செய்வதற்காக கடந்த சில மாதங்களாக நடத்தி வந்த பேச்சுவார்த்தையின் வாயிலாகவே, இந்த சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    பாகிஸ்தானுடன் வழக்கமான நல்லுறவைப் பின்பற்ற இந்தியா விரும்புகிறது. இரு தரப்புக்கும் இடையிலான பிரச்சினைகளை அமைதியான வழியில் பேசித் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிக்க இந்தியா- பாகிஸ்தான் உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், “பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கி எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் சண்டை நிறுத்தத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன என்ற இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டு அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது.

    இது தெற்காசியாவில் அதிக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சாதகமான ஒரு நிலையாகும். இது எங்கள் பொதுவான நலனுக்காகவும், இந்த முன்னேற்றத்தை வளர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×