search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆஸ்திரேலியாவில் செய்திகளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றது பேஸ்புக்

    ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
    கான்பெர்ரா:

    ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு அந்த நிறுவனங்கள் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது தொடர்பான சட்டத்தை அந்த நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தன. இந்த விவகாரத்தில் அந்த 2 நிறுவனங்களுக்கும் ஆஸ்திரேலிய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.‌

    இந்த சூழலில் பேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு தடை விதித்தது. இதனால் ஆஸ்திரேலிய மக்களால் பேஸ்புக்கில் செய்திகளை பார்க்க மற்றும் பகிர முடியாமல் போனது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனமும் ஆஸ்திரேலியா அரசும் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில் பேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டது.

    இதையடுத்து ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று அறிவித்தது. பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவில் வழக்கம்போல் பொதுநலன் சார்ந்த ஊடக செய்திகள் இனி பேஸ்புக்கில் வெளியாகும் என பேஸ்புக்கின் ஆஸ்திரேலிய பிரிவு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×