search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா நிவாரணத்துக்காக ரூ.66 லட்சம் கோடி ஒதுக்கீடு - அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

    அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக ரூ.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
    வாஷிங்டன்:

    உலகில் மற்ற எந்த நாட்டை விடவும், கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகிறது அமெரிக்கா. இதுவரை 1 கோடியே 82 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 3 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால், அமெரிக்காவில் சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால், பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் வறுமை விகிதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

    தற்போது சுமார் 80 லட்சம் அமெரிக்கர்கள் வறுமை நிலையில் உள்ளதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

    60 ஆண்டுகளுக்கு முன்பு வறுமை கண்காணிப்பு தொடங் கியதில் இருந்து ஒரே ஆண்டில் இவ்வளவு வறுமை அதிகரித்து இருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. கொரோனாவால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட அமெரிக்கர்கள் தங்களின் வாழ்க்கையை நடத்த அரசின் நிவாரணத்தை எதிர்நோக்க வேண்டிய சூழல் உள்ளது. அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் கொரோனா நிவாரண நிதிக்காக ஒதுக்கப்பட்டது.

    ஆனாலும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையாத நிலையில் பொருளாதார பாதிப்பும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது.

    இதனால் கொரோனா நிவாரணத்துக்காக அமெரிக்க அரசு ஒதுக்கிய இந்த மிகப் பெரிய நிதி போதுமானதாக இல்லை. மேலும் இந்த நிதியின் கீழ் கொண்டுவரப்பட்ட கொரோனா நிவாரண திட்டங்கள் பல ஏற்க னவே காலாவதியாகி விட்டன.

    எனவே கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் நிலவி வந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கீடு செய்ய அமெரிக்க நாடாளுமன் றம் நேற்று ஒப்புதல் அளித்தது.

    இந்த நிவாரணத் தொகையில் இருந்து கொரோனாவால் வறுமைக்கோட்டுக்கு தள்ளப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தலா 600 டாலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் வேலை வாய்ப்பை இழந்த அமெரிக்கர்களுக்கு வாரத்துக்கு 300 அமெரிக்க டாலர்கள் நிவாரண தொகையாக அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்வதற்கான நிதியும் இந்த நிவாரண தொகையிலிருந்து ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரைவில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×