search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபர்
    X
    புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபர்

    புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபர் - பரபரப்பு

    அமெரிக்காவில் புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மெக்ஹரன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகருக்கு நேற்று மதியம் 2 மணியளவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாரானது.

    அந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் தங்கள் இருக்கையில் அமந்திருந்தனர்.

    விமானம் புறப்பட தயாரானபோது பாதுகாப்பையும் மீறி விமான நிலையத்தின் வேலியை தாண்டி விமான ஓடுதளத்திற்குள் மர்மநபர் நுழைந்தார். 

    அந்த நபர் விமான ஓடுதளத்திற்குள் வேகமாக ஓடி வருவதை கண்ட அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். 

    ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்குள் அந்த நபர் போர்ட்லேண்ட் புறப்படுவதற்கு தயாராக இருந்த அலாஸ்கார் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை பகுதி மீது அத்துமீறி ஏறினார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

    புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய அந்த நபர் இறக்கையின் ஒரு பகுதியில் மறுபகுதிக்கு சாதாரணமாக நடந்து சென்றார். விமான இறக்கையின் முனைப்பகுதிக்கு சென்ற அந்த நபர் இறக்கை பிடித்து தொங்கியவாறு வேடிக்கை காட்டினார். இதை விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.

    இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக விமானத்தின் அருகே சென்று அந்த நபரை சுற்றிவளைத்தனர். விமானத்தின் இறக்கையில் தொங்கியவாறு இருந்த அந்த நபர் நிலை தடுமாறி திடீரென கிழே விழுந்தார்.

    அந்த நபரை சுற்றி இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கைது செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர். மேலும், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் விமானத்தின் இறக்கை மீது ஏறிய நபர் மனநலம் குன்றியவர் என தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த பரபரப்பான சம்பவத்தை தொடர்ந்து புறப்படவிருந்த விமானம் நிறுத்தப்பட்டு அதில் முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது. அதில் விமானத்தில் ஆபத்து நிறைந்த எந்த ஒரு பொருளும் இல்லை என உறுதியான பின்னரே விமானம் போர்ட்லேண்ட் நகருக்கு 4.45 மணியளவில் புறப்பட்டு சென்றது. 

    இந்த சம்பவத்தில் விமான ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அலாஸ்கா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
     
    புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை மீது மர்ம நபர் ஏறிய சம்பவம் மெக்ஹரன் விமான நிலையம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்காவிலுமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    விமானத்தின் இறக்கை மீது அந்த நபர் ஏறி அதில் நடந்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


    Next Story
    ×