search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
    X
    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

    பிரெக்சிட் காலக்கெடு முடிகிறது... புத்தாண்டு முதல் பிரிட்டன் மக்களுக்கு காத்திருக்கும் பெரிய மாற்றங்கள்

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் முடிவு எப்படி இருந்தாலும் பெரிய மாற்றங்கள் நடக்கும்.
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. 

    இந்த காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்தவித ஒப்பந்தமும் இன்றி பிரிட்டன் வெளியேறும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் கனடாவை போன்று வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரைவில் தீர்வு காண இருப்பதாகவும் கூறினார். இதன்படி வரும் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முற்றிலுமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே, இனி ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் சரி, பேச்சுவார்த்தை நடக்காவிட்டாலும் சரி, ஜனவரி 1ம் தேதி முதல் சில மாற்றங்கள் நடக்கும். 

    ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுக்கான பயண விதிகளில் ஜனவரி 1 முதல் மாற்றம் இருக்கும் என்று அரசு எச்சரித்துள்ளது. 

    குறிப்பாக, 2021ஆம் ஆண்டில் திட்டமிட்ட பயணங்களுக்கு, பாஸ்போர்ட்களை சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமல், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்க முடியாமல் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் பிரிட்டிஷ் பயணிகள் தங்களின் பாஸ்போர்ட்டுகள் தங்குவதற்கான உத்தேச காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

    புத்தாண்டு தினத்திலிருந்து, ஐரோப்பிய ஒன்றிய பகுதிக்கு வரும் பிரிட்டன் மக்களும் நாடு திரும்புவதற்கான டிக்கெட் அல்லது அடுத்த பயணத்திற்கான டிக்கெட்டைக் காட்ட வேண்டும். அவர்கள் தங்குவதற்கு போதுமான பணம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். வரிசையில் நிற்கும்போது ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களிடமிருந்து தனி பாதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

    ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் 90 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளவர்கள், தங்களின் விசா அல்லது அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

    தற்போது, கொரோனா கால கட்டுப்பாடுகள் இருப்பதால், பிரிட்டன் பயணிகள் ஜனவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுமா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    குறைவான கொரோனா பாதிப்பு உள்ள ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து மட்டுமே, அத்தியாவசியமற்ற பயணம், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. பிரெக்சிட் காலக்கெடு முடிந்ததும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சுதந்திரமாக பயணம் செய்வதற்கு அனுமதிக்கும் விதிகள் பிரிட்டன் மக்களுக்கு பொருந்தாது.

    ஜனவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பிரிட்டன் குடிமக்கள் இறைச்சி, பால் அல்லது அவற்றைக் கொண்ட தயாரிப்புகளை எடுத்துச் செல்ல முடியாது. குழந்தைகளுக்கான பால் பவுடர், பால் போன்ற சில பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்குகள் அளிக்கப்படும். இன்னும் பல்வேறு விதிமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறியதால் பிரிட்டன் சாதகப் பலன்களை அடைய முடியாது என்று ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×