search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு வாழ்நாள் சிறை

    துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
    அங்காரா:

    துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.

    அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.

    அதன்படி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையதாக கருதப்படும் ராணுவ அதிகாரிகள், போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ராணுவ கமாண்டர்கள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் மீதான வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது.

    இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் சரியாக எத்தனை பேருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்த தகவலை துருக்கி நீதித்துறை வெளியிடவில்லை.
    Next Story
    ×