search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக் பாம்பியோ (வலதுபக்கம்)
    X
    மைக் பாம்பியோ (வலதுபக்கம்)

    இஸ்ரேல்: சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியை பார்வையிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

    சர்ச்சைக்குரிய இஸ்ரேலின் மேற்குகரை மற்றும் கோலன் பகுதிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ நேற்று பார்வையிட்டார்.
    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. 1967 ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. 

    இந்த போரின்போது பாலஸ்தீன மக்கள் உரிமைகொண்டாடும் மேற்குகரையின் பல்வேறு பகுதிகளையும், சிரியாவின் கோலன் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது.
     
    மேலும், தான் கைப்பற்றிய பகுதிகளில் இஸ்ரேல் அரசு புதிய கட்டிடங்களை அமைத்து தங்கள் நாட்டு மக்களை குடியமர்த்தி வருகிறது. 

    குறிப்பாக மேற்குகரை பகுதியில் தொடர்ந்து புதிய கட்டுமானங்களை (செட்டில்மெண்ட்) இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இந்த செட்டில்மெண்ட்கள் கட்டிடங்கள் மேற்குகரையில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என உலக நாடுகள் அழைக்கின்றன. 

    அதேபோல் கோலன் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கட்டுமான நடவடிக்கைகளையும் உலக நாடுகள் சட்டவிரோதமானவை ஆக்கிரமிப்புகள் என கூறுகிறது. 

    ஆனால், இந்த அனெக்சேஷன் எனப்படும் நடவடிக்கையை நாட்டை விரிவுபடுத்துதல் என இஸ்ரேல் கூறிவருகிறது. சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என கூறப்பட்டுவரும் மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேல் செட்டில்மெண்ட்கள், மற்றும் சிரியாவிடம் இருந்து போரில் கைப்பற்றப்பட்ட கோலன் பகுதிகளை இஸ்ரேலின் ஒருங்கிணைந்த பகுதி என அமெரிக்கா சமீபத்தில் அங்கீகரித்தது.

    இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ அரசுமுறை பயணமாக இஸ்ரேல் வந்துள்ளார். அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், மேற்கு கரையில் அமைந்துள்ள இஸ்ரேல் செட்டில்மெண்ட் பகுதிகளை மைக் பாம்பியோ நேற்று பார்வையிட்டார். அதேபோல், சிரியாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோலன் பகுதிகளையும் பாம்பியோ பார்வையிடார்.

    அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மேற்கு கரை மற்றும் கோலன் பகுதிகளுக்கு செல்வது இதுவே முதல்முறை. பாம்பியோவின் இந்த பயணத்தின் மூலம் மேற்கு கரை மற்றும் கோலன் பகுதியை இஸ்ரேலின் அங்கமாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

    மேற்கு கரை பகுதியில் பயணம் மேற்கொண்ட பாம்பியோ இந்த பயணத்தின்போது பாலஸ்தீன அதிகாரிகள் யாரையும் சந்திக்கவில்லை. இதற்கிடையில், பாம்பியோவின் பயணத்திற்கு சிரியா அரசு மற்றும் பாலஸ்தீன தலைவர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×