search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
    X
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

    நவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த பாகிஸ்தான் அரசு தீவிரம்

    நவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கு இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிரம் காட்டிவருகிறது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பிடிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை லண்டன் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் காலம் முடிந்த பிறகும் அவர் சிகிச்சை பெறுவதாக கூறி தொடர்ந்து லண்டனிலேயே தங்கியுள்ளார். எனவே பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவாஸ் ஷெரீப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கு இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிரம் காட்டிவருகிறது.

    நேற்று இஸ்லாமாபாத்தில் நடந்த மந்திரி சபை கூட்டத்தின்போது இது குறித்து பேசிய பிரதமர் இம்ரான்கான் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை தீவிரமாக தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இந்த தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த மந்திரி சபை உறுப்பினர் ஒருவர் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துவது தொடர்பாக இங்கிலாந்து அரசுக்கு ஏற்கனவே ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

    மேலும் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவைத் தொடர்ந்து புதிதாக முறைப்படியான ஒரு விண்ணப்பம் இங்கிலாந்து அரசுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×