search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் சபாரி பூங்காவில் காணப்படும் பிளமிங்கோ பறவைகள் கூட்டமாக நீர்நிலையில் நடமாடும் காட்சி.
    X
    துபாய் சபாரி பூங்காவில் காணப்படும் பிளமிங்கோ பறவைகள் கூட்டமாக நீர்நிலையில் நடமாடும் காட்சி.

    துபாய் சபாரி பூங்கா அடுத்த மாதம் 5-ந் தேதி திறப்பு

    துபாயில் வன விலங்குகள் பராமரிக்கப்படும் சபாரி பூங்கா மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால், அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    துபாய்:

    துபாய் மாநகராட்சி சார்பில் 100 கோடி திர்ஹாம் செலவில் அல் வர்கா 5 என்ற பகுதியில் 119 எக்டேர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக வன விலங்குகள் உலாவும் இயற்கை பகுதியாக கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட வன உயிரின பூங்கா துபாய் சபாரி பூங்காவாகும். இங்கு காட்டில் வாழும் விலங்குகள், பறவைகள் மற்றும் தண்ணீர் வாழ் உயிரினங்கள் என 2 ஆயிரத்து 500 வன விலங்குகள் இயற்கையான சூழலில் நடமாடி வருகிறது.

    இந்த பூங்கா பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதில் சிறப்பம்சம்சமாக அரேபியா, ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் உள்ள கிராமங்களின் மாதிரிகள் மிக தத்ரூபமாக சிறந்த உள்கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான இந்த வளாகத்தை சுற்றி பார்க்க ரெயில் வண்டி உள்ளது. இந்த ரெயிலில் குடும்பத்துடன் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்டு ரசிக்கலாம்.

    மேலும் கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிலும் ஹெனா, புலி போன்ற விலங்குகளை கண்டு மகிழலாம். இந்த பூங்காவில் சிங்கம், வெள்ளை சிங்கம், புலி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, பாம்புகள், முதலை, ஆமை, ஓநாய்கள், நெருப்புக்கோழி உள்பட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த விலங்குகளுக்கு ஏற்ப தண்ணீர் நிலைகள், பாறைகள், குகைகள் என அனைத்து வசிக்கும் இடங்களும் மிக இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பூங்கா பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் பொதுமக்களுக்காக அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு 50 திர்ஹாமும், சிறியவர்களுக்கு 20 திர்ஹாமும் நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு (2 உதவியாளர்கள் உள்பட) அனுமதி இலவசமாகும்.

    இலவச அனுமதி பெற அடையாள அட்டை அல்லது ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். இந்த பூங்காவை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். http://www.dubaisafari.ae/ என்ற இணையதளம் மூலமாக, மாநகராட்சியின் ‘செயலி’யில் பதிவு செய்தும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவல் துபாய் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×