search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட திட்டம் - நிபுணர்கள் கவலை

    அறிவியல் ரீதியான நடைமுறைகளை முடிக்கும் முன்பே கொரோனா தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள்.
    வாஷிங்டன்:

    உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் மீண்டும் போட்டியிடும் ஜனாதிபதி டிரம்ப், தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றும், இது தனது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்புகிறார். அங்குள்ள அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாவது கட்ட சோதனையை எட்டி உள்ளது.

    இதற்கிடையே தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் ஹான் கூறுகையில், தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாவது கட்ட சோதனை முடிவதற்கு முன்பே அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

    எனவே அக்டோபர் மாதத்திலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு உள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு, மாகாண கவர்னர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    அதில், கொரோனா தடுப்பூசியை வினியோகிப்பதற்காக மெக்கசன் கார்ப்பரேஷன் நிறுவனம் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும், தடுப்பூசியை சுகாதார துறை, ஆஸ்பத்திரிகளுக்கு சப்ளை செய்வதற்கான அனுமதி கோரி அந்த நிறுவனத்திடம் இருந்து மாநிலங்களுக்கு விரைவில் விண்ணப்பங்கள் வரும் என்றும், அதற்கு தயாராக இருக்குமாறும் கூறி உள்ளார். மேலும் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலித்து நவம்பர் 1-ந் தேதிக்குள் முழு அளவில் மக்களுக்கு தடுப்பூசியை போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

    கொரோனா தடுப்பூசி ஒரு மாத இடைவெளியில் இரு முறை போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, அறிவியல் ரீதியான நடைமுறைகளை முடிக்கும் முன்பே, ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் காரணங்களுக்காக தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள். மூன்றாவது கட்ட பரிசோதனையை நடத்தாமலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்றால், அந்த மருந்தின் செயல்பாடு பற்றிய முழு தகவலும் எப்படி தெரியும்? என்று பிலடெல்பியா குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர் பால் ஆப்பிட் கேள்வி எழுப்பி உள்ளார்.

    தடுப்பு மருந்து வேலை செய்யுமா? முழு அளவில் பாதுகாப்பானதுதானா? என்பது தெரியும் முன்பே அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க இருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக பேய்லர் பல்கலைக்கழக துணை வேந்தர் பீட்டர் ஹோட்டஸ் தெரிவித்து இருக்கிறார்.

    ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதை ‘அக்டோபர் ஆச்சரியம்‘ என்றுதான் கூற வேண்டும் என்று மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் நிபுணர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம் கூறி உள்ளார்.

    என்றாலும் இதுவரை நடத்தப்பட்ட 2 கட்ட பரிசோதனைகளின் மூலம், பெரிய அளவில் பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும் எழவில்லை என்றும், தேவையான நோய் தடுப்பு சக்தியை தடுப்பூசி வழங்கி இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறி இருப்பதாக மருத்துவ இதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

    சனோபி மற்றும் கிளாஸ்கோஸ்மித்லைன் மருந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், மனிதர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் ஆரம்பகட்ட பரிசோதனையின் முடிவு நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாகவும், அடுத்ததாக தடுப்பூசியை அமெரிக்காவில் 11 இடங்களில் 440 பேருக்கு செலுத்தி பரிசோதிக்க தீர்மானித்து இருப்பதாகவும், அதன் முடிவு டிசம்பர் மாத தொடக்கத்தில் தெரியவரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×