search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு - அமெரிக்க மருத்துவ கல்லூரி, பிரபல மருந்து நிறுவனம் கூட்டு தயாரிப்பு

    அமெரிக்க மருத்துவ கல்லூரி, இந்திய பிரபல மருந்து நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பாக மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.
    ஹூஸ்டன்:

    கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசி மட்டும்தான் நிரந்தர தீர்வாக அமையும் என்று கருதப்படுகிறது. எனவே பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்குவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன.

    அந்த வகையில் அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள பி.சி.எம். என்று அழைக்கப்படுகிற பேய்லர் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசி, மறுசீரமைப்பு புரத அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, உள்நாட்டிலும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளிலும் வினியோகிப்பதற்கு பேய்லர் மருத்துவ கல்லூரி, ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற பிரபல மருந்து நிறுவனமான பயாலஜிக்கல் இ லிமிடெட்டுடன் (பி.இ.) உரிம ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்திய மருந்து நிறுவனமான பி.இ., தனது கடந்த கால அனுபவத்தைப் பயன்படுத்தி, இந்த தடுப்பூசியை மேம்படுத்தி, வணிகமயமாக்கும் என்று பேய்லர் மருத்துவ கல்லூரி கூறுகிறது. இப்போது கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ள பேய்லர் மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் பீட்டர் ஹோடஸ் மற்றும் அவரது குழுவினர் ஏற்கனவே சார்ஸ், மெர்ஸ் தடுப்பூசிகளையும் ஏற்கனவே தயாரித்து வருகின்றனர்.

    இதையொட்டி பீட்டர் ஹோடஸ் கூறும்போது, “நாங்கள் முதலில் கோவிட்-19 என்ற வார்த்தையை கேட்டபோது, நாங்கள் ஏற்கனவே தடுப்பூசிகளை தயாரித்து வந்த சில வைரஸ்களை போலவே இந்த கோவிட்-19 மரபு வரிசைமுறை இருப்பதையும் கண்டோம்” என்கிறார்.

    அதைத் தொடர்ந்து அவர்கள் ஒரு கொரோனா தடுப்பூசியை விரைவாக உருவாக்க முடிந்திருக்கிறது. இப்போது அதன் பலனாக இந்திய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள்.

    “பேய்லர் மருத்துவ கல்லூரியில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் 100 கோடி டோஸ்களை தயாரிக்கிற திறன் இந்திய நிறுவனத்துக்கு உண்டு” என்கிறார் பீட்டர் ஹோடஸ்.

    இந்திய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருப்பது குறித்து பேய்லர் மருத்துவ கல்லூரியின் இணை முதல்வர் டாக்டர் மரியா எலினா பொட்டாஸி கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளாகவே எங்கள் தடுப்பூசி மையம், புறக்கணிக்கப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் நோய்களை தடுக்க உலகளாவிய சுகாதார தடுப்பூசிகளை முன்னெடுத்து வருகிறது. எனவே நாங்கள் இந்தியாவின் பி.இ. நிறுவனத்துடன் இந்த முக்கியமான ஒப்பந்தத்தை மேற்கொள்கிறோம். கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தை இந்தியாவுக்கும், உலகத்துக்கும் எளிதாக்குவதற்கு நாங்கள் பொருத்தமானவர்கள். தற்போது உற்பத்தி செயல்முறைகளை தொடங்கவும், தடுப்பூசியை மேம்படுத்தவும் பி.இ.நிறுவனத்துக்கு தொழில்நுட்பத்தை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறோம்” என குறிப்பிட்டார்.

    இந்த தடுப்பூசி ஒப்பந்தம் பற்றி பி.இ. நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், “பேய்லர் மருத்துவ கல்லூரியுடன் கூட்டு சேர்ந்திருப்பது இந்தியாவுக்கும், பிற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கும் ஒரு மலிவு விலை தடுப்பூசியை உருவாக்குவதை துரிதப்படுத்த உதவும். இந்த தடுப்பூசி வெற்றிகரமானதாக அமைந்தால் ஆண்டுதோறும் பல லட்சம் டோஸ் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் பாரத் பயோடெக்கின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்டின் கோவிஷீல்டு, ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி ஆகிய தடுப்பூசிகள் கிடைக்க உள்ள நிலையில், மேலும் ஒரு தடுப்பூசி வரும் வாய்ப்பு கனிந்துள்ளது.
    Next Story
    ×